தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

Major Changes in the National Pension System – NPS and UPS

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு முன்னர் பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) இருந்து வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பென்ஷன் வழங்குவதற்கான நிதியை அரசு ஏற்றுக் கொள்ளும். 2003 மற்றும் 2004ம் ஆண்டுக்கு பின்னர், பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக புதிய அல்லது தேசிய பென்ஷன் முறை(NPS) என்ற திட்டம் வந்தது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் தங்களது மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையையும், அரசு சார்பில் ஒரு குறிப்பிட்ட கூட்டுப் பங்களிப்பு தொகையையும் பென்ஷன் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு, ஒரு தொகுப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும்(அரசு பத்திரங்கள், தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள், பிற முதலீடுகள்). இதன் மூலம் கிடைக்கப்பெறும் கார்பஸ் தொகை மூலமே, ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.

இன்று இந்தியாவில் பெரும்பாலும் பழைய பென்ஷன் என்ற திட்டம் இல்லை எனலாம்(பாதுகாப்பு துறை உட்பட). மாநில அளவில் CPS(Contributory Pension Scheme) என்ற திட்டம் தனியாக உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் வாயிலாக எதிர்ப்பு இருந்தாலும், அரசின் நிதி பொறுப்புடைமை சார்பில் காணும் போது பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே, இதனை களையும் பொருட்டு, கடந்த 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை(Unified Pension Scheme) என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.  இந்த திட்டம் புதிதாக இருந்தாலும், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள துணை வடிவம் தான், இந்த UPS பென்ஷன் திட்டம். 

2024-25ம் நிதியாண்டின் முடிவில் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 14.43 லட்சம் கோடி ரூபாய்(அடல் பென்ஷன் திட்டத்தை தவிர்த்து). இந்த திட்டத்தில் உள்ள பயனாளர்களின் எண்ணிக்கை 2.09 கோடி பேர்(அக்டோபர் 2025 தரவு – அரசு, தனியார் மற்றும் குடிமக்கள் சேர்த்து).   

NPS மற்றும் UPS பற்றிய தகவல்கள், வேறுபாடுகள் மற்றும் எது சிறந்தது என்பது தொடர்பான விவரங்களை பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம். படிப்பதற்கு,

NPS vs UPS – Pension Comparison and Calculator

https://varthagamadurai.com/2025/05/09/nps-vs-ups-pension-calculator/

UPS(Unified Pension Scheme) திட்டத்தில், செப்டம்பர் மாத முடிவு வரை, சுமார் ஒரு லட்சத்திற்கும் குறைவான ஊழியர்களே சேர்ந்திருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒட்டுமொத்த ஒன்றிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 24 லட்சம். அதாவது சொல்லப்பட்ட காலம் வரை பதிவு செய்யப்பட்ட UPS சந்தாதாரர்கள் 4% மட்டுமே.

சரி, இந்த புதிய மாற்றத்தை பற்றி பார்ப்போம்…

தேசிய பென்ஷன் திட்டம் துவங்கிய காலத்தில், அரசு ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்பு தொகை என, 100 சதவீதம் அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்தது.(Default Scheme: LIC, UTI and SBI Pension Funds). இவற்றில் முதலீட்டின் மீதான எந்த ரிஸ்க் தன்மையும் பெரிதாக இல்லை(அரசாங்கம் திவாலானால் மட்டுமே ரிஸ்க்). அதே வேளையில், முதலீட்டின் வருவாயும் நீண்டகாலத்தில் பெரிதாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. 

இதனை களையும் பொருட்டு, பின்னர் பங்குகளிலும், தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய சில உட்திட்டங்களையும் அரசு இந்த பென்ஷன் திட்டத்தில் அறிமுகப்படுத்தியது. அவை Active Choice, Auto Choice மற்றும் Default Scheme என பிரிக்கப்பட்டது. Active Choice பிரிவில் பங்குகள், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பிற முதலீடுகள் என கலவையாக முதலீடு செய்யலாம். இருப்பினும், இது பெரும்பாலும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக அமைந்தது. நிதி பாதுகாப்பு கருதி, அரசு ஊழியர்களுக்கு இந்த வசதி அவ்வளவு எளிமையாக்கப்படவில்லை எனலாம்.

Auto Choice ஐ பொறுத்தவரை சுழற்சி முறையில் மேலே சொல்லப்பட்ட முதலீட்டு சாதனங்களில்(Equity, Corporate Bonds, Govt. Securities, Alternative Investment funds) கலவையாக முதலீடு செய்யப்படும். அதாவது ஒருவரின் வயதை அடிப்படையாக கொண்டு இங்கே முதலீட்டை பண்ட் நிர்வாகம் மேற்கொள்ளும். அதற்கேற்றாற் போல Conservative(LC25), Moderate(LC50) மற்றும் Aggressive(LC75) என்ற நிலைப்பாடுகளில் ஏதேனும் ஓன்றை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். உதாரணமாக LC25 நிலைப்பாட்டை நாம் தேர்ந்தெடுத்தால், 35 வயது வரை – 25 சதவீதத் தொகை பங்குகளிலும், பிற தொகை அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். 35 வயதுக்கு பின்னர் பங்குகளின் தொகை குறைக்கப்பட்டு பெரும்பாலும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும்(Portfolio Rebalancing – Risk Management). 

Default Scheme என்பது நாம் ஏற்கனவே சொன்னது போல, தேசிய பென்ஷன் திட்டத்தின் துவக்க காலத்தில் வந்தது தான். 100 சதவீத தொகையும் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். ரிஸ்க் குறைவு, பெரிய அளவில் வருவாய் வளர்ச்சி இருக்காது. 

நடப்பு காலத்தில் மியூச்சுவல் பண்டுகளிலும், பங்குச்சந்தையிலும் முதலீட்டை மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டின் மீதான விழிப்புணர்வும் கிடைக்கப் பெறுகிறது(அரசு சார்பிலும் விளம்பரம் செய்யப்படுகிறது). இதன் காரணமாக தேசிய பென்ஷன் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களும் தங்களது NPS அல்லது UPS திட்டத்தில் சற்று ரிஸ்க் எடுத்து வருமானம் ஈட்ட விரும்புகின்றனர். இந்த வாய்ப்பு, கடந்த அக்டோபர் மாதம் வரை கிட்டாமல் இருந்த நிலையில், அக்டோபர் 24ம் தேதி அன்று ஒன்றிய நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு புதிய உட்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Balanced Life Cycle 50 (Modified Version of LC50):

இத்திட்டம், பங்குகளில் கணிசமான பங்களிப்பை மேற்கொள்ள ஏதுவாக உள்ளது. அதாவது Balanced LC50 திட்டத்தில் உங்களது 45 வயது வரை – 50 சதவீதத் தொகை பங்குகளிலும், 30 சதவீதத் தொகை தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் 20 சதவீதத் தொகை அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். அதன் பின்னர், படிப்படியாக ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அடிப்படையில் பங்குகளை குறைத்து கடன் பத்திரங்களில் உங்களது 55 வயது வரை முதலீடு செய்யப்படுகிறது. 

55 வயது முடியும் தருவாயில், பங்குகள் 35%, தனியார் கடன் பத்திரங்கள் 10 சதவீதம் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் 55 சதவீதம் என்ற அடிப்படையில், உங்களது NPS போர்ட்போலியோ மறு சமநிலைப்படுத்தப்படும்(Portfolio Rebalancing). இதற்கு பிறகான காலத்திலிருந்து உங்களது ஓய்வு காலம் வரை பெரும்பாலும் அரசு பத்திரங்களில் உங்கள் முதலீடு இருக்கும். 

நீங்கள் ஏற்கனவே மேலே சொன்ன வேறு ஏதேனும் உட்திட்டத்தில் தற்போது இருந்தால், நடப்பு மாதம் முதல் CRA NSDL தளத்தில் சென்று இந்த புதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். Balanced LC50 திட்டம், NPS மற்றும் UPS என இரண்டு முறைகளுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தில் அரசு ஊழியர் மட்டுமல்லாது தனியார் மற்றும் இந்திய குடிமக்கள் யாவரும் மாற்றிக் கொள்ளலாம் என்பது இன்னொரு சிறப்பு.

Balanced LC50 திட்டத்தின் மூலம் உங்களது ஓய்வுக்கால கார்பஸ்(Retirement Corpus) தொகையில் நல்ல வளர்ச்சியும், ஓய்வுகாலத்திற்கான பென்ஷன் தொகையும் சற்று கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யும்.

சுற்றறிக்கை விவரம்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182253&reg=3&lang=2

சுற்றறிக்கையை தமிழில் படிக்க…

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182536&reg=3&lang=2

  

சரவணகுமார் நாகராஜ்,

Registered NPS Distributor (ARN-158941)

Distributor Code: BZBPS3240P00158941

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப் போகிறீர்களா ? இந்திய பரஸ்பர நிதியின் சுருக்கமான வரலாறு

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப் போகிறீர்களா ? இந்திய பரஸ்பர நிதியின் சுருக்கமான வரலாறு 

A Brief history of Mutual Funds in India – MF Industry Insights

கடந்த அக்டோபர் மாத முடிவில், இந்திய பரஸ்பர நிதி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு(AUM) மட்டும் 79.87 லட்சம் கோடி ரூபாய். அதாவது கடந்த ஐந்து வருடங்களில் மூன்று மடங்கு வளர்ச்சியையும், இதுவே பத்து வருட காலத்தில் ஆறு மடங்கு வளர்ச்சியையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ம் ஆண்டின் மே மாத முடிவில் இந்திய மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.இது அடுத்த மூன்று வருடங்களில் 20 லட்சம் கோடி ரூபாயாக(ஆகஸ்ட் 2017) விரைவான வளர்ச்சியை அடைந்திருந்தது. 

பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வது இன்று எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அதற்கான திறன்களும், நிறுவனங்களை பகுப்பாய்வு செய்வதும் அவ்வளவு எளிதல்ல. அதற்கான முறையான கல்வியையும், அடிப்படையாக தொழில் முறையை புரிந்து கொள்ளுதல் மற்றும் முதலீட்டின் மீதான கவனம் அவசியம். இதற்கான நேரத்தை செலவிட இயலாதவர்கள் தகுந்த நிதி ஆலோசகரின் வழிகாட்டுதல் படி, தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம். 

அதே வேளையில், இது அனைவருக்கும் சாத்தியமா மற்றும் அதற்கான கட்டணத்தை கவனத்தில் கொள்வதும் அவசியம். இதற்கு மாற்றாக காணப்படுவது தான், பரஸ்பர நிதி முதலீடு எனப்படும், ‘மியூச்சுவல் பண்டு(Mutual Funds)’. மியூச்சுவல் பண்டு என்றவுடன் நம்மில் பெரும்பாலானோர் ஏதோ சீட்டு பண்டு என்றோ அல்லது பங்குச்சந்தையில் முழுவதுமாக முதலீடு செய்வது, இதன் காரணமாக ரிஸ்க் அதிகமிருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் மியூச்சுவல் பண்டு துறை பல்வேறு, கலப்பின முதலீட்டு வாய்ப்புகளை நமக்கு அளிக்கிறது. 

நாம் பங்குகள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள் என பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை மியூச்சுவல் பண்டில் தேர்ந்தெடுக்கலாம். இல்லையெனில் இவற்றினை கலந்த திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். பிரபலமான வெளிநாட்டு சந்தைகளிலும், அதன் பங்கு நிறுவனங்களிலும் நாம் மியூச்சுவல் பண்டு மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு திட்டங்களுக்கு தகுந்தாற் போல ரிஸ்க் தன்மை மாறுபடும். குறைந்த மற்றும் நடுத்தர காலத்திற்கு ரிஸ்க் குறைந்த முதலீட்டு திட்டங்கள், நீண்டகாலத்தில் அதிக வருவாய் ஈட்ட ரிஸ்க் அதிகம் கொண்ட திட்டங்கள் என நமது இலக்குகளுக்கு ஏற்றவாறு முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்வதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கிகளில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதத்தை விட, அதிகமாக வருவாய் பெறுவதும் மேலும் சில கூடுதல் நன்மைகளும் உள்ளன. குறிப்பாக நமது முதலீட்டை கவனித்து கொள்ள திறன் கொண்ட பண்டு மேலாண்மை குழு(Professionally Fund Management), ரிஸ்க்கை பரவலாக்குதல்(Diversification), அவசர தேவைக்கு எளிமையாக பணத்தை திரும்பப் பெறுதல்(Liquidity), குறைந்த கட்டணம்(Low Cost) மற்றும் குறைந்த முதலீட்டு தொகை(Investing in Small amounts), மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதி(Upgraded Technology), முறையான ஒழுங்குமுறை ஆணையம்(Regulator – SEBI AMFI) மற்றும் வரிச்சலுகை(Tax Benefits) ஆகியவை. இன்னொரு சிறப்பு – மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு(Demat Account) தேவையில்லை.

காலங்காலமாக, நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்த மற்றும் நாம் அறிந்த சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்கள் எனில் தங்கம், நிலம், வீடு, வங்கி டெபாசிட், அஞ்சலக சிறு சேமிப்பு மற்றும் பி.எப். ஆகியவை தான். இவை அத்தனையும் கொண்ட ஒரு பெரும் சந்தையை கொண்டது தான் மியூச்சுவல் பண்டு துறை. நாம் நினைப்பதும் போல இந்தியாவில் மியூச்சுவல் பண்டு முதலீடு கடந்த பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது அல்ல. 

கடந்த 1963ம் ஆண்டு வாக்கில் இந்திய அரசால் யூ.டி.ஐ.(Unit Trust of India – UTI) எனப்படும் மியூச்சுவல் பண்டு நிறுவனம் முதன்முதலில் துவக்கப்பட்டது. இதுவே இந்தியாவின் மியூச்சுவல் பண்டு துறைக்கான அடித்தளம். அப்போது ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) இதற்கான ஒழுங்குமுறை ஆணையமாக செயல்பட்டிருந்தது. தற்போது இதனை செபி(SEBI-AMFI) கவனித்து கொள்கிறது. இந்தியாவில் 1987ம் ஆண்டு வரை யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு மட்டுமே கோலோச்சியது குறிப்படத்தக்கது. இதற்கு பிறகான காலத்தில் அரசு பொதுத்துறை வங்கிகள் மியூச்சுவல் பண்டு துறையில் தங்களது கால்களை பதித்தன எனலாம்.

1992ம் ஆண்டுக்கு பிறகு பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட தனியார் வங்கிகளும் இத்துறையில் நுழைந்தன. இன்று இந்தியாவில் செபியில் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 52. மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு(AUM) அடிப்படையில் முன்னிலையில் உள்ள சில நிறுவனங்கள்,

  1. SBI Mutual Fund
  2. ICICI Prudential Mutual Fund
  3. HDFC Asset Management
  4. Kotak Mahindra Mutual Fund
  5. Nippon Life India Fund
  6. Aditya Birla Sunlife(ABSL) Mutual Fund
  7. UTI Mutual Fund
  8. Axis Asset Management
  9. Mirae Asset Investment Managers(India)
  10. DSP Mutual Fund

எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மட்டும் 11.13 லட்சம் கோடி ரூபாய்(டிசம்பர் 2024 தரவு). ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் எச்.டி.எப்.சி. முறையே ரூ.8.73 லட்சம் கோடி மற்றும் 7.87 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில்(MF AUM to GDP Ratio) 19.9 சதவீதமாக உள்ளது(மார்ச் 2025). AMFI(Association of Mutual Funds in India) அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின் படி, இந்திய மியூச்சுவல் பண்டு துறை 2047ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை தாண்டி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.    

இந்திய மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் 13 சதவீத பங்களிப்பை குறைந்த மற்றும் நடுத்தர ரிஸ்க் கொண்ட திட்டங்களிலும், 87 சதவீத தொகையை அதிக ரிஸ்க் கொண்ட பங்குகளிலும் முதலீடு செய்கின்றனர். இதுவே நிறுவனங்கள்(வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், அன்னிய நாட்டு நிறுவனங்கள்) 53 சதவீத தொகையை குறைந்த மற்றும் நடுத்தர ரிஸ்க் தன்மை கொண்ட திட்டங்களிலும், 47 சதவீதத்தை பங்குகளிலும் மேற்கொள்கின்றனர். செப்டம்பர் 2025 தரவின் படி, சிறு முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு சொத்து மதிப்பு 47.21 லட்சம் கோடி ரூபாயாகவும், நிறுவன முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 30.57 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள்:

  1. எதற்காக முதலீடு செய்ய உள்ளோம் ? (இலக்குகளை நிர்ணயித்தல்)
  2. எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ள உள்ளோம் ? (இலக்குகள் வரை காத்திருத்தல், இடையில் பணத்தை எடுக்காமல் இருத்தல்)
  3. எதிர்பார்க்கும் வருவாய் ? (வங்கி வட்டி விகிதங்களை காட்டிலும் சற்று அதிகம், பணவீக்கத்தை தாண்டிய வருவாய் பெறுதல், போன்சி மோசடிகள், கந்து வட்டி போன்ற பேராசை கூடாது)
  4. திட்டங்களை சரியாக புரிந்து கொள்ளுதல் அல்லது நமது பணம் எங்கே  முதலீடு செய்யப்படுகிறது என அறிந்திருத்தல்.
  5. நாம் மேற்கொள்ளும் முதலீட்டில் அவசர தேவைக்கு பணத்தை திரும்ப பெற முடியமா மற்றும் வரிச்சலுகை எப்படி ? (தொடர் முதலீடு அவசியம், ஆனால் அவசரமும் கவனம் கொள்ள வேண்டியவை)

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய, பங்குச்சந்தையை போல திறமையை கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக மேலே சொன்ன ஐந்து காரணிகளை புரிந்து கொண்டு முதலீடு செய்தால் போதுமானது. 

“பொதுவாக நமது இலக்குகள் சார்ந்த முதலீடுகளுக்கு மியூச்சுவல் பண்டு எனும் வளமான மரத்தையும், செல்வம் ஈட்டுவதற்கு(ரிஸ்க் அதிகம்) நேரடியாக பங்குகள் எனும் மாமரத்தையும் தாங்கி பிடித்துக் கொள்ளலாம் !”

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவில் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் – துறை சார்ந்த அலசல்

இந்தியாவில் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் – துறை சார்ந்த அலசல் 

Diabetes in India – Sectoral Analysis

உலக நீரிழிவு நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடத்தப்பட்ட Lancet – Medical Journal ஆய்வின் படி, உலகளவில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் 82.8 கோடி. இவற்றில் நான்கில் ஒரு பங்கு அளவு இந்தியாவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்க தரவாக வெளிவந்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் நீரிழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 21.2 கோடி. சீனாவில் இது 14.8 கோடியாக உள்ளது. உலகின், ‘நீரிழிவு நோயின் தலைநகரமாக’ இந்தியா நினைவூட்டப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளில் உலக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சராசரியாக நூறில் பதினான்கு பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. பாதிக்கப்பட்டோர்களில் 60 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் அதற்கான மருத்துவத்தையோ, வாழ்வியல் முறையையோ பேணுகின்றனர் என்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை. இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களின் விகிதம் 21.5 சதவீதமாகவும், பெண்கள் 23.7 சதவீதமாகவும் இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் 29.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 15 சதவீதமாகவும் காணப்படுகிறது. அதே வேளையில் மேற்குலக நாடுகளில் உள்ளது போல, டைப்-1 நீரிழிவு நோய் இந்தியாவில் பெரும்பாலும் இல்லை என்பதும், பாதிக்கப்பட்டோரில் சுமார் 95 சதவீதம் பேருக்கு வாழ்வியல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் சார்ந்த டைப்-2 நீரிழிவு இருப்பதும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 30 சதவீத மக்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதனை அறியாமலே, தங்களது வாழ்க்கையை தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகரித்த எண்ணிக்கைகு காரணமாக சொல்லப்படுவது மரபணு, நகரமயமாக்கலுக்கு பிறகான உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள்(அதிகப்படியான உணவு எடுத்தல், குறைவான உழைப்பு மற்றும் தூக்கமின்மை, உளவியல் சார்ந்த சிக்கல்கள்) தான். பக்கவாதம், தமனி நோய், நுரையீரல் அடைப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய், இரும்புச்சத்து குறைபாடு, பிறந்த குழந்தைகளுக்கு காணப்படும் குறைபாடு ஆகியவற்றுக்கு மூலமாக இந்த வாழ்வியல் மற்றும் உணவு முறை சார்ந்த நீரிழிவு காரணமாகி விடுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்களையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. 1987ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தேசிய நீரிழிவு கட்டுப்பாட்டு திட்டம் முன்னரே துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை முறையான உடற் பரிசோதனை மற்றும் உணவுமுறை ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. மேற்குலக நாடுகளில் இவற்றுக்கான மருத்துவ செலவு அதிகமிருந்தாலும், இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இதற்கான செலவினம் சற்று குறைவே. அதாவது இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 10,000 ரூபாய்(தனிநபர்) என்ற விகித அடிப்படையில் இது இருந்து வருகிறது.

இந்தியாவின் நீரிழிவு சந்தை மதிப்பு சுமார் ரூ.31,600 கோடி(2024 தரவு). இது 2034ம் ஆண்டு வாக்கில் 1,39,400 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 16 சதவீத வளர்ச்சி. நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் இந்திய சந்தை மதிப்பு மட்டும் சுமார் 23,800 கோடி ரூபாய். இது அமெரிக்காவில் சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாயாக காணப்படுகிறது. மாறுபட்ட வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுப்பழக்க முறைகளின் அதிகரிப்பு காரணமாக நீரிழிவு நோய் எதிர்ப்புக்கான மருந்துகளின் தேவையும் அதிகரித்து வந்துள்ளது.

நோய் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், நவீன மருத்துவத்தின் வளர்ச்சியும், பிற மருத்துவ முறைகளின்(அலோபதி தவிர்த்து) ஆய்வும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையில் காணப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், டிஜிட்டல் வழி சிகிச்சை, டெலிமெடிசின் போன்ற மேம்பாடுகள் கிராமப்புறங்கள் வரை கொண்டு செல்கிறது. கடந்த சில வருடங்களாக சுகாதாரத் துறையில் தேவையான வசதியை மேம்படுத்த அரசும் முதலீடு(உட்கட்டமைப்பு, புதிய சாதனங்கள், காப்பீடு மற்றும் மலிவான மருந்துகள்) செய்து வருகிறது.   

இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் பெரும்பாலும் இன்சுலின் மருந்து அல்லாத மாத்திரை வடிவிலான சந்தை தான் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் முதன்மை மருந்துகளாக மெட்ஃபார்மின்(Metformin), சல்போனிலூரியா(Sulfonylureas), டிபிபி(Dipeptidyl peptidase-4), ஆல்பா-குளுக்கோசிடேஸ் தடுப்பான்கள்(Alpha-glucosidase) மற்றும் தியாசோலிடினியோன்கள்(TZDs) ஆகியவை உள்ளன. உலகளவில் மெட்ஃபார்மின்(Metformin) மருந்துச் சந்தை மதிப்பு மட்டும் 36 கோடி அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு(உற்பத்தி மற்றும் நுகர்வு) மட்டும் 46 சதவீதமாக உள்ளது. 

இந்த மருந்து தயாரிக்கும் API நிறுவனங்களை இந்தியாவில் காணும் போது, Wanbury, Aarti Drugs, USV, Harman Finochem, Exemed Pharma ஆகியவை உள்ளன. அதே வேளையில் ஒட்டுமொத்த நீரிழிவு சந்தைக்கான இந்திய பெரு நிறுவனங்கள் என காணுகையில் Sun Pharma, Dr. Reddy’s Lab, Biocon, Novo Nordisk, Sanofi India, Glenmark Pharma, Johnson & Johnson, Abbott India, Lupin, Torrent Pharma, Merck, Cadilla, AstraZeneca ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 

மெட்ஃபார்மின்(Metformin) மருந்து தயாரிப்பில் முதல் 5 நிறுவனங்கள் மட்டுமே, ஒட்டுமொத்த சந்தையில் 60 சதவீத பங்களிப்பை(Market Share) கொண்டுள்ளன. USV Private Ltd  22 சதவீத பங்களிப்புடன், இந்த மருந்து பிரிவில் முன்னிலையில் உள்ளது. இதற்கடுத்தாற் போல சன் பார்மா (Sun Pharma) 15%, Zydus Cadila 12%, Cipla 10% மற்றும் Dr.Reddy’s 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இப்பிரிவின் பெரும்பாலான மாத்திரைகள் ஒரு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது(மாத்திரை ஒன்றுக்கு). அரசின் மானிய விலையில் காணும் போது ஒரு மாத்திரையின் விலை இரண்டு ரூபாய்க்கும்  குறைவாகவே உள்ளது. பிரபல பிராண்டுகளாக Glycomet(USV Product), Metformin-Sun, Emsulide (Sun Pharma), Zita-met(Zydus Brand), Ciplament, Glyciphage(Cipla Product), Metformin-DR, Trijardy (Dr. Reddy’s) உள்ளன. குறிப்பிட்ட தயாரிப்பில் தனி நிறுவன காப்புரிமை இல்லாததால், இது 100 சதவீத பொதுவான தயாரிப்பு சந்தையாக(Generic Medicine) உள்ளது. இதுவே சில நிறுவனங்களுக்கு பாதகமாக உள்ளது. அதே வேளையில் மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கப்பெறுவதால், இதன் பிராண்டுகளும் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுகின்றன.

அரசு சார்பில் மானிய விலையில் மருந்துகளை வழங்க பல்வேறு விநியோகத் திட்டங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நீரிழவுக்கான கட்டுப்படுத்தல் மற்றும் பராமரிப்புகளையும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மருந்துகள் போதுமான அளவு கிடைக்கப்பெறுவதனையும் அரசு கண்காணித்து வருகிறது.

உலக நீரிழிவு மருத்துவ சாதனங்களின்(Medical Devices) சந்தை மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 7.5 சதவீதம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா 20 சதவீதத்தை பங்களிப்பை கொண்டுள்ளது. 2024ம் ஆண்டு தரவின் படி, இந்திய இன்சுலின் சந்தையின் மதிப்பு சுமார் 1.02 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் குளுக்கோஸ் கண்காணிப்பு சார்ந்த சாதனங்களின் சந்தை மதிப்பு 5.6 கோடி அமெரிக்க டாலர்கள்.          

நாடு முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த டெலிமெடிசின் மற்றும் ஏ.ஐ. மூலம் இயக்கப்படும் நவீன சிகிச்சை கண்காணிப்பு ஆகியவற்றால் இத்துறையின் வளர்ச்சியும் டிஜிட்டல் வழி சுகாதார முன்னேற்றமாக வடிவமைக்கப்பட உள்ளது. 

(தகவல்கள் மற்றும் தரவுகள்): Expertmarketreseach, JETIR Report, ICMR, CDSO, Lancet, IDMA)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் – பங்குச்சந்தை அலசல்

பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் – பங்குச்சந்தை அலசல் 

Pix Transmission – Fundamental Analysis – Stocks

கடந்த 1981ம் ஆண்டு வாக்கில் மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் நகரை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட நிறுவனம் தான் பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் லிமிடெட். பெல்ட்டுகள் மற்றும் பவர் டிரான்ஸ்மிஷன்(Belts & Mechanical Power Transmission) பிரிவில் தனது உற்பத்தியை கொண்டிருக்கும் இந்நிறுவனம் தொழிற்துறை, வேளாண்மை, தோட்டப் பராமரிப்பு, புல் வெட்டும் இயந்திரம் மற்றும் வாகனத்துறைக்கு தேவையான பெல்ட்டுகள் மற்றும் அதிக சக்தி தாங்கும் பெல்ட்டுகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பெல்ட் தயாரிக்கும் உற்பத்தி நிலையங்களையும், தானியக்க ரப்பர் கலவை(Rubber Mixing) வசதியையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. நிறுவனத்தின் விற்பனைப் பொருட்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை சொந்த பிராண்டுகளாகவே உள்ளன. நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் பெரும்பாலும் வாகனம், வேளாண்மை, கட்டுமானம், உணவு பதப்படுத்தல், குளிர் சேமிப்பு மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகிய துறைகளால் பயன்படுத்தப்படுகிறது.   

நிறுவனத்தின் விற்பனைப் பொருட்களாக தொழிற்துறை பெல்ட்டுகள், விவசாயம், புல்வெளி மற்றும் தோட்டத்துறை சார்ந்த பெல்ட்டுகள், உயர் சக்தி மதிப்பிடப்பட்ட பெல்ட்டுகள், வாகனத்திற்கு தேவையான பெல்ட்டுகள் மற்றும் பல்வேறு உதிரிப் பாகங்களும் உள்ளன. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 50 சதவீத வருவாய் ஏற்றுமதியிலிருந்து பெறப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயில் 98 சதவீத பங்களிப்பு, அதன் உற்பத்தியின் மூலம் பெறப்படுவது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்திற்கு உள்நாட்டில் மூன்று உற்பத்தி ஆலைகளும், இரண்டு அலுவலகங்களும் உள்ளன. இது போக அயல்நாட்டில் நான்கு அலுவலகங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. விற்பனைக்காக மட்டும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 250 கூட்டு விற்பனை நிலையங்களை நிறுவனம் வைத்துள்ளது. நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் பெரும்பாலும் வணிக நிறுவனங்களுக்கானது(B2B).  

பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் விற்பனையில் 36 சதவீத வருவாய், தனது முதல் 10 வாடிக்கையாளர் நிறுவனங்களின் மூலம் பெறப்படுகிறது. விற்பனைக்கு பிந்தைய சேவைகளிலும் இந்நிறுவனம் முக்கியத்துவம் காட்டி வருகிறது. நிறுவனத்திற்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிடத்தக்க துணை நிறுவனங்களும் உள்ளன. உலகளவில் பசுமை தொழில்நுட்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்நிறுவனத்திற்கான தொழில் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1,950 கோடி. நிறுவனத்திற்கான கடன் பெரிதாக எதுவுமில்லை என்பதால், இதன் கடன்-பங்கு விகிதம் 0.06 என்ற அளவில் உள்ளது. மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமாக இருந்துள்ளது. விற்பனை மீதான வருவாய் கடந்த ஐந்து வருட காலத்தில் சராசரியாக 14 சதவீதமாகவும், கூட்டு லாப வளர்ச்சி 29 சதவீதமாகவும் இருந்துள்ளது.

2024-25ம் நிதியாண்டு முடிவில், நிறுவனத்தின் வருவாய் 589 கோடி ரூபாயாகவும், அடிப்படை செலவினம் 426 கோடி ரூபாயாகவும் உள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீதத்திற்கும் மேலாக காணப்படுகிறது. 2025ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.113 கோடியாகவும், ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) ரூ.83 ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.582 கோடி. 

நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கடந்த பத்து வருட காலத்தில் மேம்பட்டு வந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் நிறுவனம் சுமார் 91 கோடி ரூபாயையும், 2024-25ம் நிதியாண்டில் 71 கோடி ரூபாயையும் தொழில் விரிவாக்கத்திற்காக  முதலீடு செய்துள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 62 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவுமில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அடிப்படைப் பகுப்பாய்வு தரவின் படி(2024-25), நிறுவனத்தின் பங்கு விலை சராசரியாக பங்கு ஒன்றுக்கு ரூ.1,232 முதல் 1,540 ரூபாய் மதிப்பை பெறும். தற்போது இந்த பங்கின் விலை பங்கு ஒன்றுக்கு ரூ.1,430 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

நிறுவனத்திற்கான கடன் 35 கோடி ரூபாயாகவும், ரொக்க கையிருப்பு 69 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது(2024-25 நிதியாண்டு தரவு). நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.438 என்ற விலையையும், இதன் பி.இ. விகிதம் 17.2 என்ற அளவிலும் உள்ளது. தற்போது இத்துறையின் பி.இ. விகிதம் 33.1 என்ற அளவில் இருக்கிறது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 46 மடங்குகளில் உள்ளது. 

பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் வலிமை மற்றும் பலவீனங்களாக காணுகையில், இத்துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. பல்வேறுபட்ட துறைகளுக்கு தேவையான பெல்ட்டுகளை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபடுதல், நவீன தொழில்நுட்பத்தை கொண்டிருத்தல், சொந்த பிராண்டு பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பிறகான சேவை ஆகியவை இதன் வலிமையை காட்டுகிறது.

அதே வேளையில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மூலம் மட்டுமே பெரும்பாலான வருவாய் ஈட்டப்படுவது, மூலப்பொருட்களின்(ரப்பர்) விலை மாற்றம், சுழற்சி முறையில் இயங்கும் சில துறைகளின் தாக்கம், உலக பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு மற்றும் நாணயத்தின் மாற்று மதிப்பு, சுற்றுச்சூழல் விதிமுறைகள் ஆகியவை இந்நிறுவனத்தின் வருவாயை பாதிக்கக்கூடும்.

துறை சார்ந்த மதிப்பீட்டை பொறுத்தவரை, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இத்துறை சராசரியாக ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சியை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்திற்கு, நம்ம மதுரையை சார்ந்த ஜேகே பென்னர்(JK Fenner) நிறுவனம் ஒரு முக்கிய போட்டி நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை. ஜேகே குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இருப்பது நாம் அறிந்தவையே ! 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி  

NALCO India reported a Net Profit of Rs.5,268 Crore in the FY 2024-25 Consolidated – Results

ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த முதன்மை அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினிய கம்பெனி(National Aluminium Company) நிறுவனம் தனது 2024-25ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டிருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பாக்சைட்- அலுமினா – அலுமினிய – மின்சார வளாகங்களை கொண்ட நிறுவனமாகவும் நால்கோ உள்ளது.

கடந்த 1981ம் ஆண்டு வாக்கில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் அலுமினா மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் உட்பிரிவுகளாக அலுமினிய கம்பிகள், உருட்டப்பட்டவை, கீற்றுகள்(Strips), பில்லெட்டுகள், கால்சின் செய்யப்பட்ட அலுமினா மற்றும் இதர அலுமினா பொருட்கள் உள்ளது. உலகளவில் குறைந்த விலையில் அலுமினியத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் நால்கோ இருக்கிறது. 

பொதுவாக பாக்சைட், அலுமினியம் உற்பத்திக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் அலுமினியத்தின் தேவை கட்டுமானம், மின்னணுவியல், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படுகிறது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பாக்சைட் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற பகுதிகளில் பாக்சைட் அமைந்துள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது கவனிக்கத்தக்கது.

நால்கோ நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் உள்நாட்டில் தான் பெறப்படுகிறது. ஏற்றுமதியில் இதன் வருவாய் முப்பது சதவீதமாக இருந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.16,788 கோடியாகவும், செலவினம் 9,280 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் இயக்க லாபம் 7,508 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 45 சதவீதமாகவும் இருக்கிறது. பொதுவாக இத்துறையில் இயக்க லாப விகிதம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மூலப்பொருட்களுக்கான செலவினம் உலகளாவிய சந்தையை சார்ந்திருப்பது தான். 

2024-25ம் நிதியாண்டில் நிறுவனத்தின் இதர வருவாய் 357 கோடி ரூபாயாகவும் நிகர லாபம் ரூ.5,268 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஈவுத்தொகை விகிதம்(Dividend Yield) தற்போதைய பங்குவிலையில் சராசரியாக நான்கு சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2024-25ம் நிதியாண்டு முடிவில் ரூ.16,887 கோடி. நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 9 சதவீதமாகவும் இருந்துள்ளது. லாப வளர்ச்சியை காணுகையில், ஐந்து வருட காலத்தில் 108 சதவீதமாகவும், இதுவே 10 வருடங்களில் 16 சதவீதமாகவும் இருந்துள்ளது.

2025ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு(Cash Equivalents) ரூ. 5,427 கோடி. கடந்த காலத்தில் நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கணிசமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிறுவனர்களை பொறுத்தவரை, இது அரசு பொதுத்துறை நிறுவனம் என்பதால், ஒன்றிய அரசிடம் 51 சதவீத பங்குகள் கைவசம் உள்ளது. அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடம் சராசரியாக 16 சதவீதப் பங்குகள் உள்ளது. 

நால்கோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 33,765 கோடி ரூபாய். நிறுவனத்தின் பி.இ. விகிதம் தற்போது 6.5 என்ற மடங்குகளில் உள்ளது(மே 2025). பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீதமாகவும், பத்து ஆண்டுக்காலத்தில் 14 சதவீதமாகவும் இருக்கிறது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 121 மடங்குகளிலும், கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.01 என்ற அளவிலும் உள்ளது. 

நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.97 என சொல்லப்பட்டிருந்தாலும், தற்போதைய பங்கு விலை(ரூ.184), அதன் தள்ளுபடி மதிப்பை(ரூ.226) காட்டிலும் குறைவாக தான் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. 

நிறுவனத்திற்கு கடன் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், துறை சார்ந்த ரிஸ்க் தன்மை உலகளாவிய சந்தையை சார்ந்துள்ளது. இதன் காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவினம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படலாம். எனவே இதன் லாப விகிதமும் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாறுபடக்கூடிய நிலை உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு 

National Pension System(NPS) vs Unified Pension Scheme(UPS) –  Calculation & illustration

இந்த பதிவு, நாட்டின் ஓய்வூதியத் திட்டத்தை பற்றி விரிவாக கூறவில்லை. மாறாக NPS மற்றும் UPS ஆகியவற்றுக்கு இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகள் மற்றும் கணக்கீட்டை பயன்படுத்த உதவுகிறது.

2003ம் ஆண்டுக்கு பிறகு, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) மாற்றியமைக்கப்பட்டு, தேசிய ஓய்வூதியத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப நிலையில். புதிய பென்ஷன் திட்டம் என வழக்காக சொல்லப்பட்ட நிலையில், பின்னர் தேசிய பென்ஷன் திட்டம்(NPS) என்ற முறை அறியப்பட்டது. அதாவது பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்காக எந்த நிதிப் பங்களிப்பும் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படுவதில்லை. 

பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்கான நிதியை அரசே ஏற்றுக் கொள்ளும். தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பெறப்படும் பி.எப்.(சேமநல நிதி) பங்களிப்பும் வட்டியுடன் சேர்த்து பின்னர் அவர்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தேசிய பென்ஷன் திட்டத்தில் அப்படியொன்றும் இல்லை. 

2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பென்ஷன் திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் 10 சதவீத பங்களிப்பும், அரசின் சார்பில் 10 சதவீத பங்களிப்பும் என கூட்டாக ஒரு தொகை ஒதுக்கப்பட்டு பென்ஷனுக்கான ஒரு திட்டத்தில்(Pension Funds) முதலீடு செய்யப்படும். பின்னர் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான நிதியாக கருதப்பட்டு, ஊழியர் தனது 60 வயதை கடந்தவுடன், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து மாதந்தோறும் வட்டி வருவாய் அளிக்கப்படும். தற்போது தேசிய பென்ஷன் திட்டத்திற்கான அரசின் பங்களிப்பானது 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பென்ஷன் திட்டத்தை பொறுத்தவரை ஊழியர் ஒருவர் தனது பணிக்காலம் முழுவதும் வேலை பார்த்து ஓய்வு பெறும் நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 60 சதவீதத் தொகையை ரொக்கமாகவும், மீதமுள்ள 40 சதவீதத் தொகைக்கு வட்டி வருவாயும்(Annuity Plan – Rates) பெறலாம். அதாவது ஓய்வு பெற்றாலும் அவரால் மீதமிருக்கும் 40 சதவீதத் தொகையை முழுவதுமாக பெற இயலாது. இந்த தொகை ஓய்வூதியத்தை உறுதிப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டுள்ள ஒரு முறை. 

அதே வேளையில் ஓய்வு பெறும் ஒருவர் பின்னாளில் இறந்து விட்டால், அவருடைய நாமினிக்கு இரு வாய்ப்புகள் தரப்படுகிறது. அதாவது, தனது துணையை போலவே, ஓய்வூதியம் பெற(40% தொகையில் வட்டி வருவாய்) விரும்புகிறாரா அல்லது முழுத்தொகையை பெற விரும்புகிறாரா என்பது தான்.   

ஊழியர் ஒருவர் தனது பணிக்காலத்தை முழுமை செய்யாத நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 20 சதவீதத் தொகை மட்டுமே அவருக்கு ரொக்கமாக வழங்கப்படும். மீதமிருக்கும் 80 சதவீத தொகையில்(80% Annuity Plan) வட்டி வருவாய் அளிக்கப்படும். மாறாக, அவர் 20 சதவீதத் தொகையை உடனே பெற விரும்பாவிட்டால், 60 வயது முடியும் வரை அவர் சொல்லப்பட்ட தொகுப்பு நிதிக்காக தனது பங்களிப்பை வழங்கலாம். இல்லையெனில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 ஐ மட்டும் செலுத்தி கணக்கை செயல்படுத்தும் நிலையில்(NPS Tier- I Activation) வைத்துக் கொள்ளலாம். 

பொதுவாக தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிலையான ஓய்வூதியம் என்ற ஒன்றில்லை. மாறாக சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியும், அவற்றின் வளர்ச்சி(அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பங்குகளில் முதலீடு) – Retirement Corpus மற்றும் வட்டி விகிதத்தை(Annuity Rates) பொறுத்தது தான். அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என இருந்த தேசிய பென்ஷன் திட்டம் பின்னர் 2009ம் ஆண்டு வாக்கில் தனியார் துறை ஊழியர்கள், சுய தொழில் புரிபவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என பெரும்பாலான இந்தியக் குடிமக்களுக்கு அறிமுகமானது.

பழைய பென்ஷன் திட்டத்தை ஒப்பிடும் போது, தேசிய பென்ஷன் திட்டம் பாதுகாப்பற்றதாகவும், நிலையான வருமானத்தை ஓய்வுக் காலத்தில் அளிப்பதில்லை எனவும் அரசு ஊழியர் சங்கங்களும், தொழிலாளர்களும் விமர்சித்து வந்த நிலையில், 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்(Unified Pension Scheme) அறிமுகமானது. இருப்பினும் இவை நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கு மேலாகியுள்ளது. 

பழைய, தேசிய மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டங்களின் பயன்கள் மற்றும் அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

NPS vs UPS கணக்கீடு (தோராயமாக மட்டுமே):

நீங்கள் உள்ளீட(Inputs) வேண்டியவை:

உங்கள் பெயர், பிறந்த தேதி, வேலைக்கு சேர்ந்த தேதி, ஓய்வு பெறக்கூடிய நாள், இதுவரை பணியாற்றிய ஆண்டுகள், இன்னும் பணியாற்ற வேண்டிய வருடங்கள், நடப்பு என்.பி.எஸ். கார்ப்ஸ் தொகை, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சதவீதம்.

[Name, DOB, Date of Joining, Date of Retirement, Completed Service, Years to Retirement, Current NPS Investment Corpus value, Current Basic Pay and Dearness Allowance % ]

எச்சரிக்கை: மற்றவற்றை பதிவிட அல்லது திருத்த முயற்சிக்க வேண்டாம். கணக்கீட்டில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Warning: Do not attempt to input or edit others. There is a possibility of error in the Calculation Sheet.

NPS vs UPS – Calculator – Spreadsheet

மேலும் விவரங்களுக்கு அரசின் சுற்றறிக்கையை முழுவதுமாக படித்து அறிந்து கொள்ளவும். அதற்கான இணைப்பும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வேறுபாடு சார்ந்த தகவல் பெறப்பட்ட இணைப்பு: 

https://proteantech.in/articles/ops-vs-nps-vs-ups-retirement-plan-em1822025/

UPS Circular Document:

PFRDA UPS Rules (1)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவில் காப்பீட்டுத் துறை – துறை சார்ந்த அலசல்

இந்தியாவில் காப்பீட்டுத் துறை – துறை சார்ந்த அலசல்

Insurance Industry in India – Sectoral Analysis 

காப்பீடு என்பது கடந்த நூறு வருடங்களோ அல்லது 200 வருடங்களுக்கு முன்னரோ துவக்கப்பட்ட ஒரு சிந்தனை என நாம் நினைக்கலாம். உண்மையில் காப்பீட்டின்(Insurance) வரலாறு என்பது சுமார் 6000 வருடங்களுக்கு முன்னர் தோன்றியவை. தொழிற்புரட்சியின் போது தான் காப்பீட்டின் தேவையையும் உணர வேண்டியிருந்தது. பொதுவாக ‘காப்பீடு’ என்பது உங்களுக்கும்(தனி நபர், சொத்து, நிறுவனம் அல்லது அரசு) ஒரு காப்பீட்டை அளிக்கக்கூடிய நிறுவனத்திற்குமான ஒப்பந்தம் தான். ஏதேனும் நிதி சார்ந்த இழப்பு உங்களுக்கு ஏற்படும் போது, அதற்கான இழப்பீட்டை கோருவதற்கு தான் இந்த ஒப்பந்தம் பயன்படுகிறது. அதாவது உங்களுக்கான ரிஸ்க்கை நீங்கள் மற்றொருவரிடம்(காப்பீட்டு நிறுவனம்) மாற்றியுள்ளீர்கள்(Transferring the Risk). 

இந்தியாவில் காப்பீட்டின் தோற்றம் 1818ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் முதல் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் 1818ம் ஆண்டு ஐரோப்பியர்களால் துவக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவின்(இந்தியர்களால்) முதல் காப்பீட்டு நிறுவனமான பம்பாய் மியூச்சுவல் லைப் இன்சூரன்ஸ் சொசைட்டி 1870ம் ஆண்டில் தான் தோற்றுவிக்கப்பட்டது. நாட்டின் இன்றைய மிகப்பெரிய காப்பீடு நிறுவனமாக வலம் வரும் எல்.ஐ.சி. இந்தியா(LIC India) கடந்த 1956ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 52 லட்சம் கோடி ரூபாய்(மார்ச் 2024 தரவு). 

245க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அந்நிய நாட்டின் காப்பீட்டு நிறுவனங்களும், வருங்கால வைப்பு நிதி சங்கங்களும் சேர்ந்தது தான் இன்றைய எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம்(தேசியமயமாக்கப்பட்டது).  

2023ம் ஆண்டின் முடிவில், உலகளவில் காப்பீட்டுத்(இன்சூரன்ஸ்) துறையின் மதிப்பு ஒன்பது டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இவற்றில் அமெரிக்காவின் பங்களிப்பு மட்டும் சுமார் 40 சதவீதம், அதாவது 3.60 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அதற்கடுத்தாற் போல சீனாவில் சுமார் 723 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடம் முறையே ஐக்கிய ராச்சியம்(UK) மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பிய யூனியன் என காணுகையில் அந்நாடுகள் ஒருங்கிணைந்து 16 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

2032ம் ஆண்டு முடிவில் இது 18.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2024ம் வருடம் முதல் 2032ம் வருடம் வரை, ஆண்டுக்கு சராசரியாக 13 சதவீத கூட்டு வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்கள் சில – ஜெர்மனியின் அல்லையன்ஸ்(1,250 பில்லியன் டாலர்கள்), அமெரிக்காவின் பெர்க்சயர் ஹாத்வே(அட, திருவாளர் வாரன் பப்பெட் அவர்களின் நிறுவனம் தான் – 960 பில்லியன் டாலர்கள்) மற்றும் ப்ரூடென்ட்சியல்(938 பில்லியன் டாலர்கள்), சீனாவின் பிங் ஆன்(937 பில்லியன் டாலர்கள்) மற்றும் சீனா லைப் இன்சூரன்ஸ்(900 பில்லியன் டாலர்கள்), பிரான்ஸின் ஆக்சா, அமெரிக்காவின் மெட்லைப், ஐக்கிய ராச்சியத்தின் லீகல் & ஜெனரல், ஜப்பானின் நிப்பான் லைப் மற்றும் அமெரிக்காவின் யுனைடெட் ஹெல்த் ஆகிய நிறுவனங்களாகும்.

காப்பீட்டுத் துறை பொதுவாக மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு, ஆயுள் அல்லாத காப்பீடு(Non-Life) மற்றும் மருத்துவக் காப்பீடு(Health). ஆயுள் அல்லாத காப்பீடும், மருத்துவக் காப்பீடும் ஜெனரல் இன்சூரன்ஸ் எனவும், ஆயுள் காப்பீடு லைப் இன்சூரன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. வாகனம், மருத்துவம், பயணம், வீடு மற்றும் சொத்துக்கள், வணிகம், விபத்து, பயிர் மற்றும் கால்நடை, வான்வழி மற்றும் கடல்வழி, திருட்டு மற்றும் தீப்பிடித்தல் ஆகியவற்றுக்கு எடுக்கப்படும் காப்பீடுகள் அனைத்தும் ஜெனரல் இன்சூரன்ஸ் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை உள்ளடக்கிய காப்பீடுகள் லைப் இன்சூரன்ஸ் பிரிவின் கீழ் உள்ளது. இது போக Reinsurance என சொல்லப்படும் காப்பீடு நிறுவனங்களிடையே தங்களது ரிஸ்க்கை பரவலாக்குவதற்கான(Transferring the Risk) காப்பீடும் உள்ளது. ஆனால் இவை பெரும்பாலும் தனி நபருக்கானதல்ல.

2023ம் ஆண்டில் சொல்லப்பட்ட 9.0 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், ஆயுள் அல்லாத காப்பீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 4.41 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். உலகளவில் காப்பீட்டு சந்தையின் மதிப்பு, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தில் 7 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது.  இருப்பினும், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஆயுள் காப்பீட்டின் தேவை மற்றும் அதன் மதிப்பு கடந்த சில காலாண்டுகளாக உயர்ந்து வருகிறது. 

இந்தியாவில் காப்பீட்டு சந்தை எப்படி ?

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் வெறும் 2.7 சதவீதமாக இருந்த(2000ம் ஆண்டு) இந்திய காப்பீட்டுச் சந்தை தற்போது 4 சதவீதமாக(2022) உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த காப்பீட்டு சந்தையின் மதிப்பு சுமார் 131 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(2022). 2031ம் ஆண்டின் முடிவில் இது 318 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக காப்பீட்டுச் சந்தையை ஒப்பிடுகையில், இந்தியாவின் பங்களிப்பு குறைவே. இருப்பினும் ஒட்டுமொத்த பிரீமியம் மதிப்பு அடிப்படையில் பத்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. 

இந்திய காப்பீடு சந்தையில் ஆயுள் காப்பீடு மட்டும் 70 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சந்தையில் மொத்தமாக 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் எல்.ஐ.சி. இந்தியா(அரசு பொதுத்துறை) நிறுவனம் மட்டும் 60 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. பொதுவாக ஆயுள் காப்பீடு சந்தையில் பிரீமியம் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது – புதிய வணிக பிரீமியம்(New Business Premium) மற்றும் புதுப்பிக்கப்படும் பிரீமியம்(Renewal Premium). புதிய வணிக பிரீமியம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், புதுப்பிக்கப்படும் பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பெரும்பாலும் காப்பீட்டின் தேவையை உணராமல், ஆண்டுதோறும் தொடர்ச்சியாக பிரீமியத்தை கட்டாமல் இருப்பது தான்.

இந்தியாவில் ஆயுள் காப்பீட்டில் உள்ள முக்கிய நிறுவனங்கள்:

  • எல்.ஐ.சி. இந்தியா 
  • எச்.டி.எப்.சி. லைப் 
  • எஸ்.பி.ஐ. லைப் 
  • ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரூடென்ட்சியல் லைப் 
  • ஆக்ஸிஸ் மேக்ஸ் லைப் 

2022-23ம் ஆண்டு முடிவில், இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் 7.83 லட்சம் கோடி ரூபாய். சொல்லப்பட்ட வருவாய், இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத வளர்ச்சியாகும். எல்.ஐ.சி. இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு 59 சதவீதமாகவும், எச்.டி.எப்.சி. லைப் 8%, எஸ்.பி.ஐ. லைப் 10 சதவீதம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரூடென்ட்சியல் லைப் நிறுவனத்தின் பங்களிப்பு 5 சதவீதமாகவும் இருந்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வெறுமனே நிதிப் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்குவதோடு ஓய்வூதியம் சார்ந்த திட்டங்களையும்(Pension System – Annuity Plans) வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் அல்லாத காப்பீட்டு சந்தை:

உலகளவில் இந்திய ஆயுள் அல்லாத காப்பீட்டு சந்தை 14வது இடத்திலும், ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய சந்தையாகவும்(ஜெனரல் இன்சூரன்ஸ்) உள்ளது. இச்சந்தை 2022-23ம் ஆண்டு முடிவில் சுமார் 2.57 லட்சம் கோடி ரூபாயை பிரீமியம் வருவாயாக ஈட்டியுள்ளது. மருத்துவ காப்பீட்டின் மூலம் 38 சதவீதமும், வாகனங்கள் மூலம் 32 சதவீதமும், தீப்பிடித்தல்(Fire Insurance) 9 சதவீதம், தனிநபர் விபத்துக் காப்பீடு 3 சதவீதம் மற்றும் கடல் சார்ந்த காப்பீடு 2 சதவீத பங்களிப்பையும் ஒட்டுமொத்த வருவாயில் அளித்துள்ளது.

சில முக்கிய ஆயுள் அல்லாத காப்பீட்டு நிறுவனங்கள்:

  • நியூ இந்தியா (13%)
  • ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட் (9%)
  • பஜாஜ் அல்லையன்ஸ் (7%)
  • யுனைடெட் இந்தியா (7%)
  • ஓரியண்டல் இன்சூரன்ஸ் (6%)
  • எச்.டி.எப்.சி. எர்கோ (6%) 

சில முக்கிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள்:

  • ஸ்டார் ஹெல்த் & அல்லைடு இன்சூரன்ஸ் 
  • கேர் ஹெல்த் 
  • எச்.டி.எப்.சி எர்கோ 
  • நிவா புபா 
  • ஆதித்யா பிர்லா 
  • மணிப்பால் சிக்னா 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் 
  • டாடா ஏ.ஐ.ஜி 

ஜெனரல் இன்சூரன்ஸை(ஆயுள் அல்லாத மற்றும் மருத்துவ) பொறுத்தவரை 62 சதவீத பங்களிப்பு தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து தான் வருகிறது. இச்சந்தையில் தனித்த மருத்துவக் காப்பீட்டை(Standalone Health Insurance) மட்டும் அளிக்கும் நிறுவனங்களின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. ஸ்டார் ஹெல்த், கேர் ஹெல்த், ஆதித்யா பிர்லா ஹெல்த், நிவா புபா போன்ற நிறுவனங்கள் தனித்த மருத்துவக் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களாகும்.

காப்பீட்டில் அரசின் பங்களிப்பு மற்றும் அன்னிய முதலீடுகள்:

1991-92ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். அதன் காரணமாக நாட்டில் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும், அன்னிய முதலீடுகளும் கவரப்படும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இதற்கு காப்பீட்டுத் துறையும் விதிவிலக்கல்ல. 

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய காப்பீட்டு துறை ஈர்த்த அன்னிய முதலீடுகளின் மதிப்பு மட்டும் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 54,000 கோடி). இது போல இந்திய காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணையும் அந்நிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. உதாரணமாக டாடா-ஏ.ஐ.ஜி(AIG), பார்தி-ஆக்சா, பஜாஜ்-அல்லயன்ஸ்(சமீபத்தில் அல்லயன்ஸ் பங்குகளை பஜாஜ் நிறுவனம் வாங்கப்போவதாக தகவல்).

கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு வரை, காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடுகளின் வரம்பு 26 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து இன்று 74 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை(பட்ஜெட் 2025) என்ற வரைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறாக அரசின் கொள்கைகள் இருக்கும் நிலையில் அரசின் காப்பீட்டு பங்களிப்பும் மாற்றம் பெற்று வருகிறது. 

மருத்துவக் காப்பீட்டை பொறுத்தவரை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீடுகள் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன. ஆயுள் மற்றும் விபத்து சார்ந்த காப்பீடுகள் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கப்பெறுகிறது. நடப்பு பட்ஜெட்டில் பயிர் காப்பீட்டுக்காக இந்திய அரசு சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறியுள்ளது. இது கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

இது போல இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.(IRDAI) 2047ம் ஆண்டு முடிவில் நாட்டில் உள்ள ‘அனைவருக்கும் காப்பீடு’ என்ற வாசகத்தை கொண்டு இலக்கினை நிர்ணயித்துள்ளது. மற்றொரு புறம் தகவல் தொழில்நுட்பமும்(Blockchain & AI Technology) காப்பீட்டு துறையில் புகுத்தப்பட்டு அதனை எளிமையாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 

ஸ்வாட் ஆய்வு(SWOT Analysis) காப்பீட்டு துறைக்கு எப்படி ?
  • பலம்: நாட்டின் மக்கட் தொகை மற்றும் தனிக்குடும்பம் அதிகரித்து வருதல்  மற்றும் அதன் காரணமாக காப்பீட்டின் தேவை.  அரசின் காப்பீட்டுக் கொள்கைகள், காப்பீட்டில் தகவல் தொழிநுட்பத்தின் தேவை அதிகரிப்பு மற்றும் அந்நிய முதலீடுகளின் வரம்பு உயர்வு.
  • பலவீனம்: நாட்டின் மக்கட் தொகை மற்றும் பொருளாதாரத்தில் குறைவான பங்களிப்பு (5 சதவீதத்திற்கும் கீழ்), கிராமப்புறங்களில் காப்பீட்டின் தேவை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, காப்பீட்டில் ஏற்படும் மோசடிகள் மற்றும் தவறான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் நிலை, வாடிக்கையாளர்கள் எளிமையாக புரிந்து கொள்ள முடியாத எண்ணற்ற பாலிசி திட்டங்கள்.
  • வாய்ப்புகள்: அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளால் காப்பீடு எடுக்க வேண்டிய தேவை, கிராமப்புறங்களில் காப்பீட்டுக்கான வாய்ப்புகள், ஏ.ஐ. மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்ப வரவால் காப்பீடு பெறுதல் மற்றும் கிளைம் செய்வதில் உள்ள எளிமை.
  • அச்சுறுத்தல்கள்: ஒழுங்குமுறை ஆணையத்தின் மாற்றங்கள், இணைய வழி தாக்குதல் மற்றும் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்கள், இயற்கை பேரழிவு, காலநிலை மாற்றங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது மக்களிடம் போதுமான பணப்புழக்கம் இல்லாதது, அதிகரித்து வரும் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் அதன் சார்ந்த விலையில் உள்ள போட்டிகள் 

 

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் சில காப்பீட்டு நிறுவனப் பங்குகள்:

இந்தியப் பங்குச்சந்தையில் இதுவரை 11 காப்பீடு சார்ந்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் எல்.ஐ.சி. இந்தியாவின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல். தற்போது வரை, நாட்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ.(IPO – Public Offering) வெளியீடும் இது தான்.

  • எல்.ஐ.சி. இந்தியா 
  • எஸ்.பி.ஐ. லைப் 
  • எச்.டி.எப்.சி. லைப் 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. புரு லைப் 
  • ஜெனரல் இன்சூரன்ஸ் 
  • கோ டிஜிட் 
  • நியூ இந்தியா அஸுரன்ஸ் 
  • ஸ்டார் ஹெல்த் 
  • நிவா புபா 
  • மெடி அசிஸ்ட் 

தனிநபர் மற்றும் குடும்பத்தின் வருமான விகிதம் அதிகரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் நாட்டின் மற்றும் உலகின் பொருளாதார சூழல் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். வருமானம் ஈட்டும் தனிநபர் ஒருவர் தனது குடும்பத்தின் நிதி நலனை பாதுகாக்க டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ மற்றும் விபத்துக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற திட்டங்களை தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது. இது காப்பீட்டுத் துறைக்குமான வளர்ச்சியாகவும் உள்ளது. 

வெறுமனே வரிச் சலுகைக்காகவும், சேமிப்புக்காகவும் காப்பீட்டு திட்டங்களை பயன்படுத்தாமல், சரியான காப்பீட்டை தேர்ந்தெடுப்பதும் தனிநபர் ஒருவரின் நிதி சார்ந்த கடமையாகும் ! 

 

(தகவல்கள் மற்றும் தரவுகள்): Allied Market Research, IBEF, IRDAI & ChatGpt & Others

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை 

Why is Corporate Governance so important for the Shareholders – Equity Investments ?

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பங்கின் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பொதுவான காரணியாக தேவைக்கும், இருப்புக்குமான இடைவெளி(Demand-Supply) தான் எனினும், அவற்றை தூண்டக்கூடிய விஷயங்களாக பல்வேறு நிலைகள் உள்ளன. உதாரணமாக பொதுவெளியில் ஒரு நிறுவனப்பங்கை பற்றிய செய்திகள், பங்குகளில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் மனநிலை, அரசியல் தாக்கங்கள், நாட்டின் பொருளாதார நிலை, துறை சார்ந்த மாற்றங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். 

இருப்பினும், நீண்டகால பங்கு முதலீட்டாளர்களுக்கு மிகவும் அடிப்படை காரணிகளாக மூன்று விஷயங்களை சொல்லலாம். அவை ஒரு பங்கின் நிறுவனர்கள்(Founders & Promoters), நிறுவனத்தின் நிதி அறிக்கைகள்(Financial Statements) மற்றும் நிர்வாகத் திறமை அல்லது தன்மை(Corporate Governance) ஆகியவை. குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படுவது இயல்பு தான். அது ஒரு வகையில், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்பையும் வழங்கும். அதே சமயத்தில், மேலே சொன்ன மூன்று காரணிகள் தான் பெரும்பாலும் பங்குதாரர்கள் தங்களது பங்குகளை நீண்டகாலத்திற்கு வைத்திருக்க உதவும். 

“ சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் “ – இது தான் ஒரு பங்கு நீண்டகாலத்தில் விலையேற்றம் பெறுவதற்கும்.

நிறுவனர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் எப்படி ?

இன்று சந்தையில் உள்ள பங்கு நிறுவனங்களில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்யும் பழமையான நிறுவனங்கள் பல உள்ளன. உதாரணமாக பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் வாடியா நிறுவனக் குழுமம்(தோற்றம்: 1736ம் ஆண்டு) துவக்கப்பட்டு 289 வருடங்கள் ஆகி விட்டது. ஆதித்யா பிர்லா குழுமம் துவங்கப்பட்டது 1857ம் வருடம், ரேமண்ட்ஸ் நிறுவனம் நூறு வருடங்களை கடந்து விட்டது. நம்ம ஊரு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 1921ம் ஆண்டு, கரூர் வைசியா வங்கி 1916, டாட்டா குழுமம் 1868, முருகப்பா குழுமம் 1900ம் ஆண்டு, டி.வி.எஸ். குழுமம்(1911), அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இந்துஜா குழுமம்(1914), லட்சுமி மில்ஸ்(1910), முத்தூட்(1887), பேரிஸ்(Parrys’ – EID Parry – 1788), ஸ்டேட் பேங்க்(SBI – 1806), கனரா வங்கி(1906), அட நம்ம மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டது 1875ம் ஆண்டு என சொல்லிக் கொண்டே போகலாம். நூறு ஆண்டுகளை கடந்து தொழில் செய்யும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே 150க்கும் அதிகமாக உள்ளன.

பொதுவாக ஒரு நிறுவனம் துவங்கப்படும் போது, அந்நிறுவனத்தின் நிறுவனருக்கு(Founder) தொழில் அல்லது சமூகம் சார்ந்த ஒரு நோக்கம் இருந்திருக்கும். வெறுமென பணமீட்டுவது மட்டுமே அவரது நீண்டகால நோக்கமாக இருந்திருக்காது. அவ்வாறு நீண்டகாலத்தில் ஈட்ட வேண்டுமென்றால், அவரது இலக்கும் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில், வரலாற்றில் நாம் எத்தனையோ பாரம்பரியமான பிராண்டு நிறுவனங்களை தொலைத்திருப்போம். நிறுவனத்தை துவக்கியவரின் ஆசை அல்லது நோக்கம் என்னவோ இருந்திருக்கலாம். ஆனால் அதனை பல வருடங்கள் சிறப்பாக வழிநடத்த அடுத்த தலைமுறை ஆட்கள் ஒத்துழைத்திருக்க வேண்டும். 

நிறுவனத்தை ஆரம்பநிலையில் துவக்கியவர் பொதுவாக Founder என அழைக்கப்படுவதுண்டு. அதற்கடுத்தாற் போல, அத்தொழிலை வழி நடத்தும் தலைமுறைகள் பெரும்பாலும் Promoters ஆக இருப்பர். சில சமயங்களில் ஒரு நிறுவனத்தின் Founder மற்றும் Promoter ஒரு நபரோ அல்லது குடும்ப நபர்களோ அமைவதுண்டு. நிறுவனத்தை துவக்கியவரின் நோக்கம் ஒரு புறம் இருக்க, இன்றைய அளவில் அந்நிறுவனத்தை வழிநடத்தும்(Promoters) இவர்களின் தொலைநோக்கு பார்வை எப்படியிருக்கும் ? இது தான் ஒரு பங்கு முதலீட்டாளருக்கு அவசியமானது.

“ தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி தூரம் பாயும் “ – நமக்கு பதினாறு அடியெல்லாம் பாய வேண்டாம். நிறுவனம் திவாலாகாமல் பங்குதாரர்களுக்கு நாணயமாக இருக்கிறதா என்பது தான் அவசியம். குறிப்பாக எந்த தொழிலையுமே செய்யாமல், வெறும் நிறுவனப் பங்கின் விலையை மட்டும் குறுகிய காலத்தில் ஏற்றி, லாபம் பார்த்து விட்டு பங்கு முதலீட்டாளர்களை பாதாளத்தில் தள்ளும் ‘ஷெல் நிறுவனங்கள்(Shell Companies)’ சந்தையில் பல உள்ளன. அப்படியிருக்க தொழிலை நாணயமாக செய்து கொண்டு, மாற்றத்திற்கும் உட்படும் நிறுவனங்கள் தான் ஒரு பங்கு முதலீட்டாளர்களுக்கு அவசியம். இதன் மூலம் மட்டுமே ஒருவர் நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டில் செல்வ வளத்தை ஏற்படுத்த முடியும்.

அதென்ன தொழில் நாணயம் ? (Corporate Governance):

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் “ – இது ஒரு குடும்பத்திற்கும், நிறுவனத்திற்கும் பொருந்தும்.  

குடும்ப உறவுகளிடம் ஏற்படும் பிரச்சனைகள் பொதுவெளியில் தெரிய வந்தாலும், அதனை குடும்ப உறுப்பினர்களே முடிந்தவரை பேசி தீர்த்துக் கொள்வது, நீண்டகாலத்தில் நன்மை பயக்கும். இதனை போன்று தான், ஒரு நிறுவனத்தின் நிர்வாகம், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி அறிக்கைகளில் ஏற்படும் பொதுவெளியிலான சிக்கல்களை அந்த நிறுவனம் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், முதலீட்டாளர்களிடம்(பங்கு விலை மற்றும் வாக்களிப்பு) அதன் தாக்கம் தெரிய வரும். இது நீண்டகாலத்தில் அந்நிறுவனத்திற்கும் பாதகத்தை ஏற்படுத்தலாம்.

உதாரணமாக தொழிலாளர்களிடையே வேலைநிறுத்த போராட்டம் ஏற்பட்டால், அது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை பாதிக்க காரணமாக அமைந்து விடும். இதனை நிறுவனத்தின் நிர்வாகம், பொதுவெளியில் சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். நிர்வாகத்துக்குள் ஏற்படும் மேலாண்மை சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள், வாடிக்கையாளர்களின் நலனை பராமரித்தல், நிதி சார்ந்த கடன்கள் மற்றும் அறிக்கைகள், பொருளாதாரம் மற்றும் துறை சார்ந்த மந்தநிலை ஆகியவற்றில் நிறுவனத்தலைவர்கள் மற்றும் மேலிட நிர்வாகம் அதனை எவ்வாறு கையாளுகிறது என்பது ஒரு நிறுவனத்தின் நலனுக்கு மட்டுமிலலாமல், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கும் நலன் அளிக்கும்.

ஒரு நல்ல அல்லது நாணயமான நிறுவனம் என்பது அதன் நிர்வாகம் – பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நல்ல நம்பிக்கையையும், உறவையும் பேண வேண்டும். இது பொதுவெளியில் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

ஏன் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மை(Corporate Governance) ஒரு முதலீட்டாளருக்கு அவசியம் ?

ஒரு நிறுவனம் தனது தொழிலில், ‘ரிஸ்க்’ எடுத்து ஏதேனும் புதிய முயற்சியை அல்லது அதிகக் கடன் வாங்கி விரிவாக்கம் செய்யும் நிலையில் அதன் வெளிப்படைத்தன்மையை பங்குதாரர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களுடன் அறிக்கைகளாக(Statements) தெரிவிப்பது அவசியமாகும். இது அந்நிறுவனத்தின் செயல்திறனையும் மேம்படுத்த உதவும். காலாண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் நிதி அறிக்கைகளில் சொல்லப்படும் விஷயங்கள், நோக்கங்கள் மற்றும் இலக்குகள் தவறும் பட்சத்தில் அதனை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணமாக, “ பொருளாதார மந்த நிலைக் காரணமாக எங்கள் நிறுவனம் இன்னென்ன சிக்கல்களை சந்திக்கும். அதனை களைய எங்கள் முன் உள்ள சில தீர்வுகள்”; “கடந்த சில காலாண்டுகளாக நிறுவனம் லாப வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாததற்கான காரணங்கள் மற்றும் துறை சார்ந்த நிலைகள்”; “ புதிய நிர்வாகம் அமைந்த பின் எங்களது தொழில் சார்ந்த மாற்றங்கள்”; “வேலை நிறுத்த போராட்டத்தால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதனை களைய நாங்கள் கொண்டுவரும் தீர்வுகள்”; “இது போன்ற மோசடிகள்(Whistleblower, Scam, Fraud) இனி மேல் எங்கள் நிறுவனத்தில் நடைபெறா வண்ணம் நாங்கள் செய்த விஷயங்கள் ” – இவ்வாறு நிர்வாகத்தின் அறிக்கைகள் மூலம் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் சரியான நேரத்தில் தகவல்களை பகிர வேண்டும். அது வெறுமென பங்கு விலைகளை கட்டுப்படுத்தும் மற்றும் ஏற்றும் போலிச் செய்தியாக இருந்து விடக் கூடாது.

      

பொதுவாக பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு உள்ளது. அதன் காரணமாக தான் பங்குதாரர்கள் மூலம் ஒரு இயக்குனர் குழுவை தேர்ந்தெடுப்பது, நிறுவனத்தின் பிற கடமைகளை வாக்களிப்பு மூலம் ஏற்படுத்துவது என முடிவெடுக்கும் காரணிகளாக உள்ளன. இதனை நம்பிக்கைக்குரிய வகையில் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும், நிர்வாகமும் கடைபிடிப்பது அவசியமாகும். ஒரு சாமானிய பொது பங்குதாரரும்(Retail / Public Shareholders) ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அங்கம் வகிப்பதற்கான சட்டம் உள்ளது.

பங்கு முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Annual Reports and Other Financial Statements) தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்க சொன்னால், அதனை அனுப்பி வைப்பது ஒரு நிர்வாகத்தின் கடமையாகும். இது போன்று தான் வாக்களிப்பது, ஈவுத்தொகை(Dividend), போனஸ் பங்குகள், ரைட்ஸ் பங்குகள் மற்றும் பிற பங்குதாரர் சார்ந்த நிலைகள். இதற்காக தான் ஒரு நிறுவனத்தில் பங்குதாரர் நலனைப் பாதுகாக்க செயலாளரும்(Company Secretary) நியமிக்கப்பட்டுள்ளார். 

நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(Annual General Meeting – AGM) பங்குதாரர்களை அழைப்பது நிர்வாகத்தின் கடமை. அது இணைய வழியிலோ அல்லது நேரடியான உரையாடலாக இருக்கலாம். ஆனால் பங்குதார்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும் மற்றும் இன்னபிற அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற கூட்டங்களில் நிறுவனத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதனை பங்குதாரர்கள் அறியலாம். 

நீங்கள் ஒரு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கு(Factory Visit) சென்று, அதன் தொழிலை பற்றி புரிந்து கொள்ள, அவர்களின் பொருட்கள் அல்லது சேவை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதனை அறிய, அந்நிறுவனத்தின் நிர்வாகத்திடம் ஒரு பங்குதாரராக அனுமதி கேட்கலாம். சில நிறுவனங்கள் இதற்கான அனுமதியையும் அளித்து வருகிறது. இன்னும் சில நிறுவனங்களோ அதன் உற்பத்தி ஆலையில் தான் ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்துவதுடன், பங்குதாரர்களுக்கு ஆலையையும் சுற்றி காண்பிக்க உதவுகிறது. இதன் மூலம் பங்குதாரர்கள்-நிர்வாக உறவு மேம்படும்.  

பொதுவெளியில் மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை சிக்கல்களை ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் செவிக்கொடுத்து கேட்கிறதா என்பதனை பங்குதாரர்களுக்கு நிறுவனம் தெரியப்படுத்த வேண்டும். நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் மற்றும் இன்னபிற ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில் பகிர்தலையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆக சுருக்கமாக சொன்னால், பொறுப்புடைமை(Accountability), வெளிப்படைத்தன்மை(Transparency), இடர் மேலாண்மை(Risk Management), நாணயம்(Fairness) மற்றும் பங்குதாரர்களிடம் இணக்கத்தை(Shareholders Relationship) ஒரு நிறுவனம் கொண்டிருக்க வேண்டும். இதுவே ஒரு முதலீட்டாளருக்கும் அதன் பங்கு விலையில் நீண்டகாலத்தில் வெளிப்படும்.

இன்றும் நூறு வருட பாரம்பரிய நிறுவனங்கள் நிலைத்து நின்று தொழில் புரிவதற்கு அதன் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தான் காரணம் – அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மையில் நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தால் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.டி.எப்.சி. வங்கியை தோற்றுவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. – ஒரு வங்கியின் வரலாறு

எச்.டி.எப்.சி. வங்கியை தோற்றுவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. – ஒரு வங்கியின் வரலாறு 

HDFC was promoted by ICICI(Industrial Credit and Investment Corporation of India)

என்ன, எச்.டி.எப்.சி. வங்கியை ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் தோற்றுவித்ததா என கேள்வி எனலாம். வாருங்கள் எச்.டி.எப்.சி.யின் வரலாற்றை பார்ப்போம். 

குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் திரு.ஹஸ்முக் பரேக்(Hasmukhbhai Parekh). நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், லண்டன் பொருளாதாரக் கல்வி மையத்தில் தனது படிப்பை முடித்து விட்டு, பின்னர் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும், பங்குச்சந்தை தரகு நிறுவனத்தில் நிதிச்சந்தை சார்ந்தும் தனது அனுபவங்களை மெருகேற்றிக் கொண்டார். 1956ம் ஆண்டு வாக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிய இணைந்தார். 

அப்போது ஐ.சி.ஐ.சி.ஐ.(Industrial credit and Investment corporation of India) ஒரு அரசு பொதுத்துறை நிறுவனமாகும்(தனியார் நிறுவனம் அல்ல). இந்தியாவில் உள்ள சில அரசு பொதுத்துறை வங்கிகளும், உலக வங்கியும் ஒன்றிணைந்து உருவாக்கியதே ஐ.சி.ஐ.சி.ஐ. இந்நிறுவனத்தின் முதல் தலைவராக திரு. ஆற்காடு ராமசாமி முதலியார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1994ம் ஆண்டில் துவக்கப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இதன் துணை நிறுவனமாகும். 

பின்னர் காலப்போக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் இணைக்கப்பட்டு, தற்போது இந்தியப் பன்னாட்டு தனியார் வங்கிக் குழும நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தின் வேலை பார்ப்போரின் எண்ணிக்கை மட்டும் 1,35,900 பேர். முன்னர் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிந்த ஹஸ்முக் பரேக் அவர்கள், பின்னர் அதன் தலைவராகவும், நிறுவன இயக்குனர் குழுவின் முக்கிய பதவியையும் வகித்து 1976ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் இவரது நிதி சார்ந்த ஆலோசனையை பெற்றுக் கொண்டு தான் இருந்துள்ளது.

நிதித்துறையில் தனக்கு கிடைத்த அளப்பரிய அனுபவத்தை கொண்டு, தனது 66வது வயதில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தை போன்று ஒரு நிதி சார்ந்த வங்கியை துவக்க அவர் விரும்பினார். அந்த நிறுவனத்தின் பெயர் தான், ‘எச்.டி.எப்.சி.(HDFC)’. அப்போதைய அரசின் நிதிச் செயலாளராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் ஹஸ்முக் பரேக் ஒருமுறை கூறியது, “எச்.டி.எப்.சி., இந்திய மக்களிடம் அறியப்படாத ஒரு நிறுவனம். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறுமா என எனக்கு தெரியவில்லை”. இருப்பினும் நிறுவனத்தின் திட்டத்தில் எந்த மாற்றமுமின்றி கடந்த 1977ம் ஆண்டு இந்திய வணிக சமூகத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் சில அன்னிய நிறுவன முதலீடுகளுடன் எச்.டி.எப்.சி.(Housing Development Finance Corporation) நிறுவனம் துவங்கப்பட்டது. 

அப்போது திரு.ஹஸ்முக் பரேக் அவர்களை மரியாதை செய்யும் விதமாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும் எச்.டி.எப்.சி. நிறுவனத்தை பற்றி விளம்பரப்படுத்தி மக்களுக்கு கொண்டு சென்றது கவனிக்கத்தக்கது. இந்திய நடுத்தர மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் ஒரு நிதி நிறுவனம் வேண்டுமெனவும், அது தனது கல்லூரிக்கால விருப்பம் எனவும் திரு.ஹஸ்முக் பரேக் ஒரு முறை கூறியுள்ளார். தனது ஓய்வுகாலத்தில் துவக்கிய ஒரு வங்கி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. அதாவது மிகப்பெரிய ஒரு வங்கியில் வேலை பார்த்த இவர், அந்த வங்கியின் நிதி சார்ந்த மதிப்பை காட்டிலும் ஒரு வங்கியை ஏற்படுத்தியது இந்திய நிதித்துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் மற்றும் சிறப்பம்சம் கொண்ட அடமான நிதி(வங்கி) நிறுவனமாகவும் எச்.டி.எப்.சி. இருந்துள்ளது. இன்று இதன் சொத்து மதிப்பு சுமார் 420 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நிறுவனத்தின் இந்திய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 12.51 லட்சம் கோடி ரூபாய். 2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் மட்டும் சுமார் 2.83 லட்சம் கோடி ரூபாய். எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank). 2022ம் ஆண்டு வாக்கில் இரு நிறுவனமும் இணைக்கப்பட்டு தற்போது எச்.டி.எப்.சி. வங்கி என இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2.13 லட்சம் பேர். எச்.டி.எப்.சி. வங்கி இந்தியாவில் மட்டுமில்லாமல், அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வங்கிக் குழுமம் இன்று வங்கி சேவை, முதலீட்டு வங்கி சேவை, அடமானம், தனியார் முதலீடு, மியூச்சுவல் பண்டு, காப்பீடு, பங்கு தரகு, டிஜிட்டல் நிதி சேவை, ரிஸ்க் மேலாண்மை மற்றும் முதலீட்டு மேலாண்மை என பல துணை நிறுவனங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மட்டும் ரூ.4.55 லட்சம் கோடி. செப்டம்பர் 2024 முடிவில் நிறுவனத்தின் வாராக்கடன் தன்மை(Gross NPA) 1.36 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் தன்மை(Net NPA) 0.41 சதவீதமாகவும் உள்ளது. 

எச்.டி.எப்.சி. நிறுவனம் நேரடியாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தால் துவங்கப்படாவிட்டாலும், அந்த நிறுவனத்தின் முக்கிய பதவி வகித்த திரு. திரு.ஹஸ்முக் பரேக் அவர்களின் முயற்சியையே சாரும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

       

பளிச்சிடும் சூர்யா பல்ப் (சூரிய ரோஷ்ணி) – பங்குச்சந்தை அலசல்

பளிச்சிடும் சூர்யா பல்ப் (சூரிய ரோஷ்ணி) – பங்குச்சந்தை அலசல் 

Surya Roshni – Fundamental Analysis – Stocks

கடந்த 1973ம் ஆண்டு திரு பி.டி.அகர்வால் அவர்களால் துவக்கப்பட்டது தான் பிரகாஷ் சூர்ய ரோஷ்ணி நிறுவனம். பின்னாளில் இது சூர்ய ரோஷ்ணி லிமிடெட் நிறுவனமாக பெயர் மாற்றம் பெற்றது. ஆரம்ப காலத்தில் ஸ்டீல் டியூப்(Tube) தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இந்நிறுவனம் இன்று ஒளி விளக்குகள்(LEDs, Lighting), மின்னணு விசிறிகள், பல்வகையான ஸ்டீல், சமைலயறை உபகரணங்கள்(Kitchen Appliances) மற்றும் பி.வி.சி. பைப்புகள் என எண்ணற்ற பொருட்களை உற்பத்தி செய்து, அதிகளவில் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனமாகவும் வளர்ந்துள்ளது.

நாட்டின் தலைநகரமான டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் ERW GI பைப் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும், அதன் ஏற்றுமதியில் நாட்டின் 60 சதவீத சந்தைப் பங்களிப்பை சூர்ய ரோஷ்ணி நிறுவனம் கொண்டுள்ளது. GI பைப் உற்பத்தியில் தென் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகவும் சூர்ய ரோஷ்ணி இருப்பது கவனிக்கத்தக்கது. பூசப்பட்ட குழாய்(Coated API and Spiral Pipes) தயாரிப்பிலும் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. 

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் ஸ்டீல் பைப் சார்ந்த பொருட்கள் 80 சதவீத பங்களிப்பையும், ஒளி மற்றும் நுகர்வோர் பொருட்கள் 20 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் உற்பத்தியில் 16 சதவீதம் ஏற்றுமதியாகிறது. ஒட்டுமொத்த பொருட்கள் விற்பனையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மட்டும் 45 சதவீத வருவாயை அளித்து வருகிறது.  

நிறுவனத்தின் ஸ்டீல் பைப் பிரிவு, குறிப்பாக எண்ணெய், எரிவாயு, விவசாயம், கட்டுமானம் மற்றும் நீர் மேலாண்மைத் துறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் ஸ்டீல் பைப்புகள் உலகளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ‘சூர்யா’ மற்றும் ‘பிரகாஷ் சூர்யா’ – உலகளவில் பிரபலமான இதன் முக்கிய பிராண்டுகளாகும். ஸ்டீல் பைப் உற்பத்திக்கான ஆலைகளை அரியானா, குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு இடங்களில் வைத்துள்ளது. இவை ஆண்டுக்கு சுமார் 12.76 லட்சம் MTPA(Million Metric Tonnes per annum) உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. 

மேலும் வாகனத்துறைக்கு தேவையான பைப்புகள், சைக்கிள் ரிம், நிழற்குடை, சோலார், தீத்தடுப்புகள் மற்றும் சாரக்கட்டுகளுக்கு(Scaffoldings) தேவையான பைப்புகள் மற்றும் ஸ்ட்ரிப்புகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களையும், 21,000க்கும் மேற்பட்ட சில்லரை வணிகக் கடைகளிலும் நிறுவனத்தின் ஸ்டீல் பைப்புகள் கிடைக்கப்பெறுகிறது.

ஒளி விளக்குகள் பிரிவில் கடந்த 1984ம் ஆண்டு முதல் தான் உற்பத்தி நடைபெற்றிருந்தாலும், இன்று நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இப்பிரிவில் சூர்ய ரோஷ்ணி உள்ளது. பல்புகள், டியூப் லைட்கள், மின் சேமிப்பு விளக்குகள், ஸ்மார்ட் எல்.இ.டி. விளக்குகள் மற்றும் விசிறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகளை உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் கொண்டுள்ளது. நிறுவனத்தின் ஒளி விளக்குகள் பிரிவின் ஒட்டுமொத்த வருவாயில், எல்.இ.டி. விளக்குகளின் மூலம் மட்டுமே 62 சதவீத வருவாய் ஈட்டப்படுகிறது. இது போக சமையலறை உபகரணங்கள்(உணவு தயாரித்தல் மற்றும் வெப்பமூட்டுதல்), ஆடை பராமரிப்பு மற்றும் காலநிலை கட்டுப்பாடுகள் என நுகர்வோர் சார்ந்த பொருட்கள்(FMEG Sector) உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இது சார்ந்த தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையம் உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் இயங்கி  வருகிறது. இப்பிரிவில்(Lighting & Consumer Durables) நாடு முழுவதும் 2500க்கும் மேற்பட்ட டீலர்களையும், சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான சில்லறை வணிகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்நிறுவனத்தின் ஒளி விளக்குகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின் விசிறிகள், கிச்சன் அடுப்புகள், குடியிருப்பு நீர் பம்பு மோட்டார்(Surya Water Pumps), பி.வி.சி. டேப்புகள், புதிய வண்ண ஒளி விளக்குகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கூலர்கள் போன்ற பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Surya Roshni - New Product launch

நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ. 5,578 கோடி(ஜனவரி 9, 2025).நிறுவனத்தின் பி.இ.விகிதம் 17 மடங்குகளிலும், கடன்-பங்கு விகிதம் 0.03 மடங்கு என்ற அளவிலும் உள்ளது. நிறுவனத்திற்கு கடந்த 2020ம் நிதியாண்டில் 1,090 கோடி ரூபாய் கடன் என்றிருந்த நிலையில், 2024ம் நிதியாண்டின் முடிவில் நான்கு கோடி ரூபாய் மட்டுமே கடனாக இருந்துள்ளது. செப்டம்பர் 2024 காலத்தில் நிறுவனம் குறுகிய காலக்கடனாக 60 கோடி ரூபாயை கொண்டுள்ளது. எனினும், தற்போதைய நிலையில், நீண்டகாலக்கடன் எதுவும் நிறுவனத்திற்கு இல்லை.

சூர்ய ரோஷ்ணி நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 20 மடங்குகளிலும், பங்கு விலைக்கும், நிறுவன வருவாய்க்குமான(Price to Sales) விகிதம் 0.75 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு சுமார் 5 சதவீதம் என்ற அளவிலும் மற்றும் உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு ஒரு சதவீதமாகவும் உள்ளது.

பங்கு மீதான மூலதன வருவாய்(ROE) கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவீதமாகவும், பத்து வருடங்களில் 13 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 10 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்தின் கூட்டு லாப வளர்ச்சியை காணுகையில், 5 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் முறையே 22% மற்றும் 20% ஆக இருந்துள்ளன.

செப்டம்பர் 2024 காலாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.2,213 கோடியாக இருக்கிறது. கடனை பொறுத்தவரை குறுகிய காலக்கடன் ரூ.60 கோடி மற்றும் நீண்ட காலக்கடன் எதுவுமில்லை. நிறுவனத்தின் பணவரத்தை(Cash Flow) பொறுத்தவரை கடந்த காலங்களில் சீராக வந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.256 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. நடப்பாண்டின் ஜனவரி ஒன்றாம் தேதி, பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. 2023ம் ஆண்டின் அக்டோபர் காலத்தில் இந்நிறுவனத்தின் முகமதிப்பு(Face value) பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

            

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ?

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ? 

History of Madras Stock Exchange(MSE) 

தமிழ்நாட்டை தலைநகரமாக கொண்ட சென்னை நீடித்த வரலாற்றையும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. 2022ம் ஆண்டு முடிவில் சென்னையின் பொருளாதார மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் 7.87 லட்சம் கோடி). இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு, சென்னையின் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதியும் ஒரு காரணம் எனலாம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் சென்னையின் பங்களிப்பு மட்டும் சுமார் 33 சதவீதமாகும். உலகின் பிரபலமான நகரங்களில் முதல் 50 நகரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் சென்னையின் இடத்தை தவிர்க்க முடியாதது.

ஆசியாவின் டெட்ராய்ட்(Detroit of Asia) என அழைக்கப்படும் சென்னை, வாகனத்துறைக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் வாகன உதிரி பாகங்கள் பிரிவில் சென்னை மட்டும் 35 சதவீத பங்கினை கொண்டுள்ளது. இந்திய நான்கு சக்கர வாகன உற்பத்திப் பிரிவில் இதன் பங்களிப்பு மட்டும் 30 சதவீதமாக உள்ளது. கனரக வாகனங்கள், டயர்கள், வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, துறைமுகங்கள், உலகின் முக்கிய நிறுவனங்களின் அலுவலகங்கள் என வாகனத்துறைக்கு தேவையான பெரும்பாலான நிலைகளை சென்னை உள்ளடக்கியுள்ளது. 

அப்படியிருக்க, சென்னையில் ஒரு பங்குச்சந்தை…  

கடந்த 1937ம் ஆண்டு துவக்கப்பட்டது தான் மெட்ராஸ் பங்குச்சந்தை(தலைமை அலுவலகம்: சென்னை). நாட்டின் நான்காவது பங்குச்சந்தையாகவும், தென் இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் பங்குச்சந்தையாகவும், மெட்ராஸ் பங்குச்சந்தை இருந்தது. இந்த சந்தை மேலே சொல்லப்பட்ட காலத்தில் துவக்கப்பட்டிருந்தாலும், 1957ம் ஆண்டு தான் இச்சந்தைக்கு தேவையான ஒழுங்குமுறைகளும், இன்னபிற வழிமுறைகளும் சட்டமாக்கப்பட்டு இயக்கத்தில் வந்தன.

ஆரம்ப நிலையில் ஐந்து நிறுவனங்களின் துணை மூலம் தோற்றுவிக்கப்பட்ட மெட்ராஸ் சந்தை, பின்னர் பெரிய சந்தையாக சுமார் 120 உறுப்பினர்களுடன் இயங்கியது. 1996ம் ஆண்டு முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட சந்தையாக, 120 பங்குத்தரகு அலுவலகங்களுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை செயல்பட்டது.

 2001ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக அளவை கொண்டிருந்த மெட்ராஸ் பங்குச்சந்தை, 2012ம் ஆண்டில் சுமார் 19,900 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. 2001ம் ஆண்டில் சொல்லப்பட்ட 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் என்பது அப்போதைய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையை ஒப்பிடுகையில், இது மூன்று சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளது.

மெட்ராஸ் பங்குச்சந்தையில் சுமார் 1,785 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. மெட்ராஸ் பங்குச்சந்தைக்கு ஒரு துணை நிறுவனமும் உண்டு – எம்எஸ்இ பைனான்சியல் சர்வீஸஸ்(MSE Financial Services). 2012ம் ஆண்டு வாக்கில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(SEBI) அறிவித்த ஒரு செய்தியால், மெட்ராஸ் பங்குச்சந்தையை மூடுவதற்கு காரணமாக அமைந்தது. இந்தியாவில் உள்ள ஒரு பங்குச்சந்தை குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கு பங்குகளில் பணப்புழக்கத்தை(Minimum Liquidity) ஏற்படுத்த வேண்டுமென்பது தான். அதாவது ஒரு முதலீட்டாளரோ, வர்த்தகம் செய்பவரோ தான் வாங்கியிருக்கும் பங்குகளை விற்க முனைந்தால், மற்றொரு புறம் வாங்குவதற்கு ஆள் வேண்டுமே, அது தான் இந்த பணப்புழக்கம்(Liquidity). 

மேற்சொன்ன அறிவிப்பை தொடர முடியாத நிலையில் பெங்களூர் பங்குச்சந்தையுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை இணைக்கப்பட்டது. பின்னாளில் இச்சந்தையும் மூடப்பட்டது.  இதனைத் தொடந்து 2015ம் ஆண்டின் மே மாதத்தில் தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக மெட்ராஸ் பங்குச்சந்தை அறிவித்தது. பின்னர் செபியும் அதனை ஏற்றுக் கொண்டது. 77 வருட பாரம்பரிய பங்குச்சந்தையாக திகழ்ந்த மெட்ராஸ் பங்குச்சந்தை 2015ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் என 1990 மற்றும் 2000களில் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்ட நிலையில், 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை மற்றும் ஆசியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை போன்ற ராட்சத அலைகளுக்கு முன்னர் தென் இந்தியாவின் முதற் பங்குச்சந்தை நிற்க இயலவில்லை. நாடெங்கிலும் எண்ணற்ற பங்குச்சந்தைகள்(20க்கும் மேற்பட்ட) இருந்த நிலையில், அவற்றை கையாள்வது கடினம் மற்றும் முதலீட்டாளர் நலனை பாதுகாக்க இது போன்ற நிகழ்வுகளை செபி(SEBI) ஏற்படுத்தியிருந்தது. 

இந்தியப் பங்குச்சந்தையில் தற்போதைய முதலீட்டாளர் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு அன்றைய காலத்தில் இல்லாததும் ஒரு காரணமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், ஏன் ?

முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், ஏன் ?

Do not focus only on Investment returns – Fallacy of Investing

கிரேஸ் குரோனர்(Grace Groner):  தனது 12ம் வயதில் அனாதையானாள். அவள் திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவளுக்கு காரும்(நான்கு சக்கர வாகனம்) ஓட்டத் தெரியாது. தனது வாழ்நாள் முழுவதும் சின்னதொரு வீட்டில் வசித்து வந்துள்ளாள். எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வந்தவள். தனது வாழ்நாளில் சுமார் 43 வருடங்கள் அப்போட் பார்மா(Abbott Pharma) நிறுவனத்தில் செயலாளராக வேலை செய்வதிலேயே இருந்துள்ளார். தனது 101வது வயதை கொண்டாட இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மறைந்தார்.

1935ம் ஆண்டு வாக்கில் கிரேஸ், தனது நிறுவனத்தின் பங்குகளை சுமார் 180 டாலர்களுக்கு(ஒரு பங்கின் விலை 60 டாலர்கள் – 3 பங்குகள் மட்டுமே) வாங்கியுள்ளார். அடுத்த 75 வருடங்களில், அவர் தனது நிறுவனத்தின் மூலம் கிடைத்த ஈவுத்தொகையை(Dividends) மறுமுதலீடு செய்து வந்துள்ளார். 2010ம் ஆண்டு வாக்கில் அவர் மறைந்த போது, அதன் மதிப்பு சுமார் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இறக்கும் முன்பு, தனது அனைத்து சொத்துக்களையும், தான் வளர்ந்த மற்றும் இளம்வயதில் படித்த கல்லூரியை சேர்ந்த அறக்கட்டளைக்கு கொடையாக வழங்க உயில் எழுதியுள்ளார். அவர் மறைவுக்கு பின்பு, அந்த உயில் மூலம் அறக்கட்டளைக்கு சொத்துக்களும் மாற்றப்பட்டது. 2024ம் ஆண்டின் துவக்கத்தில், அதன் மதிப்பு சுமார் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(2010ம் ஆண்டு முதல் டிவிடெண்ட் தொகை சேர்க்காமல்) என அப்போட் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் 1909ம் ஆண்டு பிறந்தவர் தான் செல்வி. கிரேஸ் குரோனர் அவர்கள் !

ஒரு வேளை அவர் தான் வாங்கிய பங்குகளுக்கு மாற்றாக, 180 அமெரிக்க டாலர்களை, ஏதேனும் ஒரு வங்கியில் அப்போது முதலீடு செய்து, தனது வாழ்நாள் முழுவதும் வைத்திருந்தால் அதன் மதிப்பு சில ஆயிரம் டாலர்களாக மட்டுமே இருந்திருக்கும் என முதலீட்டு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிச்சர்ட் பஸ்கோன்: கடந்த 1914ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட முதலீட்டு மேலாண்மை நிறுவனம் தான் மெரில்(Merrill Lynch). அமெரிக்க நிறுவனங்களின் வங்கி என சொல்லப்படும் மெரில் நிறுவனத்தில் 1970 களில் துணைத்தலைவராக வேலை பார்த்தவர் ரிச்சர்ட் பஸ்கோன்(Richard Matthew Fuscone). அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை மேலாண்மை பட்டப்படிப்பை முடித்தவர். அமெரிக்க பங்குச்சந்தையின் அனுபவம், நல்ல திறமை, அதிக சம்பளம், ஆடம்பரமான வாழ்க்கை, சுமார் 20,000 சதுர அடியில் சொகுசு வீடு என ரிச்சர்டுக்கு கிட்டியது. பங்கு முதலீட்டில் அவருக்கு கிடைக்காத வெற்றி என அப்படியொன்றுமில்லை. பெரு நிறுவனங்களில் அவர் வகிக்காத முக்கிய பதவிகள் இல்லையெனலாம். தனது 40வது வயதிலேயே நாள்தோறும் பணிபுரியும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். மேலும் தனது சொத்துக்களை கொடையாக அளிக்க முனைந்தவர். 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி திரு. ரிச்சர்ட் பஸ்கோனையும் பொருளாதாரம் சார்ந்து பாதித்தது எனலாம். வங்கியில் அதிகக் கடன், முதலீட்டில் அதிக ரிஸ்க் தன்மை மற்றும் அவரது ஆடம்பர வாழ்க்கையின் அடிப்படை செலவினங்கள் ஆகியவை அவரை 2010ம் ஆண்டு திவாலுக்கு தள்ளியது.     

“பொருளாதாரத்தில் ஒரு தனி மனிதர் வெற்றி பெறுவது என்பது நீங்கள் புலமை படைத்த மற்றும் அதிகமாக கற்றுக்கொள்ளும் நிலையில் அல்ல, மாறாக நீங்கள் அதனை எவ்வாறு புரிந்து கொண்டு நடக்கிறீர்கள்” என்பது தான்.

மேலே சொன்ன இரண்டு மனிதர்கள் வாயிலாக இங்கே ஆடம்பரம் கேடானது, எளிமை நல்லது என நாம் எடுத்துக் கொள்ள கூடாது. மாறாக நாம் ஒரு முதலீட்டை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம் மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதில் தான் நமது நிதி சார்ந்த வளம் இருக்கிறது. இங்கே வெற்றி-தோல்வி என்பது வெறும் அளவீட்டில் அல்ல.

பங்குச்சந்தை முதலீட்டில் நான் வெகு விரைவாக பணம் பண்ணுகிறேன் என்ற பேர்வழியில் அதிக ரிஸ்க் தன்மை கொண்ட மற்றும் புரிந்து கொள்ள முடியாத ஏதேனும் திட்டங்களில் பணத்தை போட்டு விட்டு, நாம் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சரி, அது நம்மை பாதாளத்துக்கு தள்ளி விடும். கற்றல் மிகவும் அவசியம், அதனை விட கற்றவற்றை கவனமாக செயல்படுவதே இன்னும் சிறப்பு. கீழே சொல்லப்பட்ட சில வாக்கியங்களை படியுங்கள்…

அதிக வருவாய்(High Returns) அளித்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள்…

ஒரே மாதத்தில் அல்லது ஒரே வருடத்தில் அதிக விலையை(High Risk, High Returns) கொடுத்த பங்குகள்…

ஒரு லட்சம் ரூபாய் போட்டால் மாதத்துக்கு 10,000 ரூபாய் (பத்து பைசா வட்டி: மாதத்துக்கு 10% வருவாய் எனில் வருடத்தில் 120%)…

இந்த கிரிப்டோவில் பணம் போட்டால் ஒரே மாதத்தில் டபுள் ஆகும்…

இந்த மனையை நீங்கள் இப்போது வாங்கி வைத்தால் ஐந்து வருடத்தில் ஐந்து மடங்கு லாபம்…

இது போன்ற முதலீடுகளை நாங்கள் யாருக்கும் பரிந்துரைக்கவில்லை. இது உங்களுக்காக மட்டுமே. இப்போது முதலீடு செய்தால் கொள்ளை லாபம்…

பங்குச்சந்தையில் நீங்கள் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்தால், தினமும் 5,000 ரூபாய் பார்ட் டைம்(Part Time Income) வருவாயாக சம்பாதிக்கலாம்…

ஒரு மொபைல் ஆப் மூலம், நீங்கள் வீட்டில் இருந்து கொண்ட கை நிறைய சம்பாதிக்கலாம்…

பணக்காரர்கள் ஒரு இல்லுமினாட்டிகள், அவர்கள் நம்மை போன்றவர்களை ஏமாற்றுகிறார்கள். நமக்காகவே இது போன்ற மல்டி லெவல் தொழில்கள் வந்துள்ளன. நாமும் தொழிலதிபராக மாறலாம்…

இன்னும் எண்ணற்ற…

மேற்சொன்னவற்றில் நாம் விழுவது இரண்டே இரண்டு விஷயங்களில் தான் – குறுகிய காலத்தில் நிறைய பணம்(High Returns) மற்றும் சமூக அந்தஸ்து(Social Status). 

நம்மில் பலரும் இன்னும் பங்குச்சந்தை என்பது F&O என சொல்லப்படும் ஊக வணிகமும், இன்ட்ரா டே என சொல்லப்படும் நாள் வணிகம்(Day Trading) தான் என நினைத்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் நம்மால் மேலே சொன்ன பல வழிகளில் குறுகிய காலத்தில் அதிக பணத்தை தேடிச் செல்லும் போது நாம் இன்னும் பணக்காரர்களை வெல்லவில்லை என்பதும் புரியும்(பணக்காரர்களாக தோற்றமளிக்க மட்டுமே உதவும்).

மெட்ராஸ் பங்குச்சந்தை அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.வ. நாகப்பன் அவர்கள் சொல்வது போல, ‘நீங்கள் பெரு நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டுமானால், பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்களாக நாம் நமது பங்கு முதலீட்டின் அளவை(சிறு முதலீட்டாளர்களின் வரவு) அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அந்த நிகழ்வு ஏற்படும்’ என்பார். உண்மையும் அது தான். உலகப் பொருளாதாரத்தில் நாம் இன்று வாங்கும் பொருளும், சேவையும் ஏதோவொரு நிறுவனத்தின் உற்பத்தி தான். அந்த நிறுவனத்தின் பங்கும் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்டது தான். 

இன்று நம் நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் (தனியார் வங்கிகளும் தான்) பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை தான்.  கடந்த 30 வருடங்களில் வங்கி டெபாசிட், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான முதலீட்டை நாம் கொண்டிருந்தால் முடிவில் பங்குச்சந்தையை தாண்டிய வருவாய் வேறு எவற்றிலும் கிடைக்கப்பெறவில்லை. பங்குச்சந்தைக்கு அடுத்தாற் போல, அதிக வருவாய் அளித்த முதலீடாக பார்த்தால் தங்கத்தின் மீதான முதலீடு தான். அதுவும் பங்குச்சந்தையை காட்டிலும் கடந்த 30 வருடங்களில் ஆண்டுக்கு சராசரியாக நான்கு சதவீதம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. பின்னர் நாம் ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் மற்றும் பி.எப் கணக்குகளை பற்றி சொல்லத் தேவையில்லை. 

நம்மில் பெரும்பாலோர் அதிக வருவாயை குறுகிய காலத்தில் ஈட்ட வேண்டுமென்ற ஆசையே, பெரும்பாலும் தவறான முதலீட்டு முடிவுகளை எடுக்க காரணமாக இருந்துள்ளது. சில நேரங்களில் பாதுகாப்பாக கருதப்படும் அஞ்சலக சேமிப்பு மற்றும் பி.எப் கணக்குகள் கூட பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறாவிட்டாலும், முதலுக்கு மோசம் தராது. ஆனால் வெகு விரைவாக பணம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக நாம் தவறான முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ளுகையில், நம் முதல் மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறோம். 

எனவே, நாம் அதிக வருவாய் அளிக்கும் பங்குச்சந்தையாக இருந்தாலும் சரி, பாதுகாப்பானது என எண்ணப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களானாலும் சரி, முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நமது இலக்கினை நீண்டகாலமாக நிர்ணயித்து, தொடர் முதலீட்டை(Consistency) மேற்கொள்ளுவது தான் சிறப்பு.

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ?

உண்மையில், நீங்கள் பெறும் அல்லது பெறக்கூடிய வருவாய்(லாபம்) என்பது மற்றொருவருடன் ஒப்பிட்டு பார்ப்பதல்ல. நீங்கள் முதலீடு செய்யும் திட்டங்களையும் சார்ந்தது அல்ல. மாறாக நீங்கள் எப்போது அந்த முதலீட்டை வெளியே எடுக்கிறீர்களோ அது தான் உங்கள் லாபம் அல்லது வருவாய்(Booked Profit / Redemption). உதாரணமாக ‘ABC’ என்ற பங்கையோ அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டத்தையோ நீங்களும், உங்களது நண்பரும் தேர்ந்தெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கான காலம் அடுத்த 10 ஆண்டுகள் என கொள்ளலாம். எந்தவொரு முதலீட்டுக்கான வருவாயும் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது(வங்கி வட்டி விகிதம் உட்பட). இடையில் 5 வருடங்களுக்கு பிறகு, நீங்கள் பங்குகளை விற்று அல்லது அந்த திட்டத்திலிருந்து வெளியேறினால், நீங்கள் உங்கள் பணத்தை வெளியே எடுத்த நாளே உங்களது லாபமாக அல்லது நட்டமாக இருக்கும். அன்றைய நாளில் தான் உங்கள் முதலீட்டுக்கான வருவாய் விகிதம்(Returns %) கணக்கிடப்படும். அதுவே உங்களது நண்பர் 8 வருடங்களுக்கு பின்னர், முதலீட்டை விலக்கினால், விற்ற நாளில் உள்ள வருவாயே அவரது லாபமோ அல்லது நட்டமோ ஆகும்.

மாறாக ஒரு குறிப்பிட்ட பங்குகள் அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் இவ்வளவு வருவாயை(20%, 30%, 50%), இந்த காலக்கட்டத்தில்(20,10, 5 வருடங்கள்) அளித்துள்ளது என சொன்னாலும், ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை எப்போது விற்கிறாரோ அன்றைய நாள் வரை கணக்கிடப்படுவது தான் அவருடைய வருவாய் விகிதம். இதனை விட்டு விட்டு இந்த பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 30 சதவீத வருவாயை கொடுத்துள்ளது, இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் கடந்த 5 வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீத வருவாயை அளித்துள்ளது, இந்த இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், நீங்கள் மனை வாங்கியிருந்தால் இப்போது மூன்று மடங்கு லாபம் என்ற கதையெல்லாம் உங்களுக்கான கதையல்ல. அது ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம்.

அதனால் தான் பங்குச்சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, ஏற்ற-இறக்கங்கள் பங்குகளில் நடைபெறும், மியூச்சுவல் பண்ட் திட்டம் மூலம் கடந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற வருவாய், எதிர்காலத்தில் அப்படியே கிடைக்கப்பெறும் என்பதில் எந்த உத்தரவாதமும் கிடையாது என்ற வாசகங்கள் இடம் பெறுகின்றன.

நாம் என்ன செய்ய வேண்டும் ?

  • உங்களுக்கான நிதி இலக்குகளை(Financial Goals) நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் 
  • இலக்குகளுக்கான சரியான திட்டம்(Returns & Investment Period) எதுவென்பதை கண்டறியுங்கள் 
  • இலக்கு காலம் முடியும் வரை தொடர்ச்சியாக(Disciplined Investing) முதலீடு செய்து வாருங்கள்
  • இடைப்பட்ட காலத்தில் எந்தவொரு காரணத்திற்காகவும் முதலீட்டை நிறுத்துவதோ, இல்லையெனில் பணத்தை வெளியே எடுப்பதையோ செய்யாதீர்கள் 
  • உங்களது இலக்கு காலத்திற்கு முன்னரே, உங்களுக்கு தேவையான தொகை சேர்ந்து விட்டால், அதனை வெளியே எடுத்து பாதுகாப்பான அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட திட்டத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்(Corpus achieved before Maturity).
  • நீங்கள் இலக்குகளுக்கான தொகையை என்றைக்கு சேர்ந்தவுடன் எடுத்தீர்களோ, அன்றைய நாள் தான் உங்களது முதலீட்டு வருவாய்(Booked Returns%) கணக்கிடப்படும். அதற்கு முன்பு வரை இருந்த எல்லாமே வெற்று லாப-நட்ட கணக்கு தான்(Notional Gain / Loss).   

எனவே, நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது, உங்களது முதலீட்டு வருவாய்க்கு அல்ல, தொடர்ச்சியான முதலீடு மட்டுமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

Automotive Axles – Fundamental Analysis – Stocks

கடந்த 1981ம் ஆண்டில் இந்தியாவின் கல்யாணி குழுமமும், அமெரிக்காவின் மெரிட்டார் நிறுவனமும் சேர்ந்து துவக்கியது தான், ‘ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ்’ நிறுவனம். வாகனங்களுக்கு தேவையான ரியர் டிரைவ் ஆக்சில் அசெம்பிளி தயாரிப்பு பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சுயாதீன உற்பத்தியாளராக தற்போது இந்நிறுவனம் உள்ளது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு தேவையான நீடித்த ஆயுள் கொண்ட இயக்கி அச்சுகள்(Drive Axles), பாதுகாப்பு மற்றும் ஆஃப்-ஹைவே(Off-Highway) துறை பயன்பாடுகளுக்கான அச்சுகள், டிரம் மற்றும் டிஸ்க் பிரேக்குகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

நிறுவனம் சமீபத்தில் லைட் டியூட்டி டிரைவ் அச்சுகள்(LCV) தயாரிப்பிலும் களம் இறங்கியுள்ளது. ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் நிறுவனம் பிரேக் தயாரிப்பு பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ், ஆசியா மோட்டார் ஒர்க்ஸ், டெய்ம்லர் இந்தியா, வால்வோ, எஸ்எம்எல் இசுசு, பெம்மல்(BEML), மேன் டிரக்ஸ், ஐஷர், பாரத் போர்ஜ், மஹிந்திரா மற்றும் எஸ்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களாகும்.

நிறுவனத்தின் தயாரிப்பு அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சீனா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் சுமார் 60 சதவீதமாகும். ஒட்டுமொத்த வருவாயில் ரியர் டிரைவ் ஆக்சில் பிரிவு 59 சதவீத பங்களிப்பையும், பிரேக்குகள் 21 சதவீத வருவாயையும் மற்றும் இதர பிரிவுகள் 20 சதவீத பங்களிப்பையும் தருகிறது. 

நிறுவனம் உள்நாட்டில் நான்கு உற்பத்தி ஆலைகளை கொண்டு இயங்கி வருகிறது. கூடுதலாக மெரிட்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு, தரப்படுத்துதல், முன்மாதிரி, சரிபார்ப்பு, சோதனை மற்றும் சந்தைக்குப்பிறகான பொறியியல் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு தேவையான அச்சுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது சார்ந்து பல வாடிக்கையாளர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடலை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

செயல்பாட்டுச் செலவுகளை மேம்படுத்துதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. உற்பத்தித் திறன்களை மேம்படுத்த புதிய இயந்திரங்கள் மற்றும் ஆட்டோமேஷனில் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,229 கோடியாகவும், செலவினம் 1,983 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் இயக்க லாபம் 246 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.166 கோடியாக இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(Operating Profit Margin) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 10 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது.

செப்டம்பர் 2024 காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் கையிருப்பு 882 கோடி ரூபாயாகும். நிறுவனத்தின் கடன் 27 கோடி ரூபாயாகவும், கடன்-பங்கு தன்மை 0.03 என்ற அளவிலும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 66 மடங்குகளிலும், பங்கு விலைக்கும், நிறுவனத்தின் விற்பனைக்குமான இடைவெளி 1.30 மடங்கு என்ற அளவிலும் இருக்கிறது. நிறுவனத்தின் தற்போதைய பி.இ விகிதம் 18 மடங்கு. 

விற்பனை வளர்ச்சியை காணுகையில் கடந்த பத்து வருடங்களில் 13 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கூட்டு லாப வளர்ச்சியில் கடந்த 10 வருட காலத்தில் இது 29 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 71 சதவீதமாக(கல்யாணி குழுமம்: 35.52% மற்றும் மெரிட்டார்: 35.52%) உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு 12.77 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கடந்த நிதியாண்டுகளில் நன்றாகவே இருந்துள்ளது.  

 நிறுவனம் மென்மையான சந்தை(Soft Market) மற்றும் குறைந்த அளவு தொழில் பிரிவுகளில்(Industry Volumes) சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக நடுத்தர மற்றும் கனரக வாகனப் பிரிவில் அதன் செலவினம் அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக அதன் ஒட்டுமொத்த லாப விகிதமும் குறைவாக காணப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அச்சு தயாரிப்பு பிரிவில் தனது தலைமைத்துவத்தைப் பேணுவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டை ஏற்படுத்தி உற்பத்தி செயல்திறனை அதிகரிக்க முனைகிறது. 

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் குறைந்தபட்ச அளவாக ரூ.1,720 மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,263 என வர்த்தகமாகியுள்ளது. 2024ம் நிதியாண்டில் இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 32 ரூபாயை ஈவுத்தொகையாக(Dividend) வழங்கியுள்ளது. அடிப்படைப் பகுப்பாய்வு மதிப்பீட்டின் படி(DCF Valuation), நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,178 – ரூ.1,473 என்ற விலையை ஒரு பங்குக்கு பெறும்.  கொரோனா பெருந்தொற்று காலச் சரிவின் போது, இப்பங்கின் விலை ரூ.360க்கும் குறைவாக வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒவ்வொரு வருடமும் நீங்கள் உங்களது முதலீட்டை அல்லது சேமிப்பை அதிகரிக்கிறீர்களா ?

வ்வொரு வருடமும் நீங்கள் உங்களது முதலீட்டை அல்லது சேமிப்பை அதிகரிக்கிறீர்களா ?

Do you increase your Savings or Investment every year ?

“உங்களது முதலீட்டு வருவாயை(லாபம்) காட்டிலும், நீங்கள் செய்யும் முதலீட்டு அதிகரிப்பே உங்களது நிதி இலக்கை அடையச் செய்யும்”.

பொதுவாக நம்மில் பலர் தங்களது நிதி இலக்கிற்கு பெரும்பாலும் சேமநல நிதி(பி.எப்), அஞ்சலக மற்றும் வங்கி மாதாந்திர அல்லது வைப்புத் தொகை(FD) போன்ற சேமிப்புத் திட்டங்களைத் தான் நம்பியிருப்பர். கூடுதலாக போனால் தங்கம் மற்றும் வீட்டுமனையில் நீண்டகாலம் முதலீடு செய்வதுண்டு. ஆனால் சிறு சேமிப்புத் திட்டங்களில் சேர்க்கப்படும் தொகை, பின்னாளில் நமது நிதி இலக்கிற்கு போதுமான தொகையை அளிக்குமா என்றால் சந்தேகம் தான். சிறு சேமிப்புத் திட்டங்களின் மூலம் குறுகிய கால இலக்கிற்குத் தேவையான தொகையை நாம் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் ஏற்படுத்தி விட முடியும். அதே வேளையில் இதன் மூலம் நீண்டகால இலக்குகளுக்கு அது சாத்தியமா ?

உதாரணமாக, குமார் என்பவரின் இரண்டு வயதான குழந்தைக்கு, பின்னாளில் மேற்படிப்புக்கு தேவையானத் தொகையை அவர் இன்று முதல் சேமிக்க முற்படுகிறார் என வைத்துக் கொள்வோம். மேற்படிப்பிற்கான(பட்டப்படிப்பு) இன்றைய செலவுத்தொகை ஐந்து லட்சம் ரூபாய் எனக் கொண்டால், 15 வருடங்களுக்கு பிறகு அதாவது குழந்தையின் 17 வயது முடிவில், ஆண்டுக்கு சராசரியாக 7% விலைவாசியில்(பணவீக்கம்) 13.80 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதனை அவர் இன்றே சேமிக்க வேண்டுமெனில், மாதத்திற்கு 4,350 ரூபாயை அடுத்த 15 வருடங்களுக்கு 7 சதவீத வட்டி வருவாய் அளிக்கும் சேமிப்புத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக அவர் 12 % வருவாய் அளிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய முனைந்தால், மாதத்திற்கு ரூ.2,750 மட்டுமே என்ற முறையில் அடுத்த 15 வருடங்களுக்கு ஏற்படுத்தினால் அவரது இலக்கை அடையலாம். ஒரு முறை மட்டும் வைப்புத் தொகையாக(Fixed Deposit or One Time Investment) முதலீடு செய்ய வேண்டுமென்றால் இன்றே ரூ.5 லட்சத்தை ஒரு சேமிப்புத் திட்டத்தில் போட்டு விட்டு, அடுத்த 15 வருடங்களுக்கு காத்திருந்தால் 7 சதவீத வட்டி வருவாயில் நமது இலக்கை அடையலாம். இதுவே 12 சதவீத வருவாய் எனில், ரூ.2.50 லட்சம் போதுமானது.

பாதுகாப்பானது என நாம் மேலே சொன்ன சேமிப்புத் திட்டங்களில் அடுத்த 15 வருடங்களுக்கு உறுதியாக ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வருவாய் கிடைக்கக்கூடும் என நம்மால் சொல்லிவிட முடியுமா ? 12 சதவீத வருவாய் ஆண்டுக்கு கிடைக்கும் என்றால், அது ரிஸ்க் இல்லாமல் தான் கிடைத்திருமா ? இன்றைய 5 லட்ச ரூபாய் தொகைக்கே இவ்வளவு கணக்கு என்றால், ஆண்டுக்கு 10, 20 லட்சம் செலவாகும் மேற்படிப்புகளுக்கு நாம் நிதி இலக்கை நிர்ணயித்தால் மாதாமாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் ?

பொதுவாக நீண்ட கால நிதி இலக்கிற்குத் தேவையான தொகையை நாம் மாதாமாதம் முதலீடு செய்கையில் அவ்வளவு எளிதில் அந்த இலக்கை எட்டி விட முடியாது. இடைப்பட்ட காலத்தில் அவசரத்தேவை என நாம் நம் முதலீட்டையோ, சேமிப்பையோ நிறுத்த நேரிடலாம், இல்லையெனில் பணத்தை வெளியே எடுத்து விடலாம் அல்லது நாம் சேமித்த பணம் பின்னொரு காலத்தில் விலைவாசி உயர்வு காரணமாக இலக்கிற்கான காலத்தில் போதுமானதாக இல்லாமல் போய்விடக் கூடும். நமது வருவாய்க்கு தகுந்தாற் போலத் தான் நாம் சேமிப்பையும், செலவையும் நிர்வகிக்க முடியும். சில நீண்ட கால நிதி இலக்குகளுக்கு சேமிக்க, நம்மிடம் போதுமான தொகை இருந்திருக்காது. இது போன்ற சமயங்களில் தான் நாம் நம்மால் எந்தளவுக்கு சேமிக்க முடியுமோ அதனை உடனே துவங்கி விட்டு, பின்பு சிறுகச்சிறுக ஆண்டுக்கு ஓரு முறையோ அல்லது வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில் நமது சேமிப்பு அல்லது முதலீட்டுத்தொகையை அதிகரித்து செய்யும் போது, இலக்குகளை நெருங்கலாம்.

உதாரணமாக நாம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ரூ.5,000 ஐ முதலீடு செய்தால், 12 சதவீத வருவாய் கிடைக்கும் நிலையில், முடிவில் ரூ.50 லட்சத்தொகை கிடைக்கும். இதுவே சொல்லப்பட்ட ரூ.5,000 மாதாந்திர தொகையை ஒவ்வொரு வருடமும் 3 சதவீதம் அதிகரித்து வந்தால், முடிவில் 60 லட்ச ரூபாய் கிடைக்கக் கூடும். ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரித்து செய்தால் 68 லட்ச ரூபாயும், இதுவே 8 சதவீதம் என்றால் ரூ.85.23 லட்சமும் கிடைக்கும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல. பழக்கத்தின் மூலம் மட்டுமே இதனை நாம் செய்தாக வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் நமது வருவாய் எவ்வளவு சதவீதம் உயர்கிறதோ, அந்த அளவினை நாம் நம் முதலீட்டிலும் அதிகரிக்கச் செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 தொகையை அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் ரூ.1.50 கோடி கிடைக்கும்(12 சதவீத வருவாய் எதிர்பார்ப்பு). இதுவே ஆண்டுக்கொரு முறை 3 சதவீதம் என அதிகரித்து செய்தால், முடிவில் 1.80 கோடி ரூபாயாகும். இதனை நாம் 25 வருடங்களாக செய்யும் போது, 3.51 கோடி ரூபாயும், 30 வருடங்களாக இருந்தால் ரூ.6.65 கோடி வருவாயையும் ஏற்படுத்தலாம். குறிப்பாக இளம் வயதில் வேலைக்கு செல்வோர் அல்லது இளம் தொழில்முனைவோர் தங்களது  வருவாய் ஈட்டுதலின் துவக்கக் காலத்தில் இதனை பின்பற்றினால் ஓய்வுக்காலத்திற்கு தேவையான செல்வத்தை பெற்று விடலாம்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர்(பிப்ரவரி மாதம், 1994) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பரஸ்பர நிதித்திட்டம்(Mutual Funds Scheme) கடந்த அக்டோபர் 2024 வரை ஆண்டுக்கு சராசரியாக 18.40 சதவீத வருவாயை அளித்துள்ளது. உதாரணமாக மாதாமாதம் ரூ.1500 ஐ மட்டுமே நாம் 30 வருடங்களுக்கு மேற்கொண்டிருந்தால், 15 சதவீத வருவாய் கிடைக்கும் பட்சத்தில், முடிவில் ரூ.1.05 கோடி கிடைத்திருக்கும். இதுவே மாதாமாதம் 15,000 ரூபாய் என்றால், 10.51 கோடி ரூபாய் ! இது தான் கூட்டு வட்டியின் பலன். கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்க நாம் காலத்தையும், ஆண்டுக்கொரு முறை முதலீட்டுத்தொகையையும் அதிகரிப்பதை மட்டும் செய்தால் போதுமானது.

Step Up SIP:

இது ஒரு டாப்-அப்(Top-up) முதலீட்டு அணுகுமுறை. நமது சம்பளம் ஆண்டுக்கொரு முறை எவ்வாறு உயர்ந்து வருகிறதோ, நாம் நுகரும் பொருட்களின் விலை எவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகரித்து வருகிறதோ அது போலத்தான் இதுவும். நாம் மேற்கொள்ளும் முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டுத் தொகையை அதிகரித்து கொண்டு செல்வது தான் Step-Up SIP. 

உதாரணமாக மாதாமாதம் ரூ.1,000 ஐ சேமித்து வருகிறேன் என்றால், ஆண்டுக்கொரு முறை 5 சதவீதம் அல்லது 50 ரூபாய் உயர்த்தி, இரண்டாவது வருடத்திலிருந்து செய்வது. இது போல ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் தொகையை அதிகரிக்கச் செய்து முதலீட்டை மேற்கொள்வது தான் ஸ்டெப்-அப் திட்டம். இந்த திட்டங்கள் பெரும்பாலும் மியூச்சுவல் பண்டு எனப்படும் பரஸ்பர நிதிகளின் வாயிலாக கிடைக்கப்பெறுகிறது. நாம் பொதுவாக மேற்கொள்ளும் அஞ்சலக மற்றும் வங்கி சிறுசேமிப்புத் திட்டங்களில் இது போன்ற அணுகுமுறைத் திட்டங்கள் கிடைக்கப்பெறாது மற்றும் அரிது.

Conventiona SIP vs Step-up SIP

ஸ்டெப்-அப் அணுகுமுறையில் ஒவ்வொரு வருடத்தின் முடிவில் தான் தொகையை அதிகரிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒவ்வொரு மாதமும், காலாண்டுக்கொரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை என எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு தொகை அல்லது சதவீத அடிப்படையிலும் அதிகரித்து செய்யலாம். இது ஒரு தானியங்கி செயல்முறை(Automated Process) என்பதால், ஒரு முறை ஏற்படுத்தி விட்டால் போதும்; தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியமில்லை. அதே வேளையில் இது போன்ற முறைகளில் முதலீடு செய்யும் முன், சரியான மற்றும் நீண்ட காலத்திற்கு வருவாய் அளிக்கக்கூடிய சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பதும் அவசியமாகும்.

இன்றைய 10 லட்ச ரூபாய் மதிப்பு, அடுத்த 20 வருடங்களுக்கு பிறகு 7 சதவீத பணவீக்கத்தில்(விலைவாசி உயர்வு) ரூ. 38.69 லட்சமாக இருக்கும். 20 வருடங்களுக்கு பிறகு கிடைக்கக்கூடிய ஒரு கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு ரூ.25.84 லட்சமே !

சிறு துளி பெருவெள்ளம் என்பது ஒரே அளவிலான துளி இறுதி வரை இருப்பதில்லை. அதன் வேகமெடுக்கும் திறனும், அதிகரிக்கும் அளவும் காரணத்தினால் தான் பெருவெள்ளமாகிறது. 

பாதுகாப்பானது என பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறாமல் சிரமப்படுவதை காட்டிலும், ரிஸ்க் தன்மை கொண்ட மற்றும் முதலீட்டை பரவலாக்கம்(Diversification) செய்யக்கூடிய திட்டங்களை புரிந்து கொண்டு முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம்; அதன் மூலம் நமது இலக்கையும் அடையலாம்.

எந்தவொரு இலக்கும் இல்லாமல் மாதாமாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறேன் என அடுத்த 20 வருடங்களுக்கு செய்தாலும், நாம் செய்யும் தவறு – ஆண்டுக்கு ஒரு முறை நமது வருவாய் விகிதம் கூடினாலும், நமது முதலீட்டினை அதிகரிக்காமல் இருப்பதே ! 

“ஒரு கோடிப்பே… நீ பாத்த… 

ஆமப்பே நா பாத்தேன் ஒரு கோடிப்பே !”

     

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஷீலா ஃபோம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஷீலா ஃபோம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Sheela Foam Ltd – Fundamental Analysis – Stocks

நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷீலா ஃபோம் நிறுவனம், கடந்த 1971ம் ஆண்டு திருமதி. ஷீலா கவுதம் அவர்களால் துவங்கப்பட்டது. மெத்தை மற்றும் நுரை(ஃபோம்) தயாரிப்புத் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும், பாலியூரிதீன்(Polyurethane – PU Foam) எனப்படும் பாலிமர் வகையைச் சார்ந்த கூட்டுப் பொருட்களின் மூலமான மெத்தை உற்பத்தியில் அதிக பங்களிப்பை கொண்ட நிறுவனமாகவும் ஷீலா ஃபோம் லிமிடெட் உள்ளது. ஒட்டுமொத்த இந்திய மெத்தைச் சந்தைப் பிரிவில் சுமார் 35 சதவீத பங்களிப்பை இந்நிறுவனம் கொண்டுள்ளது. 

இந்நிறுவனம் தளபாடங்கள்(Furniture Cushions), மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், மெத்தை பாதுகாப்பான், சோபா செட்கள் மற்றும் பிற படுக்கைகள் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் முக்கிய பிராண்டுகளாக Sleepwell, Kurl-on, Feather Foam, Joyce, Interplasp, SleepX, Lamiflex, Starlite உள்ளன. நாடெங்கிலும் பெரியளவிலான சுமார் 110 விநியோக நிறுவனங்களும், 13,000க்கும் மேற்பட்ட சில்லறை விநியோகர்களும் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட நேரடி விற்பனை நிலையங்களும் இந்நிறுவனத்திற்கு உள்ளன. ஷீலா ஃபோம் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் 25க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

ஆஸ்திரேலிய நாட்டின் மெத்தை சந்தைப் பிரிவில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் சுமார் 40 சதவீதமாகும். Joyce Foam என்ற நிறுவனப் பிராண்டில் அங்கே இந்நிறுவனத்தின் தொழில் பிரிவு பங்காற்றி வருகிறது. நிறுவனத்தின் வருவாயை பொறுத்தவரை ஒட்டுமொத்த வருவாயில் 70 சதவீதம் உள்நாட்டிலும், 16 சதவீதம் ஆஸ்திரேலியாவிலும் மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் உற்பத்தி மூலமான விற்பனையில் மெத்தைகள் 40 சதவீத பங்களிப்பையும், மரச்சாமான்கள் 13 சதவீதமும், தொழில்நுட்ப ஃபோம் 27 சதவீதம் என்ற அளவிலும், பிற பிரிவுகளின் மூலம் 20 சதவீத வருவாயும் கிடைக்கப்பெறுகிறது. ஷீலா ஃபோம் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் பெரும்பாலும் வாகனத்துறை, ஒலியியல்(Sound absorption Foam), தங்கும் விடுதிகள்(Hotels), திருமண வீடுகள், விருந்தினர் மாளிகை, ஓய்வு விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.  

நிறுவனத்தின் முக்கிய மற்றும் பிரபல வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பேஸ்3, டெஸ்க்கா, மஹிந்திரா, கம்மின்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், கோயல், மாருதி, அடிடாஸ், ஸ்டட்ஸ், சுப்ரீம், அர்பன் லேடர், ரிலாக்ஸ்வெல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 

ஷீலா ஃபோம் நிறுவனத்திற்கு உலகெங்கிலும் 17 உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் ஐந்து ஆலைகள் ஆஸ்திரேலியாவிலும், ஸ்பெயினில் ஒன்றும், பிற ஆலைகள் உள்நாட்டிலும் இருக்கின்றன. உள்நாட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 1.29 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உற்பத்தியை இந்நிறுவனத்தால் ஏற்படுத்த முடியும். ஆஸ்திரேலியாவில் உள்ள ஆலைகள் மூலம் சுமார் 11,000 மெட்ரிக் டன்களும், ஸ்பெயின் ஆலை மூலம் 17,000 மெட்ரிக் டன்களும் ஒரு ஆண்டுக்கு உற்பத்தி செய்ய முடியும்.

Sheela Foam - Geo presence in India

நிறுவனம் கடந்த சில வருடங்களாக தனது உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான முதலீடுகளையும், சந்தையில் உள்ள முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்துவதிலும் முனைப்பாக இருந்து வருகிறது. முக்கியமாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 2.5 சதவீதம் வரை விளம்பரத்திற்கு செலவிடப்படுகிறது. குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய மெத்தை பிராண்டான கர்லான் எண்டர்பிரைசஸ்(Kurl-on) நிறுவனத்தை சுமார் ரூ.2000 கோடிக்கும்(95 சதவீத பங்குகள்), இந்தியாவில் இணைய வழி தளபாடப் பிரிவில்(Online Furniture Rental Platform) ஆதிக்கம் செலுத்தி வரும் பர்லெங்க்கோ(Furlenco) நிறுவனத்தை 300 கோடி ரூபாய்க்கும்(35 சதவீத பங்குகள்) ஷீலா ஃபோம் கையகப்படுத்தியது. 

கையகப்படுத்திய வேளையில் பர்லெங்க்கோ(Furlenco) நிறுவனத்தின் மதிப்பு 857 கோடி ரூபாய் பெறுமானம் என்றும், கர்லான் மெத்தை நிறுவனம் 3000 கோடி ரூபாய் மதிப்பை பெறும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இன்று கர்லான் மெத்தை நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.4,560 கோடி மற்றும் பர்லெங்க்கோ நிறுவனத்தின் மூலதன மதிப்பு 1,920 கோடி ரூபாய் (அக்டோபர் 2024). கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் கர்லான் நிறுவனத்தின் லாபமும் பெரும்பாலும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தனது மெத்தைச் சந்தைப் பங்களிப்பு விகிதத்தை அதிகரிக்க ஷீலா ஃபோம் நிறுவனம் கையகப்படுத்துதலை மேற்கொண்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் இன்டெர்ப்லாஸ்ப் நிறுவனத்தை சுமார் 40 மில்லியன் யூரோ முதலீட்டின் மூலம் மற்றும் ஆஸ்திரேலிய மெத்தை சந்தையில் முன்னணியில் உள்ள ஜாய்ஸ் ஃபோம் நிறுவனத்தை வாங்கியதும் இந்நிறுவனத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. உற்பத்தி ஆலைகளின் கொள்ளளவை அதிகரிக்க சமீபத்தில் இந்நிறுவனம் சுமார் 350 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் நாட்டில் உள்ள மெத்தைச் சந்தைப் பிரிவில் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை அதிகரிக்கத் தேவையான விஷயங்களை இந்நிறுவனம் செய்து வருகிறது. இணையம் வழியிலான விற்பனையையும் அதிகரிக்க பல்வேறு புதுமைகளை இந்நிறுவனம் புகுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாக கடந்த சில காலாண்டுகளில் இணையம் வழியான வருவாயும் வளர்ச்சியடைந்துள்ளது.

Sheela Foam - PnL statement

மெத்தை சந்தையை பொறுத்தவரை பெரும்பாலான செலவுகள் மூலப்பொருட்களைச் சார்ந்து தான் உள்ளது. மூலப்பொருட்களின் விலையும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையைச் சார்ந்து இருப்பது, பெரும்பாலும் இந்நிறுவனத்தின் மூலப்பொருட்களுக்கான செலவினத்தில் அதிக ஏற்ற-இறக்கம் காணச் செய்யும். இதன் விளைவாக நிறுவனத்தின் விற்பனை வருவாய் அதிகமாக இருந்தாலும், இயக்க லாபம் மற்றும் நிகர லாபம் குறையலாம். நிறுவனத்தின் செலவுகளை காணுகையில், கடந்த பத்து வருட சராசரியாக மூலப்பொருட்களின் செலவினம் 55-60 சதவீதமாக இருந்துள்ளது.

ஷீலா ஃபோம் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ.9,200 கோடி. கடன்-பங்கு விகிதம் 0.48 மடங்கு என்ற அளவிலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 2.37 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 65.50 சதவீதமாகவும், நிறுவனத்தின் கடன் 1,436 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவுமில்லை. நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 276 ரூபாயாகவும், தற்போதைய பங்கின் விலை அதன் வருமானத்துடன் ஒப்பிடுகையில்(P/E) 94 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்தின் துறைச் சார்ந்த பி.இ. விகிதம் 62.1 என்பது கவனிக்கத்தக்கது.

2023-24ம் நிதியாண்டில் ஷீலா ஃபோம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 2,982 கோடியாகவும், செலவினம் 2,678 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் 10 சதவீதமாகவும், நிகர லாபம் ரூ.184 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் இதர வருமானம் 136 கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பர் 2024 காலத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Cash Reserves) ரூ.2,943 கோடி. நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.1,436 கோடி: இவற்றில் ரூ.496 கோடி குறுகிய காலக் கடனாகவும், 742 கோடி ரூபாய் நீண்டகாலக் கடனாகவும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் கடன் தொகையும் அதிகரித்து வருகிறது. இது சார்ந்து நிறுவனத்தின் சொத்துக்களும் அதிகரித்து வந்துள்ளது. அதே வேளையில் சரக்குகளும்(Inventories), வர்த்தக வரவுகளும்(Trade Receivables) அதிகரித்து காணப்படுகிறது. வர்த்தக வரவுகளில் பெரும்பான்மையான தொகை ஆறு மாதத்திற்கு குறைவான காலத்தில் இருந்துள்ளது.

Sheela Foam - Brands

செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் நிரந்தர சொத்து(Fixed Assets) மதிப்பு ரூ.3,148 கோடி. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம் கடந்த பத்து ஆண்டு காலத்தில் சராசரியாக 11 சதவீதம் என்ற அளவில் உள்ளது. விற்பனை வருவாய் வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் எட்டு சதவீதமாகவும், அதுவே 10 ஆண்டுகளில் 9 சதவீதமாகவும் இருந்துள்ளது.லாப வளர்ச்சியை பொறுத்தவரை, கடந்த 5 வருடங்களில் ஒரு சதவீதமாகவும், 10 ஆண்டுகளில் இது 17 சதவீதமாகவும் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனப் பங்கின் விலை 23 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் 2020ம் ஆண்டில் முதலீடு செய்திருந்தால் தற்போது 36 சதவீத ஏற்றமாகும். கடந்த ஒரு வருடத்தில் இந்தப் பங்கின் அதிகபட்ச விலை ரூ.1297 வரை சென்றுள்ளது. 2022ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்குகளை(Bonus issue 1:1) அறிவித்திருந்தது. 

நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ராகுல் கவுதமும், நிர்வாக இயக்குனராக திரு. துஷார் கவுதமும் உள்ளனர். உலகளவில் இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. நிலேஷ் மசும்தார் உள்ளார்.  நிறுவனம் சார்பில் 65.50 சதவீதப் பங்குகள் உள்ள நிலையில், அவற்றில் திரு. துஷார் கவுதம் மட்டும் தன்னிடத்தே 31.44 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அன்னிய நிறுவன முதலீட்டுப் பங்களிப்பு(FII) 6.60 சதவீதமாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு(DII) 22.30 சதவீதமாகவும் உள்ளது. ஷீலா ஃபோம் நிறுவனத்தின் தற்போதையப் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.844 என வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் மூலப்பொருட்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெய் விலையை சார்ந்து இருப்பதால் இதன் வருவாய்-லாப விகிதம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். 

ஷீலா ஃபோம் நிறுவனத்திற்கு உலகலாவிய துறைச் சார்ந்த போட்டியாளர்களாக கார்பெண்டர், ரெக்டிசல், ப்ரோசீட், எஸ்ஸென்ட்ரா போன்ற நிறுவனங்கள் உள்ளன. உள்நாட்டில் டூரோபிளக்ஸ், ஸ்ப்ரிங்வெல், காயிர்பிட், திருப்பதி ஃபோம்  மற்றும் பிற நிறுவனங்கள் போட்டியாளராக உள்ளன.

Sleep Well(Strong in North & West in India): Focus on PU Foam Mattress

Kurl-on (Strong in East & South in India): Focus on Rubberized Coir Mattress  

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

Asset Class returns Since 1994 in India – Investment Returns Year on Year (Exclusive article)

பொதுவாக பங்குச்சந்தை முதலீடு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. ஆம், பங்குச்சந்தையில் முதலீடு செய்கையில் அதிக ஏற்ற-இறக்கத்தை நாம் சந்தித்தாக வேண்டும். ஆனால், பங்குச்சந்தையை தவிர்த்து மற்ற முதலீடுகள் உண்மையில் அபாயமில்லையா(ரிஸ்க் தன்மை) ? இதனை நம்மில் ஒவ்வொருவரும் சிந்தனையாக மாற்றியிருந்தால், அதற்கான விழிப்புணர்வு(Awareness) நமக்கு கிடைத்திருக்கும்.

உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பங்கு இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலெல்லாம் ஏற்பட்ட நிதிச்சிக்கல்கள் நம் நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் களைந்து, 1992ம் ஆண்டுக்குப் பிறகு அதனைக் கடந்து விட்டோம். உலகின் எந்தவொரு வளர்ந்த நாட்டின் பொருளாதாரத்திலும் தனிநபர் மற்றும் குடும்பத்தின் வருவாயில் அதிக ஏற்ற-தாழ்வு இருப்பதும், ஏழை-பணக்காரர்களுக்கான வருமான இடைவெளி அதிகமாக இருப்பதும் உண்மை தான். ஆனால் அதற்காக நாம் நிதி சார்ந்த கல்வியை கற்காமலும், விழிப்புணர்வை பெறுவதில் தயக்கம் காட்டுவதும் சரியா ?

இவ்வுலகில் ரிஸ்க் இல்லாமல் ஒரு நிகழ்வு இருக்கிறதா என்றால், அப்படியொன்றுமில்லை. சாலையை கடந்தாலும் அபாயம் தான், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரிஸ்க் தான். வங்கி டெபாசிட் பாதுகாப்பானது என நாம் எண்ணினால் மத்திய வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை பற்றியும்(Interest rate Risk), வங்கிகளுக்கான DICGC சார்ந்த விதிகளையும் படிக்க வேண்டும். தங்கத்தின் மீதான முதலீடு ரிஸ்க் இல்லையென நினைத்தால், தங்கத்தின் சந்தை எங்கே இருந்து இயக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் அது எந்த நாணயத்தால்(Currency) வர்த்தகமாகிறது என்ற விழிப்புணர்வை பெற வேண்டும்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறைப் பற்றி நாம் பெரிதாக சொல்ல வேண்டியதில்லை. எல்லா குடும்பங்களுக்கும் ஒரு வீடு தேவை என்ற போதிலும், அவற்றை நாம் முதலீட்டுக் கோணத்தில் அணுகும் போது, அவற்றில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க் நமக்கு தெரிவதில்லை. வீட்டுமனைத் துறையில் நாம் முதலீடு செய்யும் முன் நீர்மை நிறை(Liquidity), வரி விதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை(Transparency) பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அஞ்சலகங்கள், அரசு கடன் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதி என காணுகையில், இது ஒரு நாட்டில் உள்ள அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தைப் பொறுத்துத் தான் அமையும். கிரீஸ், இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான், ரசியா, இன்னும் எண்ணற்ற நாடுகளில் வெவ்வேறு காலத்தில் நடந்த பொருளாதார மந்தம் நம் நாட்டில் இனி ஏற்படாது என நாம் எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். 

பொதுவாக ஒரு சாரார் பங்குச்சந்தை முதலீடு ஆபத்தானது, பணக்காரர்களுக்கானது, அது ஒரு சூதாட்டம் என மொத்தமாக ஒதுங்குவதும், மற்றொரு புறம் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக போன்சி(Ponzi Scam) மோசடித் திட்டங்களில் மொத்த பணத்தையும் இழந்து விட்டு நிற்பதும் அடிக்கடி நடந்து தான் வருகிறது. இது ஒரு புறமென்றால், இந்திய பண(Money Market) மற்றும் முதலீட்டுச் சந்தையில்(Capital Market) பெரிதாக வாய்ப்பொன்றுமில்லை என நினைத்துக் கொண்டு வெளிநாட்டுப் பங்குகளை வாங்குகிறேன், கிரிப்டோவில் விளையாடுகிறேன், ரம்மியில் கோடீஸ்வரராகுகிறேன், பங்குச்சந்தை மற்றும் போரெக்ஸ் சந்தையில் வர்த்தகம் மற்றும் இந்த செயலியில்(Mobile Apps) பணத்தை போட்டு விட்டு சும்மா இருந்தால் பணக்காரராகி விடலாம் என சிக்குகின்றனர்.

சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பதும், சந்தையைத் தாண்டி வேறுமொரு புதிய முதலீட்டு வாய்ப்பு இருப்பதாக கருதி, தெரியாத, ‘கேக்குறான் மேக்குறான்’ திட்டத்தில் உழைத்த பணத்தை தொலைப்பது – இரண்டும் ஒன்று தான். மருத்துவத் துறையில் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக, பொறியியல் துறையில் ஒரு சிறந்த என்ஜினீயராக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக வருவதற்கு நாம் நமது பள்ளிக்காலத்திலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ அதற்கான விதையை நட்டிருக்க வேண்டும். அதனைத் தான் நாம் அனுபவம் பேசுகிறது என சொல்கிறோம். ஆனால், பங்குச்சந்தையிலோ ஒரு வாரம் பணம் பார்த்து விட்டால் போதும், மிகப் பெரிய வல்லுனராக நம்மை நாமே நினைத்துக் கொண்டு, சந்தையின் அடிப்டைக் கல்வியை கற்காமல், அதன் கோணத்தை அறியாமல் சூதாடி விட்டு, பின்பு பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் எனவும், இது பணக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்கக் கூடிய இடமென்றும், மேலும் இது நமக்கு சரிப்பட்டு வராது என நாம் புறந்தள்ளுகிறோம்.

டாட்டாவும், பிர்லாவும்:

பங்குச்சந்தையில் அவ்வளவு எளிதாக சம்பாதித்து பணக்காரராக விட முடியுமென்றால், ஏன் டாட்டா-பிர்லாவும், அம்பானி-அதானியும் பல துறைகளில் தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இருக்கும் மூலதனத்தை கொண்டே நித்தமும் ஆயிரம் கோடிகளை பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபமாக ஈட்டலாமே ! உண்மையில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும், வழங்கும் சேவைகளையும் நாம் பயன்படுவதால் மட்டுமே அவர்கள் தங்களது தொழிலில் பணக்காரர்களாக உள்ளனர். இதனைத் தான் நாமும் செய்ய வேண்டும் – ஒரு நிறுவனத்தின் அல்லது தொழிலின் உரிமையாளர் மற்றும் முதலீட்டாளரை போல !

கடந்த கால வருவாய் விகிதங்கள்:

சரி, இந்தியப் பங்குச்சந்தை முதலீடு கடந்த 30 ஆண்டுகளில் அப்படி என்ன செய்து விட்டது. மும்பையின் தலால் தெருவை அடையாளமாக கொண்ட மும்பை பங்குச்சந்தை என்னவோ 1875ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த தேசிய பங்குச்சந்தையும் 1992ம் ஆண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக, அதாவது 1994ம் ஆண்டு முதல் நாம் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்து வந்திருந்தால், நடப்பாண்டின் செப்டம்பர் மாத முடிவில் சென்செக்ஸ் குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 14.30 சதவீதமும், நிப்டி-500 குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 15.70 சதவீதமும் ஒரு முதலீட்டாளருக்கு வருவாயாக கிடைத்திருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 30 ஆண்டுகளாக முதலீடு செய்து வந்திருந்தால்(மொத்தம் 15 லட்சம் ரூபாய்), சென்செக்ஸ் குறியீட்டின் மூலம் இன்று உங்களது ஒட்டுமொத்த முதலீட்டு வருவாய் 2.41 கோடி ரூபாயாகவும், நிப்டி-500 குறியீட்டின் மூலம் அது 2.79 கோடி ரூபாயாகவும் வளர்ந்து நிற்கும். இங்கே அரசியல் சார்ந்த ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம். ஆனால் சந்தையில் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, முதலீடு செய்த பின் பொறுமையே உங்களது வருவாயை மிகப்பெரிய அளவில் மாற்றும்.

1994ம் ஆண்டு முடிவில் நாட்டின் பணவீக்கம் 9.50 சதவீதமாக இருந்த நிலையில், அந்த வருடத்தின் முடிவில் பொது வருங்கால வைப்பு நிதி அளித்துள்ள வருவாய் சுமார் 12 சதவீதமாகும். இது போன்ற ஒரு வருவாய் இன்று இருந்திருந்தால், நீங்கள் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய அளவில் பங்குச்சந்தையில் ஆண்டுக்கு சராசரியாக 12 – 15% வருவாய் என  நீண்டகாலத்தில் கிடைத்தால், அவர் தான் சந்தையில் சாதனையாளர். சொல்லப்பட்ட 1994ம் வருடம் வங்கியில் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 10 சதவீதமாகவும், சென்செக்ஸ் குறியீடு 19.60 சதவீத வருவாயையும் வழங்கியுள்ளது. அதே வேளையில் தங்கத்தின் தங்கம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வருவாயையே அந்த வருடத்தில் கொடுத்துள்ளது.

தங்கத்தின் முதலீட்டு வருவாய்:

கடந்த 30 வருடங்களில் தங்கத்தின் மீதான முதலீட்டு வருவாய் ஆறு வருடங்கள், 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்துள்ளது. இதன் மோசமான காலமாக 1997ம் ஆண்டில் தங்கம் (-20.60) சதவீதமும், 2014, 2015ம் ஆண்டு முறையே (-10.80) சதவீதம் மற்றும் (-5.50) சதவீதம் என்ற அளவில் இறக்கத்தை கண்டுள்ளது. அதாவது 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், ஈட்டிய வருவாய் வெறும் 1.84 சதவீதமே. அதாவது சொல்லப்பட்ட வருடத்தில் நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) சராசரியாக 6.27 சதவீதமாகும். 

 தங்கத்தின் பொற்காலமாக 2005ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை(17.70%, 20.40%, 12.90%, 25.30%, 32.80%, 19.50%, 36.90%) இருந்துள்ளது. குறிப்பாக 2007-08ம் ஆண்டு ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் உயர்ந்து வந்துள்ளது. 2011ம் ஆண்டு மட்டும் தங்கத்தின் மீதான முதலீடு 36.90 சதவீத வருவாயை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 30 ஆண்டுகளில் தங்கத்தின் மீதான வருவாய் சராசரியாக 11.10 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு:

இந்தியப் பங்குச்சந்தையை பொறுத்தவரை சென்செக்ஸ் குறியீடு கடந்த 30 வருடங்களில் 12 வருடங்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை அளித்துள்ளது. அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 82 சதவீதத்தை வழங்கியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டான 2008ல் வரலாற்றில் மோசமான வீழ்ச்சியை சந்தித்த தருணம், சுமார் (-51.40) சதவீத வீழ்ச்சி. 30 வருடங்களில் 8 முறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது போல, நிப்டி-500 குறியீட்டை எடுத்துக் கொண்டால் அதுவும் 8 ஆண்டுகள் இறக்கத்தை சந்தித்துள்ளது. இந்த குறியீடு 1998ம் ஆண்டின் முடிவில் 97.20 சதவீதம் மற்றும் 2009ம் ஆண்டில் 92.90 சதவீத வருவாயை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிப்டி-500 குறியீடு ஒன்பது ஆண்டுகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தை பெற்றுள்ளது. 

வெள்ளியில் வாய்ப்பு:

வெள்ளியில் முதலீட்டை மேற்கொள்ளும் போது, பெரும்பாலும் தங்கத்திற்கு எதிர்மாறாகத் தான் இருந்துள்ளது. வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறையில் காணப்படுவதால், பங்குச்சந்தையை போலவே அதிகமான வருவாயை வெள்ளி முதலீடு வழங்கியுள்ளது. இருப்பினும் முப்பது வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 9.70 சதவீத அளவில் உள்ளது. 

வெள்ளி அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 63.50 சதவீதமும் மற்றும் 2010ம் ஆண்டில் 59.90 சதவீதமும் தந்துள்ளது. மோசமான வீழ்ச்சியாக 2013ம் ஆண்டில் (-26.60) சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் ஆறு முறை வெள்ளி முதலீட்டின் மீதான வருவாய் 20 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. பொதுவாக நம்மில் பலர் தங்கத்தின் மீது கொண்டுள்ள காதலை, வெள்ளிக்கு கொடுக்க மறுக்கின்றனர், அது ஏனோ ! தங்கத்தினை காட்டிலும், வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறைக்கு தேவை. குறிப்பாக எலக்ட்ரிக் வாகன பேட்டரி தயாரிப்பு, சோலார் பேனல், மருத்துவம், மின்னணுப் பொருட்கள், ரசாயனம், நிழற் படக்கலை(Photography), நீர் சுத்திகரிப்பு, அச்சிடுதல் என பல துறைகளுக்கு வெள்ளியின் தேவை உள்ளது. வெள்ளியை அப்படியே வாங்காவிட்டாலும், முதலீட்டு நோக்கத்தில் சில்வர் இ.டி.எப்.(Silver ETF) அல்லது சில்வர் மியூச்சுவல் பண்டுகள்(Silver Funds) முறையில் வாங்கலாம்.

Asset class returns in India - 30 Yrs Data Since 1994

உங்களின் நிரந்தர பகைவன்:

நாட்டின் பணவீக்கத்தை பொறுத்தவரை 1998 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 15 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து காணப்படுகிறது. குறைந்தபட்ச விலைவாசியாக கடந்த 1999ம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த வருடத்தில் தான் சென்செக்ஸ் மற்றும் நிப்டி-500 குறியீடுகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் பணவீக்க விகிதம் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக காணப்பட்டாலும், உணவுப்பொருட்களின் விலை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் நாட்டின் பணவீக்க விகிதம் சராசரியாக 6 முதல் 7 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

ரியல் எஸ்டேட் முதலீட்டு வருவாய்:

ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனைத் துறையில் முதலீடு, கடந்த 20 வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 8.40 சதவீத வளர்ச்சியை அளித்துள்ளது. வீட்டுமனைத் துறைக்கான முதலீட்டு வருவாய் தரவுகள் பெரும்பாலும் மெட்ரோ நகரங்களை கொண்டு கணக்கிடப்பட்டவை. கொல்கத்தா போன்ற நகரங்களில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வருவாய் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. ரியல் எஸ்டேட் துறைக்கு மோசமான காலக்கட்டங்களாக 2008ம் ஆண்டும், 2020ம் ஆண்டும் இருந்துள்ளது. 

ரியல் எஸ்டேட் துறையில் பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் நிலம், வீடு வாங்கலாம் என்ற போதிலும் ஒரு முதலீட்டுச் சாதனமாக அணுகும் போது, அத்துறையில் ஒழுங்குமுறை மற்றும் கொள்கைகள், விலை நிர்ணயம், தொழில்நுட்பங்களை புகுத்துதல் ஆகியவை குறைகளாகவும், அவற்றை நிர்வகிப்பது சவால்களாகவும் இருந்து வந்தது (கணக்கில் காட்டப்படாத பணமும், வரி ஏய்ப்பும் அப்புறம்). இதன் காரணமாகவே பெரிய முதலீட்டாளர்களும், பெரு நிறுவனங்களும் REIT மூலம் முதலீட்டை மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இன்னும் ரெய்ட் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக பரப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கு(Retail Investors) கட்டிடத்துடன் கூடிய முதலீட்டை காட்டிலும் பெரும்பாலும் மனை(நிலம்) தான் பல மடங்கு வருவாயை நீண்டகாலத்தில் தந்துள்ளது. வீட்டு வாடகை மூலம் கிடைக்கப்பெறுகிற வருவாய், வங்கி வட்டி விகிதத்தை காட்டிலும் குறைவாக காணப்படுவதாக துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகினறனர். இதன் காரணமாகத் தான் வீட்டு கட்டிடம் தேய்மானமாகவும், நிலம் வருவாய் அளிக்கும் வாய்ப்பாகவும் சொத்து மதிப்பீட்டு அளவில் பார்க்கப்படுகிறது(வணிகக் கட்டிடங்களுக்கு இது விதிவிலக்கு).

வங்கியில் உங்கள் பணம்:

வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம், கடந்த 30 வருடங்களில் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டுள்ளது. 1994ம் ஆண்டில் 10 சதவீதமாக இருந்த நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக 1996ம் ஆண்டு, இது 12 சதவீதமாக இருந்துள்ளது. அப்போதைய நாட்டின் பணவீக்கமும் 9.50 சதவீதத்திலிருந்து 10.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. பின்னர் 2004ம் ஆண்டு வாக்கில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 5.40 சதவீதமாக இருந்துள்ளது(பணவீக்கம் 3.80%). 2009ம் ஆண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 15 சதவீதமாக உயர்ந்த நிலையில், அப்போதைய வட்டி விகிதம் 9.30 சதவீதம். பின்னர் 2012ம் ஆண்டு வாக்கில் 8.80 சதவீதமாக வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் இருந்த நிலையில், அப்போதைய பணவீக்க விகிதம் 11.20%.

நடப்பில் வங்கிகளில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் 7.5 சதவீதத்திற்கும் குறைவே. அதே போன்று நாட்டின் பணவீக்கமும் தற்போது 6 சதவீதத்திற்குள் இருந்து வருகிறது. பொதுவாக அரசின் கடன் வாங்கும் கொள்கைகள் மற்றும் விலைவாசியை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் மாறுபடும். கடந்த சில வருடங்களாக அன்னிய முதலீடு அதிகரித்து வரும் நிலையில், வங்கி கொள்கைகள் மூலம் அரசின் கடன் வாங்கும் தன்மையும் குறைந்து வருகிறது. ஜப்பானும், அமெரிக்காவும் ஒரு சதவீதத்திற்கும், இரண்டு சதவீத வருவாய்க்கும் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கும் போது, அரசு ஏன் மக்களிடம் வங்கி மூலம் அதிக வட்டிக்கு கடன் வாங்கப் போகிறது ?

ஓய்வுக்கால வைப்பு நிதித்திட்டம்:

பொது வருங்கால வைப்பு நிதியை(Public Provident Fund – PPF) பொறுத்தவரை, கடந்த 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை நிலையாக 12 சதவீத வட்டி வருவாய் கிடைத்த நிலையில் 2003ம் ஆண்டுக்கு பிறகு 8 சதவீதத்திற்கு கீழ் சரிந்தது. நடப்பில் 7.5 சதவீதத்திற்கும் குறைவாகவே வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கப்பெறுகிறது. எனினும் இது போன்ற திட்டங்கள், பெரும்பாலும் ஓய்வூதியக் காலத்திற்கு தேவையான தொகையாகவே இருக்கும். அப்படியிருக்கும் பி.எப். திட்டத்தை போல என்.பி.எஸ்.(NPS), ஓய்வுக்கால மியூச்சுவல் பண்டு(Retirement Funds) திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வரிச் சேமிப்பு மட்டுமில்லாமல் ஓய்வுக்காலத்திற்கு தேவையான கார்பஸ் தொகையையும் சற்று அதிகரிக்கச் செய்யலாம். இதன் மூலம் விலைவாசிக்கு ஏற்றாற் போல ஓய்வூதியமும் கிடைக்கும்.

மேலே சொன்ன பல்வகையான முதலீட்டுச் சாதனங்களை காணும் போது, பங்குச்சந்தை முதலீட்டின் மூலமான வருவாய் முதலிடத்தையும், அதற்கடுத்தாற் போல் இரண்டாமிடத்தில் தங்கமும் உள்ளது கவனிக்கத்தக்கது. வெள்ளி மற்றும் ரியல் எஸ்டேட் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 1994ம் ஆண்டு முதல் வருடந்தோறும் 50,000 ரூபாயை இன்று வரை முதலீடாக மேற்கொண்டிருந்தால், உங்களுக்கு பங்கு முதலீட்டின் மூலம் 15 மடங்குகளிலும், தங்கத்தின் மூலம் 8 மடங்குகளிலும், வெள்ளியின் மூலம் 6 மடங்குகளிலும் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் 4.5 மடங்குகளிலும் வருவாய் கிடைத்திருக்கும். 

நீங்கள் செய்யவில்லையென்றால், வேறொருவர்…

என்ன தான் நாம் நம் பணத்தை ஆயுள் காப்பீட்டிலும்(Insurance), வங்கி டெபாசிட்டிலும் பாதுகாப்புக் கருதி செய்தாலும், மீண்டும் அந்த பணம் அதிக வருமானமீட்டும் பங்குகளைத் தான் தேடிச் செல்லும். ஆனால் நமக்குக் கிடைப்பதோ பாதுகாப்பான(நம்பிக்கையில் மட்டுமே) சொற்ப வருமானமே.  இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பற்றி சொல்லலாம். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 52 லட்சம் கோடி ரூபாய். எல்.ஐ.சி. நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாத பெரு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இல்லை என சொல்லலாம். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையில் ஒரு குறிப்பிட்டத் தொகை பங்குச்சந்தைக்கு, ஈட்டும் அபரிதமான லாபமோ இந்நிறுவனத்திற்கு. முடிவில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான காப்பீடும் சிறு போனஸ் தொகையும். 

உங்களால் பங்குச்சந்தையை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். இல்லையெனில் தகுந்த ஆலோசகரின் முன்னிலையில் அல்லது பரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் சந்தை அபாயத்தையும், உங்களது பயத்தையும் குறைக்கலாம். ஆனால் ரிஸ்க் என்பதை நாம் முழுவதும் தவிர்க்க முடியாது. இன்று பங்குச்சந்தை ரிஸ்க்கை பரவலாக்க மற்றும் நல்ல வருவாய் ஈட்ட இண்டெக்ஸ் பண்டுகளும்(Index Funds) உள்ளன. வெறுமென பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த வட்டி வருவாய், பணவீக்க விகிதம், இலக்கிற்கான தொகையை அடைய முடியாமல் போவதற்கு சற்று ரிஸ்க் எடுத்துத் தான் பார்க்கலாமே(அறிவார்ந்த – Calculated Risk) ! 

“எண்ணற்ற வழியில் எனக்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது, நேர்மையாக அரசுக்கு வரி செலுத்தி அதற்கான வரித்தாக்கலும் செய்து வருகிறேன், தலைமுறை கடந்த சொத்துக்களும் எனக்கு இருக்கிறதென்றால்” நீங்கள் பணவீக்கத்தையும், பங்குச்சந்தை வருவாயைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக பங்குச்சந்தையில் உங்களது நிறுவனத்தை பட்டியலிட முனையலாம். “ மாதந்தோறும் போதுமான ஓய்வூதியத் தொகையை பெற்று நிம்மதியாக உள்ளேன். யாருக்காகவும் நான் சேமிக்க வேண்டிய அவசியமில்லை, என்னை நம்பி யாரும் நிதி சார்ந்து இல்லை ” என்றால் நீங்கள் மேலே சொன்ன முதலீட்டு வருவாயைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை(பணவீக்கத்தை கவனத்தில் கொள்க).

“ நீங்கள் கற்றுக் கொள்ளா விட்டால், விழிப்புணர்வை பெறா விட்டால் உங்கள் பணத்தைக் கொண்டு மற்றொருவர் தனது அறிவின் மூலம் பத்தும் செய்வார் “. – பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதன் விதி இது தான் !

தரவுப்பட பகிர்வுக்கு நன்றி(Data Table Courtesy): செல்வி. வித்யாஸ்ரீ – வாடிக்கையாளர் சேவை மேலாளர், (ஆதித்யா பிர்லா சன்லைப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம்(ABSL AMC))

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

IPO(Initial Public Offer) Performance in the Indian Stock Market Since 2014

 

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில், டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையும், பங்குச்சந்தையில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களின் வரவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களாக பங்குச்சந்தையில் முதன்மைச் சந்தையான ஐ.பி.ஓ. வெளியீட்டில் ஆர்வம் காட்டும் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. இதற்கு சந்தை பெரிய அளவிலான இறக்கத்தை காணாமல் இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது.

நாட்டின் பங்குச்சந்தையில் பிரதான சந்தைகளாக மும்பை பங்குச்சந்தையும்(BSE), தேசிய பங்குச்சந்தையும்(NSE) உள்ளது. 1875ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தையில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொதுவெளியில் பட்டியலிடப்பட்டுள்ளது. இச்சந்தையின் மதிப்பு  சுமார் 5.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் 467 லட்சம் கோடி). 1992ம் ஆண்டில் துவங்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 463 லட்சம் கோடி(5.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்).

தேசிய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக நிப்டி50ம், மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக சென்செக்ஸ் உள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பட்டியலிட எஸ்.எம்.இ.(SME IPO) சந்தைகளும் கவனிக்கத்தக்கது. 

பொதுவாக ஐ.பி.ஓ.(Initial Public Offering) எனப்படும் முதன்மைச் சந்தையில் பட்டியலிட உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலைச் சந்தையில்(Secondary Market) தான் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது என முழு வணிகமும் நடைபெறும். 

ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்து லாபமீட்டலாமா ?

நடப்பாண்டில் இதுவரை 252 நிறுவனங்கள்(எஸ்.எம்.இ. உட்பட) இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ. முதலீட்டின் மூலம் திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ.70,667 கோடி. இதுவே பத்து வருடத்திற்கு முன்பு, அதாவது 2014ம் ஆண்டில் காணும் போது, 44 நிறுவனங்கள் சேர்த்து ரூ.1,494 கோடி முதலீடுகள் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

IPO Performance in India Since 2012 - 2024-sep

2012ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் அதிகபட்சமாக ஏற்றம் பெற்ற காலம், இந்த 2024ம் வருடம் தான். பட்டியலிடப்பட்ட நாளில் சராசரியாக சுமார் 47 சதவீத விலையேற்றத்தை பங்கு விலை பெற்றுள்ளது. 2019ம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களை தற்போது வரை வைத்திருந்தால், இது சராசரியாக 376 சதவீத வளர்ச்சியை தந்திருக்கும். எனினும், குறிப்பிட்ட பங்கின் விலையில் கிடைத்த வளர்ச்சியை இது சுட்டிக்காட்டவில்லை. 

கடந்த பத்து வருட காலத்தில் ஒரே ஆண்டில் அதிகபட்ச ஐ.பி.ஓ. நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதும் இதுவே முதன்முறை(2024ம் ஆண்டு). நடப்பாண்டு இன்னும் முடிவடையாத நிலையில், இதுவரை வெளியிடப்பட்ட 252 நிறுவனப் பங்குகளில் 229 நிறுவனப் பங்குகள், சந்தையில் வெளியிடப்பட்ட நாளன்று ஏற்றத்தில் துவங்கியுள்ளது. சொல்லப்பட்ட 252 நிறுவனங்கள் 70,667 கோடி ரூபாயை முதலீடாக திரட்டிய நிலையில், தற்போது அதன் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ.4 லட்சம் கோடி.

Mainboard IPOs in India Since 2007

 கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட சாக்சாப்ட் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட சாக்சாப்ட் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Saksoft Limited: Saksoft Group – Fundamental Analysis – Stocks

கடந்த 1931ம் ஆண்டு நாட்டின் தலைநகரான தில்லியில் (அட, 1911ம் ஆண்டு வரை நம்ம கல்கத்தா நகரம் தாங்க இந்தியாவின் தலைநகரம் !) பிறந்தவர் தான் திரு. அவ்தார் கிருஷ்ணா. இந்தியாவில் இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்த இவர், ஐக்கிய ராச்சியத்திற்கு(United Kingdom) சென்று உலோக வார்ப்பு சார்ந்த துறையில் தனது பயிற்சியை முடித்தார். பின்னர் இந்தியாவிற்கு திரும்பிய இவர், துர்காபூர் எஃகு ஆலை அமைப்பதற்கான குழுவில் இடம் பெற்றார்.

எஃகு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நாம் தொழில்முனைவை நோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கியது தான் சாக்சாப்ட் குழுமத்தின் முதல் படி. 1962ம் ஆண்டு வாக்கில் சாக் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனது நிறுவனத்தை ஏற்படுத்தி, ஜெர்மனியின் ஃப்ரைட் க்ரூப்ஸ் உடன் இணைந்து கார்பைடு வெட்டும் கருவிகள் மற்றும் உலோகத்தை உருவாக்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டார். பின்னர் இந்த துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் சாக் இண்டஸ்ட்ரீஸ் வலம் வந்தது.

இன்று சாக்சாப்ட் குழுமத்தில் சாக்சாப்ட் டெக்னாலஜிஸ், சாக்சாப்ட் அப்ரைசீவ்ஸ், 360 லாஜிக்கா, அக்குமா, ட்ரீம் ஆர்பிட், டெராபாஸ்ட் நெட்ஒர்க்  என பத்துக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன. இது போக கல்வி மற்றும் மருத்துவத் துறையிலும் குறிப்பிடத்தக்க சேவைகளை இந்நிறுவன குழுமம் வழங்கி வருகிறது.    

சாக்சாப்ட் குழுமத்தின் ஒரு அங்கம் தான் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனம். கடந்த 1999ம் ஆண்டு திரு. அவ்தார் கிருஷ்ணா மற்றும் அவரது மகன் திரு. ஆதித்யா கிருஷ்ணா இருவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், நாட்டின் தகவல்தொழில்நுட்ப துறையின் நடுத்தர  / குறு நிறுவனங்கள் பிரிவில் உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை மையமாக கொண்ட நிறுவனங்களுக்கு தேவையான வணிக நுண்ணறிவு மற்றும் தகவல்தொழில்நுட்ப மேலாண்மை தீர்வுகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக மென்பொருள் பயன்பாடு மேம்பாடு, கிளவுட், மொபிலிட்டி, ஐஓடி(IoT) போன்ற பிரிவுகளில் தனது தகவல்தொழில்நுட்ப சேவைகளை இந்நிறுவனம் அளித்து வருகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் நிதி சார்ந்த பிரிவின் மூலம் 36 சதவீதமும், தொலைத்தொடர்பு பிரிவு 29 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தளவாட பிரிவு 13 சதவீத வருவாயை கொடுக்கிறது. 

Saksoft Ltd - Financial - Fundamental parameters

நிறுவனத்திற்கு சென்னையை தவிர்த்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க பிராந்தியம் என மொத்தம் 15 அலுவலகங்கள் உள்ளன. நிறுவனத்தின் வருவாயில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 72 சதவீதம்.

சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3,060 கோடி ரூபாய். நிறுவனர்களின் பங்களிப்பு 67 சதவீதமாகவும், அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 3.53 சதவீதமாகவும் உள்ளது. 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 762 கோடி ரூபாயாக இருந்துள்ளது. செலவினம் ரூ.644 கோடியாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 17 சதவீதமாகவும் உள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.128 கோடியாகவும், நிகர லாபம் 96 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி 16 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 21 சதவீதமாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) 21 சதவீதமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை(D/E: 0.05 மடங்குகள்). வட்டி பாதுகாப்பு விகிதம் 31 மடங்குகளிலும், நிறுவனர்களின் சார்பில் பங்கு அடமானம் இல்லையென்பதும் கவனிக்கத்தக்கது.

மார்ச் 2024 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 495 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நடப்பாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் 201 கோடி ரூபாயை வருவாயாகவும், நிகர லாபமாக ரூ.26 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் தனது பங்கின் முகமதிப்பு விலையை(Face Value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைத்துள்ளது. இது போக, தற்போது நடப்பு வாரத்தில் போனஸ் பங்குகளை (நான்கு பங்குகளுக்கு ஒரு பங்கு) இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னை பெருங்குடியில் குளோபல் இன்போசிட்டி பூங்காவில் அமைந்துள்ளது. இந்தியாவில் ஏழு அலுவலகங்களும், அமெரிக்காவில் ஐந்தும், இங்கிலாந்தில் இரண்டு மற்றும் சிங்கப்பூரில் இரு அலுவலகங்களையும் நிறுவனம் கொண்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

ஜிஆர்பி லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஜிஆர்பி லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

GRP Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1974ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட ஜிஆர்பி லிமிடெட்(Gujarat Reclaim & Rubber Products Ltd), பயன்படுத்தப்பட்ட டயர்களிலிருந்து ரப்பரை மீட்டெடுக்கும் பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இது போக நைலான் கழிவுகளில் இருந்த எடுக்கப்படும் பொருட்கள், பாலிமர் கலவை, மறுபயன்படுத்தப்பட்ட பாலியோல்ஃபின்ஸ், பொறியியல் பிளாஸ்டிக்குகள் மற்றும் டை (Custom Die Forms) படிவங்கள் என தனது தொழிலை விரிவாக்கம் செய்துள்ளது.

நிறுவனத்தின் பாலிமர் கலவை நூறு சதவீத மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மரப்பொருட்களை விட வலுவாக மற்றும் நீடித்தவையாகவும் உள்ளன. இந்த தயாரிப்புகள் பெரும்பாலும் கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு, விமானப் போக்குவரத்து, கடல், தொழிற்துறை மற்றும் விவசாயத்துறைக்கு பயன்படுகிறது.

நிறுவனத்தின் பொறியியல் பிளாஸ்டிக் பிரிவு, வாகனத் துறைக்கு தேவையான உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாடுகளுக்கு உதவுகிறது. பாலியோல்ஃபின்ஸ் பிரிவு பெயிண்ட், எண்ணெய் மற்றும் வாகனப் பேட்டரி உறைகளுக்கு பயன்படுகிறது. டை படிவங்கள் பிரிவு வாகனங்களுக்கு தேவையான கதவு விரிப்புகள், இணைப்பு பாய்கள், தொழிற்துறை பாய்கள் மற்றும் கப்பல்துறைக்கு தேவையான பம்பர்களுக்கு பயன்படுகிறது. 

உலகளாவிய பாலிமர் துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்நிறுவனத்தின் தயாரிப்பு பயன்படுகிறது. ஜிஆர்பி லிமிடெட் ஆண்டுக்கு சுமார் 81,200 மெட்ரிக் டன்களை கையாளும் திறன் கொண்ட ஏழு உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் நிறுவியுள்ளது. இதன் சேவைகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலும், 400க்கும் அதிகமான மதிப்புமிக்க வாடிக்கையாளர்களையும் நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக குட்இயர், பிரிட்ஜ்ஸ்டோன், சியட், அப்பல்லோ டயர், பிர்லா டயர், எம்ஆர்எப், யோகோகமா, பிரேலி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. டயர் உற்பத்தி துறையில் உலகின் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள், ஜிஆர்பி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிறுவனத்தின் மொத்த வருவாயில் டயர்களிலிருந்து மீட்டெடுக்கப்படும் ரப்பர் பிரிவின் பங்களிப்பு மட்டும் 94 சதவீதமாகும். நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஏற்றுமதி பங்களிப்பு மட்டும் சுமார் 70 சதவீதமாகும். மீட்டெடுக்கப்படும் ரப்பர் பிரிவில் நாட்டின் 18 சதவீத பங்களிப்பையும், ஏற்றுமதியில் நாட்டின் 40 சதவீத பங்களிப்பையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.  

2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 461 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.411 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 11 சதவீதமாகவும், வரிக்கு முந்தைய லாபம் 30 கோடி ரூபாயாகவும் உள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 23 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாகவும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.68 மடங்கு என்ற அளவில் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 5.5 மடங்குகளிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1,251 என்ற விலையிலும் உள்ளது. நிறுவனத்தின் பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் சராசரியாக 7 சதவீதமாக இருக்கிறது.

நிறுவனர்களின் பங்களிப்பு 40 சதவீதமாகவும், பிற பொது முதலீட்டாளர்களின் பங்கு 60 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பில் 0.19 சதவீதம் என்ற அளவில் பங்கு அடமானம் உள்ளது. 2024ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 165 கோடி ரூபாயாக உள்ளது. நிறுவனத்தின் கடன்களில் குறுகிய கால கடன் ரூ.91 கோடியாகவும், நீண்டகால கடன் 22 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) ஒவ்வொரு ஆண்டும் சீராக வந்துள்ளது. அதே வேளையில் கடந்த சில வருடங்களாக நிறுவனம் அசையா சொத்துக்களில்(Fixed Assets) குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்து வருகிறது. 2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனம் ஒரு பங்குக்கு ஈட்டிய வருவாய் ரூ.170 (Earning per Share) ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.15,770 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. 

கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 300 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த 52 வார குறைந்தபட்ச விலை 3,417 ரூபாயாகவும், அதிகபட்ச விலை பங்கு ஒன்றுக்கு ரூ.16,746 ஆகவும் இருந்துள்ளது. தற்போது நிறுவனம் பங்கு ஒன்றுக்கு மூன்று பங்குகளை போனசாக(Bonus issue) வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான பதிவு நாள் வரக்கூடிய ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர்களாக (பட்டியலிடப்பட்ட) எல்ஜி ரப்பர் கம்பெனி, இன்டாக் ரப்பர், ஆப்கோடெக்ஸ், மகாலட்சுமி ரப்டெக் மற்றும் இன்னபிற நிறுவனங்கள் உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி 

TCS reported a Net Profit of Rs.12,105 Crore – Q1FY25

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய நிறுவனமாகவும், டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமுமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் 2024-25ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 62,613 கோடி ரூபாயாகவும், செலவினம் 45,951 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) 27 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக 962 கோடி ரூபாயை சொல்லியிருந்த இந்நிறுவனம் முதலாம் காலாண்டின் முடிவில் ரூ.12,105 கோடியை நிகர லாப ஈட்டியுள்ளது. BFSI பிரிவில் 23,074 கோடி ரூபாயையும், உற்பத்தி பிரிவில் 6,271 கோடி ரூபாயையும், நுகர்வோர் தொழிற் பிரிவில் ரூ.9,991 கோடியையும் வருவாயாக பெற்றுள்ளது. தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.10,794 கோடி மற்றும் மருத்துவப் பிரிவில் 6,909 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் வட அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு ரூ. 15.14 லட்சம் கோடி. நாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனம் டி.சி.எஸ். ஆகும். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) 90,127 கோடி ரூபாய். 

நிறுவனத்தின் கூட்டு வருவாய் வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்களிப்பு 4.86 சதவீதமாகவும் உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 82 மடங்குகளில் இருந்துள்ளது.

நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு மட்டும் சுமார் 13.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக கூகுள், அமேசான், அடோப், இன்டெல், ஆப்பிள், ஆரக்கிள், ஐபிஎம், பாஸ்ச் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை டி.சி.எஸ். நிறுவனத்திற்கு செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 50. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் சராசரியாக 43.8 சதவீதமாக உள்ளது. 

டி.சி.எஸ். நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இதுவரை மூன்று முறை ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. பங்குகளை திரும்பப் பெறும்(Buyback of Shares) செயல்பாடுகளை ஐந்து முறை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி: 8.2 சதவீதம்

2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி: 8.2 சதவீதம் 

India’s Economic growth in the Financial year 2023-24: 8.2 Percent

2020-21ம் நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிகழ்வால் அப்போது நாட்டின் பொருளாதாரம் (-5.8) சதவீத வீழ்ச்சியை கண்டிருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தேவைக்கும்-உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்து சுணக்கத்தில் இருந்த பொருளாதாரம் மீண்டெழுந்து 2021-22ம் நிதியாண்டில் 9.7 சதவீதமாக சொல்லப்பட்டது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 7 சதவீத வளர்ச்சியை கண்டிருந்த நிலையில், கடந்த 2023-24ம் நிதியாண்டில் 8.2 சதவீதமாக தற்போது சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக உலகளவில் காணப்பட்ட பொருளாதார ஏற்ற-இறக்கம், போர் பதற்ற சூழ்நிலை மற்றும் கட்டுக்குள் அடங்காத விலைவாசி விகிதம் ஆகிய நிகழ்வுகள் இருப்பினும் அரசுக்கான வரி வருவாய் உயர்ந்து வருவதன் காரணமாக தற்போதைய பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமாகியுள்ளது.

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(CPI Inflation), கடந்த ஒரு வருடத்தில் சராசரியாக 5 முதல் 6 சதவீதம் வரை என்ற அளவில் இருந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்திற்கான இலக்கும் 4 – 6 சதவீதம் என்ற அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச அளவாக கடந்தாண்டு ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமும், குறைந்த அளவாக மே 2023 காலத்தில் 4.31 சதவீதமுமாக பணவீக்க விகிதம் இருந்துள்ளது.

2023-24ம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) மூலம் அரசு ஈட்டிய வருவாய் 20.18 லட்சம் கோடி ரூபாய். இந்த வருவாய், இதற்கு முந்தைய ஆண்டுடன்(2022-23) ஒப்பிடுகையில் 11.70 சதவீத வருவாய் வளர்ச்சியாகும். சொல்லப்பட்ட நிதியாண்டில் மாத சராசரி ஜி.எஸ்.டி. வருவாய் 1.68 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.

ஈட்டப்பட்ட வருவாயில் மத்திய பங்களிப்பு 3.76 லட்சம் கோடி ரூபாயாகவும், மாநில பங்களிப்பு 4.71 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் பங்களிப்பு ரூ.10.27 லட்சம் கோடியாகவும், செஸ்(CESS) வரி வருவாய் பங்களிப்பு ரூ.1.45 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது.

கடந்த 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சந்தை எதிர்பார்த்த அளவினை காட்டிலும் கூடுதலாக வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும் விவசாயத்துறையின் வளர்ச்சி பங்களிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தேசிய புள்ளியியல் அலுவலகம்(NSO) முன்னர், 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிட்டிருந்தது.

பெரும்பாலான அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிட்டிருந்த அளவுகளை காட்டிலும், தற்போது சொல்லப்பட்ட வளர்ச்சி அதிகமான இடைவெளியை ஏற்படுத்தியதற்கு காரணமாக உயர்ந்து வரும் ஜி.எஸ்.டி. வருவாயாக இருக்கலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு மட்டும் 60 சதவீதத்திற்கு மேலாகவும், விவசாயத்துறை 12 சதவீத பங்களிப்பையும் மற்றும் உற்பத்தித் துறை 15 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. 12 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டிருக்கும் விவசாயத்துறை நாட்டின் 50 சதவீத வேலை வாய்ப்பை அளித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

  

  

கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் – நிதி அறிக்கை: 2023-24 சுருக்கம்

கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் – நிதி அறிக்கை: 2023-24 சுருக்கம் 

Financial Highlights of Kothari Petrochemicals Ltd – FY 2023-24

சென்னை – நுங்கம்பாக்கத்தில் தனது தலைமையகத்தை கொண்டு தொழில் புரிந்து வரும் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம் சமீபத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டிருந்தது. நாட்டின் பிரபல HCK (HC Kothari Group) குழுமத்தின் துணை நிறுவனம் தான் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ். 1990களில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் எரிபொருள் சேர்க்கை, ரப்பர் உற்பத்தி, கிரீஸ், பி.வி.சி. குழாய் மற்றும் மாஸ்டர் பேட்ச் கலவை ஆகியவற்றுக்கு தேவையான உயர்தர மற்றும் நடுத்தர மூலக்கூறுகளை(Poly Isobutylene) தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மூலக்கூறுகள் பொதுவாக மடிப்பு ஓட்டும் தன்மை, நீர்க்கசிவு தன்மையை களைய, பாகுத்தன்மையை மேம்படுத்த மற்றும் சிறந்த மின் காப்பாகவும் பயன்படுகிறது. உட்கட்டமைப்பு, வாகனங்கள், பேக்கேஜிங், எரிபொருள், உலோகம், பசை மற்றும் ரப்பர் துறைகளுக்கு இவை பயன்படுத்தப்படுகிறது.

நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சென்னை – மணலியில் சுமார் 10,000 சதுர அடியில் உற்பத்திக்கு தேவையான வசதிகளுடன் 36,000 TPA திறன் கொண்டு இயங்கி வருகிறது. உரிமம் பெற்ற திறன் அடிப்படையில் 100 சதவீத திறன் உற்பத்தி பயன்படுத்தப்பட்டு வருவதாக நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக லூப்ரிசோல் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், சிங்கப்பூரின் இன்பைனம் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.  

நிறுவனத்தின் பொருட்கள், 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய பசிபிக், தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவை. பாலி ஐசோபூடலைன் மூலக்கூறுகளின் தேவையும்(பல்வேறு பயன்பாடுகளுக்கு) சொல்லப்பட்ட நாடுகளில் அதிகமாக உள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ.603 கோடியாகவும், செலவினம் 507 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 16 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. இது கடந்த 10 வருட காலத்தில் இல்லாத வளர்ச்சியாகும். இதர வருவாயாக ரூ.8 கோடியும், வரிக்கு முந்தைய லாபம் 95 கோடி ரூபாயாகவும் உள்ளது.

சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம், 64 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை காணுகையில், கடந்த 10 ஆண்டுகளில் விற்பனை சராசரியாக 6 சதவீதமும், லாபம் சராசரியாக 23 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமாகவும், 10 வருட காலத்தில் 21 சதவீதமாகவும் உள்ளது.

2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்திற்கு கடன் எதுவுமில்லை. ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 12 கோடி ரூபாயை கொண்டுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 187 கோடி ரூபாயாக உள்ளது. பணவரத்து பொறுத்தவரை, நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதனை சரியாக கையாண்டு வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் ரூ.15.56 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களில் முதலீடு செய்துள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 71 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 42 ரூபாய் என்ற அளவிலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 81 மடங்குகளிலும் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 130 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

  

 

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

Can Govt. Employees participate in the Stock(Share) Market ? (CCS Rules, 1964)

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் டீமேட் கணக்கு துவங்கி, பங்குகளில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யலாமா என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கேள்வி. நமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் இது சார்ந்த சந்தேகத்தை கேட்டிருந்தனர். இது சார்ந்த விதிகளை பற்றி மத்திய சிவில் சேவைகள் (நடத்தை), 1964 – Central Civil Services(Conduct) Rules, 1964 ஆவணத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சேவைகள்(நடத்தை), 1964 ஆவணத்தில் வரிசை எண்.21, விதி எண்.16ன் கீழ், முதலீடு, கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் பகுதியில் 35(1) மூலம் அரசு ஊழியர்கள் முதலீடு சார்ந்த விஷயங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கூறப்பட்டுள்ளது.

“ 35(1) எந்தவொரு பங்கு, பங்கு சார்ந்த அல்லது மற்ற முதலீட்டில் எந்த ஒரு அரசு ஊழியரும் ஊகம்(Speculative) சார்ந்த வணிகத்தில் ஈடுபடக் கூடாது. இந்த துணை விதியில் உள்ள பங்கு மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு இது பொருந்தாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில் எந்தவொரு அரசு ஊழியரும் பங்குகளிலோ அல்லது மற்ற முதலீடுகளிலோ ஊகம் சார்ந்த, அதாவது நாள் வர்த்தகம், ஊக வணிகம்(Speculative Trading & Derivatives) போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்போது முதலீடாக செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தரகர்(Stock Broker) அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் தான் அவர்களது முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஊகம் என்பது அடிக்கடி பங்குகள் அல்லது மற்ற முதலீடுகளை வாங்கி அடிக்கடி விற்பது என்பதாக கருதப்படுகிறது. 

“40(2) (i) எந்தவொரு அரசு ஊழியரும் அவருடைய குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரையும் அவர் சார்பாகவோ அல்லது குடும்பத்தின் நலன் சார்பாகவோ ஊக வர்த்தகத்தில் ஈடுபட வைக்கக் கூடாது மற்றும் அனுமதிக்க கூடாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில், அரசு ஊழியர்கள் தங்கள் சார்பாகவோ அல்லது மற்றவரின் நலனுக்காகவோ, தங்களது குடும்ப நபர்களை பங்குச்சந்தையில் மற்றும் பிற முதலீட்டில் ஊக வணிகம்(Day Trading & Derivatives) செய்ய அனுமதிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. 

ஐ.பி.ஓ(IPO – Initial Public Offering) போன்ற முதன்மை சந்தையில் அரசு ஊழியர்கள் ஈடுபடலாம் எனவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த ஐ.பி.ஓ. வெளியீட்டின் போது அவர்கள் முதலீட்டாளராக பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு பங்குகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனுமதியில்லை(Decision making process of Fixation of price) எனவும் சொல்லப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐ.பி.ஓ. வெளியீட்டில் முதலீடு செய்த பின்பு, இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) கிடைத்த லாபத்தை பங்கு வெளியீட்டு நாளன்று எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான அரசு வேலைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்(Discharge of his official duties) எனவும், மக்களிடம் பெறப்பட்ட அரசு வரி வருவாய் மூலம் அவர்களுக்கான ஊதியம் செலுத்தப்படுவதால், இது போன்ற ஊக வணிகத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாதென விளக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தையில் அரசு ஊழியர்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்வதை தான் அரசு அறிவுறுத்துகிறது.

மேலும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கிகளில் டெபாசிட் செய்தல், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தல், மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுத்தல் போன்றவற்றிற்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளது.

Central Civil Services(Conduct) Rules, 1964 பற்றி அறிய…

Central Civil Services(Conduct) Rules, 1964

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

Understanding about Stress Test Methodology – Mutual Funds Investments

பொதுவாக, மருத்துவத் துறையில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) எனும் உடற்பயிற்சி அழுத்த சோதனை என்பது நமது உடல் செயல்பாடுகளின் போது, நமது இதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனை அளவிட உதவுகிறது. உதாரணமாக ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிற உடலியக்கம் சார்ந்த வேலைகளை செய்தல் அல்லது ட்ரெட் மில்(TMT) பரிசோதனை செய்யும் போது இதயத்தின் நிலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் அறியலாம். இந்த டெஸ்ட் முறை ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு மற்றும் பிற இதயம் சார்ந்த பிரச்சனைகளை அறிய உதவுகிறது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவரும் நமக்கு இதய நிலைக்கான சிகிச்சைகளை வழங்குவார்.

இதுவே முதலீட்டில் காணும் போது, ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் உள்ள சொத்துக்களில் காணப்படும் பணப்புழக்கத்தை(Liquidity) மதிப்பிடுவதற்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் உதவுகிறது. முக்கியமாக பொருளாதார மந்தநிலையின் போது அல்லது பங்குச்சந்தை அதிகமாக சரியும் காலங்களில் இந்த முறை பயன்படுகிறது. சொல்லப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் வெளியேறுவதற்கான காலத்தை இது குறிக்கிறது. 

பொதுவாக சந்தை சரியும் காலங்கள், கொரோனா பெருந்தொற்று காலங்களில் முதலீட்டாளர்கள் அச்சத்தில் அல்லது தேவைக்காக அதிக பணத்தை ஒரு குறிப்பிட்ட திட்டத்திலிருந்து எடுக்கும் போது, அத்திட்டத்தில் பணப்புழக்கம்(போதுமானதாக) எவ்வாறு உள்ளது, பெரும்பாலானோர் எளிதாக தங்களது பணத்தை பெற முடிகிறதா, இதனை பண்டு மேலாளர் எவ்வாறு கையாள்கிறார், அவ்வாறு பணம் வெளியேறும் சூழ்நிலையில் அத்திட்டம் மேற்கொண்டு எந்தவித பெரிய சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளதா என்பதனை அறிய இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பயன்படுகிறது.

இது போன்ற செயல்முறை பொதுவாக, ‘வருமுன் காப்பது நலம்’ என்ற சிந்தனையை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையை தான் தற்போது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும்(SEBI), அதனை சார்ந்த ஆம்ப்பையும்(AMFI) இணைந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்பது ஒன்றும் புதிய முறையல்ல. இது பொதுவாக நிதித்துறையில், குறிப்பாக வங்கிகளில் அதன் திறனை மதிப்பிட செயல்படுத்தப்படும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோர் ஏதேனும் காரணத்தால் ஒரே காலத்தில் அதிக பணத்தை வெளியே எடுக்கும் போது, வங்கி திவாலாகாமல் செயல்படுத்தக் கூடிய நிலைகளை அல்லது வழிமுறைகளை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் பெறலாம்.

மியூச்சுவல் பண்டை பொறுத்தவரை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) கடன் பத்திரத் திட்டங்களுக்கு பல வருடங்களாக இருந்து வருகிறது கவனிக்கத்தக்கது. இதனை தான் நாம் பெரும்பாலும் Interest Rate Risk, Credit Rate Risk மற்றும் Liquidity Risk ஆகிய காரணிகளால் காண்கிறோம். உதாரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் நடந்த நிகழ்வை நாம் சொல்லலாம்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிறுவனம் திவாலாகாமல் தவிர்க்க, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தால் அதன் விளைவுகளை களைய, பங்குச்சந்தை ஒரே வாரத்தில் அதிக புள்ளிகள் சரிவை கண்டால் சமாளிக்க, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தல் என பொருளாதாரத்தில் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பகுப்பாய்வு தீர்வை அளிக்கும். 

உதாரணமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் எதிர்பாராவிதமாக இறக்க நேரிட்டால், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த இழப்பை எவ்வாறு சரி செய்வது, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சேர்த்து வைத்திருந்த பணத்தை முழுவதும் சிகிச்சைக்கு செலவழிக்காமல் இருக்க என்ன வழிகள் என நமது தனிநபர் நிதித்திட்டமிடலிலும் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் நிகழ்வை நாம் காணலாம்.

தற்போது செபி-ஆம்பையால்(SEBI-AMFI) சொல்லப்பட்ட விஷயம், ‘மியூச்சுவல் பண்டில் காணப்படும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Mid & Small Cap Funds) திட்டங்களில் ஏதேனும் காரணத்தால் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது முதலீட்டு பணத்தை கணிசமாக திரும்ப பெறுகையில், அத்திட்டத்தின் பணப்புழக்கம் எவ்வாறு இருக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் அத்திட்டத்தை மேற்கொண்டு நடத்த இயலுமா’ என்பதனை அறிய ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதத் தரவுகளின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட ஏற்கனவே ஆம்ப்பை கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த சோதனையை தொடரவும், அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட மிட் அல்லது ஸ்மால் கேப் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில்(AUM Portfolio) 25 சதவீதம் வரை பணம் வெளியே செல்ல எவ்வளவு நாட்கள் எடுக்கும், இதனைப் போல 50% வரை பணம் வெளியே செல்ல அதற்கு எடுக்கக்கூடிய காலம் எவ்வளவு என்பதனை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறை மூலம் செயல்படுத்தி அதன் முடிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். 

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மிட் கேப் திட்டத்திற்கு 50 சதவீதம் வரை பணம் வெளியேறுவதற்கு 27 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவே 25% வரை வெளியேறுவதற்கு 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மிட் கேப் பண்ட் பிரிவில் உள்ள மற்றொரு பண்டுக்கு இந்த வெளியேறும் நாட்கள் மாறுபடலாம். ஆக, விற்பனை ஏற்பட்டால் அவர்கள் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கிறார்கள் அல்லது பணப்புழக்கம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பரிசோதனை சொல்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனும் அழுத்த சோதனை, பொருளாதார அவசர காலங்களிலும், சந்தை அதிகமாக சரியும் நிலைகளில் மட்டுமே என கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அதற்காக இப்போது சந்தை சரியப்போகிறதா என கேட்க வேண்டாம். ஒரு வேளை நடந்தால் என்ன செய்வது என்பதற்கான பயிற்சி நிகழ்வு தான் இது. இதனால் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல உங்களது நிதி இலக்கை சார்ந்து முதலீட்டை நீண்டகாலத்தில் மேற்கொள்ளுதல் நலம்.

செபியும், ஆம்ப்பையும் ஏன் திடீரென்று தற்போது இந்த நிகழ்வை நடத்த சொல்கிறது ?

சிறு முதலீட்டாளர்களின் நலனை(முதலீடு) பாதுகாப்பதற்காக தான்.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான சந்தை அதிக ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதுவும் வரலாற்றில் காணாத ஏற்றமும், அதே வேளையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் குறைந்த வருவாய் வளர்ச்சியும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் நான்கு கோடிக்கும் குறைவான டீமேட் கணக்குகள் இருந்த நிலையில், இன்று சுமார் 14 கோடி டீமேட் கணக்குகள் மொத்தமாக உள்ளது. 

கடந்த இரண்டு முதல் மூன்று வருடமாக, இந்தியாவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், பெரு நிறுவனங்கள்(Large Cap) அளித்த முதலீட்டு வருவாயை காட்டிலும், மிகவும் அதிகமாக கொடுத்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு புதிதாக வரும் டீமேட் கணக்கு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், கடந்த ஒரு வருட, இரண்டு வருட(Past Performance) முதலீட்டு வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு இது போன்ற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக சந்தையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் பண்டுகள் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. அவை எந்தளவு ஏற்றம் கண்டிருக்கிறதோ, அதே போன்று இறக்கத்தையும் சந்திக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற நிகழ்வு லார்ஜ் கேப் பங்குகள் அல்லது பண்டு திட்டங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாகவே செபியும் முதலீட்டாளர்களை எச்சரிக்கும் வண்ணம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவை பங்கு சார்ந்த திட்டங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், குறிப்பிட்ட ஸ்மால் கேப் திட்டங்களில் புதிய முதலீடு பெறுவதை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 

பங்குச்சந்தையில் பொதுவாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதாவது வாங்கிய பங்குகளை அவ்வளவு எளிதாக விற்க முடியாது. இதனால் தான் பெரும்பாலான ஸ்மால் கேப் பங்குகளின் விலை ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக ஏற்றத்தை மட்டுமே கண்டிருந்தாலும், விற்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதே வேளையில் இந்த சிக்கல் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டு திட்டங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. காரணம், பண்ட் மேலாளரின் அணுகுமுறை தான். அவர் பெரும்பாலும் பணப்புழக்கம் உள்ள பங்குகளை தான் வாங்குவார். முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறும் வகையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை வடிவமைப்பதும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அவசியம்.

கடந்த பிப்ரவரி மாத ஆம்ப்பை(AMFI) முதலீட்டு தரவு அறிக்கையின் படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில்(Growth / Equity Oriented Schemes) சுமார் 12,00,77,704 கோடி ரூபாய் முதலீடாக வந்துள்ளது. இவற்றில் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு மட்டும் 3,23,80,735 கோடி ரூபாய். சொல்லப்பட்ட மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP) முதலீடு 19,187 கோடி ரூபாய். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தனிநபர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மட்டும் 60.30 சதவீதமாகும்.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர காலத்தில் ஹைபிரிட்(Hybrid) மற்றும் லார்ஜ் கேப் திட்டங்களிலும், நீண்ட காலத்தில் அஸெட் அலோகேஷன், மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் எஸ்.ஐ.பி(SIP) மற்றும் எஸ்.டி.பி.(STP) முறையில் முதலீடு செய்வது சிறந்தது. இங்கே நீண்டகாலம் என்பது குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகள் அல்லது உங்களது நீண்டகால நிதி இலக்கு. குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் முடிந்தளவு துறை சார்ந்த அல்லது தீமாட்டிக்(Thematic) பண்டு திட்டங்களை தவிர்ப்பது நல்லது. 

ஸ்ட்ரெஸ் டெஸ்ட் அறிக்கைகளை காண…

Disclosure of Stress Test & Liquidity Analysis  in respect of Mid Cap & Small Cap Funds

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

         

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

Market Trading hours of the Major Stock exchanges around the World

இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டு சுமார் 148 வருடங்கள் முடிந்தாகி விட்டது. கடந்த 1875ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை இன்று 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் சுமார் 366 லட்சம் கோடி – ஜனவரி 2024 தரவு) கொண்ட சந்தை மதிப்பாக உருவாகியுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

1992ம் ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின்(NSE) இன்றைய மதிப்பு 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 335 லட்சம் கோடி – டிசம்பர் 2023 தரவு). இச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 2,190. 

அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையை மதிப்பிடும் போது, ஒவ்வொரு 25 ஆண்டுகளில் இந்திய சந்தை நான்கு முறை கரடிப் பிடியில்(Bear Market) சிக்குவதாகவும், அமெரிக்க சந்தை போலவே இந்திய சந்தையிலும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கரடிச் சந்தையை முதலீட்டாளர்கள் சந்திப்பதாகவும் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிப்டி50 குறியீடு கடந்த 25 வருடங்களில் எட்டு முறை 20 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

2022-23ம் நிதியாண்டு தரவுப்படி உலகளவில் பங்குச்சந்தை பங்களிப்பு விகிதத்தை காணுகையில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு(Trading & Delivery) செய்கின்றனர். இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(UK) 33 சதவீதமாகவும், சீனாவில் 13 சதவீதமாகவும், பிரேசிலில் 2 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் இது 3 சதவீத பங்களிப்பாக உள்ளது. அதே வேளையில் இந்தியாவில் குடும்பங்கள் வாரியாக காணும் போது, இது 17 சதவீதமாக இருந்துள்ளது. 

இந்தியாவில் பங்குச்சந்தையில் ஈடுபடும் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவாக மற்றும் பரவலாக சொல்லப்படும் காரணி அதன் சந்தை வர்த்தக நேரம் தான். காலை ஒன்பது மணி முதல் மதியம் 03:30 மணி வரை. இந்த வேளையில் பெரும்பாலானோர் தங்களது நிறுவன வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இதுவே சந்தை பங்களிப்பு குறைவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், நம்ம நாட்டு பக்கத்துல இருக்கிற சீனாவின் பங்களிப்பு எப்படி அதிகரித்தது, அதன் வர்த்தக நேரம் தான் என்ன ?

(See Table below)

Market Trading Hours - Global Equity Markets

பொதுவாக அமெரிக்காவில் நிறுவன முதலீட்டாளர்களின்(Institutional Investors) பங்களிப்பு, பங்குச்சந்தையில் அதிகமாக இருக்கும். வல்லரசாக மட்டுமில்லாமல் வளர்ந்த பங்குச்சந்தையாகவும் அமெரிக்க சந்தை உள்ளது. இதன் காரணமாகவே நேரடி முதலீட்டாளர்களின் பங்களிப்பும், PMS, Hedge Fund மற்றும் Index Fund வாயிலாக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், அதன் மதிப்பும் அதிகம். இதுவே நம் நாட்டில் PMS மற்றும் Index Fund என்பது இன்னும் புது வரவாகவே இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தான் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களின் பங்களிப்பு(மியூச்சுவல் பண்டு மூலமாக) அதிகரித்து வருகிறது.

சீனாவை பொறுத்தவரை அந்நாட்டின் பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிதாக இணைப்பு இல்லை. சீனச் சந்தை, இந்திய சந்தையை காட்டிலும் அதிக மதிப்பை கொண்டிருந்தாலும் அங்கு பெரும்பாலும் அரசு கட்டுப்பாட்டில் தான் அவை இயங்கும். சந்தையும் உள்ளூர் முதலீட்டாளர்களை தான் அதிகமாக கொண்டிருக்கிறது. இது போல ஹாங்காங் சந்தையிலும் தொழில் வணிகர்கள் குறிப்பிடத்தக்க முதலீடு செய்திருந்தாலும் சீனச் சந்தை அமைப்பின் கீழ் தான் இயங்கி வருகிறது. 

சீன பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்குச்சந்தை பங்களிப்பு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே இந்தியாவில் பொருளாதாரத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது. சீனச் சந்தையில் பெரும்பாலும் அதன் அரசு கொள்கைகள் தான் ஆதிக்கம் செலுத்தும். இதுவே இந்தியாவில் சந்தை ஒதுக்கீடு பொறிமுறையில்(Market allocation mechanism) இயங்கும்.

பெரும்பான்மையான நாடுகளில் ஈர்க்கப்படும் முதலீடுகள் ETF(Exchange Traded Fund) அல்லது மியூச்சுவல் பண்டு வாயிலாக தான் வருகின்றன. ஆசியாவின் மிகப்பழமையான சந்தையாக இந்தியாவின் மும்பை பங்குச்சந்தை இருந்திருந்தாலும், இங்குள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, வேகமாக வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவே.   

இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பொதுவான காரணங்களாக நிதி சார்ந்த கல்வியறிவின்மை, பணப்பற்றாக்குறை, பாரம்பரிய முதலீடுகளை அதிகமாக சார்ந்திருப்பது(தங்கம், நிலம், வங்கி டெபாசிட்), பங்குச்சந்தையில் பொறுமையின்மை மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபமீட்ட எண்ணம், பாதுகாப்பான அணுகுமுறையை விரும்புதல் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த கடந்த கால அச்சம் ஆகியவை உள்ளது.

மேலே காணப்பட்ட வர்த்தக நேரப் பட்டியலின் முடிவில், உலகின் பெரும்பாலான சந்தைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகலில் மட்டுமே இயங்குகிறது. ‘வாரம் இருமுறை சந்தைக்கு விடுமுறை’ என்பதனை பெரும்பாலான சந்தைகள் அமெரிக்காவின் நகலாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

      

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

Investor awareness Arena

கடந்த சில வாரங்களாக நமது வாசகர்களும், சில வாடிக்கையாளர்களும் (குறிப்பாக நெருங்கிய நண்பர்களும்) தாங்கள் ஏற்கனவே நீண்டகாலத்திற்கு முதலீடு செய்திருந்த பண்டுகளை சந்தையில் உள்ள மற்ற பண்டுகளுடன் ஒப்பிட்டு, அந்த பண்டு கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் வருவாயை அளித்துள்ளது. நாம் ஏற்கனவே செய்துள்ள முதலீட்டை, இந்த பண்டில் மாற்றலாமே என கேட்கிறார்கள்.   

  • பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் போது, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும்பாலான பண்டுகள்(Mutual Funds) நிறைய வருவாயை கொடுக்கும். ஆனால், நீண்டகாலத்தில் இது சாத்தியமில்லை. 
  • ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பண்டுகள் ராஜநடை போடும். இதனை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தை பெற இயலாது.
  • பொதுவாக அதிக வருவாயை கொடுக்கும் பண்டுகள், பின்னொரு காலத்தில் சரிவை சந்திக்கும். எனவே எச்சரிக்கையுடன் நமது முதலீட்டு நோக்கம், நம் குழந்தைகளுக்கான மற்றும் சந்ததிக்கான செல்வத்தை சேர்க்க முயல வேண்டும் ! 
  • பண்டுகளை அடிக்கடி மாற்றுகையில் அதற்கான செலவினமும், வரியும் உண்டு. சிறுதுளி பெரு வெள்ளம் என்பதனை கவனத்தில் கொண்டு, நீண்டகாலத்தில் பொறுமையாக முதலீடு செய்வதே நன்று. 
  • பண்டுகளை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்வது அவசியம். பண்டுகளை மாற்ற வேண்டுமா, கூடுதலாக முதலீடு செய்யலாமா அல்லது இந்த பண்டில் முதலீட்டில் குறைக்கலாமா என்பதனை உங்களது நிதி ஆலோசகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கான வேலையை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கான குழப்பம் தீரும்.
  • எந்தவொரு ஆலோசகரின் உதவியின்றி நீங்களாவே பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய நினைத்தால், சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள் மற்றும் படிப்புகளை கற்பது அவசியம். கற்ற பின், முதலீடு செய்ய துவங்கலாம், தவறுகள் குறையலாம்.
  • பக்கத்து வீட்டுக்காரர் அந்த கார் மாடல் வைத்துள்ளார், எதிர் வீட்டுக்காரர் இந்த கைபேசி வைத்துள்ளார், மச்சான் இந்த பிரேஸ்லெட் அணிந்துள்ளார் என ஒவ்வொருடன் நாம் ஒப்பிட்டு கொண்டிருந்தால், நாம் நமக்கான இலக்கை அடைய முடியாது. நமக்கென்ன தேவை, நமக்கான நிதி இலக்குக்கான தொகை மற்றும் காலம் எவ்வளவு, அதனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் அவசியம். 
  • 11 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்த, திருவாளர் வாரன் பப்பெட்(Warren Buffett) அவர்கள் தனது 55 வயதிற்கு பின்னரே உலகளவில் பிரபலமானார். குறுகிய காலத்திலோ, குறுக்கு வழியிலோ யாரும் நிரந்தர செல்வங்களை முடியாது.  
  • இந்திய பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டை பொறுத்தவரையில் அடுத்த 20-30 வருடங்கள் மட்டுமே பிரகாசமான காலம்(பொருளாதாரம் சார்ந்து வாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கும் காலம்). அதற்கு பிறகு, உங்களுக்கு வங்கி வட்டி விகிதத்திற்கு மேல் ஒரு சதவீதம் கிடைத்தாலே பெருமை தான். இது தான் வல்லரசான அமெரிக்காவிலும், ஐக்கிய ராச்சியத்திலும், ஜப்பானிலும் நடந்துள்ளது.

முதலீட்டாளர், முதலீடு செய்யும் முன் கவனிக்க:

* முதலீடு செய்வதற்கான நோக்கம்(ஓய்வுக்கால நிதி, குழந்தைகளுக்கான கல்விச் செலவு, திருமணச்செலவு, வீடு கட்டுவது / வாங்குவது, வாகனம் வாங்குவது, சுற்றுலா, பிடித்த வேலையை செய்ய, தொழில் புரிய, அப்படி ஒண்ணுமில்லைங்க)

* முதலீடு செய்ய உள்ள தொகை 

* முதலீடு செய்யும் காலம் 

* எதிர்பார்க்கும் வருவாய் (கார்பஸ் தொகையை கணக்கிடுவது அவசியம்)

* மேலே சொல்லப்பட்டவைக்கான சரியான முதலீட்டு திட்டம் (முதலீட்டு ஆலோசகரின் உதவியுடன் அணுகுதல்)

நிதி சார்ந்த அக்கறையுடன், வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள்

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள் 

 

Football Field Analysis – Asset Valuation Techniques

பொருளாதாரவியலில் எந்தவொரு சொத்துக்கும் மதிப்பொன்று உள்ளது. முதலீட்டு மதிப்பீட்டின் மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் மதிப்பை நாம் அறியலாம். இதற்கென மதிப்பீட்டு பகுப்பாய்வு(Valuation Analysis) என்ற ஒரு அலகு உள்ளது. மதிப்பீட்டு பகுப்பாய்வு என்பது ஒரு சொத்தின் தோராயமான மதிப்பை மதிப்பிடும் ஒரு செயல்முறையாகும்.

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை பலவகைகளில் கிடைக்கப்பெற்றாலும், சுருக்கமாக இரு வகைகளை நாம் சொல்லலாம். அதாவது ஒப்பீட்டு முறை(Relative Valuation) மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation). ஒப்பீட்டு முறை என்பது ஒரு சொத்தினை அதனை ஒத்த மற்ற சொத்துக்களுடன் ஒப்பிடுவது அல்லது ஒரு நிறுவனத்தின் மதிப்பை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களின் மதிப்புடன் ஒப்பிட்டு முடிவினை அடைவதாகும். 

 

முழுமையான மதிப்பீட்டு முறை என்பது அவ்வாறாக இல்லாமல், ஒரு சொத்தின் அல்லது நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பை (மற்றவற்றுடன் ஒப்பிடாமல்) பெறுவதாகும். இதன் மூலம் ஒரு சொத்து அல்லது நிறுவனம்  இவ்வளவு மதிப்பை கொண்டிருக்கும் என சொல்வதாகும்.

 

சிறு உதாரணத்தின் மூலம் மேலே சொன்ன இரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறைகளை பார்ப்போம். ஒருவரின் தோட்டத்தில் (ஒரு ஏக்கர் நிலம்) நூறு கொய்யா மரங்கள் உள்ளது. ஒவ்வொரு மரமும் ஆண்டுக்கு நூறு கொய்யா பழங்களை தருகிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அவரது தோட்டத்தில் ஆண்டுக்கு ஆயிரம் கொய்யா பழங்கள்(100 மரங்கள் X 100 பழங்கள்) காய்த்து அதற்கான வருவாயை தருகிறது. இங்கே கொய்யா பழத்திற்கான விலை, ஒவ்வொரு கொய்யா மரத்தின் வாழ்நாட்கள் மற்றும் பருவம், கழிவு, விலைவாசி(உற்பத்தி செலவு மற்றும் பணவீக்கம்), அடுத்த 10-15 வருடங்களுக்கான விளைச்சல் எதிர்பார்ப்பு  ஆகியவற்றை பொறுத்து அத்தோட்டத்திற்கு ஒரு மதிப்பை கொடுக்கலாம். பின்னாளில் அவர் இந்த தோட்டத்தினை விற்க முனைகையில் மேலே சொன்ன மதிப்பீட்டை கருத்தில் கொண்டு விலையை பேசலாம். இதனை தான் நாம் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation) என சொல்கிறோம்.

 

இதுவே பக்கத்து தோட்டத்துக்காரர் தான் வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில்  கொய்யா மரங்கள்(எண்ணிக்கை மாறுபடலாம்) அடங்கிய தோட்டத்திற்கு எந்தவொரு முழுமையான மதிப்பீட்டையும் செய்யாமல், முதலாமவரின் தோட்டத்தினை போல தனது தோட்டமும் இவ்வளவு மதிப்பை பெறும் என ஒப்பிட்டு முறையில் சொன்னாலே, அதுவே ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையாகும்(Relative Valuation).

 

இதனை தான் பங்குச்சந்தை முதலீட்டில் நாம் காணும் P/E(Price to Earning per Share) Ratio, P/Bv(Price to Book value) Ratio, P/S (Price to Sales), EV/EBITDA, etc. – ஒப்பீட்டு பகுப்பாய்வு முறை. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனப் பங்கின் விலையை அதன் ஒரு பங்கிற்கான வருவாயுடன் ஒப்பிடுவது, பங்கு  விலையை அதன் நிறுவன விற்பனையுடன், புத்தக மதிப்புடன்(Book value) ஒப்பிடுவது என சொல்லலாம். ஒரு நிறுவனத்தின் P/E விகிதத்தை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனத்தின் P/E விகிதத்துடன் ஒப்பிடுவது. 

 

Discounted Cash Flow(DCF), DDM(Discounted Dividend Model), Discounted Asset Model(DAM) போன்றவை முழுமையான ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையை சேர்ந்தவையாகும். இவை அந்நிறுவனத்தின் பணவரத்து, ஈவுத்தொகை(Dividend) மற்றும் கணக்கில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முழுமையாக மதிப்பீடு செய்வதாகும். 

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை(Valuation Analysis) என்பது வெறுமனே பங்குச்சந்தை முதலீட்டுக்கு மட்டுமல்ல. ரியல் எஸ்டேட்(வீட்டுமனைத் துறை), தங்கம், விவசாய நிலம், தொழில் மற்றும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.

 

ஒவ்வொரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறையும் வெவ்வேறு வகையான முடிவுகளை அளிக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் முதலீடு செய்பவருக்கு ஏற்ற அல்லது உகந்த மதிப்பீடுகளை எடுத்துக் கொள்வது இயல்பு. எனினும், பெரும்பாலும் வழக்கத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மதிப்பீடாக ஒப்பீட்டு முறை உள்ளது. அதே வேளையில் ஒப்பீட்டு முறையை காட்டிலும் முழுமையான மதிப்பீட்டு முறையே(Absolute Valuation) ஒரு முதலீட்டாளருக்கு சிறந்த முடிவாகவும், நீண்டகாலத்தில் நல்ல வருவாயை அளிக்க கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. 

 

நான் பெரிசா, நீ பெரிசா என ஒவ்வொரு மதிப்பீட்டு முறையை கொண்டு போட்டி போடுவதை தவிர்த்து விட்டு, அனைத்து அல்லது பெரும்பான்மையான முறைகளை கணக்கில் எடுத்து கொண்டு முடிவுகளை எடுக்க கால்பந்து களப் பகுப்பாய்வு(Football Field Analysis) உதவுகிறது. வெவ்வேறு மதிப்பீட்டு முறைகளின் முடிவுகளை ஒப்பிட்டு சுருக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வரைபடத்தை(Graph /Chart)  இந்த ஆய்வு ஏற்படுத்துகிறது. 

 

இது பல்வேறு மதிப்பீட்டு முறைகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமையும் ஒரு நிறுவனத்திற்கான மதிப்புகளின் வரம்பை சுருக்கமாக கூறுகிறது. இந்த வரைபடத்தின் மூலம் பெரும்பான்மையான மதிப்பீட்டு  முறைகள் வாயிலாக, ஒரு நிறுவனத்தின் சராசரி விலை என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம். 

 

பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள்வதற்கும், மதிப்பீடுகளில் ஏற்படும் பிழைகளை குறைப்பதற்கும் இம்முறையை பயன்படுத்தலாம். 

 

உதாரணமாக ஒரு நிறுவனப் பங்கின் விலையை பணவரத்து(DCF) மதிப்பீட்டு முறையில் கணக்கிடும் போது ஒரு பங்கிற்கான மதிப்பு ரூ. 100 என கொள்வோம். இதுவே PE மதிப்பீட்டு முறையில் காணும் போது ஒரு பங்கிற்கு 80 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை வாங்கலாம் என பரிந்துரைக்கிறது. புத்தக மதிப்பு(Book value) அடிப்படையில் பார்க்கையில் ஒரு பங்குக்கு ரூ.85 என மதிப்பினை பெறுகிறது. கடந்த ஒரு வருட பங்கின் அதிகபட்ச விலை ரூ.150 ஆகவும், குறைந்தபட்ச விலை 65 ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஒரு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ரூ.87 – ரூ.102 என்ற விலையில் வர்த்தகம் நடந்துள்ளது.

 

இப்போது ஏதேனும் மற்றொரு மதிப்பீட்டு முறை மூலம் ஆய்வு செய்யும் போது பங்கு ஒன்றுக்கு 82 ரூபாய் என காட்டுகிறது. முடிவில் மேலே சொன்ன அனைத்து மதிப்பீட்டு முறைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற மதிப்புகளை, கால்பந்து களப் பகுப்பாய்வு வரைபடத்தில் குறிப்பிட வேண்டும். தற்போது நடப்பில் ஒரு பங்கின் விலை ரூ.102 க்கு வர்த்தகமாகிறது என வைத்துக் கொள்வோம். 

 

கால்பந்து களப் பகுப்பாய்வின் மூலம் நாம் பெறுவது, ஒவ்வொரு மதிப்பீட்டின் அடிப்படையில் நாம் பெறக்கூடிய சராசரி விலை தான். இதனை தற்போதைய பங்கு விலையுடன் ஒப்பிட்டு வாங்கலாமா, காத்திருக்கலாமா என்பதனை முடிவு செய்யலாம். 

 

Football field analysis

 

நீங்களும் இதனை பரிசோதித்து பாருங்கள்… இதன் மூலம் உங்களது முதலீட்டு சிந்தனையை மேம்படுத்துங்கள் !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

    

 

 

இந்தியாவில் பணவீக்கம்(விலைவாசி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

இந்தியாவில் பணவீக்கம்(விலைவாசி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Inflation measured in India – WPI / CPI ?

நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாத முடிவில் 5.10 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு டிசம்பர் மாத முடிவில் 5.69 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பணவீக்க விகிதத்தை அடிப்படையாக கொண்டு தான் ஒரு நாட்டின் வங்கிகளின் வட்டி விகிதமும்(Bank Interest Rate), அரசின் பஞ்சப்படி(Dearness Allowance -DA) அறிவிப்பும் உள்ளது. 

பங்குச்சந்தை முதலீட்டை மற்ற சொத்து முதலீட்டுடன் ஒப்பிடுகையில், பங்குச்சந்தை முதலீடு(பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டும் தான்)  நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை கொடுக்கும் என சொல்கிறோம். தங்கத்தின் மீதான வருவாயை பணவீக்கத்திற்கு எதிரான இழப்புக்காப்பு(Hedging) என சொல்வதுண்டு. இவ்வாறு பணவீக்கம் என்பது பொருளாதார உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

பணவீக்கத்தை கணக்கிடும் முறை ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும், அதே வேளையில் அவற்றை சார்ந்த பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதிநிலை முடிவுகள் பெரும்பாலும் ஒத்த கருத்தையே கொண்டிருக்கும். அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரப்போகிறது என்றால், உள்நாட்டில் மத்திய ரிசர்வ் வங்கி அதனை கருத்தில் கொண்டு தான் இங்கு முடிவெடுக்கும்.

பணவீக்கத்தை பொறுத்தவரை நம் நாட்டில் இரு வகையான முறை தற்போது உள்ளது. ஒன்று மொத்தவிலை பணவீக்க விகிதம்(Wholesale Price Index – WPI), மற்றொன்று சில்லறை விலை அல்லது நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) என்றழைக்கப்படும் பணவீக்க விகிதம்.

மொத்தவிலை பணவீக்க விகிதம்: இது நாட்டில் உள்ள பல்வேறு உற்பத்திப் பொருட்களின் மொத்த விலை மாற்றங்களை கொண்டு அளவிடப்படுகிறது. அதாவது பிற நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது வணிகங்களால் ஏற்படும் செலவுகளை குறிப்பிடுகிறது. 

மொத்த விலையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள், நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர்களை சென்றடையும் முன் கண்காணிக்கப்படும் குறியீடாக மொத்தவிலை பணவீக்க விகிதம் உள்ளது. 

சில்லறை அல்லது நுகர்வோர் விலை பணவீக்க விகிதம்: இது பொதுவாக நுகர்வோரிடம் காணப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை மாற்றங்களை கொண்டு அளவிடப்படுகிறது. மக்களிடம் பெரும்பாலும் நாள்தோறும் தேவைப்படும் பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு சில்லறை விலை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

இந்தியாவில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 2012ம் ஆண்டினை அடிப்படை வருடமாக(Base year: 2012) கொண்டு அளவிடப்படுகிறது. நடப்பில் மொத்தவிலை பணவீக்க விகிதத்தை காட்டிலும், சில்லறை விலை பணவீக்க விகிதமே முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் மொத்தவிலை பணவீக்கத்தை பொறுத்தவரை உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் உள்ள நிலையில், நுகர்வோருக்கு அவர்களின் மாத வரவு-செலவினை ஒப்பிடும் வகையில் சில்லறை விலை பணவீக்க விகிதமே தெளிவுபடுத்துகிறது.

பணவீக்கம் சார்ந்த அறிக்கைகளை மத்திய புள்ளியியல் அமைச்சகமும்(சில்லறை விலை பணவீக்கம்), வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகமும்(மொத்தவிலை பணவீக்கம்) பொதுவெளியில் அறிவிக்கும். சில்லறை விலை பணவீக்கம் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்திலும்(மாதத்தின் 14ம் தேதி), மொத்த விலை பணவீக்கம் ஒவ்வொரு வார மற்றும் மாத அடிப்படையிலும் வெளியிடப்படும்.

மொத்த விலை பணவீக்க விகிதத்தை பொறுத்தவரை சுமார் 697 பொருட்களை உற்பத்தி, முதன்மைப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் விலை மாற்றங்களை எடுத்து கொண்டு கணக்கிடப்படும். முதன்மைப் பொருட்கள் பிரிவில் உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெறும். சில்லறை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை சுமார் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தேசிய புள்ளியியல் அமைச்சகத்தால் ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய மாவட்டங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களில்(1181 கிராமங்கள் மற்றும் 1114 சந்தைகள்) கள ஊழியர்களை கொண்டு ஒவ்வொரு நாளின் சில்லறைப்  பொருட்களின் விலை மாற்றத்தை கணினியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. சில்லறை விலை பணவீக்கம் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள், புகையிலைப்பொருட்கள், துணிமணி மற்றும் காலணிகள், வீட்டுமனை, ஒளி மற்றும் எரிபொருட்கள், ஏனையப் பொருட்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் கணக்கிடப்படுகிறது.

சில்லறை விலை பணவீக்க விகிதத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாகும். இவற்றில் அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள், பால் பொருட்கள், காய்கறிகள், திண்பண்டங்கள் மற்றும் இனிப்புகள், மீன் வகைகள், மாமிசம், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகளும் அடங்கும். போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு 8.59 சதவீதமும், சுகாதாரம் 5.90 சதவீதமும் மற்றும் கல்வி 4.46 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

வீட்டுமனைப் பிரிவு 10 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 6.53 சதவீதமும் மற்றும் புகையிலைப்பொருட்கள் 2.38 சதவீத பங்களிப்பையும் சில்லறை விலை பணவீக்க கணக்கீட்டில் கொண்டுள்ளது. 

மொத்தவிலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு 24 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றில் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த பொருட்கள் மற்றும் மொத்த விலையில்(Wholesale Price) வாங்கக் கூடிய விலை விவரங்களே இடம்பெறும். இரு வகையிலான பணவீக்க முறையை பொறுத்தவரையில், பொதுவாக அனைத்து பொருட்களின் கணக்கீட்டில் அதன் பிரிவில் சராசரி விலையே முடிவில் எடுத்து கொள்ளப்படும். உதாரணமாக ஒரு சாக்குப்பை அரிசியின் விலை ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1,000 என எடுத்துக் கொள்வோம். தற்போது இதன் விலை ரூ.1,400 ஆக இருந்தால் அரிசியின் பணவீக்க விகிதம் 40% ஆகும். இருப்பினும் இந்த பிரிவில் உள்ள மற்ற பொருட்களின் விலை மாற்றங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, முடிவில் சராசரி விலையின் குறியீடு தான் வெளிப்படும்.

CPI(Consumer Price Index) Formula: (Cost of the Market Basket in the given year / Cost of the Market Basket in the Base year) X 100

WPI(Wholesale Price Index) Formula: (Current Price / Base Period price) X100

சுருக்கமாக மொத்தவிலை பணவீக்க விகிதம் உற்பத்தி மற்றும் மொத்தவிலை சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் சில்லறை விலை(Retail Inflation) பணவீக்க விகிதம் வாடிக்கையாளர் அல்லது நுகர்வோர் தங்களுக்கு அருகில் உள்ள சந்தை அல்லது கடையில் வாங்கும் சில்லறை விலை அடிப்படையில் மாற்றத்தை கொண்டு வரும்.

பணவீக்க விகித மாற்றத்தை கொண்டு தான் ஒரு அரசாங்கத்தின் நிதிநிலை செயல்பாடுகளும் இருக்கும். அரசாங்கத்தின் கொள்கைகளும் பணவீக்க விகித ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக அமையும். இது போல தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களும் விலைவாசியை(பணவீக்கம்) கருத்தில் கொண்டு தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் முடிவை திட்டமிடலாம். பணவீக்க விகித மாற்றம் முதலீட்டிலும் அவசியமாகிறது. பணவீக்கம்(Inflation) பொருளாதாரத்தில் ஒரு எதிரியாக பார்க்கப்பட்டாலும், இதனை சிறப்பாக கையாளும் போது நமது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

Endowment Effect or Cognitive Bias – Behavioural Economics

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்பார்கள். பொருளியலில் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இன்று பணம் இருந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கான தேவையும், நகர்வும் பணத்தை சார்ந்து இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் ஆற்றலை அறிய, அந்நாட்டின் போர்ப்படை மற்றும் அரசியல் அதிகாரத்தை விட பணத்தின்(பொருளாதாரம்) மூலம் தான் அளவுகோலை நிர்ணயிக்கிறார்கள்.

‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என துறவறவியலில்(அதிகாரம் – அருளுடைமை, பால் – அறத்துப்பால், குறள்: 247) பொருளீட்டலின்(இன்றைய பணம்) தேவையை பற்றி விவரிக்கிறது. பணத்தின் மீது பெருத்த ஆசை வைக்காவிட்டாலும், தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்தை நிதி சார்ந்து பாதுகாக்க தேவையான பணத்தை நாம் தேடித்தான் ஆக வேண்டும்.

அதிக பணமீட்டும் ஒரு சாரார் தங்களது செலவுகளை அதிகமாக கொண்டிருந்தாலும், அதன் மூலம் வரி வருவாய் ஏற்படுத்தினால் மட்டுமே, ஒரு நாட்டின் அரசால் வறுமையில் அல்லது வருவாய் குறைந்தவர்களுக்கான நிதி திட்டமிடலை செய்ய முடியும். இல்லையெனில் பொருளாதாரம் சார்ந்து அதிக ஏற்றத் தாழ்வால் வெறுப்பும், வன்முறையும் நிகழ வாய்ப்புண்டு. இதன் காரணமாக தான் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளும், வேகமாக வளரும் நாடுகளும் பொருளாதாரத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

முன்னொரு காலத்தில் நெல் உமியையும், அரிசியையும் வீணாக்கக் கூடாது என்ற வழக்கமுண்டு. பஞ்சத்தின் வெளிபாட்டையும், சிக்கனத்தை அவசியத்தையும் தான் இது போன்ற நிலைகள் கூறுகிறது. ‘பணக்காரனுக்கு என்னப்பா கவலை’ என்றும், ‘பணத்தை விட உடல்நலத்தை பேணுவதே’ என்றும், ‘நம்மிடம் பணமிருந்து என்ன பயன், நல்ல தூக்கம் இல்லையே’ என சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் பணத்திற்கான மதிப்பு தான் என்ன ?

அதனை நீங்கள் தான் அளவிட முடியும் !

நம்மிடமிருக்கும் பணத்தை நாம் அவ்வளவு அக்கறையாக பார்க்கையில், மற்றொருவரின் பணத்தை நாம் அவ்வாறாக காண்பதில்லை. இதனை தான் எண்டோவ்மென்ட் விளைவு(Endowment Effect) என்கிறோம். ‘பணத்தை தண்ணி போல செலவழிக்கிறான் பார்’ என சொல்வதுண்டு. பணத்தின் மீதான அளவீடு என்பது ஒவ்வொரு தனிநபரின் பார்வையிலும் மாறி கொண்டே இருக்கிறது.

கஷ்டப்பட்டு அப்பா சம்பாதித்த பணத்தை பற்றி பிள்ளைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அதன் அளவீடும் மாறுபடும். சாலையில் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளும், சில்லறைகளும் அதனை கண்டவரின் பார்வையில் பணத்தின் மீதான அளவீடு உள்ளது. நமது பணம் தொலைந்து விட்டால் நமக்கு வரும் பதட்டம், அதே பணத்தை மற்றவர் தொலைக்கும் போது இருப்பதில்லை. முடிந்தால் அறிவுரை சொல்ல பழக்கப்பட்டிருப்போம்.

பொதுவாக நம்மிடம் இல்லாதவற்றை விட, நமக்கு சொந்தமான பொருட்களின் மீது நாம் உயர்வான மதிப்பை கொண்டிருக்கிறோம். இதனை தான் முதலீட்டு சிந்தனையிலும் செய்து வருகிறோம். நமக்கு தெரிந்த முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது அல்லது நமது வசதிக்கு ஏற்ப இந்த திட்டம் தான் சரியானது என முதலீடு செய்வது. உண்மையில் அந்த திட்டம் வருவாயை கொடுக்காமல் இருந்திருக்கலாம். சில நேரங்களில் அத்திட்டம் அதிக ரிஸ்க் தன்மை கொண்டதாக இருந்திருக்கக் கூடும்.

இருப்பினும் நாம் அந்த திட்டத்தை மற்றவைகளை பற்றி தெரிந்து கொள்ள விருப்பில்லாமல், ஏற்கனவே சொன்ன திட்டத்தில் ஆறுதல் தேடிக் கொள்வோம். இதனை தான் உளவியலாளர் திரு. டேனியல் கானமேன் ஒரு ஆராய்ச்சியின் மூலம் விவரிக்கிறார்…

“ அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு போட்டியை நடத்தி ஆராய்ச்சி கண்டோம். சில மாணவர்களிடம் பல்கலைக்கழக சின்னம் பதிக்கப்பட்ட குவளைகளை(Mugs) வைத்திருக்க சொன்னோம். குவளைகளை கொண்டிருந்த மாணவர்களிடம் அதனை மற்ற குவளையில்லாத மாணவர்களிடம் விற்கும் படி செய்ய சொன்னோம். குவளையில்லாத மாணவர்களும், குவளை வைத்திருக்கும் மாணவர்களிடம் வாங்குவதற்கான பேரத்தை பேசினர்.

இதனை பலமுறை சோதித்து, இறுதி ஆராய்ச்சியின் முடிவில் நாங்கள் கண்டது, குவளையில்லாத மாணவர்கள் தாங்கள் கேட்ட விலையை விட இரு மடங்கு விலையில் குவளையை வைத்திருந்த மாணவர்கள் விற்பதற்கு தயாராக இருந்தனர் என்பது தான்.”

இதனை தான் நாம் அவ்வப்போது நம் வாழ்க்கையில் செய்து வருகிறோம். உதாரணத்திற்கு நம்மிடம் உள்ள பழைய நான்கு சக்கர வாகனத்தை விற்கும் போது, நாம் அதன் அருமை-பெருமைகளை சொல்லி கூடுதல் விலைக்கு விற்க முனைகிறோம். இதுவே வாங்க வருபவர், தேய்மானத்தை அடிப்படையாக கொண்டு மலிவான விலையில் கேட்பார்.

வீட்டுமனை விற்பனையிலும் நாம் இதனை காணலாம். வீட்டுமனையை வைத்திருப்பவர் எப்போதும் அதிக விலைக்கே விற்க(Endowment Effect) முனைகிறார். ஆனால் உண்மை நிலவரம் அப்படியில்லை, இடம் மற்றும் காலத்திற்கு தகுந்தாற் போல தான் அந்த மனையின் விலை விற்கப்படும். எனினும் நம் மனம் நமது சொந்த பொருட்களின் மீதான மதிப்பை அதிகரித்தே சொல்லக் கூடும்.

கைக்கடிகாரம் கூட யார் மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கிணங்க அதன் மதிப்பை பெறுகிறது என்பார்கள்.

எனவே நம் பணத்தின் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பை, மற்றவர்களின் பணத்திற்கும்(மனிதத் தன்மைக்கும்) கொடுப்பது நலம். இதன் மூலம் அதீத ஏற்ற-தாழ்வை பொருளாதார நிலையை குறைக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம்

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 

Greaves Cotton Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1859ம் ஆண்டு ஜேம்ஸ் கிரீவ்ஸ் மற்றும் ஜார்ஜ் காட்டன் ஆகிய இருவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் கிரீவ்ஸ் காட்டன்(Greaves Cotton). பொறியியல் மற்றும் உற்பத்தித் துறையில் உள்ள இந்நிறுவனம் 1947ம் ஆண்டு வாக்கில் இந்தியத் தொழிலதிபரான திரு. லாலா கரம் சந்த் தப்பார் (தப்பார் குழுமம்) அவர்களால் வாங்கப்பட்டது. 1950ம் ஆண்டில் கிரீவ்ஸ் காட்டன் பொது நிறுவனமாக(Public Ltd) பதிவு செய்யப்பட்டது. தற்போது மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு நிறுவனம் தனது தொழிலை செய்து வருகிறது.

நிறுவனத்தின் தலைவராக திரு. கரண் தப்பார் உள்ளார். வாகனங்களுக்கான இன்ஜின்கள், உதிரி பாகங்கள், வாகன கட்டுப்பாட்டு அமைப்புகள், பண்ணை உபகரணங்கள், துணை சக்தி(Auxiliary Power) மற்றும் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் இன்ஜின் பிரிவு 62 சதவீதத்தையும், மின்சார வாகனப் பிரிவு 30.5 சதவீதத்தையும் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. 

வருவாயில் உள்நாட்டு பங்களிப்பு 97 சதவீதமாகவும், ஏற்றுமதி 3 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக Greaves Electric Mobility (இரு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகன உற்பத்தி), Greaves Retail(உதிரி பாகங்கள், மின்சார வாகன ஏற்றுமதி, பராமரிப்பு), Greaves Engineering(எரிபொருளுக்கான தீர்வு, இயக்க கட்டுப்பாட்டு அமைப்புகள், இன்ஜின் பிரிவு, ஜென்செட்டுகள் மற்றும் பம்பு செட்டுகள்), Greaves Technologies(பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டிஜிட்டல் சேவைகள்) மற்றும் Greaves Finance(மின்சார வாங்கனங்களுக்கான நிதி சேவைகள்) ஆகியவை உள்ளன.  

விவசாயம், கட்டுமானம், சக்தி மற்றும் பிற தொழிற்துறைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்திற்கு நாடு முழுவதும் சுமார் 6500கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களும், 350க்கும் மேற்பட்ட விநியோகச் சேவைகளும்(Dealers) உள்ளது. உதிரிப் பாகங்களுக்கான பிரிவில் நாடு முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் 6000க்கும் மேற்பட்ட சிறிய சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் தயாரிப்பு சேவை உள்நாட்டில் மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. நிறுவனம் இந்திய குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் அனுபவம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் திறமையான தலைமைத்துவத்தை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் இப்பிரிவில் இந்திய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பை தன்னகத்தே கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்சார வாகனங்களில் மூன்று முக்கிய பிரிவுகளில் பிராண்டுகளை உற்பத்தி செய்து(Ampere, ele, Greaves Eltra) இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இரு சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 6 வகைகளையும், மூன்று சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 10க்கும் மேற்பட்ட வகைகளிலும் உள்ளன.

நிறுவனத்தின் கீழ் பல பிராண்டு உதிரி பாகங்கள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், பேட்டரிகள், சார்ஜிங், பிற கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், ‘Ampere Vehicles’ நிறுவனத்தில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 81 சதவீத பங்குகளை வாங்கி கையகப்படுத்தியுள்ளது. 

‘E-Rickshaw’ பிரிவில் பெஸ்ட்வே நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது கிரீவ்ஸ் காட்டன். இது போக வாகனங்களுக்கான இயக்க கட்டுப்பாட்டு(Motion Control Systems) பிரிவில் தொழில் செய்து வரும் எக்சல் கண்ட்ரோலிங்கேஜ்(Excel Controlinkage Pvt Ltd) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், எம்.எல்.ஆர். ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது. ஐக்கிய ராச்சியத்தை(United Kingdom) சேர்ந்த ஈட்டா கிரீன் பவர் நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்.6 வாகனப் பிரிவுக்கான பவர் ட்ரெயின்(Powertrain) தீர்வுகளை செய்து வருகிறது. மூன்று மற்றும் நான்கு சக்கர வணிக வாகனங்களுக்கான இன்ஜின்களை(Petrol, Diesel, CNG/LPG) உற்பத்தி செய்து விற்பனையிலும் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் தனது விற்பனையை அதிகரிக்க சவுதியை சேர்ந்த ஏ.எல்.ஜே(ALJ) குழும நிறுவனத்துடன் இணைந்து மேம்பாடுகளை செய்து வருகிறது. கடந்த 1945ம் ஆண்டு துவங்கப்பட்ட ALJ(Abdul Latif Jameel) நிறுவனம் வாகனப் பிரிவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழிலை செய்து வருகிறது.   

மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகின் சிறந்த பிராண்டாக காணப்படும், ‘Piaggio’ நிறுவனம் ஐரோப்பாவில் பெரும்பான்மையான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு தேவையான இன்ஜின் மற்றும் பிற உதிரி பாகங்களை கடந்த 1998ம் வருடம் முதல் கிரீவ்ஸ் காட்டன் செய்து வழங்கி வருகிறது. சொல்லப்பட்ட வருடத்தில் பியாஜியோ – கிரீவ்ஸ் கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தது. பின்னர் 2001ம் ஆண்டு வாக்கில் பியாஜியோ நிறுவனத்தின் தலைமைக் குழும நிறுவனமான P&C முழு பங்குகளையும் வாங்கி கொண்டது.

நிறுவனத்தின் முதலீட்டை பொறுத்தவரை, கடந்த 2021ம் ஆண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்கும் இலக்கை கொண்டு, தமிழ்நாட்டில் அடுத்த பத்து வருடங்களில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளதாக கிரீவ்ஸ் காட்டன், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்காக நாடு முழுவதும் ஆறு ஆலைகளை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மொத்த வருவாயில் 1.6 சதவீதம் வரை செலவிடப்படுகிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடன் வழங்கும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கிரீவ்ஸ் பைனான்ஸ்(Greaves Finance) நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் நிதிநிலையை பொறுத்தவரை இதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.3,830 கோடி. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 16 மடங்குகளிலும், நிறுவனர்களின் பங்களிப்பு 56 சதவீதமாகவும் உள்ளது. 

கடந்த 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டு முறையே ரூ.19 கோடி மற்றும் ரூ.35 கோடியை நிறுவனம் நட்டமாக சொல்லியுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,699 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.2,573 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. இயக்க லாப விகிதம் 4 சதவீதமாக உள்ளது.

சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 70 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. எனினும் கடந்த நான்கு காலாண்டுகளில் டிசம்பர் 2023 காலாண்டை தவிர்த்து மற்ற மூன்று காலாண்டுகளிலும் நிறுவனம் நட்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட நிதிச் செலவின அதிகரிப்பு மற்றும் மின்சார வாகன மானியத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய அபாரதத் தொகையும் அடங்கும்.  

கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் மின்சார வாகன உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருவதால், முதலீடும் அது சார்ந்த செலவினமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சந்தையிலும் இந்தப் பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்தை சந்தித்து வருகிறது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு செப்டம்பர் 2023 காலத்தின் படி ரூ.1,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது. 

2022-23ம் நிதியாண்டில் என்ஜின் பிரிவு மூலம் நிறுவனத்திற்கு ரூ.1,425 கோடியும், மின்சார வாகனப் பிரிவின் மூலம் ரூ.1,124 கோடியும், பிற விற்பனை மூலம் 150 கோடி ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது. இருப்பினும் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபத்தில்(PBIT) இன்ஜின் பிரிவு 165 கோடி ரூபாயையும், மின்சார வாகனப் பிரிவு ஒரு கோடி ரூபாயையும் நிறுவனம் பெற்றுள்ளது. 

கடன்-பங்கு விகிதம் 0.06 மடங்கு, வட்டி பாதுகாப்பு விகிதம் மற்றும் இருப்புநிலை கையிருப்பு தொகை இந்நிறுவனத்திற்கு சாதகமாக இருந்தாலும், மின்னணு வாகனப் பிரிவில் இந்நிறுவனம் செய்த முதலீடு, அதன் முறிவு புள்ளியை(Breakeven) கடக்கும் வரை நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் அதிக மாறுபாடுகளை காணலாம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

World’s Top Stock Exchanges and Countries by Market Capitalization

உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக ஹாங்காங் நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தையை நாம் முந்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குச்சந்தையின் மதிப்பு 4.37 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் சுமார் 363 லட்சம் கோடி ரூபாய்).

பங்குச்சந்தை உலகின் ராஜாவாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 49.65 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 4,127 லட்சம் கோடி ரூபாய்). இரண்டாமிடத்தில் 10.89 டிரில்லியன் டாலர்களுடன் சீனாவும், மூன்றாவது இடத்தில் 5.47 டிரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் நாடும் உள்ளது.

அமெரிக்காவின் மேலே சொல்லப்பட்ட சந்தை மதிப்பு அந்நாட்டின் பொருளாதார(GDP) மதிப்பில் 194.5 சதவீதமாகும். ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தை 3.96 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆறாம் மற்றும் ஏழாம் இடம் முறையே பிரான்சு மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள்(2.82 டிரில்லியன் டாலர்கள்) உள்ளன.

எட்டாவது இடத்தில் கனடா 2.64 லட்சம் கோடி டாலர்களுடனும், ஒன்பதாவது இடத்தில் சவுதி அரேபியா 2.42 லட்சம் கோடி டாலர்களுடனும் மற்றும் பத்தாவது இடத்தில் ஜெர்மனி 2.28 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடனும் உள்ளது. சொல்லப்பட்ட தரவுகள் 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுகளுக்குள் கணக்கிடப்பட்டது.

கடந்த 1975ம் ஆண்டில் உலக பங்குச்சந்தையின் மதிப்பு 11.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தநிலையில் 2020ம் ஆண்டின் முடிவில் 93.68 லட்சம் கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது உலக பொருளாதார மதிப்பில் வெறும் 27 சதவீதமாக இருந்த பங்குச்சந்தை பங்களிப்பு இன்று 135 சதவீதத்திற்கும் மேலாக காணப்படுகிறது.

நடப்பில் மிகப்பெரிய பங்குச்சந்தை உள்ள நாடுகளில் குறிப்பிட்ட பங்குச்சந்தை(Stock Exchange) அடிப்படையில் காணுகையில், அமெரிக்காவின் நியூயார்க் சந்தை(NYSE) 26.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த சந்தை கடந்த 1792ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தில் அமெரிக்காவின் நாஷ்டாக்(NASDAQ) சந்தை உள்ளது. கடந்த 1866ம் வருடம் துவங்கப்பட்ட சீனச் சந்தையின் ஷாங்காய்(SSE) 6.87 டிரில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் ஐரோப்பாவின் யூரோ நெக்ஸ்ட்(EuroNext) சந்தையும், ஐந்தாவது இடத்தில் ஹாங்காங் சந்தையின் HKEXம் உள்ளன. இந்தியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை பத்தாவது இடத்தில் 3.59 டிரில்லியன் டாலர்களுடன் உள்ளது. இச்சந்தை கடந்த 1875ம் வருடம் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனத்தின் அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் சவுதி அரம்கோ நிறுவனமும் உள்ளன.

நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே கூகுள்-ஆல்பாபெட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆறாவது இடத்தில் என்விடியா(Nvidia) மற்றும் ஏழாம் இடத்தில் மெட்டா(Meta) நிறுவனமும் உள்ளது.

திருவாளர் வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனம் எட்டாம் இடத்திலும், எலான் மஸ்க்கின் டெஸ்லா ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. எலி லில்லி நிறுவனம் 597 பில்லியன் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

Global Market Indices in the year 2023 – Returns %

2023ம் ஆண்டை பொறுத்தவரை உலக பங்குச்சந்தையில் காணும் முக்கிய சந்தை குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேலாக வருவாயை கொடுத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை S&P 500 குறியீடு 24 சதவீதமும், ஜப்பானின் Nikkei 225 குறியீடு 30 சதவீதமும், ஐரோப்பாவின் Stoxx 50 குறியீடு 17.3 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான தேசிய பங்குச்சந்தையின்  நிப்டி50 குறியீடு 22.60 சதவீதமும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 21 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் பங்குச்சந்தை 7.8 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி(Kospi) 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனாவின் S&P China 500 குறியீடு 12.50 சதவீதம் மற்றும் ஹாங்காங் நாட்டின் Hang Seng 14 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

2023ம் ஆண்டில் காணப்பட்ட உலகளாவிய போர் பதற்ற சூழ்நிலை, பொருளாதார மந்தநிலை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றால் தங்கத்தின் தேவை அதிகரித்து சொல்லப்பட்ட வருடத்தில் தங்கம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகளவில் வீட்டுமனைத் துறை(Real Estate – REITs) குறியீடும் 11.50 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் வீட்டுமனை விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் Dow Jones Real Estate குறியீடு 7.8 சதவீதம் வளர்ந்துள்ளது. அதே வேளையில் கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.    

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் 2023ம் ஆண்டில் 5.8 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடந்த சில காலாண்டுகளாக பணவீக்க விகிதம் ஏற்ற-இறக்கமாக காணப்பட்ட நிலையில் வங்கி வட்டி விகிதமும் கணிசமான வருவாயை கடந்த ஆண்டு தந்துள்ளது. பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் கடன் பண்டுகள்(Debt Mutual Funds) சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை வருவாயை அளித்துள்ளது.

நாணயச்சந்தையில் மெக்ஸிகோ நாட்டின் பெசோ(Peso) 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது போல சுவிட்சர்லாந்து நாட்டின் பிரான்க் 10 சதவீதமும், பிரிட்டிஷ் பவுண்டு 5.30 சதவீதமும் மற்றும் யூரோ 3 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் அமெரிக்க டாலர் 2 சதவீதமும், சீன யுவான் 2.80 சதவீதமும் மற்றும் ரசியாவின் ரூபெல் 17.50 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய ரூபாயும் 0.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டுள்ளது.   

வரக்கூடிய காலம் உலக பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான கால நிலையாக இருப்பதால், தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்து வரும் பங்குச்சந்தையில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். எந்தவொரு முதலீட்டுத் திட்டமும்(Shares, Gold, Bonds, Real Estate) நீண்டகாலம் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு ஏற்றத்தை மட்டுமே சந்திக்கும் என்பது பொருளாதார வரலாற்றில் இல்லை. இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும்.

நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாளத் தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தெரிந்த பிராண்டுகளும், அதன் தெரியாத பொருட்களின் பெயர்களும்

Subscribe to continue reading

Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Top 5 Funds for you to invest in 2024 – Mutual Fund Investments

ஆசியாவின் மிகப் பழமையான பங்குச்சந்தையான மும்பை பங்குச்சந்தை(Bombay Stock Exchange – BSE) 70,000 புள்ளிகளை இன்று(11-12-2023) எட்டியது. மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த 1979ம் ஆண்டு வாக்கில், ‘100’ என்ற அடிப்படை புள்ளிகளை கொண்டு வர்த்தகமாக துவங்கியது. ஜூலை 2023 மாத நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையின் சந்தை மூலதன மதிப்பு 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் 302 லட்சம் கோடி).

கடந்த 2006ம் ஆண்டில் சென்செக்ஸ் தனது 10,000 புள்ளிகளையும், 2007ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 20,000 புள்ளிகள் என்ற இலக்கையும், 2017ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 30,000 என்ற புள்ளிகளையும் கடந்தது. அடுத்த ஆறு வருடங்களில் இரு மடங்காக மாறிய இந்த குறியீடு தற்போது 70,000 புள்ளிகள் என்ற நிலையையும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னொரு காலத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு தேவையான முதலீடு, பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று உள்ளூர் நிறுவன முதலீடுகள் மட்டுமே அளப்பரியது. குறிப்பாக பரஸ்பர நிதிகள் என்றழைக்கப்படும் மியூச்சுவல் பண்ட் வாயிலாக இந்திய பங்குச்சந்தைக்கு வந்த முதலீடுகள் லட்சம் கோடிகளில்.

செபி(SEBI) ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆம்பி / ஆம்ஃபை(AMFI – Association of Mutual Funds in India) என்ற லாப நோக்கமில்லா நிறுவனத்தால் தான் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் வரையறைகளும், அதன் சொத்து மேலாண்மை நிறுவனங்களும்(Asset Management Companies) நிர்வகிக்கப்படுகிறது. 

தற்போது உள்நாட்டில் 40க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள்(AMC) பரஸ்பர நிதித்திட்டங்களின் வாயிலாக முதலீடுகளை பெறுகிறது. இந்த முதலீடுகள் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் துறை, இன்னபிற பிரிவுகளிலும் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. சமீபத்திய ஆம்ஃபை தரவின் படி, இந்திய மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 49.04 லட்சம் கோடி ரூபாய் (நவம்பர், 2023). மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கியவர்களின் எண்ணிக்கை மட்டும் 16.18 கோடி (Folios). இவற்றில் சிறு முதலீட்டாளர்களின் சார்பாக துவங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 12.92 கோடி.

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

  • ICICI Prudential Nifty50 Index Fund
  • Parag Parikh Flexi Cap Fund
  • Mirae Asset Tax Saver
  • SBI Gold Fund
  • HDFC Balanced Advantage Fund

Best - Top 5 Funds to invest in 2024

படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்(MF Distributor) முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம்

நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம் 

India’s economic growth in the third quarter of the current year was 7.6 Percent

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான மற்றும் வேகமாக வளரும் துறைகளாக சேவைகள், வர்த்தகம், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, நிதி, காப்பீடு மற்றும் வீட்டுமனை ஆகியவை உள்ளன. 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின்(Services Sector) பங்களிப்பு மட்டும் 60 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. உற்பத்தித் துறை 15 சதவீத பங்களிப்பையும், விவசாயத் துறை(விவசாயம், மீன் மற்றும் வனவியல்) 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீத பங்களிப்பையும் நாட்டின் உற்பத்தியில் கொண்டிருக்கிறது. விவசாயத் துறை 12 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தாலும், நாட்டின் மொத்த தொழிலாளர்களின் சக்தியில்(Employment) 50 சதவீத பங்களிப்பை இத்துறை தான் வழங்கி வருகிறது.

நடப்பாண்டின் மூன்றாம் காலண்டான ஜூலை முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.6 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. முன்னர் மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி சொல்லப்பட்ட காலத்தில் 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தை வல்லுநர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக அமையலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது இது 7.6 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. உற்பத்தித் துறை சுமார் 13.9 சதவீதம் உயர்ந்தும், கட்டுமானம் 13.3 சதவீதமாகவும், பயன்பாடுகள் 10.1% ஆகவும், நிதி, வீட்டுமனை மற்றும் தொழில்முறை சேவைகள் 6 சதவீதம் என அதிகரித்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்த்துள்ளது.

அதே வேளையில் பருவ மழை மற்றும் காலநிலை மாற்றங்களால், விவசாயத் துறை சொல்லப்பட்ட காலத்தில் 1.2 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. செலவுகளை பொறுத்தவரை ஜூலை – செப்டம்பர் 2023 காலாண்டில் அரசின் செலவினம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு செலவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் நிதி பங்களிப்பின் மூலதன உருவாக்கம்(Gross Fixed Capital Formation) 8 சதவீதத்திலிருந்து தற்போது 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

மூன்றாம் காலாண்டில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாகவும், இறக்குமதி 16.7 சதவீதமாக அதிகரித்தும் காணப்படுகிறது. அதே வேளையில் தனியார் நிறுவனங்களின் செலவு பங்களிப்பு 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல்

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல் 

Layman’s Personal Financial Planning – Invest & Breathe

“மனதைத் தெளிவுபடுத்துவதற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்கும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியே அடிப்படை” என மருத்துவம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. 

“A Deep breathing exercise to clear the mind and relieve stress”

மூச்சுப்பயிற்சியினால் மனித உடலின் இரத்த அழுத்தம் குறைவதும், மற்ற உடலுறுப்புக்கள் சீராக இயங்குவது மட்டுமில்லாமல், அமைதி மற்றும் நல்வாழ்வு வாழ்வதற்கான புது தெம்பும் நமக்கு கிடைக்கப்பெறுகிறது.    

நவீன உலகத்தில் உடல்நலனும், செல்வமும் இரு நண்பர்களாக தான் வலம் வருகிறது. பொருள் ஆதாரமற்ற மனித வாழ்க்கையை இன்று நாம் இவ்வுலகில் காண இயலாது. அதே போல சுவர் இருந்தால் தான் சித்திரமும். 

அதற்காக நாம் கடினமாக உழைப்பதோ, உடல்நலத்தை பேணுகிறேன், உடல் எடையை இத்தனை நாட்களில் குறைக்கிறேன் என நாள்தோறும் ‘ஜிம்(Gym)’ பேர்வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நடைப்பயிற்சியும், மூச்சுப்பயிற்சியும் மற்றும் உணவில் கவனம் – அவரவர் வயது சார்ந்து மற்றும் தொழிலுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் அறிவை பயன்படுத்தி மற்றும் அதனை மேம்படுத்துதல் மூலம் நாம் செல்வத்தை எளிமையாக ஈட்டலாம். ஈட்டிய செல்வத்தை சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பெருஞ்செல்வமாக மாற்றலாம். 

நமது உடல்நலனை நாம் எப்படி பொறுமையாக கருத்தில் கொண்டு பேணுகிறோமோ, அதனை போல செல்வம் சேர்ப்பதிலும் கற்றல் மற்றும் பொறுமையும் அவசியம். ‘அதிகரித்த உடல் எடையை, சில நாட்களில் மிக விரைவாக குறைக்கிறேன்’ என நாம் எடுக்கும் ரிஸ்க் தன்மையும், ‘குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை அள்ளி விட வேண்டும்’ என முதலீட்டில் நாம் விளையாடும் ஊக வணிகமும்(Speculation) – இரண்டும் பக்கவிளைவை தரக்கூடியவையே !

பல வருடங்களாக நமது உடலில் இருக்கும் நோய்த்தன்மையை ஓரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட்டால், பின்னாளில் நமது உடல் இயக்கங்கள் அடுத்து வரும் நாட்களில் தடுமாறும். இதன் காரணமாக மீண்டுமொரு கவனத்தை நாம் நம் உடல் நலன் மீது செலுத்த நேரிடும். இதற்கான காலமும், பணச்செலவும் அதிகமே. இதனை போல பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு பங்குச்சந்தையில் ஒரே நாளில் பல லட்சங்களையும், கோடிகளையும் ஈட்ட வேண்டுமென்ற ஆசை(பேராசை) எல்லோருக்கும் தான். ஆனால் அது அனைவருக்கும், எல்லா நேரங்களிலும் சாத்தியமா !    

கடந்த 2022-23ம் நிதியாண்டில் செபி|(SEBI) வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, இந்திய பங்குச்சந்தையில் ஈடுபடும் 10 நபர்களில் ஒன்பது பேர் (Futures & Options Traders) தங்களது முதலீட்டு பணத்தை இழக்கின்றனர் என கூறுகிறது. சந்தையில் பணத்தை இழக்கும் நபர்களின் சராசரி இழப்பு ரூ.50,000 வரை உள்ளதாகவும், 28 சதவீதம் பேர் தங்களது முதலீட்டு இழப்பை, வெறும் பரிவர்த்தனை கட்டணங்கள் செலுத்துவதில் சந்திக்கின்றனர் எனவும் இந்த தரவு அறிக்கை கூறுகிறது. 

அப்படியிருக்க நாம் எதனை நோக்கி நாம் உழைத்த பணத்தை கொண்டு சென்றிருக்கிறோம் ? பங்குச்சந்தை முதலீடு நீண்ட காலத்தில் பலன் தரும் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கமே இதனை வெளிப்படையாய் சொன்னாலும்(சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதும்) நாம் என்னவோ குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆசைப்படுவதே. உண்மையில் பங்குச்சந்தையில் எளிமையாகவும், மிக விரைவாகவும் லாபமீட்ட முடிந்தால், ஏற்கனவே சந்தையில் லட்சம் கோடி ரூபாய்களில் மூலதன மதிப்பை கொண்ட டாட்டா, அம்பானி, பஜாஜ், கோத்ரேஜ், இன்னபிற குழுமங்கள் எங்கே ? அவர்களிடம் இல்லாத பணமா, நிர்வாகமா அல்லது அவர்களுக்கு தெரியாத பங்குச்சந்தை ரகசியமா. சொல்லப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை தங்களது தொழில்களை தான் நம்பியுள்ளன. அவர்களது தொழிற் திறனும், வாடிக்கையாளர்களும் தான் பின்னாளில் முதலீட்டாளர்களால் பங்கு விலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

சாமானியனின் நிதித்திட்டமிடலில் முதல் படி:

தனது குடும்பத்திற்கு தேவையான நிதிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது தான் –  வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு போதுமான டேர்ம் காப்பீடு(Term Insurance), குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற் போல மருத்துவ காப்பீடு(Mediclaim), அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்யும் நபராக இருக்கும் நிலையில், அவருக்கு தேவையான விபத்துக் காப்பீடு(Accidental Coverage).

இது போக அவசர கால நிதியை(Emergency Fund) உருவாக்குதல், குடும்ப நபர்களுக்கான நிதித்தேவையை இலக்குகளாக மாற்றுதல்(Creating Financial Goals). மேலே சொன்ன ஐந்து நிலைகளுக்கும் தனிநபர் ஒருவரின் வருமானம் மற்றும் குடும்ப நபர்களின் தேவையை கருத்தில் கொண்டு திட்டமிடலாம். இந்த ஐந்தும் தவிர்க்க இயலாத நிலைகளாக மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது.

நிதித்திட்டமிடலின் இரண்டாவது படியில்,

உங்களது நிதி இலக்குகளுக்கான சரியான சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது(Identifying Suitable Investment schemes). பொதுவாக சேமிப்பு எனும் போது அரசு சார்ந்த அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, பி.எப். பிடித்தம், சிறியளவில் நகை சேமிப்பு, சீட்டு(அரசு பதிவு பெற்ற மற்றும் நம்பகமான) ஆகியவை நமக்கு நினைவில் வரும். 

இவை பெரும்பாலும் குறைந்த வட்டி வருவாயை(பணவீக்கத்தை விட குறைவு) கொண்டிருந்தாலும், குறுகிய கால இலக்குகளுக்கு சிறந்தது. இதனை விடுத்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொன்சி(Ponzi Scam) மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அல்லது அரசு நிர்வாகம் செய்யும் சேமிப்பு திட்டங்களை மட்டுமே நாடுவது நல்லது.

நடுத்தர மற்றும் நீண்டகால நிதி இலக்குகளுக்கு மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இந்த திட்டங்களில் ஏற்ற-இறக்க ரிஸ்க் தன்மை இருப்பதால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தலாம. இதன் காரணமாக நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை சரியான காலத்தில் பெற முடியும். பரஸ்பர நிதிகளில் நீண்டகாலத்திற்கு என முதலீட்டு செய்து விட்டு, இலக்குகளை அடையும் முன்னர் அல்லது இடைவெளி காலத்தில் முடிந்தளவு பணத்தை வெளியில் எடுக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு எடுக்கும் நிலையில், நாம் கூட்டு வட்டியின் முழுமையான பலனை(Power of Compounding) அடைய முடியாமல் போகலாம்.

பரஸ்பர நிதி முதலீட்டின் வாயிலாக நாம் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான திட்டங்களில்(Asset Allocation) நமது முதலீட்டை பரவலாக்க முடியும். 

மூன்றாவது மற்றும் இறுதிப்படியாக,

பெருஞ்செல்வத்தை ஈட்டுவது இன்றைய காலத்தில் தேவையான ஒன்றாகி விட்டது. முன்னொரு காலத்தில் மனித உடற்சக்தியை மட்டுமே நம்பியிருந்த குடும்பச் சமூகம், இன்று நிதிச் சொத்துக்களை தான் குடும்பத்திற்கான ஆதாரமாக வைத்துள்ளது. எனவே நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான மற்றும் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை சேர்ப்பதிலும், அவற்றினை கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய நிலையுள்ளது. செல்வம் சேர்ப்பது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானதல்ல.

பெருஞ்செல்வம் ஈட்ட நாம் தொழில் திறனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமக்கான தொழில் ஏதுமில்லை அல்லது அவற்றை செய்ய நமது மனம் விரும்பாத போது, மற்றவர்களின் தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்(அதற்காக மீண்டும் பொன்சி மோசடியிடம் மாட்டி கொள்ளாதீர்கள் !). முதலீடு செய்யப்படும் தொழில் நிறுவனம் அரசு அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும், நிர்வாகத்திறன் படைத்ததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கா விட்டாலும், நமது முதலீட்டு பணம் நமக்காக திறம்பட வேலை செய்யும்.  

மற்றவர்களது தொழிலில் ஒரு சாமானியனும் முதலீடு செய்யலாம் என்பதே, இன்றைய பங்குச்சந்தை வாய்ப்பு(Public & Private Equity – Listed & Unlisted). பங்குச்சந்தை முதலீடு பற்றிய அடிப்படை கற்றலை கற்றுக் கொண்ட பின்னர் தான், சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை கொண்டிருந்தால் சிறப்பு. இல்லையென்றால்,பதிவு பெற்ற மற்றும் நம்பகத்தனமான நிறுவனங்களின் மூலம் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பங்குச்சந்தையிலும் பேராசை காட்டி மோசடி செய்யும் பேர்வழிகள் ஏராளம் ! 

உங்களால் பங்குச்சந்தையை புரிந்து கொள்ள முடியவில்லை எனில், முதலிரண்டு படிநிலைகளோடு இருந்து விடுவது நல்லது. 

மூச்சுப்பயிற்சியை மெதுவாக கவனித்தால் தான் மெருகும், நிதி முதலீடும் சாமானியனுக்கு அப்படித்தான் 🙂

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை பாதிக்கும் இரண்டு காரணிகள்

பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை பாதிக்கும் இரண்டு காரணிகள்

Two factors that affecting the Stock Prices in the Equity Market

பொதுவாக பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவன பங்கின் விலை பல்வேறு காரணிகளால் ஏற்ற-இறக்கத்திற்கு உட்படும். இதன் காரணமாகவே பங்கு முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என சொல்லப்படுகிறது. பங்கு விலையின் மாற்றத்திற்கு முதற்காரணமாக அமைவது தேவைக்கும்-உற்பத்திக்குமான(Demand-Supply) இடைவெளி தான். 

எனினும் இந்த தேவைக்கும், உற்பத்திக்குமான வாய்ப்பை ஏற்படுத்துவது சந்தையில் ஈடுபடும் வணிகர்(வர்த்தகர்) மற்றும் முதலீட்டாளரின் மனநிலையை(Trading Psychology & Behavioural Finance) பொறுத்தது. அதாவது இன்று இந்த பங்கினை இந்த விலையில் வாங்கலாமா வேண்டாமா; இன்று ரிஸ்க் எடுத்து லாபம் பார்க்கலாமா, இல்லையெனில் நீண்டகாலத்திற்கு பங்குகளை தக்கவைத்து கொள்ளலாமா, கிடைத்த லாபத்தை இப்போதே எடுத்து விடுவது, பெருத்த நட்டத்துடன் இத்தோடு சந்தையிலிருந்து வெளியேறி விடுவோமா என ஒவ்வொருக்கும் ஒரு மனப்போக்கு உண்டு.

இங்கே நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர் பெரு முதலீட்டாளர்கள் போன்றோர் நாம் மேலே சொன்ன மனப்போக்கை கொண்டிருந்தாலும் அவர்களின் முதலீட்டு முடிவெடுத்தலுக்கான காரணிகள், சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து சற்று மாறுபடும். இந்த காரணிகள் இரு வகைப்படும். இவை உலகளாவிய மற்றும் பொருளாதார வல்லுநர்களால் நிருபிக்கப்பட்ட சந்தை காரணிகளாகவும் உள்ளது.

நுண்பொருளியலும், பருப்பொருளியலும்:

பொருளாதாரத்தின் இரு பெரும்பிரிவுகளாக நுண்பொருளியலும்(Micro Economics), பருப்பொருளியலும்(Macro Economics) உள்ளது. நுண்பொருளியலை தான் நாம் பெரும்பாலும் சமூக அறிவியலாக காண்கிறோம். பருப்பொருளியல் என்பது ஒரு நாடு சார்ந்தோ அல்லது மண்டலம் சார்ந்த பொருளாதார செயல்பாடுகளை கொண்டிருக்கும். இதற்கும் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலைக்கும் என்ன சம்மந்தம் என கேட்கிறீர்களா ?

இந்த இரண்டு காரணிகள் தான் பங்குச்சந்தையின் குறியீடுக்கும்(Index), குறிப்பிட்ட நிறுவன பங்கின் விலை மாறுபாட்டுக்கும் காரணம். நாம் என்னவோ பங்குகளை ஒரு ஊகத்தில்(Speculation) வாங்கி விற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கான பணம் நமக்கு எங்கிருந்து வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்க வேண்டிய பங்குகளின் பண முதலீட்டை எங்கிருந்து பெறுகின்றனர், ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்ட தனது பங்குகளின் மூலம் எவ்வாறு தனது மதிப்பீட்டை பிற்காலத்தில் உயர்த்துகிறது(பங்கு விலையும் ஏறும்) – இது போன்ற கேள்விகளுக்கான விடை தான் நாம் மேலே சொன்ன இரண்டு காரணிகளும்.

மைக்ரோ எகானமி(Micro Economy) என சொல்லப்படும் நுண்பொருளியல் பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் மீது கவனம் செலுத்துகிறது. நிறுவனத்தின் வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது, நிதிநிலை(P&L, Balance Sheet and Cash Flow) எப்படி மற்றும் நிர்வாகத்திறன்(Corporate Governance) ஆகியவற்றை பற்றி அலசுகிறது. தனிநபர் வருவாய், உற்பத்தி மற்றும் தேவை, நுகர்வுத்தன்மை, வரி செலுத்துதல் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

மேக்ரோ எகானமி(பருப்பொருளியல்) ஒரு நாட்டின் பணவீக்கம், வட்டி விகித மாற்றம், வேலைவாய்ப்பின்மை விகிதம், உட்கட்டமைப்பு, அரசு சார்ந்த பொருளாதார கொள்கைகள் மற்றும் நிறுவனத்தின் அல்லது ஒரு துறையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இன்னபிற காரணிகளை கொண்டிருக்கும். 

இவற்றை நாம் பொதுவாக பங்குச்சந்தையின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis – கடந்த கால பங்கு விலையை அலசுவதற்கு மட்டும்) ஆகிய இரு படிப்பினைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பங்குச்சந்தையில் பங்குகளின் விலை இறங்குவதற்கு அல்லது ஏறுவதற்கு பெரும்பாலும் இந்த இரண்டு பொருளியல் தான் காரணமாக உள்ளது. மைக்ரோ எகானமியை பொறுத்தவரை, மேக்ரோ எகானமியில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை(Uncertainty) இதனை வெகுவாக பாதித்து விடும். இதன் காரணமாக தான் உலக பொருளாதார மந்தம் அல்லது வீழ்ச்சியில் ஏற்றம் பெற்று வரும் சந்தையும் விழும். ஊரே அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும் சந்தை ஏறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Panama Petrochem Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1982ம் ஆண்டு தனியார் நிறுவனமாக துவக்கப்பட்ட பனாமா பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட், பல்வேறு வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் தயாரிப்பில் திரவ பாரஃபின் எண்ணெய்கள், பெட்ரோலியம் ஜெல்லி, மை எண்ணெய்கள், ஆன்டிஸ்டேடிக் கோனிங் எண்ணெய், ரப்பர் செயல்முறை எண்ணெய்கள், மின்மாற்றி எண்ணெய்கள், கேபிள் நிரப்புதல் கலவைகள் மற்றும் பாரஃபின் மெழுகு ஆகியவை அடங்கும்.

பெட்ரோலிய சிறப்பு தயாரிப்பு(Petroleum Specialty Products) பிரிவில் 80க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் தொழில் புரிந்து வருகிறது. இவை மைகள் மற்றும் பிசின்கள், ஜவுளி, ரப்பர், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், வாகனம், மின்சாரம், கேபிள்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு இன்றியமையாதவை. 

1993ம் ஆண்டில் நிறுவனம் பொது நிறுவனமாக(Public Limited) பதிவு செய்யப்பட்டு 1994ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்திற்கு தற்போது உள்நாட்டில் 4 உற்பத்தி ஆலைகள் உள்ளது. 

வருவாயை பொறுத்தவரை நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அழகுசாதனம் மற்றும் மருந்துத்துறை பிரிவுகளில் 24 சதவீதமும், மைகள் / பூச்சுகள் பிரிவில் 21 சதவீதமும், ரப்பர் செயல்முறை பிரிவில் 19 சதவீதமும், ஜவுளித்துறையில் 19 சதவீத வருவாய் பங்களிப்பையும் கொண்டுள்ளது. உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் 51 சதவீதம் ஏற்றுமதியில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களுக்கு நிறுவனம் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாபர் இந்தியா, ஹூபர் குழுமம், ஏடிசி(ATC) டயர் ஆகியவை உள்ளன. 

நிறுவனம் சமீபத்தில் நான்கு புதிய தயாரிப்பு பொருட்களாக: மை மற்றும் பூச்சு தொழிலுக்கான அரோமா ஃப்ரீ டிஸ்டில்லேட்ஸ்(Aroma Free Distillates), பெயிண்ட் தொழிலுக்கான நறுமண இலவச கரைப்பான்கள், துளையிடுதல் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கான மக்கும் எண்ணெய்கள் மற்றும் ரப்பர் தொழில்துறைக்கான நறுமணமற்ற புதிய எண்ணெய்கள் ஆகியவற்றை சந்தையில் வெளியிட்டுள்ளது. 

வருங்காலத்தில் பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தங்களது இலக்கு என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் முயற்சியாக கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுமார் 30,000 டன் திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவியுள்ளது. இவற்றில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகமயமாக்கப்பட்டுள்ளது.

பனாமா பெட்ரோகெம் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 1,953 கோடி ரூபாய். நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.157 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 21 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்திற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் என பெரிதாக எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,249 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,940 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) விகிதம் கடந்த பல வருடங்களாக சற்று ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம்(PBT) ரூ. 295 கோடியாகவும், நிகர லாபம் 233 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.940 கோடி(மார்ச் 2023). கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி சராசரியாக 13 சதவீதமும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமுமாக இருந்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமும், இதுவே பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது. 

நிறுவனத்தை பொறுத்தவரை பாதகமான நிலையாக மூலப்பொருட்களின் விலை மாற்றம்(கச்சா எண்ணெய்), சுற்றுச்சூழல் அபாயங்கள், டாலர் விலை மாற்றம், துறையில் ஈடுபடும் போட்டி மற்றும் பெரு நிறுவனங்கள், அரசு கொள்கைகள் ஆகியவை. சாதகமான நிலை என காணுகையில் நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு பொருட்கள், வலுவான வாடிக்கையாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு(R&D) ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுதல், ஏற்றுமதி சந்தையில் காணப்படும் வாய்ப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான உலகளாவிய தேவை.

2022-23ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனம் ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 222 கோடி ரூபாயை வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) தொகையும் மேம்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடு

தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடு 

 

Difference between Audited and Unaudited Company Financial Reports – Fundamental Analysis

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திறன் ஆகிய செயல்பாடுகளை அறிய அந்நிறுவனத்தின் மூன்று முக்கியமான நிதி அறிக்கைகளை அலச வேண்டும். இந்த மூன்று அறிக்கைகளும் ஒரு முதலீட்டாளர் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான அடிப்படை அறிக்கைகளாகும்.

 

  • லாப-நட்ட அறிக்கை (Profit & Loss Statement or Net Income Statement)

  • இருப்புநிலை அறிக்கை (Balance Sheet)

  • பணப்பாய்வு அறிக்கை (Cash Flow Statement)

 

இந்த அறிக்கைகளின் மூலம் ஒரு நிறுவனத்தின் விற்பனை வருவாய், செலவுகள், கடன் தன்மை, லாபம் மற்றும் லாப வளர்ச்சி, வருமான வரி, ரொக்க கையிருப்பு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், குறுகிய மற்றும் நீண்ட கால கடன், தொழிலுக்கான மூலதனம் மற்றும் பங்குதாரர்கள் பங்களிப்பு என பல்வேறு தகவல்களை பெறலாம்.

 

ஒரு நிறுவனம் உண்மையில் வளர்ச்சியை நோக்கி தான் செல்கிறதா, நிறுவனம் சார்பாக ஏற்கனவே சொல்லப்பட்ட இலக்கு சரியானதா, சந்தையில் நிறுவனத்தின் நிதித்திறன் அதன் பங்கு விலையில் தெரிகிறதா, நிறுவனம் திவால் நிலைக்கு செல்லுமா, தொழிலுக்கான எதிர்கால வாய்ப்பு என ஆராய்வதற்கு இந்த அறிக்கைகள் உதவும்.  

 

உண்மையில் ஒரு நிறுவனம் நாளை திவால் நிலைக்கு செல்லும் என அந்நிறுவனத்தின் குடும்பத்தினருக்கு கூட தெரியுமா என நாம் யூகித்தும் பார்க்க முடியாது. ஆனால் இந்த மூன்று முக்கிய அறிக்கைகளை கொண்டு ஒரு நிறுவனம் தொழிலில் சிறந்து விளங்குமா, எதிர்காலத்தில் தாக்குப்பிடிக்குமா, நிறுவனமே கைமாறினாலும் தொழில் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்புள்ளதா என்பதனை முதலீட்டாளரான நாம் அறியலாம். இதற்கு உதாரணமாக சத்யம் கம்ப்யூட்டர், யெஸ் வங்கி, ஜெய்ப்ரகாஷ் அசோஸியேட்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிகழ்வுகளை சொல்லலாம்.

 

மேற்சொன்ன நிதி அறிக்கைகளை ஒரு நிறுவனம் காலாண்டுக்கு ஒரு முறையோ, அரையாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ பொதுவெளியில் முதலீட்டாளர்கள் அணுகும் படி வெளியிடுவது சட்டமாகும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்திலும், இன்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் நிறுவனம் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்த நிதி அறிக்கைகள் மட்டுமே எளிதாக கிடைக்கப்பெறுகிறது. 

 

பொதுவெளியில், நமக்கு கிடைத்த தகவல்களை கொண்டே நாம் ஆராய முடியும். பங்குச்சந்தையில் மற்றவையெல்லாம் வெறும் யூகமே !  

 

நிறுவனம் பொதுவெளியில் வெளியிடும் இந்த நிதி அறிக்கைகள் பெரும்பாலும் தணிக்கை செய்யப்பட்ட(Audited Financial Statements) அல்லது தணிக்கை செய்யப்படாத(Unaudited Financial Statements) அறிக்கைகளாக இருக்கும். பொதுவாக தணிக்கை அல்லது தணிக்கை செய்யப்படாத அறிக்கைகள் வணிகப்பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் கணக்கியல் செயல்முறையாகும்.

 

ஒரு தொழில் அல்லது வணிகத்தின் நிதி பரிவர்த்தனைகளை சரியாக ஒழுங்குபடுத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில், அதனை ஒரு அறிக்கையாக நிறுவனம் தயார் செய்யும். அந்த அறிக்கையின் துல்லியத்தன்மை (உண்மைத்தன்மை) எந்தளவில் உள்ளது என்பதனை நாம் மேற்சொன்ன கணக்கியல் பயன்பாடு மூலம் அறியலாம்.

 

தணிக்கை செய்யப்படாத(unaudited) அறிக்கைகள் என்பது ஒரு நிறுவனத்தால் நிதி அறிக்கையாக தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுவே தணிக்கை செய்யப்பட்ட(Audited) அறிக்கைகள் என்பது ஒரு நிறுவனத்தால் நிதி அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிய, அந்நிறுவனம் சாராத வேறொருவர் ஆராய்ந்து மதிப்பிடுவதுண்டு. இந்த மதிப்பீட்டிற்கு பின்பு வெளியிடப்படும் அறிக்கை தான் பொதுவெளியில் வரும். இதனை தான் நாம் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையாக காண்கிறோம்.

 

இந்த இரு அறிக்கைகளிலும் கிடைக்கப்பெறும் தகவல்கள் பெரும்பாலும் தொடர்புடையதாக மற்றும் சரியாக இருந்தாலும், தணிக்கை செய்யப்படாத அறிக்கையை காட்டிலும் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின் மூலம் ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கும், அதன் பங்குதாரர்களுக்கும்  நம்பிக்கையை ஏற்படுத்தலாம். 

 

பொதுவாக பட்டியிலப்பட்ட ஒரு நிறுவனத்தின் வருடாந்திர நிதி அறிக்கைகள் மட்டுமே தணிக்கை(Audited) செய்யப்படுகின்றன. மற்ற கால நிதி அறிக்கைகள் பெரும்பாலும் தணிக்கை செய்யப்படுவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை அதன் ஆண்டு அறிக்கையில்(Annual Report) மட்டுமே உள்ளடக்கியுள்ளது. எனவே முழு ஆண்டு நிதி அறிக்கைகள் ஒரு முதலீட்டாளருக்கு பெரிதும் உதவும்.

 

தணிக்கை செய்யப்படாத(unaudited) அறிக்கைகள் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கு ஒரு முறை பொதுவெளியில் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. ஒரு முதலீட்டாளருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிக்காகவும்(Regulations) இது போன்ற கால அறிக்கைகள் வெளியிடப்படுகிறது. சுருக்கமாக நிறுவனம் நடப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதனை தணிக்கை செய்யப்படாத அறிக்கையின் மூலம் நிறுவனம் நமக்கு சொல்கிறது.

 

தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை காட்டிலும், தணிக்கை செய்யப்படாத அறிக்கைகளை(unaudited) தயார் செய்வதற்கு நிறுவனத்திற்கு பெரிதாக செலவினம் இல்லை. நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களை கொண்டு, அதன் விருப்பத்தின் பெயரில் இதனை தயார் செய்து கொள்ளலாம். அதே வேளையில் தணிக்கை எனும் போது நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வர வேண்டும், அதற்கான ஆதாரமும் இருக்க வேண்டும் மற்றும் தணிக்கையாளருக்கான கட்டணம் சற்று அதிகமே !

 

ஒரு நிறுவனத்திற்கு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை தயார் செய்ய மற்றும் வெளியிட அதிகக் கட்டணம் மற்றும் நேரம் அதிகம் எடுத்து கொண்டாலும், நிறுவனம் சாராத வேறொருவர் மூலம் மதிப்பிடப்படும் போது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு, நிறுவனத்தின் மீது உண்மைத்தன்மையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்  

India’s Retail Inflation rate in the month of September 2023 – 5.02 Percent

நாட்டின் சில்லறை விலை(நுகர்வோர்) பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 6.83 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாத முடிவில் 5.02 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், கடந்த மூன்று மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் சற்று குறைந்து 6.56 சதவீதமாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையும் 4.61 சதவீதமாக குறைந்துள்ளது.

வீட்டுமனை, ஒளி மற்றும் எரிபொருட்கள், புகையிலை பொருட்களின் விலையும் செப்டம்பர் மாதத்தில் குறைந்து காணப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலிருந்து காணுகையில், இரு மாதங்களுக்கு இடையிலான நுகர்வோர் விலை வீழ்ச்சி தற்போதைய ஆகஸ்ட் – செப்டம்பர் 2023 காலத்தில் தான் காணப்படுகிறது.

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க(Consumer Price Index – CPI) கணக்கீட்டில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் சுமார் 46 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், சந்தை மதிப்பீட்டை(5.5 சதவீதம்) காட்டிலும் குறைவாக காணப்படுகிறது. 

இந்தியாவில் பணவீக்க விலைக் குறியீடு இரு வகைகளில் கணக்கிடப்படுகிறது – சில்லரை(நுகர்வோர்) விலை மற்றும் மொத்த விலை பணவீக்க விகிதம். நாட்டின் நுகர்வோர் விலை அதிக ஏற்ற – இறக்கமாக இருப்பதற்கு காரணமாக பெரும்பாலும் நாம் எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருப்பது தான். 

இது போக பருவமழையின் நிச்சயமற்ற தாக்கம், மேம்படுத்தப்படாத சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், அதிக நிதிப் பற்றாக்குறையும் பணவீக்க விகித மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

What means a Debt Free Listed Company in the Stock Market ?

கடனில்லா நிறுவனங்கள் என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அதன் இருப்புநிலை அறிக்கையில்(Balance Sheet) கடன் எதுவும் இருக்க கூடாது. பொதுவாக ஒரு நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய அல்லது தொடர்ந்து தொழில் புரிய கடன் வாங்கலாம். இந்த கடன் பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ(Debt Securities) இருக்கலாம். 

பங்குகளாக கடன் பெறப்பட்டிருந்தால், பின்னாளில் நிறுவனத்தின் லாபத்தில் பங்குதாரர்களுக்கும் பங்குண்டு. அதே வேளையில் கடன் பத்திரங்களின் மூலம்  பெறப்படும் கடன் தொகைக்கு, பின்னாளில் வட்டியுடன் சேர்த்து அசல் தொகையை நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும்.

நிறுவனத்தின் கடன் பொதுவாக குறுகிய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ இருக்கலாம். நிகர கடன்(Net Debt) எனும் போது, ஒரு நிறுவனத்திற்கு கடன் இருக்கலாம். அவை குறுகிய கால அல்லது நீண்ட கால கடனாக இருக்கக்கூடும். அந்த கடனை நிறுவனம் இன்றே செலுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், நிறுவனத்திடம் அதனை செலுத்துவதற்கான ரொக்க தொகை(Cash & Cash Equivalents) உள்ளதா என்பதை ஆராய்வது, நிகர கடனாகும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் முடிவில் அதன் இருப்புநிலை அறிக்கையின் படி, ரூ.50 கோடி கடன் உள்ளதாக எடுத்து கொள்வோம். இப்போது, சொல்லப்பட்ட ஆண்டின் முடிவில் அந்த நிறுவனத்திடம் ரூ.25 கோடி ரொக்கமாக இருக்கும் நிலையில், அந்த நிறுவனம் தனது கடனை குறைக்கும் பட்சத்தில், மீதமிருக்கும் கடன் ரூ.25 கோடி மட்டுமே.

Net Debt = Borrowings(Short Term Debt + Long Term Debt) – Cash & Cash Equivalents

இதுவே நிறுவனத்திடம் ரொக்க தொகை ரூ.50 கோடியாக இருந்து கடனை அடைக்கும் நிலையில், நிறுவனத்திடம் தற்போது கடன் எதுவும் இருக்காது. இதனை தான் நாம், ‘நிகர கடனில்லா தன்மை(Net Debt Free)’ என்கிறோம். இங்கே நிறுவனம் அந்த கடனை உடனடியாக உண்மையில் செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. கடனை திரும்ப செலுத்த கூடிய நிலை ஏற்பட்டால் என்ற தன்மையை மட்டுமே இந்த விதிமுறை கூறுகிறது.

நிறுவனத்தின் கடன் தன்மையை புரிந்து கொள்ள மற்றொரு முறையை நாம் காணலாம். அதாவது நிறுவனத்தின் மொத்த கடனை, அதன் பங்குதாரர்களின் பங்கு மதிப்பை கொண்டு ஒப்பிடுவது. இதனை கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் என்கிறோம்.

Debt to Equity Ratio = Total Liabilities / Shareholder’s Equity

(Simple Way to Calculate from the Balance Sheet: Borrowings / (Equity Share Capital + Reserves))

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை ஒன்று(1.0) என வந்தால், நிறுவனத்தின் கடனும், பங்கு மதிப்பும் சரிசமமாக உள்ளது. இதன் காரணமாக நிறுவனம் பின்னாளில் தனது கடனை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படலாம். இது நிறுவனத்திற்கும், பங்குதாரர்களுக்கு நல்லதல்ல. இதுவே 0.5 என விகிதம் இருந்தால், நிறுவனத்தின் கடன் தன்மை, பங்குகளின் மதிப்பில் பாதியாக உள்ளது என பொருளுண்டு. 

சுருக்கமாக சொன்னால், ஒருவருடைய வருவாய் ரூ.1 என கொள்ளும் போது, அதற்குள்ளாகவே அதன் செலவுகளும் இருக்க வேண்டும். மீறினால், கடன் தன்மை அதிகரித்து நிர்வாகம் சீர்கெடும், தொழிலும் பாதிப்படையலாம். இதுவே ஒரு ரூபாய் வருவாய் இருக்கையில், செலவு 50 பைசா அல்லது அதற்கு கீழாக இருக்கும் போது, அவர் பின்னாளில் கடன் வாங்கினாலும் அதனை திரும்ப செலுத்துவதற்கான திறன் உள்ளது. வருவாயை காட்டிலும் செலவு குறைவாக இருக்கும் நிலையில், தொழிலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏதுமிருக்காது.

மேலே சொல்லப்பட்ட இரு நிலைகளையும் அறிந்து வைத்திருப்பது, பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு அவசியம். ஒரு நிறுவனத்திற்கு நிகர கடன் நன்றாக இருந்தாலும் சரி, கடன்-பங்கு தன்மை 0.5 விகிதத்துக்கு குறைவாக இருந்தாலும் சரி – அவை கடனில்லா நிறுவனங்களாக கருதப்படும்.

ஒரு நிறுவனம் கடனில்லா தன்மையாக இருப்பதில் சாதகமும், பாதகமும் உள்ளது. கடனில்லாமல் இருக்கும் போது, நிறுவனத்தின் லாபத்திலிருந்து கடனுக்கான வட்டி தொகைக்கு ஒதுக்க தேவையில்லை. தொழிலை விரிவாக்கம் செய்ய போதுமான தொகை கையிருப்பில் இருக்கும். லாபத்தில் பங்குதாரர்களுக்கு பங்களிப்பை(Dividend, Buyback) அளிக்கலாம். 

பொதுவாக பொருளாதார மந்தநிலை மற்றும் துறை சார்ந்த நிதிச்சிக்கல் ஏற்படும் போது, கடனில்லா நிறுவனங்கள் தப்பி பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். திவால் நிலையை தவிர்ப்பது கடனில்லா நிறுவனங்களுக்கு எளிது. 

பாதகமான நிலையென்றால், ஒரு நிறுவனம் பங்குகள் மூலம் தனது முதலீட்டை அதிகம் ஈர்க்கையில், அது அந்த நிறுவனத்திற்கு நீண்ட காலத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், பொதுவாக கடன் பத்திரங்களின் மூலம் பெறப்படும் கடனுக்கு, பங்குகளை காட்டிலும் செலவு விகிதம் மிக குறைவே. பங்குகள் எனில், லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். கடன் பத்திரங்கள்(Debt Funds) எனில், நிலையான வட்டியுடன் அசலை செலுத்தினால் போதுமானது. இதன் காரணமாக தான் பெரும்பாலான நிறுவனங்கள், வங்கிக்கடனை குறைந்த வட்டி விகிதத்தில் வாங்கி கொள்கிறது.  

இந்திய பங்குச்சந்தையில் கடனில்லா நிறுவனங்கள்:

  • கடன்-பங்கு(Debt to Equity Ratio) விகிதம் ஒன்றுக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,166
  •  கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,550
  • பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 366
  •  பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 50 சதவீதத்திற்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 257
  • பங்கு மூலதன மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், ரொக்க கையிருப்பு(Cash Equivalents) நிறுவனத்தின் கடனை காட்டிலும் அதிகமாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கு மேலாக மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 147.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

International Coffee Day – October 1, 2023 – Industry Insights

காபி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ம் நாளில் சர்வதேச காபி தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. தேசிய காபி தினம் என ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 1963ம் ஆண்டில் லண்டனை தலைமையிடமாக கொண்டு சர்வதேச காபி அமைப்பு(International Coffee Organization) ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பில் இந்தியா உள்பட 42 நாடுகள் காபி உற்பத்தி உறுப்பினர்களாகவும், 7 நாடுகள் காபி இறக்குமதி செய்யும் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இறக்குமதி செய்யும் உறுப்பினர் நாடுகளாக ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராச்சியம் மற்றும் துனிசியா ஆகியவை உள்ளன. 

சர்வதேச காபி தினத்தில் சில காபி உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள், அன்றைய நாளில் காபியை இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையிலோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ‘காபி’, ஒரு பிரபலமான பானமாகவும், பொருட்சந்தையில் முக்கிய பொருளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் காபியை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்குகிறார்கள். 

உலகில் நாள்தோறும் சுமார் 225 கோடி கப் அளவிலான காபி, 100 கோடி நபர்களால் உட்கொள்ளப்படுகிறது. உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான காபி உற்பத்தி பெரும்பாலும் வளரும் நாடுகளில் தான் உற்பத்தியாகிறது. உலகம் முழுவதும் காபியை உற்பத்தி செய்யும் சிறு வணிகர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2.50 கோடி. தென் அமெரிக்காவில் தான் காபியை உட்கொள்ளும் அல்லது நுகரும் தன்மை அதிகமாக உள்ளது.

சர்வதேச காபி சந்தையின் மதிப்பு சுமார் 127 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய காபி சந்தையின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலக காபி விற்பனையின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 முதல் 5 சதவீதமாக(CAGR 2023-2028) மதிப்பிடப்படுகிறது. உலகின் காபி விற்பனை மூலமான பெரும்பாலான வருவாய் அமெரிக்காவிலிருந்து தான் கிடைக்கப்பெறுகிறது. உலக காபி சந்தையில் ஒரு தனிநபரின் சராசரி நுகரும் அளவு நாளொன்றுக்கு 700 முதல் 800 கிராம்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

காபி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில். வியட்நாம், கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஏழாவது மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகளாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக காபி விற்பனை சந்தையின் நாயகனாக மற்றும் பிராண்டாக, ‘ஸ்டார் பக்ஸ்(Starbucks)’ உள்ளது. இந்நிறுவனம் காபி விற்பனை மூலம் சுமார் 32.25 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. அதாவது அமெரிக்காவின் மொத்த காபி விற்பனை வருவாயில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம். ஸ்டார் பக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல Panera Bread, McCafe, Lavazza, Tim Hortons, Dunkin’s Brands ஆகிய நிறுவனங்கள்(பிராண்டுகள்) உள்ளன.      

2022-2023ம் ஆண்டின் முடிவில் உலக காபி தொழிற்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 495 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் காபி உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை கர்நாடக மாநிலம் மட்டும் கொண்டுள்ளது. இதற்கடுத்தாற் போல கேரளா 23 சதவீதத்தையும், தமிழ்நாடு 6 சதவீதத்தையும் பங்களிப்பாக கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஆண்டுக்கு சுமார் 2.33 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான காபியை உற்பத்தி செய்கிறது. 

இந்திய உள்ளூர் சந்தையில் காபி நுகரும் தன்மை 73 சதவீதம் நகரங்களிலிருந்து தான் வருகிறது. இந்திய காபியை அதிகம் நுகரும்(இறக்குமதி) நாடுகளாக இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா, லிபியா, போலந்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவின் காபி ஏற்றுமதியில் இத்தாலியின் பங்களிப்பு மட்டும் சுமார் 45 சதவீதம். அடுத்த ஐந்து வருடங்களில்(2023-2028) இந்திய காபி சந்தையின் விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதத்தை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

இந்திய பங்குச்சந்தையில் தோட்டத்துறை பிரிவில்(Plantation) சுமார் 44 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் உட்பிரிவான தேநீர் மற்றும் காபி(Tea & Coffee) துறையில் 26 நிறுவனங்கள் உள்ளன. இச்சந்தையின் முதன்மை இடத்தை, ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ்’ தக்க வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.81,400 கோடி. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை நிறுவனமாகவும் ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல்

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல் 

Captain Pipes Limited – Fundamental Analysis – Stocks

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேப்டன் குழுமத்தின் துணை நிறுவனம் தான் கேப்டன் பைப்ஸ் லிமிடெட். பிளாஸ்டிக் செய்யப்படாத பி.வி.சி(UPVC) குழாய்கள் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது கேப்டன் பைப்ஸ் நிறுவனம். 

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக கருதப்படும் UPVC குழாய்கள் பொதுவாக வெப்ப செயல்திறன் மற்றும் நீடித்த ஆயுள் காலத்தை கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் UPVC தொழில்நுட்பம், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. UPVC சாளரங்கள் பெரும்பாலும் பல்நோக்கு செயல்பாடுகளை கொண்டவை. 

கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட கேப்டன் பைப்ஸ் நிறுவனம் UPVC குழாய்கள் பிரிவில் உறை குழாய்கள், பிளம்பிங் குழாய்கள், உறிஞ்சும் குழாய்கள், தோட்ட குழாய்கள், HDPE குழாய்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்கள், SWR குழாய்கள், கரைப்பான் சிமெண்ட் மற்றும் பி.வி.சி. அழுத்த குழாய்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த குழாய்கள் பெரும்பாலும் நீர் வழங்கல் பகுதிகள்(Water Supply Lines), வடிகால் அமைப்பு, கழிவு நீர் பாதை, நீர்ப்பாசன அமைப்புகள், மின் வழித்தடம் மற்றும் கட்டுமான பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சுமார் 62,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய தொழில்நுட்பத்தை(German extrusion lines and Japanese injection molding machine) கொண்டு குழாய்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தனது குழாய் விற்பனை கிளையை நிறுவியுள்ள கேப்டன் பைப்ஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பெரு நில பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

அகமதாபாத் அருகே புதிதாக ஒரு ஆலையை(Greenfield Plant) அமைப்பதற்கான திட்டத்திற்கு, சமீபத்தில் நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக அமையவுள்ள ஆலை 20,000 மெட்ரிக் டன் திறன் கொண்டதாகவும், இதற்கான மொத்த முதலீடு 25 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலையிலிருக்கும் உற்பத்தி திறனை இரட்டிப்பாக முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையின் SME பிரிவில் கேப்டன் பைப்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையில் தனது பொதுப்பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பின்னர் நடப்பு 2023ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் மும்பை பங்குச்சந்தையின் பிரதான பலகைக்கு(Migration) மாற்றப்பட்டுள்ளது. ஒன்பது வருடத்திற்கு முன்பு, SME பிரிவில் பங்கு வெளியிடுகையில் இதன் சந்தை மதிப்பு சுமார் நான்கரை கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை 0.13 மடங்கிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1.44 என்ற அளவிலும் உள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் நிறுவனம் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. அதே காலத்தில் நிறுவனத்தின் முக மதிப்பும்(Face value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 85 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.81 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) கடந்த பத்து வருடங்களில் சராசரியாக ஐந்து சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.1.81 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 46 சதவீதமாகவும் இருந்துள்ளது. அதே வேளையில் இதன் பங்கு விலை கடந்த மூன்று வருட காலத்தில் 200 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 6.10 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் தலைவராக திரு. ரமேஷ் கிச்சாடியா மற்றும் நிர்வாக இயக்குனராக திரு. கோபால் கிச்சாடியா ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். 

கேப்டன் குழுமத்தின் மற்ற துணை நிறுவனங்களாக கேப்டன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட், கேப்டன் பாலிபிளாஸ்ட் லிமிடெட், கேப்டன் டெக்னோகாஸ்ட் மற்றும் கேப்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil