இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

Can Govt. Employees participate in the Stock(Share) Market ? (CCS Rules, 1964)

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் டீமேட் கணக்கு துவங்கி, பங்குகளில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யலாமா என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கேள்வி. நமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் இது சார்ந்த சந்தேகத்தை கேட்டிருந்தனர். இது சார்ந்த விதிகளை பற்றி மத்திய சிவில் சேவைகள் (நடத்தை), 1964 – Central Civil Services(Conduct) Rules, 1964 ஆவணத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சேவைகள்(நடத்தை), 1964 ஆவணத்தில் வரிசை எண்.21, விதி எண்.16ன் கீழ், முதலீடு, கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் பகுதியில் 35(1) மூலம் அரசு ஊழியர்கள் முதலீடு சார்ந்த விஷயங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கூறப்பட்டுள்ளது.

“ 35(1) எந்தவொரு பங்கு, பங்கு சார்ந்த அல்லது மற்ற முதலீட்டில் எந்த ஒரு அரசு ஊழியரும் ஊகம்(Speculative) சார்ந்த வணிகத்தில் ஈடுபடக் கூடாது. இந்த துணை விதியில் உள்ள பங்கு மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு இது பொருந்தாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில் எந்தவொரு அரசு ஊழியரும் பங்குகளிலோ அல்லது மற்ற முதலீடுகளிலோ ஊகம் சார்ந்த, அதாவது நாள் வர்த்தகம், ஊக வணிகம்(Speculative Trading & Derivatives) போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்போது முதலீடாக செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தரகர்(Stock Broker) அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் தான் அவர்களது முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஊகம் என்பது அடிக்கடி பங்குகள் அல்லது மற்ற முதலீடுகளை வாங்கி அடிக்கடி விற்பது என்பதாக கருதப்படுகிறது. 

“40(2) (i) எந்தவொரு அரசு ஊழியரும் அவருடைய குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரையும் அவர் சார்பாகவோ அல்லது குடும்பத்தின் நலன் சார்பாகவோ ஊக வர்த்தகத்தில் ஈடுபட வைக்கக் கூடாது மற்றும் அனுமதிக்க கூடாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில், அரசு ஊழியர்கள் தங்கள் சார்பாகவோ அல்லது மற்றவரின் நலனுக்காகவோ, தங்களது குடும்ப நபர்களை பங்குச்சந்தையில் மற்றும் பிற முதலீட்டில் ஊக வணிகம்(Day Trading & Derivatives) செய்ய அனுமதிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. 

ஐ.பி.ஓ(IPO – Initial Public Offering) போன்ற முதன்மை சந்தையில் அரசு ஊழியர்கள் ஈடுபடலாம் எனவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த ஐ.பி.ஓ. வெளியீட்டின் போது அவர்கள் முதலீட்டாளராக பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு பங்குகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனுமதியில்லை(Decision making process of Fixation of price) எனவும் சொல்லப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐ.பி.ஓ. வெளியீட்டில் முதலீடு செய்த பின்பு, இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) கிடைத்த லாபத்தை பங்கு வெளியீட்டு நாளன்று எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான அரசு வேலைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்(Discharge of his official duties) எனவும், மக்களிடம் பெறப்பட்ட அரசு வரி வருவாய் மூலம் அவர்களுக்கான ஊதியம் செலுத்தப்படுவதால், இது போன்ற ஊக வணிகத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாதென விளக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தையில் அரசு ஊழியர்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்வதை தான் அரசு அறிவுறுத்துகிறது.

மேலும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கிகளில் டெபாசிட் செய்தல், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தல், மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுத்தல் போன்றவற்றிற்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளது.

Central Civil Services(Conduct) Rules, 1964 பற்றி அறிய…

Central Civil Services(Conduct) Rules, 1964

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

Understanding about Stress Test Methodology – Mutual Funds Investments

பொதுவாக, மருத்துவத் துறையில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) எனும் உடற்பயிற்சி அழுத்த சோதனை என்பது நமது உடல் செயல்பாடுகளின் போது, நமது இதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனை அளவிட உதவுகிறது. உதாரணமாக ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிற உடலியக்கம் சார்ந்த வேலைகளை செய்தல் அல்லது ட்ரெட் மில்(TMT) பரிசோதனை செய்யும் போது இதயத்தின் நிலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் அறியலாம். இந்த டெஸ்ட் முறை ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு மற்றும் பிற இதயம் சார்ந்த பிரச்சனைகளை அறிய உதவுகிறது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவரும் நமக்கு இதய நிலைக்கான சிகிச்சைகளை வழங்குவார்.

இதுவே முதலீட்டில் காணும் போது, ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் உள்ள சொத்துக்களில் காணப்படும் பணப்புழக்கத்தை(Liquidity) மதிப்பிடுவதற்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் உதவுகிறது. முக்கியமாக பொருளாதார மந்தநிலையின் போது அல்லது பங்குச்சந்தை அதிகமாக சரியும் காலங்களில் இந்த முறை பயன்படுகிறது. சொல்லப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் வெளியேறுவதற்கான காலத்தை இது குறிக்கிறது. 

பொதுவாக சந்தை சரியும் காலங்கள், கொரோனா பெருந்தொற்று காலங்களில் முதலீட்டாளர்கள் அச்சத்தில் அல்லது தேவைக்காக அதிக பணத்தை ஒரு குறிப்பிட்ட திட்டத்திலிருந்து எடுக்கும் போது, அத்திட்டத்தில் பணப்புழக்கம்(போதுமானதாக) எவ்வாறு உள்ளது, பெரும்பாலானோர் எளிதாக தங்களது பணத்தை பெற முடிகிறதா, இதனை பண்டு மேலாளர் எவ்வாறு கையாள்கிறார், அவ்வாறு பணம் வெளியேறும் சூழ்நிலையில் அத்திட்டம் மேற்கொண்டு எந்தவித பெரிய சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளதா என்பதனை அறிய இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பயன்படுகிறது.

இது போன்ற செயல்முறை பொதுவாக, ‘வருமுன் காப்பது நலம்’ என்ற சிந்தனையை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையை தான் தற்போது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும்(SEBI), அதனை சார்ந்த ஆம்ப்பையும்(AMFI) இணைந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்பது ஒன்றும் புதிய முறையல்ல. இது பொதுவாக நிதித்துறையில், குறிப்பாக வங்கிகளில் அதன் திறனை மதிப்பிட செயல்படுத்தப்படும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோர் ஏதேனும் காரணத்தால் ஒரே காலத்தில் அதிக பணத்தை வெளியே எடுக்கும் போது, வங்கி திவாலாகாமல் செயல்படுத்தக் கூடிய நிலைகளை அல்லது வழிமுறைகளை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் பெறலாம்.

மியூச்சுவல் பண்டை பொறுத்தவரை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) கடன் பத்திரத் திட்டங்களுக்கு பல வருடங்களாக இருந்து வருகிறது கவனிக்கத்தக்கது. இதனை தான் நாம் பெரும்பாலும் Interest Rate Risk, Credit Rate Risk மற்றும் Liquidity Risk ஆகிய காரணிகளால் காண்கிறோம். உதாரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் நடந்த நிகழ்வை நாம் சொல்லலாம்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிறுவனம் திவாலாகாமல் தவிர்க்க, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தால் அதன் விளைவுகளை களைய, பங்குச்சந்தை ஒரே வாரத்தில் அதிக புள்ளிகள் சரிவை கண்டால் சமாளிக்க, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தல் என பொருளாதாரத்தில் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பகுப்பாய்வு தீர்வை அளிக்கும். 

உதாரணமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் எதிர்பாராவிதமாக இறக்க நேரிட்டால், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த இழப்பை எவ்வாறு சரி செய்வது, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சேர்த்து வைத்திருந்த பணத்தை முழுவதும் சிகிச்சைக்கு செலவழிக்காமல் இருக்க என்ன வழிகள் என நமது தனிநபர் நிதித்திட்டமிடலிலும் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் நிகழ்வை நாம் காணலாம்.

தற்போது செபி-ஆம்பையால்(SEBI-AMFI) சொல்லப்பட்ட விஷயம், ‘மியூச்சுவல் பண்டில் காணப்படும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Mid & Small Cap Funds) திட்டங்களில் ஏதேனும் காரணத்தால் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது முதலீட்டு பணத்தை கணிசமாக திரும்ப பெறுகையில், அத்திட்டத்தின் பணப்புழக்கம் எவ்வாறு இருக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் அத்திட்டத்தை மேற்கொண்டு நடத்த இயலுமா’ என்பதனை அறிய ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதத் தரவுகளின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட ஏற்கனவே ஆம்ப்பை கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த சோதனையை தொடரவும், அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட மிட் அல்லது ஸ்மால் கேப் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில்(AUM Portfolio) 25 சதவீதம் வரை பணம் வெளியே செல்ல எவ்வளவு நாட்கள் எடுக்கும், இதனைப் போல 50% வரை பணம் வெளியே செல்ல அதற்கு எடுக்கக்கூடிய காலம் எவ்வளவு என்பதனை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறை மூலம் செயல்படுத்தி அதன் முடிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். 

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மிட் கேப் திட்டத்திற்கு 50 சதவீதம் வரை பணம் வெளியேறுவதற்கு 27 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவே 25% வரை வெளியேறுவதற்கு 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மிட் கேப் பண்ட் பிரிவில் உள்ள மற்றொரு பண்டுக்கு இந்த வெளியேறும் நாட்கள் மாறுபடலாம். ஆக, விற்பனை ஏற்பட்டால் அவர்கள் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கிறார்கள் அல்லது பணப்புழக்கம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பரிசோதனை சொல்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனும் அழுத்த சோதனை, பொருளாதார அவசர காலங்களிலும், சந்தை அதிகமாக சரியும் நிலைகளில் மட்டுமே என கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அதற்காக இப்போது சந்தை சரியப்போகிறதா என கேட்க வேண்டாம். ஒரு வேளை நடந்தால் என்ன செய்வது என்பதற்கான பயிற்சி நிகழ்வு தான் இது. இதனால் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல உங்களது நிதி இலக்கை சார்ந்து முதலீட்டை நீண்டகாலத்தில் மேற்கொள்ளுதல் நலம்.

செபியும், ஆம்ப்பையும் ஏன் திடீரென்று தற்போது இந்த நிகழ்வை நடத்த சொல்கிறது ?

சிறு முதலீட்டாளர்களின் நலனை(முதலீடு) பாதுகாப்பதற்காக தான்.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான சந்தை அதிக ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதுவும் வரலாற்றில் காணாத ஏற்றமும், அதே வேளையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் குறைந்த வருவாய் வளர்ச்சியும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் நான்கு கோடிக்கும் குறைவான டீமேட் கணக்குகள் இருந்த நிலையில், இன்று சுமார் 14 கோடி டீமேட் கணக்குகள் மொத்தமாக உள்ளது. 

கடந்த இரண்டு முதல் மூன்று வருடமாக, இந்தியாவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், பெரு நிறுவனங்கள்(Large Cap) அளித்த முதலீட்டு வருவாயை காட்டிலும், மிகவும் அதிகமாக கொடுத்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு புதிதாக வரும் டீமேட் கணக்கு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், கடந்த ஒரு வருட, இரண்டு வருட(Past Performance) முதலீட்டு வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு இது போன்ற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக சந்தையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் பண்டுகள் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. அவை எந்தளவு ஏற்றம் கண்டிருக்கிறதோ, அதே போன்று இறக்கத்தையும் சந்திக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற நிகழ்வு லார்ஜ் கேப் பங்குகள் அல்லது பண்டு திட்டங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாகவே செபியும் முதலீட்டாளர்களை எச்சரிக்கும் வண்ணம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவை பங்கு சார்ந்த திட்டங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், குறிப்பிட்ட ஸ்மால் கேப் திட்டங்களில் புதிய முதலீடு பெறுவதை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 

பங்குச்சந்தையில் பொதுவாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதாவது வாங்கிய பங்குகளை அவ்வளவு எளிதாக விற்க முடியாது. இதனால் தான் பெரும்பாலான ஸ்மால் கேப் பங்குகளின் விலை ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக ஏற்றத்தை மட்டுமே கண்டிருந்தாலும், விற்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதே வேளையில் இந்த சிக்கல் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டு திட்டங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. காரணம், பண்ட் மேலாளரின் அணுகுமுறை தான். அவர் பெரும்பாலும் பணப்புழக்கம் உள்ள பங்குகளை தான் வாங்குவார். முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறும் வகையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை வடிவமைப்பதும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அவசியம்.

கடந்த பிப்ரவரி மாத ஆம்ப்பை(AMFI) முதலீட்டு தரவு அறிக்கையின் படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில்(Growth / Equity Oriented Schemes) சுமார் 12,00,77,704 கோடி ரூபாய் முதலீடாக வந்துள்ளது. இவற்றில் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு மட்டும் 3,23,80,735 கோடி ரூபாய். சொல்லப்பட்ட மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP) முதலீடு 19,187 கோடி ரூபாய். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தனிநபர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மட்டும் 60.30 சதவீதமாகும்.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர காலத்தில் ஹைபிரிட்(Hybrid) மற்றும் லார்ஜ் கேப் திட்டங்களிலும், நீண்ட காலத்தில் அஸெட் அலோகேஷன், மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் எஸ்.ஐ.பி(SIP) மற்றும் எஸ்.டி.பி.(STP) முறையில் முதலீடு செய்வது சிறந்தது. இங்கே நீண்டகாலம் என்பது குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகள் அல்லது உங்களது நீண்டகால நிதி இலக்கு. குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் முடிந்தளவு துறை சார்ந்த அல்லது தீமாட்டிக்(Thematic) பண்டு திட்டங்களை தவிர்ப்பது நல்லது. 

ஸ்ட்ரெஸ் டெஸ்ட் அறிக்கைகளை காண…

Disclosure of Stress Test & Liquidity Analysis  in respect of Mid Cap & Small Cap Funds

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

         

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

Market Trading hours of the Major Stock exchanges around the World

இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டு சுமார் 148 வருடங்கள் முடிந்தாகி விட்டது. கடந்த 1875ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை இன்று 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் சுமார் 366 லட்சம் கோடி – ஜனவரி 2024 தரவு) கொண்ட சந்தை மதிப்பாக உருவாகியுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

1992ம் ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின்(NSE) இன்றைய மதிப்பு 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 335 லட்சம் கோடி – டிசம்பர் 2023 தரவு). இச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 2,190. 

அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையை மதிப்பிடும் போது, ஒவ்வொரு 25 ஆண்டுகளில் இந்திய சந்தை நான்கு முறை கரடிப் பிடியில்(Bear Market) சிக்குவதாகவும், அமெரிக்க சந்தை போலவே இந்திய சந்தையிலும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கரடிச் சந்தையை முதலீட்டாளர்கள் சந்திப்பதாகவும் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிப்டி50 குறியீடு கடந்த 25 வருடங்களில் எட்டு முறை 20 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

2022-23ம் நிதியாண்டு தரவுப்படி உலகளவில் பங்குச்சந்தை பங்களிப்பு விகிதத்தை காணுகையில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு(Trading & Delivery) செய்கின்றனர். இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(UK) 33 சதவீதமாகவும், சீனாவில் 13 சதவீதமாகவும், பிரேசிலில் 2 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் இது 3 சதவீத பங்களிப்பாக உள்ளது. அதே வேளையில் இந்தியாவில் குடும்பங்கள் வாரியாக காணும் போது, இது 17 சதவீதமாக இருந்துள்ளது. 

இந்தியாவில் பங்குச்சந்தையில் ஈடுபடும் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவாக மற்றும் பரவலாக சொல்லப்படும் காரணி அதன் சந்தை வர்த்தக நேரம் தான். காலை ஒன்பது மணி முதல் மதியம் 03:30 மணி வரை. இந்த வேளையில் பெரும்பாலானோர் தங்களது நிறுவன வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இதுவே சந்தை பங்களிப்பு குறைவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், நம்ம நாட்டு பக்கத்துல இருக்கிற சீனாவின் பங்களிப்பு எப்படி அதிகரித்தது, அதன் வர்த்தக நேரம் தான் என்ன ?

(See Table below)

Market Trading Hours - Global Equity Markets

பொதுவாக அமெரிக்காவில் நிறுவன முதலீட்டாளர்களின்(Institutional Investors) பங்களிப்பு, பங்குச்சந்தையில் அதிகமாக இருக்கும். வல்லரசாக மட்டுமில்லாமல் வளர்ந்த பங்குச்சந்தையாகவும் அமெரிக்க சந்தை உள்ளது. இதன் காரணமாகவே நேரடி முதலீட்டாளர்களின் பங்களிப்பும், PMS, Hedge Fund மற்றும் Index Fund வாயிலாக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், அதன் மதிப்பும் அதிகம். இதுவே நம் நாட்டில் PMS மற்றும் Index Fund என்பது இன்னும் புது வரவாகவே இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தான் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களின் பங்களிப்பு(மியூச்சுவல் பண்டு மூலமாக) அதிகரித்து வருகிறது.

சீனாவை பொறுத்தவரை அந்நாட்டின் பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிதாக இணைப்பு இல்லை. சீனச் சந்தை, இந்திய சந்தையை காட்டிலும் அதிக மதிப்பை கொண்டிருந்தாலும் அங்கு பெரும்பாலும் அரசு கட்டுப்பாட்டில் தான் அவை இயங்கும். சந்தையும் உள்ளூர் முதலீட்டாளர்களை தான் அதிகமாக கொண்டிருக்கிறது. இது போல ஹாங்காங் சந்தையிலும் தொழில் வணிகர்கள் குறிப்பிடத்தக்க முதலீடு செய்திருந்தாலும் சீனச் சந்தை அமைப்பின் கீழ் தான் இயங்கி வருகிறது. 

சீன பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்குச்சந்தை பங்களிப்பு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே இந்தியாவில் பொருளாதாரத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது. சீனச் சந்தையில் பெரும்பாலும் அதன் அரசு கொள்கைகள் தான் ஆதிக்கம் செலுத்தும். இதுவே இந்தியாவில் சந்தை ஒதுக்கீடு பொறிமுறையில்(Market allocation mechanism) இயங்கும்.

பெரும்பான்மையான நாடுகளில் ஈர்க்கப்படும் முதலீடுகள் ETF(Exchange Traded Fund) அல்லது மியூச்சுவல் பண்டு வாயிலாக தான் வருகின்றன. ஆசியாவின் மிகப்பழமையான சந்தையாக இந்தியாவின் மும்பை பங்குச்சந்தை இருந்திருந்தாலும், இங்குள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, வேகமாக வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவே.   

இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பொதுவான காரணங்களாக நிதி சார்ந்த கல்வியறிவின்மை, பணப்பற்றாக்குறை, பாரம்பரிய முதலீடுகளை அதிகமாக சார்ந்திருப்பது(தங்கம், நிலம், வங்கி டெபாசிட்), பங்குச்சந்தையில் பொறுமையின்மை மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபமீட்ட எண்ணம், பாதுகாப்பான அணுகுமுறையை விரும்புதல் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த கடந்த கால அச்சம் ஆகியவை உள்ளது.

மேலே காணப்பட்ட வர்த்தக நேரப் பட்டியலின் முடிவில், உலகின் பெரும்பாலான சந்தைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகலில் மட்டுமே இயங்குகிறது. ‘வாரம் இருமுறை சந்தைக்கு விடுமுறை’ என்பதனை பெரும்பாலான சந்தைகள் அமெரிக்காவின் நகலாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

      

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

Investor awareness Arena

கடந்த சில வாரங்களாக நமது வாசகர்களும், சில வாடிக்கையாளர்களும் (குறிப்பாக நெருங்கிய நண்பர்களும்) தாங்கள் ஏற்கனவே நீண்டகாலத்திற்கு முதலீடு செய்திருந்த பண்டுகளை சந்தையில் உள்ள மற்ற பண்டுகளுடன் ஒப்பிட்டு, அந்த பண்டு கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் வருவாயை அளித்துள்ளது. நாம் ஏற்கனவே செய்துள்ள முதலீட்டை, இந்த பண்டில் மாற்றலாமே என கேட்கிறார்கள்.   

  • பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் போது, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும்பாலான பண்டுகள்(Mutual Funds) நிறைய வருவாயை கொடுக்கும். ஆனால், நீண்டகாலத்தில் இது சாத்தியமில்லை. 
  • ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பண்டுகள் ராஜநடை போடும். இதனை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தை பெற இயலாது.
  • பொதுவாக அதிக வருவாயை கொடுக்கும் பண்டுகள், பின்னொரு காலத்தில் சரிவை சந்திக்கும். எனவே எச்சரிக்கையுடன் நமது முதலீட்டு நோக்கம், நம் குழந்தைகளுக்கான மற்றும் சந்ததிக்கான செல்வத்தை சேர்க்க முயல வேண்டும் ! 
  • பண்டுகளை அடிக்கடி மாற்றுகையில் அதற்கான செலவினமும், வரியும் உண்டு. சிறுதுளி பெரு வெள்ளம் என்பதனை கவனத்தில் கொண்டு, நீண்டகாலத்தில் பொறுமையாக முதலீடு செய்வதே நன்று. 
  • பண்டுகளை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்வது அவசியம். பண்டுகளை மாற்ற வேண்டுமா, கூடுதலாக முதலீடு செய்யலாமா அல்லது இந்த பண்டில் முதலீட்டில் குறைக்கலாமா என்பதனை உங்களது நிதி ஆலோசகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கான வேலையை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கான குழப்பம் தீரும்.
  • எந்தவொரு ஆலோசகரின் உதவியின்றி நீங்களாவே பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய நினைத்தால், சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள் மற்றும் படிப்புகளை கற்பது அவசியம். கற்ற பின், முதலீடு செய்ய துவங்கலாம், தவறுகள் குறையலாம்.
  • பக்கத்து வீட்டுக்காரர் அந்த கார் மாடல் வைத்துள்ளார், எதிர் வீட்டுக்காரர் இந்த கைபேசி வைத்துள்ளார், மச்சான் இந்த பிரேஸ்லெட் அணிந்துள்ளார் என ஒவ்வொருடன் நாம் ஒப்பிட்டு கொண்டிருந்தால், நாம் நமக்கான இலக்கை அடைய முடியாது. நமக்கென்ன தேவை, நமக்கான நிதி இலக்குக்கான தொகை மற்றும் காலம் எவ்வளவு, அதனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் அவசியம். 
  • 11 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்த, திருவாளர் வாரன் பப்பெட்(Warren Buffett) அவர்கள் தனது 55 வயதிற்கு பின்னரே உலகளவில் பிரபலமானார். குறுகிய காலத்திலோ, குறுக்கு வழியிலோ யாரும் நிரந்தர செல்வங்களை முடியாது.  
  • இந்திய பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டை பொறுத்தவரையில் அடுத்த 20-30 வருடங்கள் மட்டுமே பிரகாசமான காலம்(பொருளாதாரம் சார்ந்து வாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கும் காலம்). அதற்கு பிறகு, உங்களுக்கு வங்கி வட்டி விகிதத்திற்கு மேல் ஒரு சதவீதம் கிடைத்தாலே பெருமை தான். இது தான் வல்லரசான அமெரிக்காவிலும், ஐக்கிய ராச்சியத்திலும், ஜப்பானிலும் நடந்துள்ளது.

முதலீட்டாளர், முதலீடு செய்யும் முன் கவனிக்க:

* முதலீடு செய்வதற்கான நோக்கம்(ஓய்வுக்கால நிதி, குழந்தைகளுக்கான கல்விச் செலவு, திருமணச்செலவு, வீடு கட்டுவது / வாங்குவது, வாகனம் வாங்குவது, சுற்றுலா, பிடித்த வேலையை செய்ய, தொழில் புரிய, அப்படி ஒண்ணுமில்லைங்க)

* முதலீடு செய்ய உள்ள தொகை 

* முதலீடு செய்யும் காலம் 

* எதிர்பார்க்கும் வருவாய் (கார்பஸ் தொகையை கணக்கிடுவது அவசியம்)

* மேலே சொல்லப்பட்டவைக்கான சரியான முதலீட்டு திட்டம் (முதலீட்டு ஆலோசகரின் உதவியுடன் அணுகுதல்)

நிதி சார்ந்த அக்கறையுடன், வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள்

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள் 

 

Football Field Analysis – Asset Valuation Techniques

பொருளாதாரவியலில் எந்தவொரு சொத்துக்கும் மதிப்பொன்று உள்ளது. முதலீட்டு மதிப்பீட்டின் மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் மதிப்பை நாம் அறியலாம். இதற்கென மதிப்பீட்டு பகுப்பாய்வு(Valuation Analysis) என்ற ஒரு அலகு உள்ளது. மதிப்பீட்டு பகுப்பாய்வு என்பது ஒரு சொத்தின் தோராயமான மதிப்பை மதிப்பிடும் ஒரு செயல்முறையாகும்.

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை பலவகைகளில் கிடைக்கப்பெற்றாலும், சுருக்கமாக இரு வகைகளை நாம் சொல்லலாம். அதாவது ஒப்பீட்டு முறை(Relative Valuation) மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation). ஒப்பீட்டு முறை என்பது ஒரு சொத்தினை அதனை ஒத்த மற்ற சொத்துக்களுடன் ஒப்பிடுவது அல்லது ஒரு நிறுவனத்தின் மதிப்பை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களின் மதிப்புடன் ஒப்பிட்டு முடிவினை அடைவதாகும். 

 

முழுமையான மதிப்பீட்டு முறை என்பது அவ்வாறாக இல்லாமல், ஒரு சொத்தின் அல்லது நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பை (மற்றவற்றுடன் ஒப்பிடாமல்) பெறுவதாகும். இதன் மூலம் ஒரு சொத்து அல்லது நிறுவனம்  இவ்வளவு மதிப்பை கொண்டிருக்கும் என சொல்வதாகும்.

 

சிறு உதாரணத்தின் மூலம் மேலே சொன்ன இரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறைகளை பார்ப்போம். ஒருவரின் தோட்டத்தில் (ஒரு ஏக்கர் நிலம்) நூறு கொய்யா மரங்கள் உள்ளது. ஒவ்வொரு மரமும் ஆண்டுக்கு நூறு கொய்யா பழங்களை தருகிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அவரது தோட்டத்தில் ஆண்டுக்கு ஆயிரம் கொய்யா பழங்கள்(100 மரங்கள் X 100 பழங்கள்) காய்த்து அதற்கான வருவாயை தருகிறது. இங்கே கொய்யா பழத்திற்கான விலை, ஒவ்வொரு கொய்யா மரத்தின் வாழ்நாட்கள் மற்றும் பருவம், கழிவு, விலைவாசி(உற்பத்தி செலவு மற்றும் பணவீக்கம்), அடுத்த 10-15 வருடங்களுக்கான விளைச்சல் எதிர்பார்ப்பு  ஆகியவற்றை பொறுத்து அத்தோட்டத்திற்கு ஒரு மதிப்பை கொடுக்கலாம். பின்னாளில் அவர் இந்த தோட்டத்தினை விற்க முனைகையில் மேலே சொன்ன மதிப்பீட்டை கருத்தில் கொண்டு விலையை பேசலாம். இதனை தான் நாம் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation) என சொல்கிறோம்.

 

இதுவே பக்கத்து தோட்டத்துக்காரர் தான் வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில்  கொய்யா மரங்கள்(எண்ணிக்கை மாறுபடலாம்) அடங்கிய தோட்டத்திற்கு எந்தவொரு முழுமையான மதிப்பீட்டையும் செய்யாமல், முதலாமவரின் தோட்டத்தினை போல தனது தோட்டமும் இவ்வளவு மதிப்பை பெறும் என ஒப்பிட்டு முறையில் சொன்னாலே, அதுவே ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையாகும்(Relative Valuation).

 

இதனை தான் பங்குச்சந்தை முதலீட்டில் நாம் காணும் P/E(Price to Earning per Share) Ratio, P/Bv(Price to Book value) Ratio, P/S (Price to Sales), EV/EBITDA, etc. – ஒப்பீட்டு பகுப்பாய்வு முறை. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனப் பங்கின் விலையை அதன் ஒரு பங்கிற்கான வருவாயுடன் ஒப்பிடுவது, பங்கு  விலையை அதன் நிறுவன விற்பனையுடன், புத்தக மதிப்புடன்(Book value) ஒப்பிடுவது என சொல்லலாம். ஒரு நிறுவனத்தின் P/E விகிதத்தை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனத்தின் P/E விகிதத்துடன் ஒப்பிடுவது. 

 

Discounted Cash Flow(DCF), DDM(Discounted Dividend Model), Discounted Asset Model(DAM) போன்றவை முழுமையான ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையை சேர்ந்தவையாகும். இவை அந்நிறுவனத்தின் பணவரத்து, ஈவுத்தொகை(Dividend) மற்றும் கணக்கில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முழுமையாக மதிப்பீடு செய்வதாகும். 

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை(Valuation Analysis) என்பது வெறுமனே பங்குச்சந்தை முதலீட்டுக்கு மட்டுமல்ல. ரியல் எஸ்டேட்(வீட்டுமனைத் துறை), தங்கம், விவசாய நிலம், தொழில் மற்றும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.

 

ஒவ்வொரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறையும் வெவ்வேறு வகையான முடிவுகளை அளிக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் முதலீடு செய்பவருக்கு ஏற்ற அல்லது உகந்த மதிப்பீடுகளை எடுத்துக் கொள்வது இயல்பு. எனினும், பெரும்பாலும் வழக்கத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மதிப்பீடாக ஒப்பீட்டு முறை உள்ளது. அதே வேளையில் ஒப்பீட்டு முறையை காட்டிலும் முழுமையான மதிப்பீட்டு முறையே(Absolute Valuation) ஒரு முதலீட்டாளருக்கு சிறந்த முடிவாகவும், நீண்டகாலத்தில் நல்ல வருவாயை அளிக்க கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. 

 

நான் பெரிசா, நீ பெரிசா என ஒவ்வொரு மதிப்பீட்டு முறையை கொண்டு போட்டி போடுவதை தவிர்த்து விட்டு, அனைத்து அல்லது பெரும்பான்மையான முறைகளை கணக்கில் எடுத்து கொண்டு முடிவுகளை எடுக்க கால்பந்து களப் பகுப்பாய்வு(Football Field Analysis) உதவுகிறது. வெவ்வேறு மதிப்பீட்டு முறைகளின் முடிவுகளை ஒப்பிட்டு சுருக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வரைபடத்தை(Graph /Chart)  இந்த ஆய்வு ஏற்படுத்துகிறது. 

 

இது பல்வேறு மதிப்பீட்டு முறைகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமையும் ஒரு நிறுவனத்திற்கான மதிப்புகளின் வரம்பை சுருக்கமாக கூறுகிறது. இந்த வரைபடத்தின் மூலம் பெரும்பான்மையான மதிப்பீட்டு  முறைகள் வாயிலாக, ஒரு நிறுவனத்தின் சராசரி விலை என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம். 

 

பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள்வதற்கும், மதிப்பீடுகளில் ஏற்படும் பிழைகளை குறைப்பதற்கும் இம்முறையை பயன்படுத்தலாம். 

 

உதாரணமாக ஒரு நிறுவனப் பங்கின் விலையை பணவரத்து(DCF) மதிப்பீட்டு முறையில் கணக்கிடும் போது ஒரு பங்கிற்கான மதிப்பு ரூ. 100 என கொள்வோம். இதுவே PE மதிப்பீட்டு முறையில் காணும் போது ஒரு பங்கிற்கு 80 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை வாங்கலாம் என பரிந்துரைக்கிறது. புத்தக மதிப்பு(Book value) அடிப்படையில் பார்க்கையில் ஒரு பங்குக்கு ரூ.85 என மதிப்பினை பெறுகிறது. கடந்த ஒரு வருட பங்கின் அதிகபட்ச விலை ரூ.150 ஆகவும், குறைந்தபட்ச விலை 65 ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஒரு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ரூ.87 – ரூ.102 என்ற விலையில் வர்த்தகம் நடந்துள்ளது.

 

இப்போது ஏதேனும் மற்றொரு மதிப்பீட்டு முறை மூலம் ஆய்வு செய்யும் போது பங்கு ஒன்றுக்கு 82 ரூபாய் என காட்டுகிறது. முடிவில் மேலே சொன்ன அனைத்து மதிப்பீட்டு முறைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற மதிப்புகளை, கால்பந்து களப் பகுப்பாய்வு வரைபடத்தில் குறிப்பிட வேண்டும். தற்போது நடப்பில் ஒரு பங்கின் விலை ரூ.102 க்கு வர்த்தகமாகிறது என வைத்துக் கொள்வோம். 

 

கால்பந்து களப் பகுப்பாய்வின் மூலம் நாம் பெறுவது, ஒவ்வொரு மதிப்பீட்டின் அடிப்படையில் நாம் பெறக்கூடிய சராசரி விலை தான். இதனை தற்போதைய பங்கு விலையுடன் ஒப்பிட்டு வாங்கலாமா, காத்திருக்கலாமா என்பதனை முடிவு செய்யலாம். 

 

Football field analysis

 

நீங்களும் இதனை பரிசோதித்து பாருங்கள்… இதன் மூலம் உங்களது முதலீட்டு சிந்தனையை மேம்படுத்துங்கள் !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

    

 

 

இந்தியாவில் பணவீக்கம்(விலைவாசி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

இந்தியாவில் பணவீக்கம்(விலைவாசி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Inflation measured in India – WPI / CPI ?

நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாத முடிவில் 5.10 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு டிசம்பர் மாத முடிவில் 5.69 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பணவீக்க விகிதத்தை அடிப்படையாக கொண்டு தான் ஒரு நாட்டின் வங்கிகளின் வட்டி விகிதமும்(Bank Interest Rate), அரசின் பஞ்சப்படி(Dearness Allowance -DA) அறிவிப்பும் உள்ளது. 

பங்குச்சந்தை முதலீட்டை மற்ற சொத்து முதலீட்டுடன் ஒப்பிடுகையில், பங்குச்சந்தை முதலீடு(பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டும் தான்)  நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை கொடுக்கும் என சொல்கிறோம். தங்கத்தின் மீதான வருவாயை பணவீக்கத்திற்கு எதிரான இழப்புக்காப்பு(Hedging) என சொல்வதுண்டு. இவ்வாறு பணவீக்கம் என்பது பொருளாதார உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

பணவீக்கத்தை கணக்கிடும் முறை ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும், அதே வேளையில் அவற்றை சார்ந்த பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதிநிலை முடிவுகள் பெரும்பாலும் ஒத்த கருத்தையே கொண்டிருக்கும். அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரப்போகிறது என்றால், உள்நாட்டில் மத்திய ரிசர்வ் வங்கி அதனை கருத்தில் கொண்டு தான் இங்கு முடிவெடுக்கும்.

பணவீக்கத்தை பொறுத்தவரை நம் நாட்டில் இரு வகையான முறை தற்போது உள்ளது. ஒன்று மொத்தவிலை பணவீக்க விகிதம்(Wholesale Price Index – WPI), மற்றொன்று சில்லறை விலை அல்லது நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) என்றழைக்கப்படும் பணவீக்க விகிதம்.

மொத்தவிலை பணவீக்க விகிதம்: இது நாட்டில் உள்ள பல்வேறு உற்பத்திப் பொருட்களின் மொத்த விலை மாற்றங்களை கொண்டு அளவிடப்படுகிறது. அதாவது பிற நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது வணிகங்களால் ஏற்படும் செலவுகளை குறிப்பிடுகிறது. 

மொத்த விலையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள், நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர்களை சென்றடையும் முன் கண்காணிக்கப்படும் குறியீடாக மொத்தவிலை பணவீக்க விகிதம் உள்ளது. 

சில்லறை அல்லது நுகர்வோர் விலை பணவீக்க விகிதம்: இது பொதுவாக நுகர்வோரிடம் காணப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை மாற்றங்களை கொண்டு அளவிடப்படுகிறது. மக்களிடம் பெரும்பாலும் நாள்தோறும் தேவைப்படும் பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு சில்லறை விலை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

இந்தியாவில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 2012ம் ஆண்டினை அடிப்படை வருடமாக(Base year: 2012) கொண்டு அளவிடப்படுகிறது. நடப்பில் மொத்தவிலை பணவீக்க விகிதத்தை காட்டிலும், சில்லறை விலை பணவீக்க விகிதமே முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் மொத்தவிலை பணவீக்கத்தை பொறுத்தவரை உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் உள்ள நிலையில், நுகர்வோருக்கு அவர்களின் மாத வரவு-செலவினை ஒப்பிடும் வகையில் சில்லறை விலை பணவீக்க விகிதமே தெளிவுபடுத்துகிறது.

பணவீக்கம் சார்ந்த அறிக்கைகளை மத்திய புள்ளியியல் அமைச்சகமும்(சில்லறை விலை பணவீக்கம்), வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகமும்(மொத்தவிலை பணவீக்கம்) பொதுவெளியில் அறிவிக்கும். சில்லறை விலை பணவீக்கம் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்திலும்(மாதத்தின் 14ம் தேதி), மொத்த விலை பணவீக்கம் ஒவ்வொரு வார மற்றும் மாத அடிப்படையிலும் வெளியிடப்படும்.

மொத்த விலை பணவீக்க விகிதத்தை பொறுத்தவரை சுமார் 697 பொருட்களை உற்பத்தி, முதன்மைப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் விலை மாற்றங்களை எடுத்து கொண்டு கணக்கிடப்படும். முதன்மைப் பொருட்கள் பிரிவில் உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெறும். சில்லறை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை சுமார் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தேசிய புள்ளியியல் அமைச்சகத்தால் ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய மாவட்டங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களில்(1181 கிராமங்கள் மற்றும் 1114 சந்தைகள்) கள ஊழியர்களை கொண்டு ஒவ்வொரு நாளின் சில்லறைப்  பொருட்களின் விலை மாற்றத்தை கணினியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. சில்லறை விலை பணவீக்கம் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள், புகையிலைப்பொருட்கள், துணிமணி மற்றும் காலணிகள், வீட்டுமனை, ஒளி மற்றும் எரிபொருட்கள், ஏனையப் பொருட்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் கணக்கிடப்படுகிறது.

சில்லறை விலை பணவீக்க விகிதத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாகும். இவற்றில் அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள், பால் பொருட்கள், காய்கறிகள், திண்பண்டங்கள் மற்றும் இனிப்புகள், மீன் வகைகள், மாமிசம், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகளும் அடங்கும். போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு 8.59 சதவீதமும், சுகாதாரம் 5.90 சதவீதமும் மற்றும் கல்வி 4.46 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

வீட்டுமனைப் பிரிவு 10 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 6.53 சதவீதமும் மற்றும் புகையிலைப்பொருட்கள் 2.38 சதவீத பங்களிப்பையும் சில்லறை விலை பணவீக்க கணக்கீட்டில் கொண்டுள்ளது. 

மொத்தவிலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு 24 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றில் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த பொருட்கள் மற்றும் மொத்த விலையில்(Wholesale Price) வாங்கக் கூடிய விலை விவரங்களே இடம்பெறும். இரு வகையிலான பணவீக்க முறையை பொறுத்தவரையில், பொதுவாக அனைத்து பொருட்களின் கணக்கீட்டில் அதன் பிரிவில் சராசரி விலையே முடிவில் எடுத்து கொள்ளப்படும். உதாரணமாக ஒரு சாக்குப்பை அரிசியின் விலை ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1,000 என எடுத்துக் கொள்வோம். தற்போது இதன் விலை ரூ.1,400 ஆக இருந்தால் அரிசியின் பணவீக்க விகிதம் 40% ஆகும். இருப்பினும் இந்த பிரிவில் உள்ள மற்ற பொருட்களின் விலை மாற்றங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, முடிவில் சராசரி விலையின் குறியீடு தான் வெளிப்படும்.

CPI(Consumer Price Index) Formula: (Cost of the Market Basket in the given year / Cost of the Market Basket in the Base year) X 100

WPI(Wholesale Price Index) Formula: (Current Price / Base Period price) X100

சுருக்கமாக மொத்தவிலை பணவீக்க விகிதம் உற்பத்தி மற்றும் மொத்தவிலை சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் சில்லறை விலை(Retail Inflation) பணவீக்க விகிதம் வாடிக்கையாளர் அல்லது நுகர்வோர் தங்களுக்கு அருகில் உள்ள சந்தை அல்லது கடையில் வாங்கும் சில்லறை விலை அடிப்படையில் மாற்றத்தை கொண்டு வரும்.

பணவீக்க விகித மாற்றத்தை கொண்டு தான் ஒரு அரசாங்கத்தின் நிதிநிலை செயல்பாடுகளும் இருக்கும். அரசாங்கத்தின் கொள்கைகளும் பணவீக்க விகித ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக அமையும். இது போல தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களும் விலைவாசியை(பணவீக்கம்) கருத்தில் கொண்டு தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் முடிவை திட்டமிடலாம். பணவீக்க விகித மாற்றம் முதலீட்டிலும் அவசியமாகிறது. பணவீக்கம்(Inflation) பொருளாதாரத்தில் ஒரு எதிரியாக பார்க்கப்பட்டாலும், இதனை சிறப்பாக கையாளும் போது நமது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

Endowment Effect or Cognitive Bias – Behavioural Economics

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்பார்கள். பொருளியலில் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இன்று பணம் இருந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கான தேவையும், நகர்வும் பணத்தை சார்ந்து இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் ஆற்றலை அறிய, அந்நாட்டின் போர்ப்படை மற்றும் அரசியல் அதிகாரத்தை விட பணத்தின்(பொருளாதாரம்) மூலம் தான் அளவுகோலை நிர்ணயிக்கிறார்கள்.

‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என துறவறவியலில்(அதிகாரம் – அருளுடைமை, பால் – அறத்துப்பால், குறள்: 247) பொருளீட்டலின்(இன்றைய பணம்) தேவையை பற்றி விவரிக்கிறது. பணத்தின் மீது பெருத்த ஆசை வைக்காவிட்டாலும், தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்தை நிதி சார்ந்து பாதுகாக்க தேவையான பணத்தை நாம் தேடித்தான் ஆக வேண்டும்.

அதிக பணமீட்டும் ஒரு சாரார் தங்களது செலவுகளை அதிகமாக கொண்டிருந்தாலும், அதன் மூலம் வரி வருவாய் ஏற்படுத்தினால் மட்டுமே, ஒரு நாட்டின் அரசால் வறுமையில் அல்லது வருவாய் குறைந்தவர்களுக்கான நிதி திட்டமிடலை செய்ய முடியும். இல்லையெனில் பொருளாதாரம் சார்ந்து அதிக ஏற்றத் தாழ்வால் வெறுப்பும், வன்முறையும் நிகழ வாய்ப்புண்டு. இதன் காரணமாக தான் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளும், வேகமாக வளரும் நாடுகளும் பொருளாதாரத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

முன்னொரு காலத்தில் நெல் உமியையும், அரிசியையும் வீணாக்கக் கூடாது என்ற வழக்கமுண்டு. பஞ்சத்தின் வெளிபாட்டையும், சிக்கனத்தை அவசியத்தையும் தான் இது போன்ற நிலைகள் கூறுகிறது. ‘பணக்காரனுக்கு என்னப்பா கவலை’ என்றும், ‘பணத்தை விட உடல்நலத்தை பேணுவதே’ என்றும், ‘நம்மிடம் பணமிருந்து என்ன பயன், நல்ல தூக்கம் இல்லையே’ என சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் பணத்திற்கான மதிப்பு தான் என்ன ?

அதனை நீங்கள் தான் அளவிட முடியும் !

நம்மிடமிருக்கும் பணத்தை நாம் அவ்வளவு அக்கறையாக பார்க்கையில், மற்றொருவரின் பணத்தை நாம் அவ்வாறாக காண்பதில்லை. இதனை தான் எண்டோவ்மென்ட் விளைவு(Endowment Effect) என்கிறோம். ‘பணத்தை தண்ணி போல செலவழிக்கிறான் பார்’ என சொல்வதுண்டு. பணத்தின் மீதான அளவீடு என்பது ஒவ்வொரு தனிநபரின் பார்வையிலும் மாறி கொண்டே இருக்கிறது.

கஷ்டப்பட்டு அப்பா சம்பாதித்த பணத்தை பற்றி பிள்ளைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அதன் அளவீடும் மாறுபடும். சாலையில் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளும், சில்லறைகளும் அதனை கண்டவரின் பார்வையில் பணத்தின் மீதான அளவீடு உள்ளது. நமது பணம் தொலைந்து விட்டால் நமக்கு வரும் பதட்டம், அதே பணத்தை மற்றவர் தொலைக்கும் போது இருப்பதில்லை. முடிந்தால் அறிவுரை சொல்ல பழக்கப்பட்டிருப்போம்.

பொதுவாக நம்மிடம் இல்லாதவற்றை விட, நமக்கு சொந்தமான பொருட்களின் மீது நாம் உயர்வான மதிப்பை கொண்டிருக்கிறோம். இதனை தான் முதலீட்டு சிந்தனையிலும் செய்து வருகிறோம். நமக்கு தெரிந்த முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது அல்லது நமது வசதிக்கு ஏற்ப இந்த திட்டம் தான் சரியானது என முதலீடு செய்வது. உண்மையில் அந்த திட்டம் வருவாயை கொடுக்காமல் இருந்திருக்கலாம். சில நேரங்களில் அத்திட்டம் அதிக ரிஸ்க் தன்மை கொண்டதாக இருந்திருக்கக் கூடும்.

இருப்பினும் நாம் அந்த திட்டத்தை மற்றவைகளை பற்றி தெரிந்து கொள்ள விருப்பில்லாமல், ஏற்கனவே சொன்ன திட்டத்தில் ஆறுதல் தேடிக் கொள்வோம். இதனை தான் உளவியலாளர் திரு. டேனியல் கானமேன் ஒரு ஆராய்ச்சியின் மூலம் விவரிக்கிறார்…

“ அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு போட்டியை நடத்தி ஆராய்ச்சி கண்டோம். சில மாணவர்களிடம் பல்கலைக்கழக சின்னம் பதிக்கப்பட்ட குவளைகளை(Mugs) வைத்திருக்க சொன்னோம். குவளைகளை கொண்டிருந்த மாணவர்களிடம் அதனை மற்ற குவளையில்லாத மாணவர்களிடம் விற்கும் படி செய்ய சொன்னோம். குவளையில்லாத மாணவர்களும், குவளை வைத்திருக்கும் மாணவர்களிடம் வாங்குவதற்கான பேரத்தை பேசினர்.

இதனை பலமுறை சோதித்து, இறுதி ஆராய்ச்சியின் முடிவில் நாங்கள் கண்டது, குவளையில்லாத மாணவர்கள் தாங்கள் கேட்ட விலையை விட இரு மடங்கு விலையில் குவளையை வைத்திருந்த மாணவர்கள் விற்பதற்கு தயாராக இருந்தனர் என்பது தான்.”

இதனை தான் நாம் அவ்வப்போது நம் வாழ்க்கையில் செய்து வருகிறோம். உதாரணத்திற்கு நம்மிடம் உள்ள பழைய நான்கு சக்கர வாகனத்தை விற்கும் போது, நாம் அதன் அருமை-பெருமைகளை சொல்லி கூடுதல் விலைக்கு விற்க முனைகிறோம். இதுவே வாங்க வருபவர், தேய்மானத்தை அடிப்படையாக கொண்டு மலிவான விலையில் கேட்பார்.

வீட்டுமனை விற்பனையிலும் நாம் இதனை காணலாம். வீட்டுமனையை வைத்திருப்பவர் எப்போதும் அதிக விலைக்கே விற்க(Endowment Effect) முனைகிறார். ஆனால் உண்மை நிலவரம் அப்படியில்லை, இடம் மற்றும் காலத்திற்கு தகுந்தாற் போல தான் அந்த மனையின் விலை விற்கப்படும். எனினும் நம் மனம் நமது சொந்த பொருட்களின் மீதான மதிப்பை அதிகரித்தே சொல்லக் கூடும்.

கைக்கடிகாரம் கூட யார் மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கிணங்க அதன் மதிப்பை பெறுகிறது என்பார்கள்.

எனவே நம் பணத்தின் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பை, மற்றவர்களின் பணத்திற்கும்(மனிதத் தன்மைக்கும்) கொடுப்பது நலம். இதன் மூலம் அதீத ஏற்ற-தாழ்வை பொருளாதார நிலையை குறைக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம்

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 

Greaves Cotton Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1859ம் ஆண்டு ஜேம்ஸ் கிரீவ்ஸ் மற்றும் ஜார்ஜ் காட்டன் ஆகிய இருவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் கிரீவ்ஸ் காட்டன்(Greaves Cotton). பொறியியல் மற்றும் உற்பத்தித் துறையில் உள்ள இந்நிறுவனம் 1947ம் ஆண்டு வாக்கில் இந்தியத் தொழிலதிபரான திரு. லாலா கரம் சந்த் தப்பார் (தப்பார் குழுமம்) அவர்களால் வாங்கப்பட்டது. 1950ம் ஆண்டில் கிரீவ்ஸ் காட்டன் பொது நிறுவனமாக(Public Ltd) பதிவு செய்யப்பட்டது. தற்போது மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு நிறுவனம் தனது தொழிலை செய்து வருகிறது.

நிறுவனத்தின் தலைவராக திரு. கரண் தப்பார் உள்ளார். வாகனங்களுக்கான இன்ஜின்கள், உதிரி பாகங்கள், வாகன கட்டுப்பாட்டு அமைப்புகள், பண்ணை உபகரணங்கள், துணை சக்தி(Auxiliary Power) மற்றும் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் இன்ஜின் பிரிவு 62 சதவீதத்தையும், மின்சார வாகனப் பிரிவு 30.5 சதவீதத்தையும் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. 

வருவாயில் உள்நாட்டு பங்களிப்பு 97 சதவீதமாகவும், ஏற்றுமதி 3 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக Greaves Electric Mobility (இரு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகன உற்பத்தி), Greaves Retail(உதிரி பாகங்கள், மின்சார வாகன ஏற்றுமதி, பராமரிப்பு), Greaves Engineering(எரிபொருளுக்கான தீர்வு, இயக்க கட்டுப்பாட்டு அமைப்புகள், இன்ஜின் பிரிவு, ஜென்செட்டுகள் மற்றும் பம்பு செட்டுகள்), Greaves Technologies(பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டிஜிட்டல் சேவைகள்) மற்றும் Greaves Finance(மின்சார வாங்கனங்களுக்கான நிதி சேவைகள்) ஆகியவை உள்ளன.  

விவசாயம், கட்டுமானம், சக்தி மற்றும் பிற தொழிற்துறைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்திற்கு நாடு முழுவதும் சுமார் 6500கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களும், 350க்கும் மேற்பட்ட விநியோகச் சேவைகளும்(Dealers) உள்ளது. உதிரிப் பாகங்களுக்கான பிரிவில் நாடு முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் 6000க்கும் மேற்பட்ட சிறிய சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் தயாரிப்பு சேவை உள்நாட்டில் மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. நிறுவனம் இந்திய குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் அனுபவம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் திறமையான தலைமைத்துவத்தை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் இப்பிரிவில் இந்திய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பை தன்னகத்தே கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்சார வாகனங்களில் மூன்று முக்கிய பிரிவுகளில் பிராண்டுகளை உற்பத்தி செய்து(Ampere, ele, Greaves Eltra) இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இரு சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 6 வகைகளையும், மூன்று சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 10க்கும் மேற்பட்ட வகைகளிலும் உள்ளன.

நிறுவனத்தின் கீழ் பல பிராண்டு உதிரி பாகங்கள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், பேட்டரிகள், சார்ஜிங், பிற கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், ‘Ampere Vehicles’ நிறுவனத்தில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 81 சதவீத பங்குகளை வாங்கி கையகப்படுத்தியுள்ளது. 

‘E-Rickshaw’ பிரிவில் பெஸ்ட்வே நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது கிரீவ்ஸ் காட்டன். இது போக வாகனங்களுக்கான இயக்க கட்டுப்பாட்டு(Motion Control Systems) பிரிவில் தொழில் செய்து வரும் எக்சல் கண்ட்ரோலிங்கேஜ்(Excel Controlinkage Pvt Ltd) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், எம்.எல்.ஆர். ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது. ஐக்கிய ராச்சியத்தை(United Kingdom) சேர்ந்த ஈட்டா கிரீன் பவர் நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்.6 வாகனப் பிரிவுக்கான பவர் ட்ரெயின்(Powertrain) தீர்வுகளை செய்து வருகிறது. மூன்று மற்றும் நான்கு சக்கர வணிக வாகனங்களுக்கான இன்ஜின்களை(Petrol, Diesel, CNG/LPG) உற்பத்தி செய்து விற்பனையிலும் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் தனது விற்பனையை அதிகரிக்க சவுதியை சேர்ந்த ஏ.எல்.ஜே(ALJ) குழும நிறுவனத்துடன் இணைந்து மேம்பாடுகளை செய்து வருகிறது. கடந்த 1945ம் ஆண்டு துவங்கப்பட்ட ALJ(Abdul Latif Jameel) நிறுவனம் வாகனப் பிரிவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழிலை செய்து வருகிறது.   

மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகின் சிறந்த பிராண்டாக காணப்படும், ‘Piaggio’ நிறுவனம் ஐரோப்பாவில் பெரும்பான்மையான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு தேவையான இன்ஜின் மற்றும் பிற உதிரி பாகங்களை கடந்த 1998ம் வருடம் முதல் கிரீவ்ஸ் காட்டன் செய்து வழங்கி வருகிறது. சொல்லப்பட்ட வருடத்தில் பியாஜியோ – கிரீவ்ஸ் கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தது. பின்னர் 2001ம் ஆண்டு வாக்கில் பியாஜியோ நிறுவனத்தின் தலைமைக் குழும நிறுவனமான P&C முழு பங்குகளையும் வாங்கி கொண்டது.

நிறுவனத்தின் முதலீட்டை பொறுத்தவரை, கடந்த 2021ம் ஆண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்கும் இலக்கை கொண்டு, தமிழ்நாட்டில் அடுத்த பத்து வருடங்களில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளதாக கிரீவ்ஸ் காட்டன், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்காக நாடு முழுவதும் ஆறு ஆலைகளை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மொத்த வருவாயில் 1.6 சதவீதம் வரை செலவிடப்படுகிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடன் வழங்கும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கிரீவ்ஸ் பைனான்ஸ்(Greaves Finance) நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் நிதிநிலையை பொறுத்தவரை இதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.3,830 கோடி. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 16 மடங்குகளிலும், நிறுவனர்களின் பங்களிப்பு 56 சதவீதமாகவும் உள்ளது. 

கடந்த 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டு முறையே ரூ.19 கோடி மற்றும் ரூ.35 கோடியை நிறுவனம் நட்டமாக சொல்லியுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,699 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.2,573 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. இயக்க லாப விகிதம் 4 சதவீதமாக உள்ளது.

சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 70 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. எனினும் கடந்த நான்கு காலாண்டுகளில் டிசம்பர் 2023 காலாண்டை தவிர்த்து மற்ற மூன்று காலாண்டுகளிலும் நிறுவனம் நட்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட நிதிச் செலவின அதிகரிப்பு மற்றும் மின்சார வாகன மானியத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய அபாரதத் தொகையும் அடங்கும்.  

கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் மின்சார வாகன உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருவதால், முதலீடும் அது சார்ந்த செலவினமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சந்தையிலும் இந்தப் பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்தை சந்தித்து வருகிறது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு செப்டம்பர் 2023 காலத்தின் படி ரூ.1,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது. 

2022-23ம் நிதியாண்டில் என்ஜின் பிரிவு மூலம் நிறுவனத்திற்கு ரூ.1,425 கோடியும், மின்சார வாகனப் பிரிவின் மூலம் ரூ.1,124 கோடியும், பிற விற்பனை மூலம் 150 கோடி ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது. இருப்பினும் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபத்தில்(PBIT) இன்ஜின் பிரிவு 165 கோடி ரூபாயையும், மின்சார வாகனப் பிரிவு ஒரு கோடி ரூபாயையும் நிறுவனம் பெற்றுள்ளது. 

கடன்-பங்கு விகிதம் 0.06 மடங்கு, வட்டி பாதுகாப்பு விகிதம் மற்றும் இருப்புநிலை கையிருப்பு தொகை இந்நிறுவனத்திற்கு சாதகமாக இருந்தாலும், மின்னணு வாகனப் பிரிவில் இந்நிறுவனம் செய்த முதலீடு, அதன் முறிவு புள்ளியை(Breakeven) கடக்கும் வரை நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் அதிக மாறுபாடுகளை காணலாம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

World’s Top Stock Exchanges and Countries by Market Capitalization

உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக ஹாங்காங் நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தையை நாம் முந்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குச்சந்தையின் மதிப்பு 4.37 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் சுமார் 363 லட்சம் கோடி ரூபாய்).

பங்குச்சந்தை உலகின் ராஜாவாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 49.65 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 4,127 லட்சம் கோடி ரூபாய்). இரண்டாமிடத்தில் 10.89 டிரில்லியன் டாலர்களுடன் சீனாவும், மூன்றாவது இடத்தில் 5.47 டிரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் நாடும் உள்ளது.

அமெரிக்காவின் மேலே சொல்லப்பட்ட சந்தை மதிப்பு அந்நாட்டின் பொருளாதார(GDP) மதிப்பில் 194.5 சதவீதமாகும். ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தை 3.96 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆறாம் மற்றும் ஏழாம் இடம் முறையே பிரான்சு மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள்(2.82 டிரில்லியன் டாலர்கள்) உள்ளன.

எட்டாவது இடத்தில் கனடா 2.64 லட்சம் கோடி டாலர்களுடனும், ஒன்பதாவது இடத்தில் சவுதி அரேபியா 2.42 லட்சம் கோடி டாலர்களுடனும் மற்றும் பத்தாவது இடத்தில் ஜெர்மனி 2.28 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடனும் உள்ளது. சொல்லப்பட்ட தரவுகள் 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுகளுக்குள் கணக்கிடப்பட்டது.

கடந்த 1975ம் ஆண்டில் உலக பங்குச்சந்தையின் மதிப்பு 11.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தநிலையில் 2020ம் ஆண்டின் முடிவில் 93.68 லட்சம் கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது உலக பொருளாதார மதிப்பில் வெறும் 27 சதவீதமாக இருந்த பங்குச்சந்தை பங்களிப்பு இன்று 135 சதவீதத்திற்கும் மேலாக காணப்படுகிறது.

நடப்பில் மிகப்பெரிய பங்குச்சந்தை உள்ள நாடுகளில் குறிப்பிட்ட பங்குச்சந்தை(Stock Exchange) அடிப்படையில் காணுகையில், அமெரிக்காவின் நியூயார்க் சந்தை(NYSE) 26.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த சந்தை கடந்த 1792ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தில் அமெரிக்காவின் நாஷ்டாக்(NASDAQ) சந்தை உள்ளது. கடந்த 1866ம் வருடம் துவங்கப்பட்ட சீனச் சந்தையின் ஷாங்காய்(SSE) 6.87 டிரில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் ஐரோப்பாவின் யூரோ நெக்ஸ்ட்(EuroNext) சந்தையும், ஐந்தாவது இடத்தில் ஹாங்காங் சந்தையின் HKEXம் உள்ளன. இந்தியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை பத்தாவது இடத்தில் 3.59 டிரில்லியன் டாலர்களுடன் உள்ளது. இச்சந்தை கடந்த 1875ம் வருடம் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனத்தின் அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் சவுதி அரம்கோ நிறுவனமும் உள்ளன.

நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே கூகுள்-ஆல்பாபெட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆறாவது இடத்தில் என்விடியா(Nvidia) மற்றும் ஏழாம் இடத்தில் மெட்டா(Meta) நிறுவனமும் உள்ளது.

திருவாளர் வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனம் எட்டாம் இடத்திலும், எலான் மஸ்க்கின் டெஸ்லா ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. எலி லில்லி நிறுவனம் 597 பில்லியன் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

Global Market Indices in the year 2023 – Returns %

2023ம் ஆண்டை பொறுத்தவரை உலக பங்குச்சந்தையில் காணும் முக்கிய சந்தை குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேலாக வருவாயை கொடுத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை S&P 500 குறியீடு 24 சதவீதமும், ஜப்பானின் Nikkei 225 குறியீடு 30 சதவீதமும், ஐரோப்பாவின் Stoxx 50 குறியீடு 17.3 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான தேசிய பங்குச்சந்தையின்  நிப்டி50 குறியீடு 22.60 சதவீதமும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 21 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் பங்குச்சந்தை 7.8 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி(Kospi) 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனாவின் S&P China 500 குறியீடு 12.50 சதவீதம் மற்றும் ஹாங்காங் நாட்டின் Hang Seng 14 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

2023ம் ஆண்டில் காணப்பட்ட உலகளாவிய போர் பதற்ற சூழ்நிலை, பொருளாதார மந்தநிலை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றால் தங்கத்தின் தேவை அதிகரித்து சொல்லப்பட்ட வருடத்தில் தங்கம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகளவில் வீட்டுமனைத் துறை(Real Estate – REITs) குறியீடும் 11.50 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் வீட்டுமனை விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் Dow Jones Real Estate குறியீடு 7.8 சதவீதம் வளர்ந்துள்ளது. அதே வேளையில் கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.    

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் 2023ம் ஆண்டில் 5.8 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடந்த சில காலாண்டுகளாக பணவீக்க விகிதம் ஏற்ற-இறக்கமாக காணப்பட்ட நிலையில் வங்கி வட்டி விகிதமும் கணிசமான வருவாயை கடந்த ஆண்டு தந்துள்ளது. பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் கடன் பண்டுகள்(Debt Mutual Funds) சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை வருவாயை அளித்துள்ளது.

நாணயச்சந்தையில் மெக்ஸிகோ நாட்டின் பெசோ(Peso) 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது போல சுவிட்சர்லாந்து நாட்டின் பிரான்க் 10 சதவீதமும், பிரிட்டிஷ் பவுண்டு 5.30 சதவீதமும் மற்றும் யூரோ 3 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் அமெரிக்க டாலர் 2 சதவீதமும், சீன யுவான் 2.80 சதவீதமும் மற்றும் ரசியாவின் ரூபெல் 17.50 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய ரூபாயும் 0.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டுள்ளது.   

வரக்கூடிய காலம் உலக பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான கால நிலையாக இருப்பதால், தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்து வரும் பங்குச்சந்தையில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். எந்தவொரு முதலீட்டுத் திட்டமும்(Shares, Gold, Bonds, Real Estate) நீண்டகாலம் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு ஏற்றத்தை மட்டுமே சந்திக்கும் என்பது பொருளாதார வரலாற்றில் இல்லை. இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும்.

நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாளத் தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தெரிந்த பிராண்டுகளும், அதன் தெரியாத பொருட்களின் பெயர்களும்

Subscribe to continue reading

Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Top 5 Funds for you to invest in 2024 – Mutual Fund Investments

ஆசியாவின் மிகப் பழமையான பங்குச்சந்தையான மும்பை பங்குச்சந்தை(Bombay Stock Exchange – BSE) 70,000 புள்ளிகளை இன்று(11-12-2023) எட்டியது. மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த 1979ம் ஆண்டு வாக்கில், ‘100’ என்ற அடிப்படை புள்ளிகளை கொண்டு வர்த்தகமாக துவங்கியது. ஜூலை 2023 மாத நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையின் சந்தை மூலதன மதிப்பு 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் 302 லட்சம் கோடி).

கடந்த 2006ம் ஆண்டில் சென்செக்ஸ் தனது 10,000 புள்ளிகளையும், 2007ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 20,000 புள்ளிகள் என்ற இலக்கையும், 2017ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 30,000 என்ற புள்ளிகளையும் கடந்தது. அடுத்த ஆறு வருடங்களில் இரு மடங்காக மாறிய இந்த குறியீடு தற்போது 70,000 புள்ளிகள் என்ற நிலையையும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னொரு காலத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு தேவையான முதலீடு, பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று உள்ளூர் நிறுவன முதலீடுகள் மட்டுமே அளப்பரியது. குறிப்பாக பரஸ்பர நிதிகள் என்றழைக்கப்படும் மியூச்சுவல் பண்ட் வாயிலாக இந்திய பங்குச்சந்தைக்கு வந்த முதலீடுகள் லட்சம் கோடிகளில்.

செபி(SEBI) ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆம்பி / ஆம்ஃபை(AMFI – Association of Mutual Funds in India) என்ற லாப நோக்கமில்லா நிறுவனத்தால் தான் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் வரையறைகளும், அதன் சொத்து மேலாண்மை நிறுவனங்களும்(Asset Management Companies) நிர்வகிக்கப்படுகிறது. 

தற்போது உள்நாட்டில் 40க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள்(AMC) பரஸ்பர நிதித்திட்டங்களின் வாயிலாக முதலீடுகளை பெறுகிறது. இந்த முதலீடுகள் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் துறை, இன்னபிற பிரிவுகளிலும் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. சமீபத்திய ஆம்ஃபை தரவின் படி, இந்திய மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 49.04 லட்சம் கோடி ரூபாய் (நவம்பர், 2023). மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கியவர்களின் எண்ணிக்கை மட்டும் 16.18 கோடி (Folios). இவற்றில் சிறு முதலீட்டாளர்களின் சார்பாக துவங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 12.92 கோடி.

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

  • ICICI Prudential Nifty50 Index Fund
  • Parag Parikh Flexi Cap Fund
  • Mirae Asset Tax Saver
  • SBI Gold Fund
  • HDFC Balanced Advantage Fund

Best - Top 5 Funds to invest in 2024

படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்(MF Distributor) முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம்

நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம் 

India’s economic growth in the third quarter of the current year was 7.6 Percent

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான மற்றும் வேகமாக வளரும் துறைகளாக சேவைகள், வர்த்தகம், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, நிதி, காப்பீடு மற்றும் வீட்டுமனை ஆகியவை உள்ளன. 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின்(Services Sector) பங்களிப்பு மட்டும் 60 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. உற்பத்தித் துறை 15 சதவீத பங்களிப்பையும், விவசாயத் துறை(விவசாயம், மீன் மற்றும் வனவியல்) 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீத பங்களிப்பையும் நாட்டின் உற்பத்தியில் கொண்டிருக்கிறது. விவசாயத் துறை 12 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தாலும், நாட்டின் மொத்த தொழிலாளர்களின் சக்தியில்(Employment) 50 சதவீத பங்களிப்பை இத்துறை தான் வழங்கி வருகிறது.

நடப்பாண்டின் மூன்றாம் காலண்டான ஜூலை முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.6 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. முன்னர் மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி சொல்லப்பட்ட காலத்தில் 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தை வல்லுநர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக அமையலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது இது 7.6 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. உற்பத்தித் துறை சுமார் 13.9 சதவீதம் உயர்ந்தும், கட்டுமானம் 13.3 சதவீதமாகவும், பயன்பாடுகள் 10.1% ஆகவும், நிதி, வீட்டுமனை மற்றும் தொழில்முறை சேவைகள் 6 சதவீதம் என அதிகரித்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்த்துள்ளது.

அதே வேளையில் பருவ மழை மற்றும் காலநிலை மாற்றங்களால், விவசாயத் துறை சொல்லப்பட்ட காலத்தில் 1.2 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. செலவுகளை பொறுத்தவரை ஜூலை – செப்டம்பர் 2023 காலாண்டில் அரசின் செலவினம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு செலவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் நிதி பங்களிப்பின் மூலதன உருவாக்கம்(Gross Fixed Capital Formation) 8 சதவீதத்திலிருந்து தற்போது 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

மூன்றாம் காலாண்டில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாகவும், இறக்குமதி 16.7 சதவீதமாக அதிகரித்தும் காணப்படுகிறது. அதே வேளையில் தனியார் நிறுவனங்களின் செலவு பங்களிப்பு 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல்

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல் 

Layman’s Personal Financial Planning – Invest & Breathe

“மனதைத் தெளிவுபடுத்துவதற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்கும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியே அடிப்படை” என மருத்துவம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. 

“A Deep breathing exercise to clear the mind and relieve stress”

மூச்சுப்பயிற்சியினால் மனித உடலின் இரத்த அழுத்தம் குறைவதும், மற்ற உடலுறுப்புக்கள் சீராக இயங்குவது மட்டுமில்லாமல், அமைதி மற்றும் நல்வாழ்வு வாழ்வதற்கான புது தெம்பும் நமக்கு கிடைக்கப்பெறுகிறது.    

நவீன உலகத்தில் உடல்நலனும், செல்வமும் இரு நண்பர்களாக தான் வலம் வருகிறது. பொருள் ஆதாரமற்ற மனித வாழ்க்கையை இன்று நாம் இவ்வுலகில் காண இயலாது. அதே போல சுவர் இருந்தால் தான் சித்திரமும். 

அதற்காக நாம் கடினமாக உழைப்பதோ, உடல்நலத்தை பேணுகிறேன், உடல் எடையை இத்தனை நாட்களில் குறைக்கிறேன் என நாள்தோறும் ‘ஜிம்(Gym)’ பேர்வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நடைப்பயிற்சியும், மூச்சுப்பயிற்சியும் மற்றும் உணவில் கவனம் – அவரவர் வயது சார்ந்து மற்றும் தொழிலுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் அறிவை பயன்படுத்தி மற்றும் அதனை மேம்படுத்துதல் மூலம் நாம் செல்வத்தை எளிமையாக ஈட்டலாம். ஈட்டிய செல்வத்தை சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பெருஞ்செல்வமாக மாற்றலாம். 

நமது உடல்நலனை நாம் எப்படி பொறுமையாக கருத்தில் கொண்டு பேணுகிறோமோ, அதனை போல செல்வம் சேர்ப்பதிலும் கற்றல் மற்றும் பொறுமையும் அவசியம். ‘அதிகரித்த உடல் எடையை, சில நாட்களில் மிக விரைவாக குறைக்கிறேன்’ என நாம் எடுக்கும் ரிஸ்க் தன்மையும், ‘குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை அள்ளி விட வேண்டும்’ என முதலீட்டில் நாம் விளையாடும் ஊக வணிகமும்(Speculation) – இரண்டும் பக்கவிளைவை தரக்கூடியவையே !

பல வருடங்களாக நமது உடலில் இருக்கும் நோய்த்தன்மையை ஓரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட்டால், பின்னாளில் நமது உடல் இயக்கங்கள் அடுத்து வரும் நாட்களில் தடுமாறும். இதன் காரணமாக மீண்டுமொரு கவனத்தை நாம் நம் உடல் நலன் மீது செலுத்த நேரிடும். இதற்கான காலமும், பணச்செலவும் அதிகமே. இதனை போல பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு பங்குச்சந்தையில் ஒரே நாளில் பல லட்சங்களையும், கோடிகளையும் ஈட்ட வேண்டுமென்ற ஆசை(பேராசை) எல்லோருக்கும் தான். ஆனால் அது அனைவருக்கும், எல்லா நேரங்களிலும் சாத்தியமா !    

கடந்த 2022-23ம் நிதியாண்டில் செபி|(SEBI) வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, இந்திய பங்குச்சந்தையில் ஈடுபடும் 10 நபர்களில் ஒன்பது பேர் (Futures & Options Traders) தங்களது முதலீட்டு பணத்தை இழக்கின்றனர் என கூறுகிறது. சந்தையில் பணத்தை இழக்கும் நபர்களின் சராசரி இழப்பு ரூ.50,000 வரை உள்ளதாகவும், 28 சதவீதம் பேர் தங்களது முதலீட்டு இழப்பை, வெறும் பரிவர்த்தனை கட்டணங்கள் செலுத்துவதில் சந்திக்கின்றனர் எனவும் இந்த தரவு அறிக்கை கூறுகிறது. 

அப்படியிருக்க நாம் எதனை நோக்கி நாம் உழைத்த பணத்தை கொண்டு சென்றிருக்கிறோம் ? பங்குச்சந்தை முதலீடு நீண்ட காலத்தில் பலன் தரும் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கமே இதனை வெளிப்படையாய் சொன்னாலும்(சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதும்) நாம் என்னவோ குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆசைப்படுவதே. உண்மையில் பங்குச்சந்தையில் எளிமையாகவும், மிக விரைவாகவும் லாபமீட்ட முடிந்தால், ஏற்கனவே சந்தையில் லட்சம் கோடி ரூபாய்களில் மூலதன மதிப்பை கொண்ட டாட்டா, அம்பானி, பஜாஜ், கோத்ரேஜ், இன்னபிற குழுமங்கள் எங்கே ? அவர்களிடம் இல்லாத பணமா, நிர்வாகமா அல்லது அவர்களுக்கு தெரியாத பங்குச்சந்தை ரகசியமா. சொல்லப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை தங்களது தொழில்களை தான் நம்பியுள்ளன. அவர்களது தொழிற் திறனும், வாடிக்கையாளர்களும் தான் பின்னாளில் முதலீட்டாளர்களால் பங்கு விலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

சாமானியனின் நிதித்திட்டமிடலில் முதல் படி:

தனது குடும்பத்திற்கு தேவையான நிதிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது தான் –  வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு போதுமான டேர்ம் காப்பீடு(Term Insurance), குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற் போல மருத்துவ காப்பீடு(Mediclaim), அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்யும் நபராக இருக்கும் நிலையில், அவருக்கு தேவையான விபத்துக் காப்பீடு(Accidental Coverage).

இது போக அவசர கால நிதியை(Emergency Fund) உருவாக்குதல், குடும்ப நபர்களுக்கான நிதித்தேவையை இலக்குகளாக மாற்றுதல்(Creating Financial Goals). மேலே சொன்ன ஐந்து நிலைகளுக்கும் தனிநபர் ஒருவரின் வருமானம் மற்றும் குடும்ப நபர்களின் தேவையை கருத்தில் கொண்டு திட்டமிடலாம். இந்த ஐந்தும் தவிர்க்க இயலாத நிலைகளாக மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது.

நிதித்திட்டமிடலின் இரண்டாவது படியில்,

உங்களது நிதி இலக்குகளுக்கான சரியான சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது(Identifying Suitable Investment schemes). பொதுவாக சேமிப்பு எனும் போது அரசு சார்ந்த அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, பி.எப். பிடித்தம், சிறியளவில் நகை சேமிப்பு, சீட்டு(அரசு பதிவு பெற்ற மற்றும் நம்பகமான) ஆகியவை நமக்கு நினைவில் வரும். 

இவை பெரும்பாலும் குறைந்த வட்டி வருவாயை(பணவீக்கத்தை விட குறைவு) கொண்டிருந்தாலும், குறுகிய கால இலக்குகளுக்கு சிறந்தது. இதனை விடுத்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொன்சி(Ponzi Scam) மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அல்லது அரசு நிர்வாகம் செய்யும் சேமிப்பு திட்டங்களை மட்டுமே நாடுவது நல்லது.

நடுத்தர மற்றும் நீண்டகால நிதி இலக்குகளுக்கு மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இந்த திட்டங்களில் ஏற்ற-இறக்க ரிஸ்க் தன்மை இருப்பதால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தலாம. இதன் காரணமாக நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை சரியான காலத்தில் பெற முடியும். பரஸ்பர நிதிகளில் நீண்டகாலத்திற்கு என முதலீட்டு செய்து விட்டு, இலக்குகளை அடையும் முன்னர் அல்லது இடைவெளி காலத்தில் முடிந்தளவு பணத்தை வெளியில் எடுக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு எடுக்கும் நிலையில், நாம் கூட்டு வட்டியின் முழுமையான பலனை(Power of Compounding) அடைய முடியாமல் போகலாம்.

பரஸ்பர நிதி முதலீட்டின் வாயிலாக நாம் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான திட்டங்களில்(Asset Allocation) நமது முதலீட்டை பரவலாக்க முடியும். 

மூன்றாவது மற்றும் இறுதிப்படியாக,

பெருஞ்செல்வத்தை ஈட்டுவது இன்றைய காலத்தில் தேவையான ஒன்றாகி விட்டது. முன்னொரு காலத்தில் மனித உடற்சக்தியை மட்டுமே நம்பியிருந்த குடும்பச் சமூகம், இன்று நிதிச் சொத்துக்களை தான் குடும்பத்திற்கான ஆதாரமாக வைத்துள்ளது. எனவே நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான மற்றும் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை சேர்ப்பதிலும், அவற்றினை கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய நிலையுள்ளது. செல்வம் சேர்ப்பது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானதல்ல.

பெருஞ்செல்வம் ஈட்ட நாம் தொழில் திறனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமக்கான தொழில் ஏதுமில்லை அல்லது அவற்றை செய்ய நமது மனம் விரும்பாத போது, மற்றவர்களின் தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்(அதற்காக மீண்டும் பொன்சி மோசடியிடம் மாட்டி கொள்ளாதீர்கள் !). முதலீடு செய்யப்படும் தொழில் நிறுவனம் அரசு அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும், நிர்வாகத்திறன் படைத்ததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கா விட்டாலும், நமது முதலீட்டு பணம் நமக்காக திறம்பட வேலை செய்யும்.  

மற்றவர்களது தொழிலில் ஒரு சாமானியனும் முதலீடு செய்யலாம் என்பதே, இன்றைய பங்குச்சந்தை வாய்ப்பு(Public & Private Equity – Listed & Unlisted). பங்குச்சந்தை முதலீடு பற்றிய அடிப்படை கற்றலை கற்றுக் கொண்ட பின்னர் தான், சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை கொண்டிருந்தால் சிறப்பு. இல்லையென்றால்,பதிவு பெற்ற மற்றும் நம்பகத்தனமான நிறுவனங்களின் மூலம் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பங்குச்சந்தையிலும் பேராசை காட்டி மோசடி செய்யும் பேர்வழிகள் ஏராளம் ! 

உங்களால் பங்குச்சந்தையை புரிந்து கொள்ள முடியவில்லை எனில், முதலிரண்டு படிநிலைகளோடு இருந்து விடுவது நல்லது. 

மூச்சுப்பயிற்சியை மெதுவாக கவனித்தால் தான் மெருகும், நிதி முதலீடும் சாமானியனுக்கு அப்படித்தான் 🙂

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை பாதிக்கும் இரண்டு காரணிகள்

பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை பாதிக்கும் இரண்டு காரணிகள்

Two factors that affecting the Stock Prices in the Equity Market

பொதுவாக பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவன பங்கின் விலை பல்வேறு காரணிகளால் ஏற்ற-இறக்கத்திற்கு உட்படும். இதன் காரணமாகவே பங்கு முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என சொல்லப்படுகிறது. பங்கு விலையின் மாற்றத்திற்கு முதற்காரணமாக அமைவது தேவைக்கும்-உற்பத்திக்குமான(Demand-Supply) இடைவெளி தான். 

எனினும் இந்த தேவைக்கும், உற்பத்திக்குமான வாய்ப்பை ஏற்படுத்துவது சந்தையில் ஈடுபடும் வணிகர்(வர்த்தகர்) மற்றும் முதலீட்டாளரின் மனநிலையை(Trading Psychology & Behavioural Finance) பொறுத்தது. அதாவது இன்று இந்த பங்கினை இந்த விலையில் வாங்கலாமா வேண்டாமா; இன்று ரிஸ்க் எடுத்து லாபம் பார்க்கலாமா, இல்லையெனில் நீண்டகாலத்திற்கு பங்குகளை தக்கவைத்து கொள்ளலாமா, கிடைத்த லாபத்தை இப்போதே எடுத்து விடுவது, பெருத்த நட்டத்துடன் இத்தோடு சந்தையிலிருந்து வெளியேறி விடுவோமா என ஒவ்வொருக்கும் ஒரு மனப்போக்கு உண்டு.

இங்கே நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர் பெரு முதலீட்டாளர்கள் போன்றோர் நாம் மேலே சொன்ன மனப்போக்கை கொண்டிருந்தாலும் அவர்களின் முதலீட்டு முடிவெடுத்தலுக்கான காரணிகள், சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து சற்று மாறுபடும். இந்த காரணிகள் இரு வகைப்படும். இவை உலகளாவிய மற்றும் பொருளாதார வல்லுநர்களால் நிருபிக்கப்பட்ட சந்தை காரணிகளாகவும் உள்ளது.

நுண்பொருளியலும், பருப்பொருளியலும்:

பொருளாதாரத்தின் இரு பெரும்பிரிவுகளாக நுண்பொருளியலும்(Micro Economics), பருப்பொருளியலும்(Macro Economics) உள்ளது. நுண்பொருளியலை தான் நாம் பெரும்பாலும் சமூக அறிவியலாக காண்கிறோம். பருப்பொருளியல் என்பது ஒரு நாடு சார்ந்தோ அல்லது மண்டலம் சார்ந்த பொருளாதார செயல்பாடுகளை கொண்டிருக்கும். இதற்கும் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலைக்கும் என்ன சம்மந்தம் என கேட்கிறீர்களா ?

இந்த இரண்டு காரணிகள் தான் பங்குச்சந்தையின் குறியீடுக்கும்(Index), குறிப்பிட்ட நிறுவன பங்கின் விலை மாறுபாட்டுக்கும் காரணம். நாம் என்னவோ பங்குகளை ஒரு ஊகத்தில்(Speculation) வாங்கி விற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கான பணம் நமக்கு எங்கிருந்து வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்க வேண்டிய பங்குகளின் பண முதலீட்டை எங்கிருந்து பெறுகின்றனர், ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்ட தனது பங்குகளின் மூலம் எவ்வாறு தனது மதிப்பீட்டை பிற்காலத்தில் உயர்த்துகிறது(பங்கு விலையும் ஏறும்) – இது போன்ற கேள்விகளுக்கான விடை தான் நாம் மேலே சொன்ன இரண்டு காரணிகளும்.

மைக்ரோ எகானமி(Micro Economy) என சொல்லப்படும் நுண்பொருளியல் பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் மீது கவனம் செலுத்துகிறது. நிறுவனத்தின் வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது, நிதிநிலை(P&L, Balance Sheet and Cash Flow) எப்படி மற்றும் நிர்வாகத்திறன்(Corporate Governance) ஆகியவற்றை பற்றி அலசுகிறது. தனிநபர் வருவாய், உற்பத்தி மற்றும் தேவை, நுகர்வுத்தன்மை, வரி செலுத்துதல் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

மேக்ரோ எகானமி(பருப்பொருளியல்) ஒரு நாட்டின் பணவீக்கம், வட்டி விகித மாற்றம், வேலைவாய்ப்பின்மை விகிதம், உட்கட்டமைப்பு, அரசு சார்ந்த பொருளாதார கொள்கைகள் மற்றும் நிறுவனத்தின் அல்லது ஒரு துறையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இன்னபிற காரணிகளை கொண்டிருக்கும். 

இவற்றை நாம் பொதுவாக பங்குச்சந்தையின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis – கடந்த கால பங்கு விலையை அலசுவதற்கு மட்டும்) ஆகிய இரு படிப்பினைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பங்குச்சந்தையில் பங்குகளின் விலை இறங்குவதற்கு அல்லது ஏறுவதற்கு பெரும்பாலும் இந்த இரண்டு பொருளியல் தான் காரணமாக உள்ளது. மைக்ரோ எகானமியை பொறுத்தவரை, மேக்ரோ எகானமியில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை(Uncertainty) இதனை வெகுவாக பாதித்து விடும். இதன் காரணமாக தான் உலக பொருளாதார மந்தம் அல்லது வீழ்ச்சியில் ஏற்றம் பெற்று வரும் சந்தையும் விழும். ஊரே அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும் சந்தை ஏறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Panama Petrochem Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1982ம் ஆண்டு தனியார் நிறுவனமாக துவக்கப்பட்ட பனாமா பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட், பல்வேறு வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் தயாரிப்பில் திரவ பாரஃபின் எண்ணெய்கள், பெட்ரோலியம் ஜெல்லி, மை எண்ணெய்கள், ஆன்டிஸ்டேடிக் கோனிங் எண்ணெய், ரப்பர் செயல்முறை எண்ணெய்கள், மின்மாற்றி எண்ணெய்கள், கேபிள் நிரப்புதல் கலவைகள் மற்றும் பாரஃபின் மெழுகு ஆகியவை அடங்கும்.

பெட்ரோலிய சிறப்பு தயாரிப்பு(Petroleum Specialty Products) பிரிவில் 80க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் தொழில் புரிந்து வருகிறது. இவை மைகள் மற்றும் பிசின்கள், ஜவுளி, ரப்பர், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், வாகனம், மின்சாரம், கேபிள்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு இன்றியமையாதவை. 

1993ம் ஆண்டில் நிறுவனம் பொது நிறுவனமாக(Public Limited) பதிவு செய்யப்பட்டு 1994ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்திற்கு தற்போது உள்நாட்டில் 4 உற்பத்தி ஆலைகள் உள்ளது. 

வருவாயை பொறுத்தவரை நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அழகுசாதனம் மற்றும் மருந்துத்துறை பிரிவுகளில் 24 சதவீதமும், மைகள் / பூச்சுகள் பிரிவில் 21 சதவீதமும், ரப்பர் செயல்முறை பிரிவில் 19 சதவீதமும், ஜவுளித்துறையில் 19 சதவீத வருவாய் பங்களிப்பையும் கொண்டுள்ளது. உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் 51 சதவீதம் ஏற்றுமதியில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களுக்கு நிறுவனம் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாபர் இந்தியா, ஹூபர் குழுமம், ஏடிசி(ATC) டயர் ஆகியவை உள்ளன. 

நிறுவனம் சமீபத்தில் நான்கு புதிய தயாரிப்பு பொருட்களாக: மை மற்றும் பூச்சு தொழிலுக்கான அரோமா ஃப்ரீ டிஸ்டில்லேட்ஸ்(Aroma Free Distillates), பெயிண்ட் தொழிலுக்கான நறுமண இலவச கரைப்பான்கள், துளையிடுதல் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கான மக்கும் எண்ணெய்கள் மற்றும் ரப்பர் தொழில்துறைக்கான நறுமணமற்ற புதிய எண்ணெய்கள் ஆகியவற்றை சந்தையில் வெளியிட்டுள்ளது. 

வருங்காலத்தில் பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தங்களது இலக்கு என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் முயற்சியாக கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுமார் 30,000 டன் திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவியுள்ளது. இவற்றில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகமயமாக்கப்பட்டுள்ளது.

பனாமா பெட்ரோகெம் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 1,953 கோடி ரூபாய். நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.157 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 21 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்திற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் என பெரிதாக எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,249 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,940 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) விகிதம் கடந்த பல வருடங்களாக சற்று ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம்(PBT) ரூ. 295 கோடியாகவும், நிகர லாபம் 233 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.940 கோடி(மார்ச் 2023). கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி சராசரியாக 13 சதவீதமும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமுமாக இருந்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமும், இதுவே பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது. 

நிறுவனத்தை பொறுத்தவரை பாதகமான நிலையாக மூலப்பொருட்களின் விலை மாற்றம்(கச்சா எண்ணெய்), சுற்றுச்சூழல் அபாயங்கள், டாலர் விலை மாற்றம், துறையில் ஈடுபடும் போட்டி மற்றும் பெரு நிறுவனங்கள், அரசு கொள்கைகள் ஆகியவை. சாதகமான நிலை என காணுகையில் நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு பொருட்கள், வலுவான வாடிக்கையாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு(R&D) ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுதல், ஏற்றுமதி சந்தையில் காணப்படும் வாய்ப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான உலகளாவிய தேவை.

2022-23ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனம் ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 222 கோடி ரூபாயை வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) தொகையும் மேம்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடு

தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடு 

 

Difference between Audited and Unaudited Company Financial Reports – Fundamental Analysis

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திறன் ஆகிய செயல்பாடுகளை அறிய அந்நிறுவனத்தின் மூன்று முக்கியமான நிதி அறிக்கைகளை அலச வேண்டும். இந்த மூன்று அறிக்கைகளும் ஒரு முதலீட்டாளர் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான அடிப்படை அறிக்கைகளாகும்.

 

  • லாப-நட்ட அறிக்கை (Profit & Loss Statement or Net Income Statement)

  • இருப்புநிலை அறிக்கை (Balance Sheet)

  • பணப்பாய்வு அறிக்கை (Cash Flow Statement)

 

இந்த அறிக்கைகளின் மூலம் ஒரு நிறுவனத்தின் விற்பனை வருவாய், செலவுகள், கடன் தன்மை, லாபம் மற்றும் லாப வளர்ச்சி, வருமான வரி, ரொக்க கையிருப்பு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், குறுகிய மற்றும் நீண்ட கால கடன், தொழிலுக்கான மூலதனம் மற்றும் பங்குதாரர்கள் பங்களிப்பு என பல்வேறு தகவல்களை பெறலாம்.

 

ஒரு நிறுவனம் உண்மையில் வளர்ச்சியை நோக்கி தான் செல்கிறதா, நிறுவனம் சார்பாக ஏற்கனவே சொல்லப்பட்ட இலக்கு சரியானதா, சந்தையில் நிறுவனத்தின் நிதித்திறன் அதன் பங்கு விலையில் தெரிகிறதா, நிறுவனம் திவால் நிலைக்கு செல்லுமா, தொழிலுக்கான எதிர்கால வாய்ப்பு என ஆராய்வதற்கு இந்த அறிக்கைகள் உதவும்.  

 

உண்மையில் ஒரு நிறுவனம் நாளை திவால் நிலைக்கு செல்லும் என அந்நிறுவனத்தின் குடும்பத்தினருக்கு கூட தெரியுமா என நாம் யூகித்தும் பார்க்க முடியாது. ஆனால் இந்த மூன்று முக்கிய அறிக்கைகளை கொண்டு ஒரு நிறுவனம் தொழிலில் சிறந்து விளங்குமா, எதிர்காலத்தில் தாக்குப்பிடிக்குமா, நிறுவனமே கைமாறினாலும் தொழில் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்புள்ளதா என்பதனை முதலீட்டாளரான நாம் அறியலாம். இதற்கு உதாரணமாக சத்யம் கம்ப்யூட்டர், யெஸ் வங்கி, ஜெய்ப்ரகாஷ் அசோஸியேட்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிகழ்வுகளை சொல்லலாம்.

 

மேற்சொன்ன நிதி அறிக்கைகளை ஒரு நிறுவனம் காலாண்டுக்கு ஒரு முறையோ, அரையாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ பொதுவெளியில் முதலீட்டாளர்கள் அணுகும் படி வெளியிடுவது சட்டமாகும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்திலும், இன்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் நிறுவனம் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்த நிதி அறிக்கைகள் மட்டுமே எளிதாக கிடைக்கப்பெறுகிறது. 

 

பொதுவெளியில், நமக்கு கிடைத்த தகவல்களை கொண்டே நாம் ஆராய முடியும். பங்குச்சந்தையில் மற்றவையெல்லாம் வெறும் யூகமே !  

 

நிறுவனம் பொதுவெளியில் வெளியிடும் இந்த நிதி அறிக்கைகள் பெரும்பாலும் தணிக்கை செய்யப்பட்ட(Audited Financial Statements) அல்லது தணிக்கை செய்யப்படாத(Unaudited Financial Statements) அறிக்கைகளாக இருக்கும். பொதுவாக தணிக்கை அல்லது தணிக்கை செய்யப்படாத அறிக்கைகள் வணிகப்பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் கணக்கியல் செயல்முறையாகும்.

 

ஒரு தொழில் அல்லது வணிகத்தின் நிதி பரிவர்த்தனைகளை சரியாக ஒழுங்குபடுத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில், அதனை ஒரு அறிக்கையாக நிறுவனம் தயார் செய்யும். அந்த அறிக்கையின் துல்லியத்தன்மை (உண்மைத்தன்மை) எந்தளவில் உள்ளது என்பதனை நாம் மேற்சொன்ன கணக்கியல் பயன்பாடு மூலம் அறியலாம்.

 

தணிக்கை செய்யப்படாத(unaudited) அறிக்கைகள் என்பது ஒரு நிறுவனத்தால் நிதி அறிக்கையாக தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுவே தணிக்கை செய்யப்பட்ட(Audited) அறிக்கைகள் என்பது ஒரு நிறுவனத்தால் நிதி அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிய, அந்நிறுவனம் சாராத வேறொருவர் ஆராய்ந்து மதிப்பிடுவதுண்டு. இந்த மதிப்பீட்டிற்கு பின்பு வெளியிடப்படும் அறிக்கை தான் பொதுவெளியில் வரும். இதனை தான் நாம் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையாக காண்கிறோம்.

 

இந்த இரு அறிக்கைகளிலும் கிடைக்கப்பெறும் தகவல்கள் பெரும்பாலும் தொடர்புடையதாக மற்றும் சரியாக இருந்தாலும், தணிக்கை செய்யப்படாத அறிக்கையை காட்டிலும் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின் மூலம் ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கும், அதன் பங்குதாரர்களுக்கும்  நம்பிக்கையை ஏற்படுத்தலாம். 

 

பொதுவாக பட்டியிலப்பட்ட ஒரு நிறுவனத்தின் வருடாந்திர நிதி அறிக்கைகள் மட்டுமே தணிக்கை(Audited) செய்யப்படுகின்றன. மற்ற கால நிதி அறிக்கைகள் பெரும்பாலும் தணிக்கை செய்யப்படுவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை அதன் ஆண்டு அறிக்கையில்(Annual Report) மட்டுமே உள்ளடக்கியுள்ளது. எனவே முழு ஆண்டு நிதி அறிக்கைகள் ஒரு முதலீட்டாளருக்கு பெரிதும் உதவும்.

 

தணிக்கை செய்யப்படாத(unaudited) அறிக்கைகள் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கு ஒரு முறை பொதுவெளியில் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. ஒரு முதலீட்டாளருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிக்காகவும்(Regulations) இது போன்ற கால அறிக்கைகள் வெளியிடப்படுகிறது. சுருக்கமாக நிறுவனம் நடப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதனை தணிக்கை செய்யப்படாத அறிக்கையின் மூலம் நிறுவனம் நமக்கு சொல்கிறது.

 

தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை காட்டிலும், தணிக்கை செய்யப்படாத அறிக்கைகளை(unaudited) தயார் செய்வதற்கு நிறுவனத்திற்கு பெரிதாக செலவினம் இல்லை. நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களை கொண்டு, அதன் விருப்பத்தின் பெயரில் இதனை தயார் செய்து கொள்ளலாம். அதே வேளையில் தணிக்கை எனும் போது நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வர வேண்டும், அதற்கான ஆதாரமும் இருக்க வேண்டும் மற்றும் தணிக்கையாளருக்கான கட்டணம் சற்று அதிகமே !

 

ஒரு நிறுவனத்திற்கு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை தயார் செய்ய மற்றும் வெளியிட அதிகக் கட்டணம் மற்றும் நேரம் அதிகம் எடுத்து கொண்டாலும், நிறுவனம் சாராத வேறொருவர் மூலம் மதிப்பிடப்படும் போது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு, நிறுவனத்தின் மீது உண்மைத்தன்மையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்  

India’s Retail Inflation rate in the month of September 2023 – 5.02 Percent

நாட்டின் சில்லறை விலை(நுகர்வோர்) பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 6.83 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாத முடிவில் 5.02 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், கடந்த மூன்று மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் சற்று குறைந்து 6.56 சதவீதமாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையும் 4.61 சதவீதமாக குறைந்துள்ளது.

வீட்டுமனை, ஒளி மற்றும் எரிபொருட்கள், புகையிலை பொருட்களின் விலையும் செப்டம்பர் மாதத்தில் குறைந்து காணப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலிருந்து காணுகையில், இரு மாதங்களுக்கு இடையிலான நுகர்வோர் விலை வீழ்ச்சி தற்போதைய ஆகஸ்ட் – செப்டம்பர் 2023 காலத்தில் தான் காணப்படுகிறது.

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க(Consumer Price Index – CPI) கணக்கீட்டில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் சுமார் 46 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், சந்தை மதிப்பீட்டை(5.5 சதவீதம்) காட்டிலும் குறைவாக காணப்படுகிறது. 

இந்தியாவில் பணவீக்க விலைக் குறியீடு இரு வகைகளில் கணக்கிடப்படுகிறது – சில்லரை(நுகர்வோர்) விலை மற்றும் மொத்த விலை பணவீக்க விகிதம். நாட்டின் நுகர்வோர் விலை அதிக ஏற்ற – இறக்கமாக இருப்பதற்கு காரணமாக பெரும்பாலும் நாம் எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருப்பது தான். 

இது போக பருவமழையின் நிச்சயமற்ற தாக்கம், மேம்படுத்தப்படாத சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், அதிக நிதிப் பற்றாக்குறையும் பணவீக்க விகித மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

What means a Debt Free Listed Company in the Stock Market ?

கடனில்லா நிறுவனங்கள் என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அதன் இருப்புநிலை அறிக்கையில்(Balance Sheet) கடன் எதுவும் இருக்க கூடாது. பொதுவாக ஒரு நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய அல்லது தொடர்ந்து தொழில் புரிய கடன் வாங்கலாம். இந்த கடன் பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ(Debt Securities) இருக்கலாம். 

பங்குகளாக கடன் பெறப்பட்டிருந்தால், பின்னாளில் நிறுவனத்தின் லாபத்தில் பங்குதாரர்களுக்கும் பங்குண்டு. அதே வேளையில் கடன் பத்திரங்களின் மூலம்  பெறப்படும் கடன் தொகைக்கு, பின்னாளில் வட்டியுடன் சேர்த்து அசல் தொகையை நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும்.

நிறுவனத்தின் கடன் பொதுவாக குறுகிய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ இருக்கலாம். நிகர கடன்(Net Debt) எனும் போது, ஒரு நிறுவனத்திற்கு கடன் இருக்கலாம். அவை குறுகிய கால அல்லது நீண்ட கால கடனாக இருக்கக்கூடும். அந்த கடனை நிறுவனம் இன்றே செலுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், நிறுவனத்திடம் அதனை செலுத்துவதற்கான ரொக்க தொகை(Cash & Cash Equivalents) உள்ளதா என்பதை ஆராய்வது, நிகர கடனாகும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் முடிவில் அதன் இருப்புநிலை அறிக்கையின் படி, ரூ.50 கோடி கடன் உள்ளதாக எடுத்து கொள்வோம். இப்போது, சொல்லப்பட்ட ஆண்டின் முடிவில் அந்த நிறுவனத்திடம் ரூ.25 கோடி ரொக்கமாக இருக்கும் நிலையில், அந்த நிறுவனம் தனது கடனை குறைக்கும் பட்சத்தில், மீதமிருக்கும் கடன் ரூ.25 கோடி மட்டுமே.

Net Debt = Borrowings(Short Term Debt + Long Term Debt) – Cash & Cash Equivalents

இதுவே நிறுவனத்திடம் ரொக்க தொகை ரூ.50 கோடியாக இருந்து கடனை அடைக்கும் நிலையில், நிறுவனத்திடம் தற்போது கடன் எதுவும் இருக்காது. இதனை தான் நாம், ‘நிகர கடனில்லா தன்மை(Net Debt Free)’ என்கிறோம். இங்கே நிறுவனம் அந்த கடனை உடனடியாக உண்மையில் செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. கடனை திரும்ப செலுத்த கூடிய நிலை ஏற்பட்டால் என்ற தன்மையை மட்டுமே இந்த விதிமுறை கூறுகிறது.

நிறுவனத்தின் கடன் தன்மையை புரிந்து கொள்ள மற்றொரு முறையை நாம் காணலாம். அதாவது நிறுவனத்தின் மொத்த கடனை, அதன் பங்குதாரர்களின் பங்கு மதிப்பை கொண்டு ஒப்பிடுவது. இதனை கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் என்கிறோம்.

Debt to Equity Ratio = Total Liabilities / Shareholder’s Equity

(Simple Way to Calculate from the Balance Sheet: Borrowings / (Equity Share Capital + Reserves))

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை ஒன்று(1.0) என வந்தால், நிறுவனத்தின் கடனும், பங்கு மதிப்பும் சரிசமமாக உள்ளது. இதன் காரணமாக நிறுவனம் பின்னாளில் தனது கடனை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படலாம். இது நிறுவனத்திற்கும், பங்குதாரர்களுக்கு நல்லதல்ல. இதுவே 0.5 என விகிதம் இருந்தால், நிறுவனத்தின் கடன் தன்மை, பங்குகளின் மதிப்பில் பாதியாக உள்ளது என பொருளுண்டு. 

சுருக்கமாக சொன்னால், ஒருவருடைய வருவாய் ரூ.1 என கொள்ளும் போது, அதற்குள்ளாகவே அதன் செலவுகளும் இருக்க வேண்டும். மீறினால், கடன் தன்மை அதிகரித்து நிர்வாகம் சீர்கெடும், தொழிலும் பாதிப்படையலாம். இதுவே ஒரு ரூபாய் வருவாய் இருக்கையில், செலவு 50 பைசா அல்லது அதற்கு கீழாக இருக்கும் போது, அவர் பின்னாளில் கடன் வாங்கினாலும் அதனை திரும்ப செலுத்துவதற்கான திறன் உள்ளது. வருவாயை காட்டிலும் செலவு குறைவாக இருக்கும் நிலையில், தொழிலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏதுமிருக்காது.

மேலே சொல்லப்பட்ட இரு நிலைகளையும் அறிந்து வைத்திருப்பது, பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு அவசியம். ஒரு நிறுவனத்திற்கு நிகர கடன் நன்றாக இருந்தாலும் சரி, கடன்-பங்கு தன்மை 0.5 விகிதத்துக்கு குறைவாக இருந்தாலும் சரி – அவை கடனில்லா நிறுவனங்களாக கருதப்படும்.

ஒரு நிறுவனம் கடனில்லா தன்மையாக இருப்பதில் சாதகமும், பாதகமும் உள்ளது. கடனில்லாமல் இருக்கும் போது, நிறுவனத்தின் லாபத்திலிருந்து கடனுக்கான வட்டி தொகைக்கு ஒதுக்க தேவையில்லை. தொழிலை விரிவாக்கம் செய்ய போதுமான தொகை கையிருப்பில் இருக்கும். லாபத்தில் பங்குதாரர்களுக்கு பங்களிப்பை(Dividend, Buyback) அளிக்கலாம். 

பொதுவாக பொருளாதார மந்தநிலை மற்றும் துறை சார்ந்த நிதிச்சிக்கல் ஏற்படும் போது, கடனில்லா நிறுவனங்கள் தப்பி பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். திவால் நிலையை தவிர்ப்பது கடனில்லா நிறுவனங்களுக்கு எளிது. 

பாதகமான நிலையென்றால், ஒரு நிறுவனம் பங்குகள் மூலம் தனது முதலீட்டை அதிகம் ஈர்க்கையில், அது அந்த நிறுவனத்திற்கு நீண்ட காலத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், பொதுவாக கடன் பத்திரங்களின் மூலம் பெறப்படும் கடனுக்கு, பங்குகளை காட்டிலும் செலவு விகிதம் மிக குறைவே. பங்குகள் எனில், லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். கடன் பத்திரங்கள்(Debt Funds) எனில், நிலையான வட்டியுடன் அசலை செலுத்தினால் போதுமானது. இதன் காரணமாக தான் பெரும்பாலான நிறுவனங்கள், வங்கிக்கடனை குறைந்த வட்டி விகிதத்தில் வாங்கி கொள்கிறது.  

இந்திய பங்குச்சந்தையில் கடனில்லா நிறுவனங்கள்:

  • கடன்-பங்கு(Debt to Equity Ratio) விகிதம் ஒன்றுக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,166
  •  கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,550
  • பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 366
  •  பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 50 சதவீதத்திற்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 257
  • பங்கு மூலதன மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், ரொக்க கையிருப்பு(Cash Equivalents) நிறுவனத்தின் கடனை காட்டிலும் அதிகமாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கு மேலாக மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 147.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

International Coffee Day – October 1, 2023 – Industry Insights

காபி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ம் நாளில் சர்வதேச காபி தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. தேசிய காபி தினம் என ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 1963ம் ஆண்டில் லண்டனை தலைமையிடமாக கொண்டு சர்வதேச காபி அமைப்பு(International Coffee Organization) ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பில் இந்தியா உள்பட 42 நாடுகள் காபி உற்பத்தி உறுப்பினர்களாகவும், 7 நாடுகள் காபி இறக்குமதி செய்யும் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இறக்குமதி செய்யும் உறுப்பினர் நாடுகளாக ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராச்சியம் மற்றும் துனிசியா ஆகியவை உள்ளன. 

சர்வதேச காபி தினத்தில் சில காபி உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள், அன்றைய நாளில் காபியை இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையிலோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ‘காபி’, ஒரு பிரபலமான பானமாகவும், பொருட்சந்தையில் முக்கிய பொருளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் காபியை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்குகிறார்கள். 

உலகில் நாள்தோறும் சுமார் 225 கோடி கப் அளவிலான காபி, 100 கோடி நபர்களால் உட்கொள்ளப்படுகிறது. உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான காபி உற்பத்தி பெரும்பாலும் வளரும் நாடுகளில் தான் உற்பத்தியாகிறது. உலகம் முழுவதும் காபியை உற்பத்தி செய்யும் சிறு வணிகர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2.50 கோடி. தென் அமெரிக்காவில் தான் காபியை உட்கொள்ளும் அல்லது நுகரும் தன்மை அதிகமாக உள்ளது.

சர்வதேச காபி சந்தையின் மதிப்பு சுமார் 127 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய காபி சந்தையின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலக காபி விற்பனையின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 முதல் 5 சதவீதமாக(CAGR 2023-2028) மதிப்பிடப்படுகிறது. உலகின் காபி விற்பனை மூலமான பெரும்பாலான வருவாய் அமெரிக்காவிலிருந்து தான் கிடைக்கப்பெறுகிறது. உலக காபி சந்தையில் ஒரு தனிநபரின் சராசரி நுகரும் அளவு நாளொன்றுக்கு 700 முதல் 800 கிராம்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

காபி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில். வியட்நாம், கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஏழாவது மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகளாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக காபி விற்பனை சந்தையின் நாயகனாக மற்றும் பிராண்டாக, ‘ஸ்டார் பக்ஸ்(Starbucks)’ உள்ளது. இந்நிறுவனம் காபி விற்பனை மூலம் சுமார் 32.25 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. அதாவது அமெரிக்காவின் மொத்த காபி விற்பனை வருவாயில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம். ஸ்டார் பக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல Panera Bread, McCafe, Lavazza, Tim Hortons, Dunkin’s Brands ஆகிய நிறுவனங்கள்(பிராண்டுகள்) உள்ளன.      

2022-2023ம் ஆண்டின் முடிவில் உலக காபி தொழிற்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 495 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் காபி உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை கர்நாடக மாநிலம் மட்டும் கொண்டுள்ளது. இதற்கடுத்தாற் போல கேரளா 23 சதவீதத்தையும், தமிழ்நாடு 6 சதவீதத்தையும் பங்களிப்பாக கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஆண்டுக்கு சுமார் 2.33 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான காபியை உற்பத்தி செய்கிறது. 

இந்திய உள்ளூர் சந்தையில் காபி நுகரும் தன்மை 73 சதவீதம் நகரங்களிலிருந்து தான் வருகிறது. இந்திய காபியை அதிகம் நுகரும்(இறக்குமதி) நாடுகளாக இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா, லிபியா, போலந்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவின் காபி ஏற்றுமதியில் இத்தாலியின் பங்களிப்பு மட்டும் சுமார் 45 சதவீதம். அடுத்த ஐந்து வருடங்களில்(2023-2028) இந்திய காபி சந்தையின் விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதத்தை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

இந்திய பங்குச்சந்தையில் தோட்டத்துறை பிரிவில்(Plantation) சுமார் 44 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் உட்பிரிவான தேநீர் மற்றும் காபி(Tea & Coffee) துறையில் 26 நிறுவனங்கள் உள்ளன. இச்சந்தையின் முதன்மை இடத்தை, ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ்’ தக்க வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.81,400 கோடி. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை நிறுவனமாகவும் ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல்

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல் 

Captain Pipes Limited – Fundamental Analysis – Stocks

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேப்டன் குழுமத்தின் துணை நிறுவனம் தான் கேப்டன் பைப்ஸ் லிமிடெட். பிளாஸ்டிக் செய்யப்படாத பி.வி.சி(UPVC) குழாய்கள் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது கேப்டன் பைப்ஸ் நிறுவனம். 

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக கருதப்படும் UPVC குழாய்கள் பொதுவாக வெப்ப செயல்திறன் மற்றும் நீடித்த ஆயுள் காலத்தை கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் UPVC தொழில்நுட்பம், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. UPVC சாளரங்கள் பெரும்பாலும் பல்நோக்கு செயல்பாடுகளை கொண்டவை. 

கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட கேப்டன் பைப்ஸ் நிறுவனம் UPVC குழாய்கள் பிரிவில் உறை குழாய்கள், பிளம்பிங் குழாய்கள், உறிஞ்சும் குழாய்கள், தோட்ட குழாய்கள், HDPE குழாய்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்கள், SWR குழாய்கள், கரைப்பான் சிமெண்ட் மற்றும் பி.வி.சி. அழுத்த குழாய்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த குழாய்கள் பெரும்பாலும் நீர் வழங்கல் பகுதிகள்(Water Supply Lines), வடிகால் அமைப்பு, கழிவு நீர் பாதை, நீர்ப்பாசன அமைப்புகள், மின் வழித்தடம் மற்றும் கட்டுமான பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சுமார் 62,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய தொழில்நுட்பத்தை(German extrusion lines and Japanese injection molding machine) கொண்டு குழாய்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தனது குழாய் விற்பனை கிளையை நிறுவியுள்ள கேப்டன் பைப்ஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பெரு நில பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

அகமதாபாத் அருகே புதிதாக ஒரு ஆலையை(Greenfield Plant) அமைப்பதற்கான திட்டத்திற்கு, சமீபத்தில் நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக அமையவுள்ள ஆலை 20,000 மெட்ரிக் டன் திறன் கொண்டதாகவும், இதற்கான மொத்த முதலீடு 25 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலையிலிருக்கும் உற்பத்தி திறனை இரட்டிப்பாக முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையின் SME பிரிவில் கேப்டன் பைப்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையில் தனது பொதுப்பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பின்னர் நடப்பு 2023ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் மும்பை பங்குச்சந்தையின் பிரதான பலகைக்கு(Migration) மாற்றப்பட்டுள்ளது. ஒன்பது வருடத்திற்கு முன்பு, SME பிரிவில் பங்கு வெளியிடுகையில் இதன் சந்தை மதிப்பு சுமார் நான்கரை கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை 0.13 மடங்கிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1.44 என்ற அளவிலும் உள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் நிறுவனம் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. அதே காலத்தில் நிறுவனத்தின் முக மதிப்பும்(Face value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 85 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.81 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) கடந்த பத்து வருடங்களில் சராசரியாக ஐந்து சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.1.81 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 46 சதவீதமாகவும் இருந்துள்ளது. அதே வேளையில் இதன் பங்கு விலை கடந்த மூன்று வருட காலத்தில் 200 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 6.10 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் தலைவராக திரு. ரமேஷ் கிச்சாடியா மற்றும் நிர்வாக இயக்குனராக திரு. கோபால் கிச்சாடியா ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். 

கேப்டன் குழுமத்தின் மற்ற துணை நிறுவனங்களாக கேப்டன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட், கேப்டன் பாலிபிளாஸ்ட் லிமிடெட், கேப்டன் டெக்னோகாஸ்ட் மற்றும் கேப்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.83 சதவீதம்

நாட்டின் ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.83 சதவீதம்  

India’s Retail Inflation rate in the month of August 2023 – 6.83 Percent

நாட்டின் நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் காணப்படும் ஒழுங்கற்ற மற்றும் தாமதமான பருவ மழை காரணமாக வரக்கூடிய மாதங்களில் உணவுப்பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதமாக இருக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்த நிலையில், இது 6.83 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 11.51 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 9.94 சதவீதமாக குறைந்துள்ளது.

இருப்பினும் கடந்த ஜனவரி 2020 காலத்தை ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் அதிகரித்து தான் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் காய்கறிகளின் பணவீக்க விகிதம் 26.14 சதவீதமாகவும், பால் பொருட்களின் விலை 7.73 சதவீதமாகவும் மற்றும் தானியங்களின் விலை 11.85 சதவீதமாகவும் உள்ளது.

பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் பெரியளவில் மாற்றம் பெறவில்லை. அதே வேளையில் மசாலா பொருட்களின் விலை 23.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீட்டுமனை 4.38 சதவீதமாகவும், ஒளி மற்றும் எரிபொருட்களின் பணவீக்க விகிதம் 4.31 சதவீதமாகவும் அதிகரித்து காணப்படுகிறது.

எல் நினோ(El Nino) காரணமாக பருவமழை இயல்பு நிலையை காட்டிலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, உணவுப்பொருட்களின் விலை வரக்கூடிய காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக உணவுப்பொருட்களின் விலை உயரக்கூடும் என கருதி அரசும் சர்க்கரை மற்றும் அரிசி உள்ளிட்ட தானியங்களின் ஏற்றுமதியை தடை செய்து வருவது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார) வளர்ச்சி – 7.8 சதவீதம்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார) வளர்ச்சி – 7.8 சதவீதம்

India’s Gross Domestic Product(GDP) growth in the April-June Quarter – 7.8%

2022ம் ஆண்டின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.385 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட வருட கணக்கின் படி, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 1.51 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார பங்களிப்பு 11.20 சதவீதமாகவும் (25.46 டிரில்லியன் டாலர்கள்), சீனாவின் பங்களிப்பு 7.97 சதவீதமாகவும் (17.96 டிரில்லியன் டாலர்கள்) இருக்கிறது. 

ஜூலை 2023 மாத முடிவில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 20.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளிகளாக அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி மற்றும் ரசியா ஆகிய நாடுகள் உள்ளன. 2022ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 80.23 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதியையும், சீனாவிலிருந்து சுமார் 102.25 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதியையும் மேற்கொண்டிருக்கிறோம். 

உலக வர்த்தகத்தில் நாம் பெரும்பாலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யக்கூடிய பிரிவுகளாக கனிம எரிபொருள்கள், எண்ணெய்கள், முத்துக்கள் மற்றும் விலையுர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், இயந்திரங்கள், அணு உலைகள் மற்றும் கொதிகலன்கள், மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் ஆகியவை உள்ளன.

கடந்த ஜூலை மாத முடிவில் நாட்டின் ஏற்றுமதி 32.25 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 52.92 பில்லியன் டாலர்களாவும் இருந்துள்ளது. தங்கத்தின் கையிருப்பு(Gold Reserves) 797.44 டன்களாக உள்ளது. 2022-23ம் நிதியாண்டின் முடிவில் வெளிநாட்டு கடன் 624.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. சந்தை எதிர்பார்த்த வளர்ச்சி மதிப்பீட்டை காட்டிலும், தற்போது சொல்லப்பட்ட வளர்ச்சி சற்று கூடுதலாகும். இதற்கு முந்தைய காலண்டான ஜனவரி – மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாகவும், கடந்தாண்டின்(2022-23) ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இது 13.1 சதவீதமாகவும் இருந்துள்ளது.

சேவைத்துறையில் ஏற்பட்ட வலுவான செயல்திறன், நுகர்வோர் தேவை அதிகரிப்பு, அரசு மற்றும் தனியார் ஆகியவற்றின் மூலதன செலவு ஆகியவற்றால், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் வளர்ச்சி சாத்தியமானது. அதே வேளையில் உற்பத்தி துறை எதிர்பார்த்த வளர்ச்சியை கண்டிருக்கவில்லை. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் – 7.44 சதவீதம்

நாட்டின் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் – 7.44 சதவீதம் 

India’s Retail Inflation Rate in the month of July 2023 – 7.44%

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை எகிறுவதும், பின் சரிவதும் அடிப்படை பொருளாதாரத்தில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளியின் காரணமாக தான். நாட்டின் நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) என்றழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் ஜூலை மாத முடிவில் 7.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

ஜூன் மாத முடிவில் இது 4.87 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப்பொருட்களின் பணவீக்க விலை 11.51 சதவீதம் என்ற அளவில் அதிகரித்ததால், ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. இது கடந்த 15 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். 

உணவுப்பொருட்களின் பணவீக்கத்தில் காய்கறிகளின் விலை 37.30 சதவீதமும், மசாலா பொருட்களின் விலை 21.60 சதவீதமும் மற்றும் பருப்பு வகைகளின் விலை 13.30 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இது போல தானியங்களின் விலை 13 சதவீதமாகவும், பால் பொருட்களின் விலை 8.3 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.

ஒளி மற்றும் எரிபொருட்களின்(Fuel and Light) விலை 3.7 சதவீதமும், வீட்டுமனை 4.5 சதவீதமும் ஜூலை மாதத்தில் உயர்ந்து காணப்படுகிறது. துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையும் 5.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த சில்லரை விலை பணவீக்க கணக்கீட்டில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது.

india-inflation-cpi-Since 2012-2023

நடப்பு 2023-24ம் நிதியாண்டில் முதன்முறையாக ஜூலை மாத பணவீக்கம், மத்திய ரிசர்வ் வங்கியின் இலக்கினை கடந்து காணப்பட்டுள்ளது. நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்திற்குள்ளாக வைத்திருக்க மத்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் ஒழுங்கற்ற மற்றும் தாமதமான பருவமழை முறை, உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

Listed companies with Zero Promoter Holding – Fundamental Insights

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை குறைந்தபட்ச பொது பங்கு(Minimum Public Shareholding) விதியின் படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகளை ஒரு நிறுவனம் ஒதுக்க வேண்டும். பொது மக்களுக்கு என சொல்லும் போது சிறு முதலீட்டாளர், பெரு முதலீட்டாளர் மற்றும் நிறுவனங்களும் அடங்கும். நிறுவனர்களின்(Founders, Promoters) பங்களிப்பை பொறுத்தவரை, நம் நாட்டில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தில் 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பது சட்ட விதியாக உள்ளது.

75 சதவீதத்திற்கு மேலாக ஒரு நிறுவனம் பங்குகளை தன்வசம் வைத்திருந்தால், அந்த பங்குகளை, பங்கு விலக்கல்(Divestment) முறையில் மற்ற பங்குதாரர்களுக்கு விற்று விட வேண்டும். இது பொதுவாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விலக்கு பெற்ற நிறுவனங்களுக்கு பொருந்தாது. தற்போதைய நிலையில், 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்கும் பட்டியலிடப்பட்டவை, சுமார் 64 நிறுவனங்கள் தான். இவற்றில் எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் மற்றும் சில பொதுத்துறை வங்கிகளும் அடங்கும்.

பங்குச்சந்தையில் 50 சதவீதத்திற்கும் மேல் நிறுவனர்களின் பங்களிப்பை(Promoter Holding) கொண்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 2,854 (ஆகஸ்ட் 8, 2023 முடிவில்). இந்த பட்டியலில் ரூ.5,000 கோடிக்கும் மேலான சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனங்கள் 396. 5,000 கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மூலதன மதிப்பு, 50 சதவீதத்திற்கு மேலான நிறுவனர்களின் பங்களிப்பு மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 மடங்குக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 254.

பொதுவாக நிறுவனர்களின் பங்களிப்பு, பொது மக்கள் மற்றும் பிற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை காட்டிலும் அதிகமாக காணப்படுவது, நீண்டகாலத்தில் ஒரு முதலீட்டாளருக்கு சாதகமான அம்சமாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் மீது அதன் நிறுவனர்களே பங்களிப்பை கொடுக்காவிட்டால், பொது மக்களாகிய நாம் அந்த நிறுவனத்தின்(பங்குகள்) மீது நம்பிக்கை வைத்து என்ன பயன் ? இன்றும், சில நிறுவனங்களின் லாபத்தில் பெரும்பாலான பங்கு பலனை அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான்.

40 வருடங்களுக்கு முன்பு, இந்த ‘ABC’ மற்றும் ‘XYZ’ பங்குகளை வாங்கியிருந்தால், இன்று அது பல கோடிகள் பெற்றிருக்கும் என வெற்று பெருமை பேசி என்ன பயன். ஒரு கட்டுரையீர்ப்புக்கு(Article, Blogging Posts) வேண்டுமானால், இது போன்ற தகவல்கள் பயன்படலாம். உண்மையில், 40 வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு நிறுவனம், இன்று பல மடங்கு உயர்ந்திருந்தால் அந்த பலனை பெரும்பாலும் அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான். ஏனெனில் அவர்கள் வசம் மட்டும் அந்த பங்குகள் இன்றளவிலும் விற்கப்படாமல் இருந்திருக்கும். பொதுமக்களாகிய நாம் அந்த பங்குகளை எப்பொழுதோ விற்றிருப்போம்.

நிறுவனர்களின் பங்களிப்பு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனினும் சில நிறுவனங்களில் நிறுவனர்கள் சார்பாக எந்த பங்களிப்பும் இல்லாமல் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட நிறுவனங்கள் நல்ல நிறுவனங்களா  அல்லது சரிப்பட்டு வராதா என கேள்வி கேட்டால், அது அந்த நிறுவனத்தின் தொழில் அனுபவமும், நிர்வாக திறனையும் பொறுத்து தான் உள்ளது. 

இந்திய பங்குச்சந்தையில் புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் சுமார் 110 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முக்கிய நிறுவனங்களான ஐ.டி.சி, எச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் & டி ஆகியவை அடங்கும். சமீபத்தில் ஜோமாட்டோ மற்றும் பேடிஎம் நிறுவனங்கள். 

நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் இயங்கலாமா ? ஆம், தாராளமாக இயங்கலாம். சில நிறுவனங்கள் தங்கள் தொழிற்துறையின் சாதகத்திற்கு ஏற்ப, நாட்டின் சட்ட விதிகளுக்காக, திறன்மிக்க தொழில் வல்லுநர்களை நியமிப்பதன் மூலம் இது போன்ற நிறுவனங்களை செயல்படுத்துகின்றன. உண்மையில் அவர்களது பங்குகள், நிறுவனர்கள் பட்டியலில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பொதுப்பங்கு நிறுவனங்களின் வாயிலாக பங்குகளை கைவசம் வைத்திருந்து, நேரடியாக இல்லாமல் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை வைத்திருப்பர்.

உதாரணமாக ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் இந்திய காப்பீட்டு நிறுவனங்களிடமும், பிற வெளிநாட்டு நிறுவனங்களிடமும் உள்ளன. அதே வேளையில் மேலே சொல்லப்பட்ட நிறுவனங்களில், குறிப்பிடத்தக்க பங்குகளை மறைமுகமாக நிர்வாகத்தை நடத்தும் நிறுவனத்திற்கு உண்டு. இது போல தான் மற்ற நிறுவனர் பங்களிப்பு அல்லாத நிறுவனத்திலும் நடைபெறுகிறது. குழும நிறுவனங்கள்(Group of Companies) சில காலங்களில் இது போன்ற நடைமுறையை பின்பற்றி தங்களது துணை நிறுவனங்களை நடத்துகின்றனர்.

நிறுவனர்கள் தங்களது பங்குகளை வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ அடமானம் வைத்து, பின்னர் அது மீட்கப்படாமல் போனாலும் இது போன்ற நிலை ஏற்படலாம். நிறுவன கையகப்படுத்துதல், திவால் நிலை போன்ற சமயங்களிலும் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்கலாம்.

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை ஆராய, கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய அடிப்படை காரணிகள்(Fundamental Analysis – Factors)

பங்குச்சந்தையில் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாவிட்டாலும், அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தை திறம்பட வைத்திருக்க வேண்டும் என்பது தான் எதார்த்த உண்மை. எனவே, ஒரு நிறுவனத்தை ஆராயும் போது அதன் தொழில் அனுபவம், நிர்வாக திறன், கடனில்லாமை அல்லது கடனை திறம்பட தொழிலில் புகுத்துவது ஆகியவற்றை ஒரு முதலீட்டாளர் கவனிக்க வேண்டியது அவசியம். இல்லையனில் முதலீட்டாளருக்கு, அது ‘விழலுக்கு இறைத்த நீர்’ தான் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

Income Tax Returns – Filing Deadline – July 31, 2023

கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு ஆண்டு 2023-24 காலத்தில் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். பொதுவாக ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கப்படும் வரி தாக்கல், இம்முறை தாமதமாக துவங்கியது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. 

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு இம்முறை பெரும்பாலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சிரமத்தை சமாளிக்க வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இது ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே இருந்தது.

வருமான வரி தாக்கலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யாத நிலையில், அபராத கட்டணம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 60 வயதுக்குட்பட்ட தனிநபர் ஒருவர், ஒரு நிதியாண்டில் அவரது மொத்த வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். அவருக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

நடப்பு ஜூலை 26ம் தேதி வரை, நாட்டில் சுமார் 4.75 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதே வேளையில் வருமான வரி தளத்தில்(IT Portal) தங்களது பான் எண் கணக்கை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 11.44 கோடி (தனி நபர்). சொல்லப்பட்ட 4.75 கோடி வருமான வரி தாக்கலில் இதுவரை 4.24 கோடி பேர் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை(E-Verification) முடித்துள்ளனர்.

பொதுவாக வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும், மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்தால் மட்டுமே அது முழுமையான வரி தாக்கலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தனிநபர் வருமான வரி தாக்கலை செய்துள்ளவர்களில் பெரும்பாலும் ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தியுள்ளவர்களே அதிகம். 

2022-23 மதிப்பீட்டு ஆண்டில்(Assessment year) ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தி வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சமாக இருந்த நிலையில் நடப்பு 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டில் இது 72.95 லட்சமாக(ஜூன் மாத முடிவில்) இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை சுமார் 95.50 சதவீதம் அதிகமான வரி தாக்கல் நடைபெற்றுள்ளது. 

மாநிலங்கள் வாரியாக காணும் போது, மகாராஷ்டிராவில் சுமார் 18.52 லட்சம் வரி தாக்கலும், குஜராத்தில் 14.02 லட்சமும் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் 11.92 லட்சமும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஜூன் மாத முடிவின் படி, 8.19 லட்சம் வரி தாக்கல் பதிவாகியுள்ளன. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி 

Infosys reported a net profit of Rs.5,945 Crore in Q1FY24

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் தனது 2023-24ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டிருந்தது. சொல்லப்பட்ட ஏப்ரல்-ஜூன்  காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,933 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,869 கோடியாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 9,064 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப விகிதம்(OPM) 24 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 561 கோடி ரூபாயை நிறுவனம் ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.8,362 கோடியாகவும், நிகர லாபம் ரூ.5,945 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட வருவாய் 10 சதவீதமும், நிகர லாபம் 11 சதவீதமுமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஜூன் 2022ல் ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) ரூ. 12.74 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.14.32 ஆக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6.01 லட்சம் கோடி. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. மார்ச் 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 73,338 கோடி ரூபாய். இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் நிதித்துறை சார்ந்த சேவைகளிலிருந்து பெறப்படுகிறது. 

இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஜூன் காலாண்டின் படி 1,883 வாடிக்கையாளர்கள்(நிறுவனங்கள்) உள்ளனர். நூறு மில்லியன் டாலர்களுக்கு மேலாக வருவாய் அளிக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் 38 பேர். 940 நிறுவன வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலான வருவாயை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

முதல் 25 நிறுவன வாடிக்கையாளர்கள்(Top 25 Clients) மட்டும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 35 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜூன் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3.36 லட்சம். இவற்றில் 3.17 லட்சம் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், மற்றவர்கள் விற்பனை மற்றும் அதற்கு பிறகான சேவையை வழங்குவதிலும் உள்ளனர். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23 – சிறு பார்வை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23 – சிறு பார்வை 

India’s Gross Domestic Product(GDP) growth – 2022-23 Insights

முன்னொரு காலத்தில் இந்திய பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாக சொல்லப்பட்டிருந்தாலும், இன்றளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும்பாலும் சேவைத்துறையை சார்ந்து தான் உள்ளது. நாட்டின் பொருளாதார உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு மட்டும் 50 சதவீதத்திற்கும் மேலாக  உள்ளது. விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி துறையின் ஒட்டுமொத்த பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளது. எனினும் இத்துறை தான் நாட்டின் வேலைவாய்ப்பினை வழங்குவதில் 50 சதவீதத்திற்கு மேலாக காணப்படுகிறது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சந்தை எதிர்பார்த்த அளவினை காட்டிலும் அதிகமாக தான் வளர்ச்சியடைந்துள்ளது. நடப்பு 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் பொருளாதார வளர்ச்சியை காணுகையில், 2021-22ம் நிதியாண்டில் அதிகபட்சமாக 9.1 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இது 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலமாகும். அதாவது கொரோனா ஊரடங்கு காலத்தில்(2020-21) நாட்டின் பொருளாதாரம் 5.8 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது. 

குறைவான வளர்ச்சி அளவாக 2019-20ம் நிதியாண்டில் 3.9 சதவீதமாக இருந்துள்ளது. மற்றைய அனைத்து நிதியாண்டுகளிலும்(2010க்கு பிறகு) நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 5 சதவீதத்திற்கு அதிகமாக தான் இருந்துள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நாட்டின் பொருளாதார மதிப்பு 3.75 அமெரிக்க டிரில்லியன் டாலர்கள். 2014ம் ஆண்டில் உலகளவில் பத்தாவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

india-full-year-gdp-growth- Since 2006

உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில்(GDP Contribution) இந்தியாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 3.2 சதவீதமாகும். முதலிடத்தில் அமெரிக்கா(26.8 டிரில்லியன் டாலர்கள்) 25 சதவீத பங்களிப்புடனும், இரண்டாவது இடத்தில் சீனா(19.3 டிரில்லியன் டாலர்கள்) 17.50 சதவீத பங்களிப்புடனும் உள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடம் முறையே ஜப்பான்(4.4 டிரில்லியன் டாலர்கள்) மற்றும் ஜெர்மனி(4.30 டிரில்லியன் டாலர்கள்) ஆகிய நாடுகள் உள்ளன.

நாட்டின் வரி வருவாய் வளர்ச்சியடைந்து வருவதும், உலகளவில் கடன்-பொருளாதாரத்திற்கான(Debt to GDP) இடைவெளி குறைந்து காணப்படுவதும் இந்தியாவிற்கு சாதகமான நிலையாக இருந்து வருகிறது. பணவீக்கம், உலகளாவிய தேவையில் பலவீனம் காணப்படுதல், தனிநபர் வருவாயில் அதிக ஏற்ற-தாழ்வு, வேலைவாய்ப்பின்மை விகித மாறுபாடு ஆகியவை பாதகமான நிலையாக உள்ளது.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் கடன்-பொருளாதார தன்மை முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனை ஒப்பிடுகையில் இந்தியாவின் கடன்-பொருளாதார தன்மை 81 சதவீதமாக தான் உள்ளது. குறைந்த கடன் மலிவு தன்மை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டை ஈர்ப்பதற்கும் சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

நாடு சுதந்திரம்(1947) பெறப்பட்ட நிலையிலிருந்து 1991ம் ஆண்டு வரை பெரும்பாலும் நாம் சோவியத் யூனியனின் பாணியில் தான் பொருளாதாரத்தை திட்டமிட்டு வந்துள்ளோம். அதற்கு பிறகான காலக்கட்டத்தில் புதிய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டு, பொருளாதார ஒழுங்குமுறையுடன் பாதுகாப்புவாத பொருளாதார திட்டமிடல்கள் ஊக்குவிக்கப்பட்டன. 

2022ம் ஆண்டு தரவின் படி, உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், ஆறாம் மிகப்பெரிய இறக்குமதியாளாராகவும் இந்தியா உள்ளது. உலகின் ஆறாவது மிகப்பெரிய நுகர்வு சந்தையாகவும் இந்தியா இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக தான் வெளிநாட்டு நிறுவனங்களும், அன்னிய முதலீடுகளும் இங்கே கவனம் செலுத்துகின்றன. 

நாட்டின் முக்கிய வர்த்தக பங்காளிகளாக அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு, சவுதி, ரசியா, ஜெர்மனி, இந்தோனேசியா, ஹாங்காங், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. 2021-22ம் ஆண்டின் முடிவில் அன்னிய நேரடி முதலீட்டின் பங்கு மட்டும் சுமார் 82 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 

உலகின் முதல் பத்து பங்குச்சந்தையில்(தரவரிசை) மும்பை பங்குச்சந்தையும், தேசிய பங்குச்சந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு இடங்களில் அமெரிக்க சந்தைகளான நியூயார்க் மற்றும் நாஷ்டாக் சந்தைகளும், மூன்றாமிடத்தில் சீனாவின் ஷாங்காய் சந்தையும் உள்ளன. 

147 வருட பழமையான மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு சுமார் 280 லட்சம் கோடி ரூபாய். இச்சந்தையில் 5000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின் மதிப்பு 269 லட்சம் கோடி ரூபாய். இங்கே சுமார் 2000 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி 

ITC Ltd reported a net profit of Rs.19,477 Crore in FY 2022-23

112 வருட தொழில் அனுபவம் கொண்ட ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. பில்லியன் டாலர் வருவாயை கொண்ட இந்நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 90 நாடுகளுக்கும் மேலாக இதன் பொருட்கள் ஏற்றுமதியிலும், சுமார் 60 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

புகையிலை, விவசாயம் மற்றும் உணவுப்பொருட்கள், காகிதம் மற்றும் பேக்கேஜிங், நட்சத்திர தங்கும் விடுதிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை நிறுவனத்தின் முக்கிய துறைகளாக உள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.21 லட்சம் கோடி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில், புகையிலை பொருட்களின் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் 37 சதவீதமாக உள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.70,937 கோடியாகவும், செலவினம் 45,272 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 36 சதவீதமாகவும், இதர வருமானமாக ரூ.2,053 கோடியை ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 25,866 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் ரூ.19,477 கோடி.

2021-22ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் தற்போது சொல்லப்பட்ட வருவாய் 17.6 சதவீத வளர்ச்சியையும், நிகர லாபம் 24.5 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகை(Dividend) பங்கு ஒன்றுக்கு ரூ.15.50 ஆக சொல்லப்பட்டுள்ளது(ஏற்கனவே அளிக்கப்பட்ட ரூ.6/பங்கு சேர்த்து).

எப்.எம்.சி.ஜி(FMCG) துறையின் வருவாய் 20 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், காகிதம் மற்றும் பேக்கேஜிங் 19 சதவீதமும் மற்றும் புகையிலை பொருட்களின் வருவாய் 20 சதவீதமுமாக வளர்ச்சி அடைந்துள்ளது. Aashirvaad, Sunfeast, Yippee, Dark Fantasy, Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Savlon, Fabelle, Mom’s Magic, Sunrise Foods, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique ஆகியவை நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளாகும்.

பங்குச்சந்தை – பண்டமென்டல் அனாலிசிஸ் – இலவச வகுப்புகள் – 14 நாட்கள் 

2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 67,912 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு நீண்டகால கடன்கள் எதுவுமில்லை. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 56 ரூபாயாகவும், பங்கு விலைக்கும், விற்பனைக்குமான இடைவெளி 7.35 மடங்குகளிலும் உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு முதலீடு மீதான வருவாய்(Return on Equity) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 25 சதவீதம் தந்துள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 57 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் புகையிலை பொருட்களின்(Cigarettes) பங்களிப்பு மட்டும் 60 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

Can you invest in Chennai Super Kings – CSK – Unlisted Equity(Pre-IPO) ?

கடந்த 2007ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் துவங்கப்பட்டது தான் இந்தியன் பிரீமியர் லீக்(IPL). உரிமையாளர்(Franchise) சார்ந்து கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டு 2008ம் ஆண்டு முதல் இன்று வரை வருடந்தோறும் ஐ.பி.எல். போட்டிகள் நடந்து வருகின்றன. 

இதுவரை நடைபெற்ற 15 வருட ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கை அணிகளாக மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல வருடங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப காலங்களில் மாஸ்டர் பிளாஸ்டர்(Master Blaster) என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இருந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் அமைந்தது தான்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இந்தியா வின்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக முன்னாள் ஐ.சி.சி. தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சீனிவாசன் இருக்கிறார். இந்தியா வின்ஸ ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக எம்.எஸ். தோனியே இருந்து வருகிறார். பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாட்டின் முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாகும். 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பை(USD One Billion – Unicorn) கொண்ட நிறுவனத்தை தான் யுனிகார்ன் நிறுவனம் என கூறுவதுண்டு.

கடந்த 15 வருட ஐ.பி.எல். வரலாற்றில் நான்கு முறை கோப்பையை இந்நிறுவனம் வென்றிருந்தாலும், 2013ம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்ட நிகழ்வில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 என இரண்டு வருடங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்நிகழ்வில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

2013ம் ஆண்டில் லண்டனை சேர்ந்த பிராண்ட் பினான்ஸ் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க 150 விளையாட்டு அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்ந்தெடுத்தது இதன் சிறப்பம்சம். ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ்(Mumbai Indians) அணியும் அதிக போட்டிகளை நேருக்கு நேர் எதிர்கொண்ட அணிகளாக உள்ளது. கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்கும் முதலீட்டு செலவிலும் இவ்விரு அணிகள் தான் முன்னிலையில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூட்டாக ஏற்படுத்திய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இரு முறை கோப்பைகளை வென்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே உள்ளன. 

பொதுவாக பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட, இந்திய கம்பனிகள் சட்டப்படி, அந்நிறுவனத்தை பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக(Public Limited / Listed) பதிவு செய்ய வேண்டும். பின்னர் தான் அந்த நிறுவனம் சந்தையில் ஐ.பி.ஓ. முறையில் பங்குகளை வெளியிடும். அப்போது தான் பொதுவெளியில் சாமானிய மக்களும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க இயலும். 

இதே முறையில், பொதுவெளியில் பங்குகளை வெளியிடாமல் ஆனால் குறிப்பிட்ட பங்குதாரர்கள் மட்டும் முதலீடு செய்யும் பொருட்டு வந்த நிறுவனங்கள் தான் இன்று பெரும்பாலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக வலம் வருகின்றன. உதாரணமாக ஜொமாடோ(Zomato), ஒயோ, ஸ்விக்கி, பைஜூ, போட்(boAt) ஆகிய நிறுவனங்கள்.

இது போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவும், தனியார் முதலீட்டை பெறக்கூடிய பங்குகளை கொண்ட நிறுவனமாகவும் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏறக்குறைய அனைவரும் முதலீடும் செய்யலாம். அதே வேளையில் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை(Unlisted Equity). 

2014ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு சந்தையில் பட்டியலிடப்படாத(Unlisted) பங்கு முதலீட்டை கொண்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதாவது இந்த பங்கு பொதுவெளி சந்தையில் வர்த்தகமாகாது. ஆனால், இந்த பங்குகளை ஏற்கனவே வைத்திருக்கும் குறிப்பிட்ட முதலீட்டாளர்களிடம் அவர்கள் விற்கும் விலையில் வாங்கி கொள்ளலாம்.

2021-22ம் நிதியாண்டின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 1.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் பங்களிப்பில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்(India Cements Shareholders Trust) 30 சதவீத பங்குகளையும், ஸ்ரீ சாரதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 7 சதவீத பங்குகளையும், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 6 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் டிரஸ்ட் நிறுவனம் 2.50 சதவீத பங்குகளையும், டி மார்ட்(DMart) நிறுவனத்தின் தலைவர் திரு. ராதா கிஷன் தமானி 2.40 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார். இன்னபிற தனியார் நிறுவனங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வைத்துள்ளது. நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 30.81 கோடி(Equity Shares). நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கல்லிடைக்குறிச்சி விஸ்வநாதன் சுப்பிரமணியம் உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்படாத சந்தை மதிப்பு சுமார் ரூ. 5,100 கோடி. பங்கு ஒன்றின் விலை 180 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளராக நூறு பங்குகளை வாங்க வேண்டியது அவசியம். 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 341 கோடி ரூபாயாகவும், வருவாய் வளர்ச்சி 38 சதவீதமாகவும் இருந்துள்ளது.

CSK - Profit and loss - FY22

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் செலவினம் 308 கோடி ரூபாயாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ. 32 கோடியாக உள்ளது. கடன்-பங்கு விகிதம் 0.25 என்ற அளவிலும், ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) 95 பைசாவாகவும் இருந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு பொதுக்கூட்டம் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. மார்ச் 2022 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves & Surplus) 245 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 130 கோடி (மார்ச் 2022). 2021-22ம் நிதியாண்டில் நிறுவனம் சார்பில் ஈவுத்தொகை(Dividend) எதுவும் அறிவிக்கப்படவில்லை. சொல்லப்பட்ட காலத்தில் பெறப்பட்ட லாபத்திலிருந்து நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்புக்கு தொகை எதுவும் ஒதுக்கப்படவில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம், பங்குச்சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பை பற்றி தற்போது வெளியிடவில்லை. அதே வேளையில் நிறுவனத்தின் வருமான வாய்ப்புகளாக ஊடக உரிமைகள்(Media Rights), ஸ்பான்சர்சிப், விளம்பரங்கள், போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், கடிகாரங்கள், டி-சர்ட்டுகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்கு, சூப்பர்கிங்ஸ் வென்ச்சர்ஸ் என்ற துணை நிறுவனமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

CSK நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்யலாமா ?

  • பொதுவாக பங்குச்சந்தையில், பொதுவெளியில் வெளியிடப்படும் நிறுவன பங்குகளில் ரிஸ்க் தன்மை அதிகமாக இருக்கும் நிலையில், பட்டியலிடப்படாத இது போன்ற நிறுவன பங்குகளிலும் ரிஸ்க் தன்மை மிகவும் அதிகமே. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதனை களைய செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. ஆனால் பட்டியலிடப்படாத பங்குகளில் இதனை நாம் காண முடியாது. 
  • பங்குச்சந்தையில் காணப்படும் அதிக ஏற்ற-இறக்கங்கள், பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் பொதுவாக நடைபெறாது. இதற்கான காரணம் மிகக்குறைந்த பங்குகள் மட்டும் இங்கே வர்த்தகமாகும். சில நேரங்களில்(மாதங்கள் அல்லது வருடங்கள்) பங்கு வர்த்தகமே ஆகாது. வாங்குவதற்கும், விற்பதற்கும் நித்தமும் ஆட்கள் இருக்க வேண்டுமே !
  • பங்குச்சந்தையில் ஏற்கனவே அளப்பரிய அளவில் முதலீடு செய்து விட்டு, தனியார் நிறுவனங்களில், இது போன்ற பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர் இதனை ஒரு வாய்ப்பாக கருதலாம். ஒரு வேளை, இது போன்ற நிறுவனங்கள் பின்னொரு காலத்தில் பங்குச்சந்தைக்கு(IPO Listed) வரும் போது, ஏற்கனவே முதலீட்டு செய்திருக்கும் நிலையில் அதிக விலையில் பங்குகளை விற்று வெளியேறலாம். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும், திறமையான நிர்வாகமும் இதனை வெளிக்காட்டும்.
  • பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளை, தற்போதைய நிலையில் வெகு சில தளங்களே வாங்கும்-விற்பனை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தளங்களின் நம்பகத்தன்மையையும் நாம் சரிபார்த்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் கைதேர்ந்தவர்களுக்கும்(25 வருடங்களுக்கு மேல் முதலீட்டு அனுபவம்), அச்சந்தையில் அதிக முதலீடு செய்து கோடிகளில் லாபத்தை ஈட்டியவர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பட்டியலிடப்படாத பங்குகள் ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பாகும். மற்ற கத்துக்குட்டிகளுக்கு இவற்றிலிருந்து விலகியிருப்பதே நன்மை பயக்கும் !

“Unlisted equity is an opportunity to build wealth, but it’s always risky than listed”

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்கு முதலீடு அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி 

Infosys reported a net profit of Rs.24,108 Crore in the Financial year 2022-23 – Results

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த வார முடிவில் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவு மற்றும் ஒட்டுமொத்த ஆண்டுக்கான நிதி அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,441 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,443 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம்(OPM %) 24 சதவீதமாக உள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ. 6,134 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டின்(2021-22) நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்டிருக்கும் வருவாய் 16 சதவீதமும், நிகர லாபம் 8 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டினை ஒட்டுமொத்தமாக காணும் போது, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,46,767 கோடியாகவும், செலவினம் 1,11,637 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. 

சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் நிறுவனம் 24,108 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்கு மீதான வருவாய்(EPS) 58 ரூபாயாக உள்ளது. 2011-12ம் நிதியாண்டில் இது 18 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் டிஜிட்டல் சேவையை சார்ந்தும், நிதித்துறை(Financial Services) சார்ந்த சேவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.  

புவியியல் சார்ந்து காணும் போது, நிறுவனத்தின் 62 சதவீத வருவாய் வட அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஐரோப்பாவில் 25 சதவீதமும், உள்நாட்டில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. உலகின் சிறப்பான 500 நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின்(Infosys Limited) முக்கிய வாடிக்கையாளர்களாக மெர்சிடஸ்-பென்ஸ், எச்.எஸ்.பி.சி. வங்கி, லாக்கீட் மார்ட்டின், அமெரிக்க ராணுவம், அமெரிக்க கடற்படை, ஐ.பி.எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் டச்சு வங்கி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.22 லட்சம் கோடி. 

கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்த வருவாய் மற்றும் லாப மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக இருந்ததும், நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் வழிகாட்டல்(Financial Guidance) நிறுவனத்தின் சார்பில் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்ததால், திங்கள் கிழமை அன்று (17-04-2023) இந்த பங்கின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தது. நீண்டகால முதலீட்டாளர்களிடையே இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாது, விலை வீழ்ச்சியால் பங்கு வாங்குவதற்கான வாய்ப்பையும் இது போன்ற நிகழ்வு வழங்குகிறது.

உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றம் ஆகியவற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை சரிவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. அதன் கடன்-பங்கு விகிதம் 0.11 என்ற அளவில் உள்ளது. மார்ச் 2023 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 73,338 கோடியாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சராசரியாக 14 சதவீதமும், லாப வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 17 சதவீதம் (கூட்டு வட்டியில்) ஏற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் 28 சதவீதம் இறக்கமடைந்துள்ளது. அடிப்படை பகுப்பாய்வின் படி(Cash Flow – Fundamental Analysis), இன்போசிஸ் பங்கின் விலை ரூ. 900 – ரூ. 1,100 என்ற அளவில் அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் – 7.80 சதவீதம் – மார்ச் 2023

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் – 7.80 சதவீதம் – மார்ச் 2023

India’s unemployment rate(CMIE Data) – 7.8 Percent in March 2023

நாட்டில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான நபர்களை கொண்டு, அவர்களை நேரடியாக சந்தித்து கடந்த 30 நாட்களின் சராசரி அடிப்படையில், வேலைவாய்ப்பின்மை விகிதம் கணக்கிடப்படுகிறது. மாதந்தோறும் வெளியிடப்படும் இந்த அறிக்கையில் மாநிலங்கள் வாரியாகவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் எடுத்துரைக்கிறது. 

ஏற்கனவே வேலையிழந்தோர் தற்போதைய நிலையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனரா, வேலைக்கு செல்வதற்கான ஆர்வம் அவர்களிடம் காணப்படுகிறதா மற்றும் வேலை கிடைக்காததற்கான காரணம் என்ன போன்ற விவரங்களையும்(Consumer Pyramids Panel) இம்மதிப்பீடு கணக்கில் எடுத்து கொள்கிறது. 

நடப்பு 2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) 7.8 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 8.51 சதவீதமாகவும், இதுவே கிராமப்புறங்களில் 7.47 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகபட்சமாக டிசம்பர் மாதத்தில் 8.30 சதவீதமாக இருந்துள்ளது. மிகக்குறைவான அளவாக செப்டம்பர் மாதத்தில் 6.43 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. மார்ச் மாத விகிதத்தில் மாநிலங்கள் வாரியாக காணும் போது, ராஜஸ்தான், சிக்கிம், அரியானா, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது.

வளர்ந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை காணும் போது, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 7 சதவீதத்திற்கு குறைவாக காணப்படுகிறது. 

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில்(GDP) மாநிலம் வாரியாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் முறையே தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் கர்நாடகா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ன்றி, வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

Income Tax rates for Mutual Fund Investments – Individuals – FY 2022-23 (AY 2023-24)

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாட்டின் பட்ஜெட் தாக்கலில் வருமான வரி விகிதங்கள் சார்ந்த மாற்றங்கள் நிறைய சொல்லப்பட்டிருந்தது. நடப்பு 2022-23ம் நிதியாண்டுக்கான வரி விகிதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds) மூலம் கிடைக்கப்பெறும் வருவாய்க்கான வரி விகிதங்களும் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பொறுத்தவரை உள்ளூர் முதலீட்டாளர்கள்(Resident) மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) என வரி விதிப்பு முறை தனித்தனியாக அமைந்துள்ளது. திட்டங்களின் அடிப்படையில் காணும் போது பங்கு சார்ந்த திட்டங்களுக்கும், பங்கு சாராத திட்டங்கள் என வரி விதிப்பு முறையும் வேறுபட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான, அதாவது 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி விகிதங்கள் குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) மற்றும் நீண்டகால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இங்கே சொல்லப்படும் காலம்(Short or long term) என்பது வருமான வரி விகிதங்களுக்கான கணக்கீட்டு காலம் மட்டுமே, அவை ஒரு குறிப்பிட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்படும் காலமல்ல. எனவே நாம் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்யவிருந்தாலும், மூலதன ஆதாய  வரி என்பது நாம் நம் முதலீட்டை விற்பனை செய்யும் காலத்தினை பொறுத்து வரி விகிதங்கள் மாறுபடும்.

பொதுவாக பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் நாம் அதனை விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், ஒரு வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் சொல்லப்பட்டு வரி விதிக்கப்படும். இதுவே பங்கு சாராத திட்டங்களுக்கு(Debt Mutual Funds or other than Equity oriented schemes) முதலீடு செய்த மூன்று வருடத்திற்குள் விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், மூன்று வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும்.

எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்கையில் ஒவ்வொரு மாதாந்திர அல்லது வாராந்திர முதலீடும், வரி விகிதத்தை பொறுத்தவரை தனித்தனி முதலீடாக கருதப்படும். உதாரணமாக ஜனவரி மாதத்தில் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, சொல்லப்பட்ட முதலீட்டு தேதியிலிருந்து(ஜனவரி 5) கணக்கிடப்படும். இதுவே பிப்ரவரி மாதம் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு, தனி முதலீடாக கருதப்பட்டு அவை பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, காலத்தை சார்ந்து வரி விகிதங்கள் மாறுபடும். இந்த குழப்பங்கள் பெரும்பாலும் வரி சேமிப்பு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்(ELSS) முதலீடு செய்வோருக்கு ஏற்படும்.

 ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை மட்டும்(Lumpsum investment) செய்யப்படும் முதலீடாக இருக்கும் நிலையில், முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து விற்பனை தேதியை கணக்கிடுகையில் சிரமம் இருக்காது. எஸ்.ஐ.பி. முறையில் செய்யப்படும் முதலீட்டிற்கு மட்டும் இந்த கவனம் தேவை. எனினும், வரி கணக்கீட்டினை பொறுத்தமட்டில் இன்றைய நிலையில் பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்த கணக்கீட்டு அறிக்கையை முதலீட்டாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. எனவே வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த அறிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம்.

2018ம் ஆண்டுக்கு முன்பிருந்து, நீங்கள் பங்குகள் அல்லது பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகிறீர்களா ? (உங்களுக்கான பதிவு தான் இது)

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15 சதவீதமும், நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதமும் விதிக்கப்படும். நீண்டகால மூலதன ஆதாயத்தில் கிடைக்கப்பெறும் முதல் ரூ. 1 லட்சத்திற்கு வரி எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு மட்டுமே 10 சதவீத வரியாகும்.

மியூச்சுவல் பண்ட் – தனிநபர் வரி விகிதங்கள் – நிதியாண்டு 2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)

முதலீட்டு பிரிவு

தனிநபர் – உள்ளூர் முதலீட்டாளர் 

வெளிநாடு வாழ் இந்தியர் 

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

15%

15%

நீண்டகால மூலதன ஆதாயம் 

10%*

10%*

பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

நீண்டகால மூலதன ஆதாயம் 

பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20%

10% – (பட்டியலிடப்படாத)

20% – (பட்டியலிடப்பட்ட மற்றும் பணவீக்க விகித சரிக்கட்டலுடன்)

வர்த்தக மதுரை | www.varthagamadurai.com

* ஒரு லட்சம் ரூபாய் வரையிலான(குறிப்பிட்ட நிதியாண்டில்) லாபத்திற்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை. ஒரு லட்சத்திற்கும் மேலான லாபத்திற்கு மட்டுமே 10 சதவீத வரி. 

இதுவே பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய  வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பின் அடிப்படையில்(Individual’s Income Tax Slab) அமைகிறது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக, பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு (Indexation Benefit) 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பணவீக்க விகிதத்திற்கான சரிக்கட்டல் மதிப்பை(Cost Inflation Index) ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும் (ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான தொகைக்கு) சொல்லப்பட்டுள்ளது. பங்கு சாராத திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பு அடிப்படையில் உள்ளது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதம் (பட்டியலிடப்படாத – Unlisted, No indexation benefit) மற்றும் 20 சதவீதமாக (Listed, With Indexation Benefit) சொல்லப்பட்டுள்ளது. 

முதலீட்டில் கிடைக்கப்பெறும் லாபத்திற்கு எவ்வளவு தொகையை வரியாக செலுத்த வேண்டுமென்பதை வரி ஆலோசகர் அல்லது பட்டய கணக்காளர்(Chartered Accountant) ஒருவரின் துணையுடன் கணக்கிடுவது நல்லது. 

கவனிக்க:

  • 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாத பட்ஜெட் அறிக்கையில், பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களின் வரி முறையில் சில மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது. இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி, 2023 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.      
  • பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் எனும் போது, சிறிய பங்களிப்பில் பங்குகளை கொண்டிருந்தாலும் அவ்வகையான திட்டங்கள்  வரிச்சட்டத்தில் பங்கு சாராத திட்டமாகவே சொல்லப்படுகிறது. வரும் ஏப்ரல் 1, 2023 முதல் பங்கு சாராத திட்டங்களில், பங்குகளின் பங்களிப்பு 35 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், குறுகிய மற்றும் நீண்டகால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரம்பில் அமையும் என சொல்லப்பட்டுள்ளது.
  • இதுவே அத்திட்டத்தில் பங்குகளின் பங்களிப்பு 36 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை இருக்கும் பட்சத்தில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பிலும், நீண்டகால மூலதன ஆதாய வரி என்பது பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20 சதவீதமாகவும் கூறப்பட்டுள்ளது. 
  • 65 சதவீதத்திற்கும் மேல் பங்குகளின் பங்களிப்பை கொண்டிருக்கும் திட்டங்கள், பங்கு சார்ந்த திட்டங்களின் வரி விதிப்பு மற்றும் முதலீட்டு கால முறையை(Holding period) போலவே கொண்டிருக்கும். அதாவது ஒரு வருடத்திற்குள்ளான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும்(ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான) இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

Jyothy Labs Limited – Fundamental Analysis – Stocks

கேரள மாநிலத்தை சேர்ந்த திரு. எம்.பி. ராமச்சந்திரன் அவர்களால், கேரளாவை தலைமையிடமாக கொண்டு 1983ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் ஜோதி லேப்ஸ் நிறுவனம் (Jyothy Laboratories). எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையில் தொழில் புரிந்து வரும் இந்நிறுவனம் ஆரம்பநிலையில் ஒரே ஒரு பொருளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தது. இன்று ஆண்டுக்கு பில்லியன் ரூபாய் மதிப்பிலான வருவாயை கொண்டும், சுமார் 6,900 கோடி ரூபாய் சந்தை மதிப்பையும் கொண்ட நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

வீட்டு பராமரிப்பு, துணிமணிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பிரபல சொட்டு நீலமான, ‘உஜாலா’ உற்பத்திக்காக 1992ம் ஆண்டு சென்னையில் ஒரு உற்பத்தி ஆலையை துவக்கியது. துணிமணி பராமரிப்பில், ‘ Ujala, Henko, Mr.White மற்றும் More Light’ இதன் முக்கிய பிராண்டுகள். நாட்டின் துணிமணி பராமரிப்புக்கான பொருட்கள் பிரிவில், 81 சதவீத சந்தை மதிப்பை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் துணிமணி பராமரிப்பு பிரிவு மட்டும் 37 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில்(Dish Wash) இதன் ஒட்டுமொத்த வருவாயில் 38 சதவீதத்தையும், தனிநபர் பராமரிப்பு பிரிவில் 10 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில், ‘Exo, Prill’ இதன் முக்கிய பிராண்டுகள். இந்த துறையில் 11 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. இந்த பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஜோதி லேப்ஸ் வலம் வருகிறது.

தனிநபர் பராமரிப்பு பிரிவில், ‘Margo, Neem Active மற்றும் Fa’ இதன் பிரபல பிராண்டு பொருட்கள். வீட்டு பூச்சிக்கொல்லி சார்ந்த பொருட்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த பிரிவில் 21 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் வைத்துள்ளது. ‘Maxo கொசுவர்த்தி, T-Shine Cleaner, Maya ஊதுபத்திகள்’ ஆகியவை இதன் பிராண்டுகளாக உள்ளன. 

நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சேர, சரக்கு மேலாண்மை அமைப்பையும்(Freight Management System) இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நான்காம் தொழில் புரட்சியின் கீழ் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஜோதி லேப்ஸ் முதலீடு செய்துள்ளது. 

2007ம் ஆண்டு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜோதி லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டது. தற்போது நிறுவனத்தின் தலைமையிடமாக மும்பை உள்ளது. இத்துறையில் புதிதாக நுழையும் மற்றும் ஏற்கனவே சந்தையில் சிறந்து விளங்கும் துறை சார் நிறுவனங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டில் கென்கேல் இந்தியா(Henkel India) நிறுவனத்தை ஜோதி லேப்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.     

ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பிராண்டு பொருட்களுக்கு, பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், திரைப்பட துறையில் உள்ள நடிகைகள் ஷில்பா  ஷெட்டி மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோர் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ரா. லட்சுமி நாராயணன் அவர்களும், நிர்வாக இயக்குனராக எம்.ஆர். ஜோதி அவர்களும் உள்ளனர். நாட்டின் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் இன்றளவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,196 கோடியாகவும், இயக்க லாபம்(Operating Profit) 248 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் சராசரியாக வருடத்திற்கு 12-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 159 கோடி. செப்டம்பர் 2022 காலாண்டின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.1,428 கோடி. 

ஜோதி லேப்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக பங்குச்சந்தையில் உள்ளது. உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களிடம் 17 சதவீத பங்குகளும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடம் 13 சதவீத பங்குகளும் உள்ளது. கடன் தன்மை குறைவாகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் 14 சதவீதமாக(5 வருட காலத்தில்) இருப்பதும் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.     

ஜோதி லேப்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.134 ஆகவும், அதிகபட்ச விலையாக 223 ரூபாய் வரையிலும் வர்த்தகமாகியுள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு துவக்கத்தில் இந்த பங்கின் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு மற்றும் பணப்பாய்வு(Discounted Cash Flow) முறையில் மதிப்பிடும் போது, ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ. 130-160 என்ற சராசரியை பெறும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி –  4.4 சதவீதம்

2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி –  4.4 சதவீதம் 

India’s GDP growth of 4.4 Percent in Q4 (December Quarter) 2022

2022ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில்(Q3FY23) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் முதலீடு 8.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றில் தனியார் முதலீட்டு செலவினம் 61.6 சதவீதமாக இருக்கிறது. இது 2021-22ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டினை காட்டிலும் குறைவே. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தால், வங்கிகளின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தனியார் பங்களிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் அரசு தரப்பில் இம்முறையும் முதலீட்டு செலவினம் பெரிதாக இல்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருந்தததை அடுத்து, கடந்த சில காலாண்டுகளாக அதனை குறைத்து வந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி 11.3 சதவீதமும், இறக்குமதி 10.9 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய காலாண்டில் ஏற்றுமதி 12.3 சதவீதமாகவும், இறக்குமதி 25.9 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தது.

உற்பத்தி துறை இரண்டாவது முறையாக இறக்கத்திலும், நிதி மற்றும் வீட்டுமனை துறை ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்த போதிலும், சற்று சுணக்கமாகவே காணப்பட்டுள்ளது. இது போன்ற மந்தநிலை போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறையிலும் ஏற்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகள் ஏற்றம் பெற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

நாட்டின் நுகர்வோர் செலவினம்(Consumer spending) டிசம்பர் 2022 காலாண்டில் ரூ. 24.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) நடப்பு  ஜனவரி மாத முடிவில் 11.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது பட்ஜெட் மதிப்பில் 68 சதவீதமாகும். 2022-23ம் நிதியாண்டுக்கான நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கு 17.55 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.52 சதவீதம்

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.52 சதவீதம் 

India’s CPI Inflation rose to 6.52 Percent in the month of January 2023

கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் குறைந்து வந்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Consumer Price Index – CPI) நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் 6.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும் சொல்லப்பட்ட பணவீக்க விகித அதிகரிப்பு கடந்த ஏப்ரல் 2022ல் (7.79%) காணப்பட்ட அளவை விட குறைவே. 2022ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்க விகிதம் 6.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் சில்லரை விலை அல்லது நுகர்வோர் விலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக இருக்கிறது. போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.59 சதவீத பங்களிப்பையும், சுகாதாரம் 5.89 சதவீதமும், கல்வி 4.46 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. வீட்டுமனை துறை 10.07 சதவீதத்தையும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதத்தையும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 6.53 சதவீத பங்களிப்பையும் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் கொண்டுள்ளது.

ஜனவரி 2022ம் மாதத்தில் உணவுப்பொருட்களின் விலை 5.94 சதவீதமாக அதிகரித்துள்ளதன் காரணமாக சொல்லப்பட்ட மாதத்தின் நுகர்வோர் விலை பணவீக்கமும் உயர்ந்துள்ளது. இது போல வீட்டுமனை 4.62 சதவீதமும், புகையிலை சார்ந்த பொருட்கள் 3.07 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஒளி மற்றும் எரிபொருட்கள், துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையில் பெருமளவில் மாற்றமில்லாமல் சற்று குறைந்துள்ளது.

சொல்லப்பட்ட ஜனவரி மாத பணவீக்க விகிதம், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவினை காட்டிலும் சற்று உயர்ந்துள்ளது. இதே மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக குறைந்துள்ளது. ஜனவரி மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.14 சதவீதமாக இருந்துள்ளது. இது கிராமப்புறங்களில் 6.48 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.55 சதவீதமாகவும் இருக்கிறது.

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம், மாநிலங்கள் வாரியாக காணும் போது அரியானா, ராஜஸ்தான், ஜம்மு-காஸ்மீர், டெல்லி, அசாம், திரிபுரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக உள்ளது. குறைவான அளவாக மத்திய பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை

ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை 

Individual Traders engaged in Equity F&O Segment – SEBI Analysis Report 

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(Securities and Exchange Board of India) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மத்திய பொருளாதார மற்றும் கொள்கை பகுப்பாய்வு துறையின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஊக வணிக(Futures and Options) பிரிவில் 2022ம் நிதியாண்டில் தனிநபர் வர்த்தகர்கள் அடைந்த லாப-நட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியிருந்தது.

2022ம் நிதியாண்டில் சுமார் 45 லட்சம் தனிநபர் வர்த்தகர்கள் இந்திய பங்குச்சந்தை ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது 2019ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் 500 சதவீத வளர்ச்சி என்றும், 30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 36 சதவீதமாக இருந்துள்ளது.

வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர் பிரிவில் 80 சதவீதத்திற்கு மேல் ஆண்கள் என்றும், ஊக வணிகத்தில் ஈடுபடும் 10 நபர்களில் 9 பேர் நட்டமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது ஊக வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களில் 89 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இவர்களது முதலீட்டு இழப்பு சராசரியாக 50,000 ரூபாய் வரை இருந்துள்ளது. 

2022ம் நிதியாண்டில் ஊக வணிகத்தில் லாபமீட்டியவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக இருந்த போதிலும், அவர்களது அதிகபட்ச சராசரி லாபம் ரூ.1.5 லட்சம் வரை இருந்துள்ளது. ஊக வணிகத்தில் Index Options பிரிவில் 89 சதவீதம் பேரும், Index Futures பிரிவில் 11 சதவீதம் பேரும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வயது பெரும்பாலும் 20-30 வயது வரம்பில் இருந்துள்ளது.

அதே வேளையில் Index Options பிரிவில் ஈடுபட்டிருந்த 89 சதவீதம் பேரில் 82 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இந்த பிரிவில் வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டை ஒப்பிடும் போது 2022ம் ஆண்டு எட்டு மடங்கு உயர்ந்துள்ளது. Index Futures பிரிவில் ஈடுபட்டிருந்தவர்களில் 74 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 1 லட்சம்), Stock Futures பிரிவில் 67 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 2.1 லட்சம்) முதலீட்டில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த பிரிவில் லாபம் ஈட்டியவர்களின் சராசரி தொகை ரூ. 2.4 லட்சமாகும். இவர்களும் முதல் 5 சதவீத நிலையில் உள்ள Active Traders ஆவர்.

ஊக வணிகத்தில் லாபம் ஈட்டியவர்களில் பெரும்பாலானோர் தங்களது லாபத்தில் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணங்களுக்காக(Transaction cost) செலவளித்துள்ளனர். சொல்லப்பட்ட தனிநபர் வர்த்தகர்களில் இந்து கூட்டு குடும்பம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் அடங்குவர். ஊக வணிகத்தில் 2022ம் ஆண்டில் ஈடுபட்ட 45 லட்சம் வர்த்தகர்களில் பெருநகரங்களை சாராதோர்(Except Tier I & Tier II) எண்ணிக்கை மட்டும் 81 சதவீதமாக உள்ளது. திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் நாட்டின் முன்னிலையில் உள்ள முதல் 10 பங்கு தரகர்களிடம்(Brokers) இருந்து என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Sum assured(HLV) calculated for Term Insurance Plans ?

நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட ஆயுள் காப்பீட்டு(Life Insurance) நிறுவனங்கள் தற்போது உள்ளன. எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் தவிர அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களாகும். இன்றைய பொருளாதார வாழ்வில் காப்பீட்டின் தேவை குறித்து பலர் புரிந்து கொண்டிருந்தாலும், 2022ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை படி, 100ல் மூன்று பேர் மட்டுமே காப்பீட்டை எடுத்துள்ளனர். இந்த மூன்று பேர்களும் தங்களது வருமானத்திற்கு ஏற்ப(Income Replacement) காப்பீட்டு அளவை எடுத்துள்ளார்களா என கேட்டால், அது தான் இல்லை.

நம்மில் பெரும்பாலோர் காப்பீட்டு திட்டத்தை சேமிப்பாக கருதுவதால் தான், தங்களது வருமானத்தை போல பல மடங்குகளில் காப்பீட்டு அளவை தேர்ந்தெடுப்பதில்லை. குறைந்த தொகையில்(Premium) அதிக காப்பீட்டு அளவை ஏற்படுத்த இன்றைய நிலையில் டேர்ம் காப்பீட்டு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் அமையவில்லை எனலாம். 

காப்பீடு என்பது ஒரு சேமிப்பல்ல, அது ஒரு செலவு. நமது வாகனத்திற்கு, வீட்டிற்கு, தொழிலுக்கு எடுக்கப்படும் காப்பீட்டை போல தான் டேர்ம் காப்பீடு திட்டமும். “நான் கட்டிய ப்ரீமியத்தொகைக்கு முடிவில் என்ன கொடுப்பீர்கள் என டேர்ம் காப்பீட்டை நீங்கள் கேட்டால், நீங்கள் இல்லாத நிலையில் உங்களது வருமானத்திற்கு மாற்றாக உங்களது குடும்பத்தை பொருளாதார ரீதியாக நான் பாதுகாப்பேன்” என்பது தான்.

டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதில் கிடைக்கப்பெறுவதில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு டேர்ம் காப்பீடு திட்டத்தின் ப்ரீமியத்தொகையும் அதிகரித்து விட்டது, டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கான நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டது. இருப்பினும், அதன் தேவையை நாம் புரிந்து கொண்டு நமது வருமானத்திற்கு ஏற்றாற் போல, தேவையான காப்பீட்டு அளவை பெறுவது அவசியம். 

சமீபத்திய தரவின் படி, ஆயுள் காப்பீட்டை பெறுவோரில் மூன்றில் ஒருவர் மட்டுமே டேர்ம் காப்பீட்டு திட்டத்தை எடுத்துள்ளனர். டேர்ம் காப்பீடு திட்டத்தை எந்தளவில் பெறலாம் என்பதை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்(IRDAI) ஒப்புதல் படி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளது. பொதுவாக நமது வயது மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இது அமையும்.

வருமானத்திற்கான மாற்று முறை – Human Life Value(HLV):

ஒரு தனிநபரின் எதிர்கால வருவாயின் தற்போதைய மதிப்பு தான் HLV(Human Life Value). எதிர்காலத்தில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் மற்றும் அவர் இல்லாத காலத்தில் தனது குடும்பத்தில் உள்ளோரை பொருளாதாரம் சார்ந்து பாதுகாக்க தேவையான தொகையை இன்றைய மதிப்பில் கணக்கிட வேண்டும். 

HLV = (1 + Investment rate) / (1 + Increment or Income growth rate) – 1

Alternative and Simple in terms, HLV = (Annual Income of an Individual) / (ROI in the Market)

*ROI – Rate of Interest 

இதனை சுருக்கமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒருவரின் தற்போதைய ஆண்டு வருமானத்தின் மடங்குகளில் சொல்லப்படுகிறது. இதனை டேர்ம் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களும் தங்களது தரவு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மடங்குகளின் எண்ணிக்கை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலும் அவை ஒத்த அளவில் தான் இருந்துள்ளது. 

டேர்ம் காப்பீட்டு அளவை பெற தேவையான இரண்டு முக்கிய காரணிகள்:

  • ஒருவரின் வயது 
  • ஆண்டு வருமானம் (சில நேரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி வருமானம்)
  • இதர காரணிகள் – கடனையும் சேர்த்து ஆகும் ஆண்டு செலவு, முன்னர் எடுத்திருக்கும் காப்பீட்டின் அளவு(Existing Life Cover)

உதாரணத்திற்கு 30 வயது நிரம்பிய குமார் என்பவர் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாயை வருமானமாக கொண்டுள்ளார். 55 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பும் குமார், ஓய்வுக்கு முன்னரே தான் இறந்து விட்டால் தனது வருமானத்திற்கு நிகரான காப்பீட்டு அளவை தனது குடும்பத்திற்கு அளிக்க விரும்புகிறார். அப்படியெனில் தோராயமாக அவர் எடுத்து கொள்ள வேண்டிய டேர்ம் காப்பீட்டின் அளவு 1.15 கோடி ரூபாய்(Sum Assured or Coverage).

இங்கே நாம் குமாருக்கான கடன் தொகை எவ்வளவு, தனது குடும்ப உறுப்பினர்களின் நிதி இலக்குகளுக்கான எதிர்கால தொகை எவ்வளவு என்பதனை கணக்கில் கொள்ளவில்லை. இதனை கணக்கில் எடுக்கும் போது, காப்பீட்டு அளவு அதிகரிக்கலாம். 

HLV முறையை கொண்டு நாம் கணக்கிட்டாலும், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கென ஒருவருக்கு அதிகபட்சம் அனுமதிக்கப்பட வேண்டிய தொகையை கூறியுள்ளது. இந்த தொகை தனிநபர் ஒருவரின் வயது மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல மாறுபடும்.

டேர்ம் காப்பீட்டுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு (மடங்குகளில்):

வயது வரம்பு  மடங்குகள்* 
18 முதல் 35 வயது வரை  25
36 முதல் 40 வயது வரை  20
41 முதல் 45 வயது வரை  15
46 முதல் 50 வயது வரை  12
51 முதல் 55 வயது வரை  10
56 முதல் 65 வயது வரை  5

 

(* ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மாறுபடலாம்)

மேலே உள்ள தரவின் படி, குமாருக்கு அதிகபட்சமாக அவரது ஆண்டு வருமானத்தை போல, 25 மடங்குகளின் அளவில் காப்பீடு கிடைக்க கூடும். ( ரூ. 8 லட்சம் X 25 மடங்குகள் = 2 கோடி ரூபாய்)

கவனிக்க:

  • டேர்ம் காப்பீட்டை பெற இன்று பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தனிநபர் ஒருவரின் வருமான ஆதாரத்தை அவசியமான ஒன்றாக பார்க்கிறது. இதற்கான முக்கிய ஆவணமாக கடந்த சில வருடங்களின் வருமான வரி தாக்கல்(Income Tax Returns) ஆவணங்கள், கடந்த சில மாதங்களின் சம்பள விவரங்கள்(Pay Slips) மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கான வங்கி அறிக்கை(Bank Statement).
  • புகைப்பிடித்தல் / மதுப்பழக்கம் இருக்கும் நிலையில் அதற்கான ப்ரீமியத்தொகை அதிகரிக்கலாம். சில சமயங்களில் காப்பீட்டை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
  • டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது. உடல்நலத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் ப்ரீமியத்தொகை அதிகரிக்கப்படலாம் அல்லது காப்பீடு நிராகரிக்கப்படலாம்.
  • ஏற்கனவே வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டேர்ம் காப்பீட்டை பெற்றிருந்தாலோ அல்லது காப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்தாலோ, தற்போதைய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பரிசீலனைக்கு பின்பு தான் காப்பீடு வழங்கலாமா, வேண்டாமா என்பதனை முடிவெடுக்கும்.
  • இன்று மாத சம்பளதாரர்களை விட, பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்களுக்கே டேர்ம் காப்பீடு நிராகரிக்கப்படுகிறது. இதற்கான காரணமாக சொல்லப்படுவது வருமானத்தின் விவரங்களை சரியாக பராமரிக்காமை அல்லது அதிக வருவாய் இருந்தும் முறையாக வருமான வரி தாக்கல் செய்யாதிருப்பது. 
  • டேர்ம் காப்பீட்டை இளவயதில்(சம்பாதிக்க ஆரம்பித்த சில வருடங்களில்) எடுக்கும் போது, அதற்கான ப்ரீமியத்தொகையும் அதிகரிக்கும். சரியான காப்பீட்டு அளவை சரியான நேரத்தில் அதிகரித்து கொள்வது அவசியம். தாமதமாக எடுக்கும் போது, உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் நமக்கான காப்பீட்டு அளவு கிடைக்காமல் போகலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ? 

Global Market Indices in the year 2022 – Returns %

2022ம் ஆண்டில் பல்வகை முதலீடுகளின்(Asset Classes) வளர்ச்சி விகிதத்தை காணும் போது, உலகளவில் அதிகபட்சமாக தங்கத்தின் மீதான முதலீடு 11 சதவீதமும், பெரு நிறுவனங்களின் பங்கு முதலீடு(Large Cap Equity) 3 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.5 சதவீதமும், தனியார் கடன் பத்திரங்கள் 2.7 சதவீதமும், அரசு பத்திரங்கள் 2.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாறாக நடுத்தர மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு முதலீடு இறக்கத்தை சந்தித்துள்ளன.

கடந்த பத்து வருட காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீடு 2015ம் ஆண்டை தவிர்த்து(-4.1 %) பார்க்கையில், அனைத்து வருடமும் ஏற்றத்தில் தான் முடிந்துள்ளன. தங்கத்தின் மீதான முதலீடு 2019 மற்றும் 2020ம் வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளன. உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் அதிகரித்துள்ளது.

பொதுவாக பொருளாதார மந்தநிலை காணப்படும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், மீண்டெழும் பொருளாதாரத்தில் தங்கத்தின் வருவாய் குறைவதும் இயல்பே. பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, பங்கு முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான ஏற்றம் காணப்படும்.   

2022ம் வருடத்தில் வளர்ந்த நாடுகளின் பங்குச்சந்தை முதலீடு பெரும்பாலும் இறக்கத்தையே சந்தித்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் முடிவில் அமெரிக்காவின் நாஸ்டாக்(Nasdaq) குறியீடு 33 சதவீதம் சரிந்துள்ளது. இந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப குறியீடு(FAANG) மட்டும் 40 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளது. ஜெர்மனியின் டாக்ஸ்(DAX) 12 சதவீதமும், ஜப்பானின் நிக்கி(Nikkei) 9 சதவீதமும், ஐரோப்பாவின் ஸ்டாக்ஸ்(Stoxx) 11 சதவீதமும் இறக்கத்தை சந்தித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஐக்கிய ராச்சியத்தின் புட்சி(FTSE) குறியீடு மட்டும் ஒரு சதவீதம் என்ற அளவில் 2022ம் ஆண்டு ஏற்றம் பெற்றுள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் குறியீடுகள் 14 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்துள்ளன. அதிகபட்சமாக ரஷ்ய நாட்டின் பங்குச்சந்தை குறியீடு 39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூர் நாட்டின் பங்குச்சந்தை குறியீடுகள் 4 சதவீதம் என்ற அளவில் ஏற்றமடைந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்திய பங்குச்சந்தை மட்டுமே 5 சதவீதம் என்ற அளவில் ஏற்றம் பெற்று முதலிடத்தில் உள்ளது. நிப்டி (Nifty) தேசிய பங்குச்சந்தையில் உலோகத்துறை, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE) மற்றும் தனியார் வங்கிகளின் குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேல் வருவாயை தந்துள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 70 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

மாறாக, தகவல் தொழில்நுட்ப துறை 26 சதவீதமும், மருந்துத்துறை(Pharma) 11 சதவீதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 11 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களிடையே அதிகமாக புழங்கும் எப்.எம்.சி.ஜி.(FMCG) துறை 17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2022ம் ஆண்டில் 52 சதவீதமும், கோல் இந்தியா 54 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ ஆகிய பங்குகளின் விலை 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளன. 

வரக்கூடிய காலம் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான நிலையாக இருப்பதால், பங்கு முதலீட்டில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும். நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாள தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

How is the Inflation and Interest rate playing in the Real Economy ? 

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளவிலான ஊரடங்கிற்கு பின்பு, உலக பொருளாதாரம் இந்த சுழற்சி முறையில்(Life Cycle) தான் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்க, அதனை அப்படியே பின்பற்றி வருகிறது உலக பொருளாதாரமும். கூடுதலாக உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீன-தைவான் எல்லை பதற்றமும் அடங்கும். 

கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு(Economic Stimulus) அன்றைய நிலையை களைய பெரிதும் உதவியது. இருப்பினும் அதன் காரணமாக பணவீக்க விகிதமும் கடந்த சில காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதன் விளைவு தேவை-உற்பத்திக்குமான இடைவெளியில் தான் உள்ளது. இந்த இடைவெளியே பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லும். 

உலக பங்குச்சந்தைகளும், அரசு கடன் பத்திர சந்தைகளும் வரவிருக்கும் காலத்தில் ஆட்டம்(High Volatility) காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் நவீன பொருளாதாரத்தில் இது ஒரு சுழற்சி முறையே(Life Cycle). பணவீக்கம் உயர்ந்தால் அதனை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியின் வேலை தான். அதிகரித்து வரும் பொருட்களின் சந்தை விலையை மட்டுப்படுத்த, போடப்படுகிற கடிவாளம் தான் இந்த வட்டி விகித உயர்வு. 

வட்டி விகித உயர்வால் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்து சந்தையில் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதன் தாக்கம் தொழில் நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், பங்கு விலையும் சரியும்(அனைத்து நிறுவங்களுக்கும் பொருந்தாது). கடனில்லா நிறுவனங்களுக்கு வருவாய் குறைவு ஒரு பிரச்சனையில்லை, ஆனால் கடனை அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு தான் இந்த சிக்கலே !

வங்கி வட்டி விகித உயர்வு, டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டை மேற்கொள்பவருக்கு வேண்டுமானால் வாய்ப்பாக அமையலாம். ஆனால் வங்கிகளில் கடன் வாங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தான் செலுத்த வேண்டிய வட்டி செலவு அதிகரித்து விடும். சொல்லப்போனால், டெபாசிட்தாரரருக்கும் இந்த வட்டி உயர்வு நீண்டகாலத்தில் பயன் தராது. 

பணவீக்கத்தை கட்டுப்படுத்திய பிறகு வங்கிகளின் வட்டி வருவாய் விகிதத்தையும் மத்திய வங்கி குறைத்து விடுமே. இதனை தான் நாம் தொழிலாளர்களின் பி.எப்.(Provident Fund), அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி வைப்பு நிதிகளில் காணலாம். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலங்களில் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் அதிகமாகவும், மாறாக பணவீக்கம் குறையும் போது, சேமிப்புக்கான வட்டி விகிதமும் வெகுவாக குறைக்கப்படும். இதனை நாம் பெரும்பாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கு பிறகான காலங்களில்(Economic Recession & Growth) காணலாம். 

இது ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாய், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடு என்று சொல்லப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பணவீக்க விகிதம் 7 சதவீதம் என எடுத்து கொண்டால், சேமிப்புக்கான வட்டி  விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். இதுவே வங்கி சேமிப்புக்கணக்குக்கான வட்டி விகிதத்தை சொல்லவே வேண்டாம்.  அதே வேளையில், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து காணப்படும். 

 பொதுவாக மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது, பெரும்பாலான வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதத்தை உடனே அதிகரித்து விடுவதுண்டு. மாறாக, நமது சேமிப்புக்கான வட்டி பெரும்பாலும் பணவீக்கத்திற்கு குறைவாக இருக்கும். இது போக கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியது இருந்தால், முடிவில் நிகர இழப்பு தான் !

எனவே வட்டி விகித உயர்வு காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய மற்றும் நீண்ட காலத்தில் குறைந்த வரி விகிதத்தில் அதிக வருவாயை ஏற்படுத்தும் முதலீட்டை கண்டறிவது அவசியம். அது போன்ற முதலீட்டு வாய்ப்புகள் தான் பரஸ்பர நிதிகளும்(Mutual Funds), பங்குச்சந்தைகளும். பங்குச்சந்தைக்கும், பரஸ்பர நிதிக்குமான ரிஸ்க் தன்மை என்பது வெவ்வேறு. சரியான நிதி இலக்கை ஏற்படுத்தி  விட்டு, அதற்கான முதலீட்டை துவக்கினால் போதுமானது. நீண்டகாலத்தில் உங்களது முதலீடு உங்களுக்காக உழைக்க தயாராகும்…!

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் 

Things to know before investing in Foreign Equities

இந்தியாவின் பங்குச்சந்தை மதிப்பு சுமார் 285 லட்சம் கோடி ரூபாய் (3.50 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு மட்டும் 77.90 லட்சம் கோடி ரூபாய் (தரவு: BSE India). இந்திய பங்குச்சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை பெருமளவில் மேற்கொண்டதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் 2020ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை வீழ்ந்திருந்த போதும், அதற்கு பிறகான மீட்டெடுப்பில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 

கடந்த சில காலாண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து அதிகளவில் வெளியேறி இருந்தாலும், நமது சந்தை பெருமளவில் இறக்கம் காணவில்லை. இதற்கு முக்கிய காரணமாக உள்ளூர் முதலீடுகள் பெருகி வருவது தான். பின்டெக்(Fintech Apps) நிறுவனங்களின் பங்கு முதலீடு சார்ந்த விளம்பரங்கள், பரஸ்பர நிதிகளில் தொடர்ச்சியான முதலீடு, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, குறிப்பிடத்தக்க பங்கு சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த சேமிப்புகள் பங்குச்சந்தையை நோக்கி திரும்புதல் ஆகியவை நமது சந்தைக்கு பக்க பலமாக உள்ளது. 

பின்டெக் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் புதிய உள்ளூர் முதலீட்டாளர்களை இந்திய பங்குச்சந்தைக்கு அதிகளவில் கொண்டு வந்துள்ளன என்பதனை நாம் மறுப்பதற்கில்லை. இவற்றையும் கடந்து சமீப காலங்களில் வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான தளங்களை பெரும்பாலான பங்கு தரகர்கள்(Stock Brokers) வழங்கி வருகின்றனர். இதனையே பங்குச்சந்தையில் நேரடி செயல்பாடுகளை கொண்டிருக்காத மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும்(Third Party Apps – Fintech Companies) அயல்நாட்டு பங்குகளை வாங்குவதற்கான வசதிகளை செய்து தந்துள்ளது.

இதன் மூலம் இந்திய உள்ளூர் முதலீட்டாளர்களும் கூகுள், ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பிரபலமான வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்க முடியும். உலகமயமாக்கலுக்கு பின்பு நமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்து வந்துள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் இணைய புரட்சி மூலம் நிதி முதலீடுகளை மேற்கொள்வதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு கிராமத்தில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவில் வர்த்தகமாகும் ‘டெஸ்லா’ பங்கினை வாங்குவது இன்று அவ்வளவு சுலபம். 

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீத பங்களிப்பை கூட கொண்டிருக்காத நம் பங்குச்சந்தைக்கு, வெளிநாட்டு பங்குகளை வாங்குவது மிகவும் எளிமையாக இருந்தாலும், நாம் பங்குச்சந்தை சார்ந்த விழிப்புணர்வை ஓரளவு பெற்று விட்டோமா என்றால் அது தான் இல்லை. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் அத்தனை பேரும் லாபமீட்டுகிறார்களா என கவனித்தால், அந்த எண்ணிக்கை ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. இன்றும் சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியாத முதலீட்டாளர்கள் கோடிகளில் உண்டு. அப்படியிருக்கும் போது, வெறும் விளம்பர நோக்கில் பரிந்துரைக்கப்படும் அயல்நாட்டு பங்குகளை பற்றி நம்மால் புரிந்த கொள்ள முடியுமா, இல்லையெனில் பங்குச்சந்தையில் லாபமீட்டுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன ?

இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக பங்கு முதலீடு செய்பவர்களுக்கு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை புரிந்து கொள்வது சற்று கடினமான விஷயமே. நிறுவனத்தின் தொழில் ஆதாரம், நிதி அறிக்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். 100 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் பங்குகள் இப்படியிருக்கும், 1000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும் பங்குகள் இவ்வாறு விலை நகரும் என யாராலும் சந்தையில் கணிக்க இயலாது. அடுத்த 50 வருடங்களுக்கு இந்த துறை தான் சிறப்பாக செயல்படும் என உறுதியாக சொல்ல முடியாது. பிரபலமான பிராண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் சோடை போன வரலாறு உலகின் அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் உண்டு. இதனை களைய தான் பரஸ்பர நிதிகளின் மூலம் நீண்ட காலத்தில் முதலீடு செய்யுங்கள் என நிதி ஆலோசகர்களும், பொருளாதார வல்லுனர்களும் கூறி வருகின்றனர். பரஸ்பர நிதிகளில் பங்கு நிறுவனங்களை ஆராய்ந்து முதலீடுகளை மேற்கொள்ள பண்ட் மேலாளர்கள் உள்ளனர்.  

அப்படியிருக்கையில் அயல்நாட்டு பங்குகளில் ஏதோவொரு தளத்தின் வாயிலாக நேரடியாக பங்கு முதலீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை நாம் பார்ப்போம்.

  • மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை(Third Party Apps) கொண்டு வெளிநாட்டு பங்குகளை வாங்குவதில் உள்ள நம்பகத்தன்மை என்ன, ஒழுங்குமுறை ஆணையத்தின்(Regulators) கீழ் அந்த நிறுவனம் செயல்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த(Associates) அடிப்படையில் பரிந்துரைக்கிறார்களா ?
  • இன்று பெரும்பாலான தளங்கள்(Platforms) டீமேட் கணக்கு துவங்குவதற்கும், பங்குகளை வாங்குவதற்கும் கட்டணம் எதுவுமில்லை என சொன்னாலும், வெளிநாட்டு பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.
  • வாங்கிய வெளிநாட்டு பங்குகளை பின்னர் விற்பனை செய்யும் போது ஏதேனும் கட்டணம் சொல்லப்பட்டுள்ளதா, அவற்றை நீண்ட காலம் நம்மால் வைத்திருக்க முடியுமா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பங்கு போர்ட்போலியோ விவரங்களை(Portfolio Statement) மின்னஞ்சலில் பெற மாதாந்திர அல்லது ஆண்டு பராமரிப்பு கட்டணம் என்ன ?
  • பங்குகளை விற்பனை செய்த பின், பணத்தை நமது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டுமெனில் அதற்கான கட்டணம்(Withdraw Charges) எவ்வளவு  ? 
  • நாம் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவன பங்குகளில் ஏதேனும் சிக்கல்(நிறுவனத்திற்கு) ஏற்பட்டால், அதனை நமக்கு தெரிவிப்பார்களா, சந்தையிலிருந்து அந்த பங்கு ஏதேனும் ஒரு காரணத்தால் வெளியேற்றப்பட்டால் நாம் எவ்வாறு அதனை அறிந்து கொள்வது ?
  • வெளிநாட்டு பங்குகளை வாங்கும் நாம் அந்நாட்டின் வருமான வரிச்சட்டம்(Taxation) எப்படி உள்ளது, நமக்கு சாதகமான அம்சம் ஏதுமுள்ளதா என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
  • முதலீடு செய்த பங்குகளுக்கு ஈவுத்தொகை(Dividend) ஏதும் வழங்கப்பட்டால் எந்த வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான வரி விதிப்பு எப்படி உள்ளது ?
  • வெளிநாட்டு நிறுவன பங்குகளின் தொழில் மற்றும் நிதி அறிக்கைகளை எளிமையாக தெரிந்து கொள்ள இணையதளங்கள் உள்ளதா, அவற்றினை அறிய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா(Research reports) ?

பொதுவாக அமெரிக்காவில் பங்கு முதலீட்டுக்கான வரி விதிப்பு, நம் நாட்டை காட்டிலும் அதிகமாக தான் காணப்படுகிறது. இங்கே நீண்டகால மூலதன ஆதாய வரிக்கான காலம் ஒரு வருடத்திற்கு மேல் என்றால், அமெரிக்காவில் அது இரண்டு வருடத்திற்கு மேலாக சொல்லப்படுகிறது. நீண்டகால மூலதன ஆதாயத்திற்காக வரி இங்கே 10% (ஒரு லட்சம் வரையிலான லாபத்திற்கு வரி விலக்கு போக) எனும் போது, அமெரிக்காவில் எந்த வரி விலக்கும் இல்லாமல் 20 சதவீத வரி செலுத்த நேரிடும். பங்கு முதலீட்டு விற்பனைக்கு பின், பணத்தை வங்கிக்கணக்கில் மாற்ற வெளியேற்று கட்டணமும் அங்கே உண்டு.

நேரடி பங்கு முதலீடு(Direct Equity) அதிக ரிஸ்க் தன்மை கொண்டது. எனினும் பங்கு நிறுவனங்களை முறையாக ஆராய்ந்து நீண்டகாலத்தில் முதலீடு செய்து வந்தால்,  நல்ல வருவாயை பெறலாம். அதே வேளையில் உலகளவில் பெயர் போன பிராண்டுகளும், அனைத்து பென்னி பங்குகளும்(Penny Stocks) நல்ல வருவாயை அளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. 

சமீப காலமாக, சில பின்டெக் தளங்களில் “அதிகமானோர் விரும்பும் பங்குகள், 10 ரூபாய்க்கு கீழான பங்கு நிறுவனங்கள், தங்கள் தளங்களில் அதிகம் விற்பனையான பரஸ்பர நிதி திட்டங்கள், ஒரே வாரத்தில் அதிக வருவாய் அளித்த திட்டங்கள்” என விளம்பரங்களை(Promotions) காண முடிகிறது. இந்த பரிந்துரைகளை தொடர்ந்து கொண்டு முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க் தன்மையை நாம் எச்சரிக்கையாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகம் விற்பனையான அல்லது அதிகமானோர் விரும்பும் பங்குகள் மற்றும் திட்டங்கள் என்பது விழாக்கால சலுகை போல. கடினமாக உழைத்து சம்பாதித்த நம் பணத்தை இது போன்ற பரிந்துரைகள் மூலம் முதலீடு செய்வதால், எள்ளளவும் பயனில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 55 சதவீதமாக உள்ளது. இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(United Kingdom) 33 சதவீதமாகவும் மற்றும் சீனாவில் 13 சதவீதமாகவும் உள்ளது. இந்திய நாட்டின் வருங்கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்து வருகின்றன. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இங்கே அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன. 

அப்படியிருக்கையில், நமக்கான பெரும்பாலான பங்கு முதலீட்டு வாய்ப்பு நமக்கு அருகிலேயே தான் உள்ளது. வளர்ந்த நாடுகள் இங்கே முதலீடு செய்து சம்பாதிக்க, நமக்கான இடத்தை நிரப்ப நம்மூர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதினால் தான் அது சாத்தியம். 

குறிப்பு: நான் உள்ளூரில் நிறைவாக முதலீடு செய்து லாபமீட்டி வருகிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் எனது முதலீட்டு பங்களிப்பு அளப்பரியது. எனவே வெளிநாட்டு பங்குகளை வாய்ப்பாக கருதுகிறேன் என்று நீங்கள் சொன்னால் அயல்நாட்டு பங்கு முதலீட்டை(கட்டணம் மற்றும் வரிகளை புரிந்து கொண்டு) தாராளமாக மேற்கொள்ளுங்கள்.  

பரஸ்பர நிதி நிறுவனங்களின் வாயிலாக இன்று பெரும்பாலான வெளிநாட்டு பங்கு முதலீட்டு திட்டங்கள்(Mutual Funds) நமக்கு கிடைக்கப்பெறுகின்றன.   

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாளை முதல் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் ரூபாய் நாணயம்’ – நவம்பர் 1, 2022

நாளை முதல் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் ரூபாய் நாணயம்’ – நவம்பர் 1, 2022

India’s First Digital Rupee Currency – Pilot launch on November 1, 2022

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டிற்குள் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் நாணயம்’ அறிமுகப்படுத்தப்படும் என அரசு சார்பில் சொல்லப்பட்டிருந்தது. சோதனை முறையில் நாளை (நவம்பர் 1) முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த நாணயம், ‘eRupee’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

மத்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் இந்த டிஜிட்டல் நாணயம், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ரூபாய் நோட்டு அல்லது நாணயத்தின்(Fiat Currency) ஒரு மாற்று தான். அதாவது ஒரு ரூபாய் நோட்டு அல்லது நாணயம் என்பது அதே மதிப்பினை கொண்ட ஒரு ரூபாய் டிஜிட்டல் நாணயமாக கருதப்படும். 

டிஜிட்டல் நாணயம் சார்ந்த விவரங்களை, மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 50 பக்க ஆவண வடிவில் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. பிளாக் செயின் தொழில்நுட்பம், திறமையான மற்றும் எளிமையான மேலாண்மை அமைப்பு மற்றும் இன்னபிற தொழில்நுட்பங்களை கொண்டு டிஜிட்டல் நாணயம் வரவிருக்கிறது. 

இதன் மூலம் அரசின் பத்திரங்களுக்கான பரிவர்த்தனை செலவுகளை குறைக்கலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. துவக்க நிலையில் ஒன்பது வங்கிகளின் மூலம் இந்த டிஜிட்டல் நாணயம் செயல்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் – பாரத ஸ்டேட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பரோடா வங்கி, யூனியன் வங்கி, எச்.எஸ்.பி.சி.(HSBC), கோடக் மஹிந்திரா, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை.   

புதிய டிஜிட்டல் நாணய வருகையால், நடைமுறையில் இருக்கும் நாணய மற்றும் கட்டண அமைப்பில் ஏதும் மாற்றமில்லை எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது. டிஜிட்டல் ரூபாய் நாணயம் என்பது மெய்நிகர் நாணயத்திலிருந்து(Cryptocurrency) வேறுபடுகிறது என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

யூ.பி.ஐ.(Unified Payments Interface – UPI) பண பரிவர்த்தனையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த செப்டம்பர் 2022 மாதத்தில் மட்டும் UPI முறையில் 678 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் சுமார் 11.16 லட்சம் கோடி மதிப்பிலான பண பரிமாற்றம் நடந்துள்ளது. டிஜிட்டல் ரூபாய் நாணயம் நாட்டின் பொருளாதாரத்திலும், பிற மெய்நிகர் நாணயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதனை வரவிருக்கும் காலங்களில் அறியலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

Debt to GDP of Developed and Emerging Economies – 2022

உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 798 கோடி(17-10-2022) மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு தோராயமாக 96 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்(தரவு 2021). மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், பொருளாதார மதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்திலும், பொருளாதார மதிப்பில் ஐந்தாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு காலத்தில் உலக பொருளாதாரம் (-3.27) சதவீதமாக வீழ்ச்சியை கண்டிருந்தது. அதே வேளையில் ஊரடங்கு காலத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பொருளாதாரம், 2021ம் ஆண்டின் முடிவில் 5.80 சதவீத வளர்ச்சியுடன் முடிவடைந்தது. 2021ம் வருடத்தில் சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி, கடந்த 48 வருடங்களில் உலகம் காணாத வளர்ச்சியாக இருந்துள்ளது. அதாவது பள்ளத்தில் விழுந்த பூனை மீண்டெழுவது போல (Dead Cat Bounce).

தனிநபர் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில்(GDP per Capita) காணும் போது, கடந்த 1980 களில் 2500 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் 12,260 டாலர்களாக உயர்ந்துள்ளது. தற்போது நாம் உலகின் நான்காம் தொழில் புரட்சி காலத்தில்(Industrial Revolution) டிஜிட்டல் மயத்துடன் இணைந்துள்ளோம். பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வறுமை அதிகரிப்பு, பருவநிலை மாற்றங்கள், நாடுகளிடையே போர் மற்றும் விநியோக சங்கிலியில்(Supply Chain) சிக்கல் என ஒருபுறம் இருந்தாலும், அடுத்த 20-30 வருடங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளே அதிகம் என உலக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

உலக பொருளாதார உற்பத்தி மதிப்பில்(GDP) அமெரிக்க நாட்டின் பங்களிப்பு மட்டும் 24 சதவீதமாகும். இதற்கடுத்தாற் போல் சீன நாட்டின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஜப்பான் 5 சதவீதம் மற்றும் ஜெர்மனியின் பங்களிப்பு 4.4 சதவீதமாக உள்ளது. உலகின் பொருளாதார உற்பத்தி பங்களிப்பு வரிசையில் முதல் 25 நாடுகளை தவிர்த்து பார்த்தால் மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பு, உலக பொருளாதார மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு அளவு கூட இல்லையென்பது கவனிக்கத்தக்கது. 

இதற்கு காரணமாக சொல்லப்படுவது வளர்ந்த மற்றும் விரைவாக வளரும் நாடுகளில் காணப்படும் அதிகபட்ச முதலீட்டு வாய்ப்பு, வேலைத்திறன் மற்றும் நுகர்வு தன்மை தான். பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் கடன்தன்மை அதிகரித்து வந்தாலும், அதற்கான வளர்ச்சியும் சாத்தியப்படுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பாதுகாப்பு, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மேம்படுவதற்கான முதலீடுகள் அதிகமாக செலவு செய்யப்படுகிறது. 

2021ம் ஆண்டின் தரவின் படி, அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு 23 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனா மற்றும் ஜப்பான் முறையே 17.7 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 4.9 டிரில்லியன் டாலர்கள். தனிநபர் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளை காட்டிலும் சீனா மற்றும் இந்தியாவில் குறைவே. அமெரிக்காவில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி(GDP per Capita) 69,287 அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், சீனாவில் 12,556 டாலர்களாகவும், இந்தியாவில் 2,277 டாலர்களாகவும் உள்ளது. 

டிசம்பர் 2021 முடிவில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்த பொருளாதார மதிப்பில்(Debt to GDP) 137 சதவீதமாக இருந்துள்ளது. சீனாவில் இது 67 சதவீதமாகவும், ஜப்பானில் 266 சதவீதமாகவும் உள்ளது. ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராச்சியம்(United Kingdom) முறையே 69% மற்றும் 96 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் கடன்தன்மை 74 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா போன்ற நாடுகளில் கடன்தன்மை நூறு சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில் மிகக்குறைவாக தென் கொரியாவில் 42 சதவீதமாக உள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களில் வளர்ந்த நாடுகளின் கடன்தன்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகளின் மொத்த கடன் 226 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் மட்டும் சுமார் 31 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது தனிநபர் ஒருவரின் சராசரி கடன் மட்டும் 93,400 அமெரிக்க டாலர்களாக அந்நாட்டில் உள்ளது. 

உலகளவில் ஜப்பான் நாட்டில் தான் அதன் பொருளாதார மதிப்பில் கடன்தன்மை அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் தேசிய கடன்தன்மை சுமார் 2.3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். ரஷ்யா, ஹாங்காங், வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் அதன் கடன்தன்மை குறைவாகவே காணப்படுகிறது. பொதுவாக வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடன் மூலம் முதலீடுகள் அதிகமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக அதன் வளர்ச்சியும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல் மற்றும் விநியோக சங்கிலியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதன் கடன் மூலம் பெறப்படும் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். அதனால் தான் கடன்தன்மையை சீரமைப்பதும் அவசியம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நமது குடும்பத்தில் காணப்படும் வரவு-செலவு போல தான் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியும், கடன் தன்மையும்…

(தரவுகள் பெறப்பட்ட தளங்கள்: World Bank, IMF, Macro Trends & Trading Economics)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

     

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும்

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் 

India’s CPI – Retail Inflation and Unemployment Rate (CMIE Data) – August 2022

நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) 7 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது. 

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவாக 8.28 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கிராமப்புறங்களை காட்டிலும் நகரத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து 9.57 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும் சிறிது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் 6.75 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், ஆகஸ்ட் மாதத்தில் 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் பொருட்களின் விலை(CPI)  206 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 192 சதவீதமும், மசாலா பொருட்களின் பணவீக்க விகிதம் 194 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

காய்கறி மற்றும் பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கான காரணியாக உள்ளது. இருப்பினும் எரிபொருட்களின் விலை சற்று தணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 11.8 சதவீதமாக இருந்த எரிபொருட்களின் பணவீக்க விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 10.78 சதவீதமாக குறைந்துள்ளது. 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது. வீட்டுமனை 10 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.60 சதவீதமும், சுகாதாரம் 6 சதவீதமும் மற்றும் கல்வி 4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. 

நாட்டின் பணவீக்க விகிதம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மேம்படுத்தப்படாத உட்கட்டமைப்பு, உணவுப்பொருட்களை சந்தைக்கு குறித்த நேரத்தில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் மற்றும் அதிக நிதி பற்றாக்குறை ஆகியவை உள்ளது.

2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.86 சதவீதமாக இருந்துள்ளது. இது நகர்ப்புறங்களில் 8.64 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.04 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. படிப்படியாக குறைந்து வந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை 2022ல் 6.83 சதவீதமாக இருந்தது. இது நகர்ப்புறங்களில் 8.22 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.17 சதவீதமாகவும் இருந்துள்ளது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்து காணப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

நாட்டில் அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை விகிதம்(CMIE Data) காணப்படும் மாநிலங்களாக அரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு உள்ளன. இதற்கடுத்தாற் போல ஜார்கண்ட், திரிபுரா, பீகார் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் பணவீக்க விகிதம் 7.2 சதவீதமாகவும், தெலுங்கானா 6.9 சதவீதம், கேரளா 6.1 சதவீதம், ஆந்திரா 6 சதவீதம் மற்றும் கர்நாடகா 3.5 சதவீதமாகவும் உள்ளது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

Tamilnad Mercantile Bank(TMB) in Equity IPO

வங்கி மற்றும் நிதிச்சேவையில் நூறு வருடத்திற்கு மேலான அனுபவம் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஒரு வழியாக பங்குச்சந்தைக்கு தயாராகி விட்டது. கடந்த 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமூகத்தினரால் தொழில் சார்ந்த நிதி சேவைகளுக்காக தொடங்கப்பட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. துவக்கத்தில் ‘நாடார் வங்கி’ என அழைக்கப்பட்ட இவ்வங்கி பின்னர் வணிக மேம்பாட்டின் காரணமாக, ‘தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கிக்கு, நாடு முழுவதும் 509 கிளைகளும், 12 பெரும் அலுவலகங்களும்(Regional offices) உள்ளன. கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டின் தனியார் வங்கிகளில் மிக சிறப்பாகவும், வேகமாக வளரும் வங்கியாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சொல்லப்பட்டது. 

1937ம் ஆண்டு இலங்கையில் ஒரு வங்கிக்கிளையை துவக்கியிருந்தாலும், பின்னர் அந்த கிளையை மூடிவிட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. வங்கி கிளைகளில் முதன்முறையாக கணினிமயமாக்கலை ஏற்படுத்திய தனியார் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(1983ம் வருடம்) தான். இன்று அனைத்து கிளைகளும் முழுமையான கணினி தொழில்நுட்பத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மென்பொருள் இன்போசிஸ்(Infosys) நிறுவனம் உருவாக்கியது என்பது கூடுதல் தகவல்.

தனியார் வங்கிகளில் அன்னிய செலாவணியை பெறுவதில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முதலிடத்தில் உள்ளது. 2019ம் நிதியாண்டில் இவ்வங்கி சுமார் 15,726 கோடி ரூபாய் மதிப்பில் அன்னிய செலாவணி வர்த்தகத்தை புரிந்துள்ளது. மாநிலத்தில் மட்டுமே இயங்கும் வங்கி போல தோற்றமளிக்கும் இவ்வங்கி உலகம் முழுவதும் எச்.டி.எப்.சி. மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கிகளுடன் இணைந்து வங்கி சேவையை பகிர்ந்துள்ளது.

2021ம் நிதியாண்டில் வங்கியின் வருவாய் 530 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 4,253 கோடி ரூபாய். நிகர லாபமாக வங்கி 995 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. 2022ம் ஆண்டின் முடிவில் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 52,858 கோடி (7.04 பில்லியன் டாலர்கள்). வங்கிகளில் இணைய வழியிலான வைப்பு நிதி கணக்கு(Deposit) துவங்கும் சேவையை நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது இவ்வங்கியே. 

வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கே.வி. ராமமூர்த்தி உள்ளார். கடந்த காலங்களில் சில சர்ச்சைகளையும், பங்குச்சந்தையில் நுழைய முடக்கங்களையும் மெர்கன்டைல் வங்கி சந்தித்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஒரு வழியாக பங்குச்சந்தை நுழைவுக்கான விண்ணப்பத்தை செபியிடம்(SEBI) சமர்ப்பித்தது. நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்புதலும் பெற்றது.

வரக்கூடிய செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பங்குகளை வழங்க ஐ.பி.ஓ. வை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயாகவும், ஐ.பி.ஓ.வில் பங்கு ஒன்றின் விலை ரூ.500 – ரூ.525 என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 28 பங்குகளும்( 1 Lot), அதிகபட்சமாக 364 பங்குகளும்(13 Lots) வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எதிர்கால மூலதன தேவைகளுக்காக பங்கு முதலீட்டை பெற(Initial Public offer) உள்ளதாக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ.வில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் பங்களிப்பு முறையே தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள்(QIB) 75 சதவீதத்திற்கு மிகாமல், உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்(HNI) 15 சதவீதத்திற்கு மிகாமல் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் – தனிநபர்கள்(Retail investors) 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொதுவாக ஐ.பி.ஓ.வில் அறிமுகமாகும் நிறுவனங்களின் நிதி விவரங்களை அவ்வளவு எளிதில் பகுப்பாய்வு செய்ய முடியாது. சந்தைக்கு வந்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை கடந்த பின்பு தான், அவற்றின் நிதி அறிக்கைகளை நம்மால் அடிப்படை பகுப்பாய்வுக்கு(Analysis) உட்படுத்த முடியும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

TATA Metaliks Limited – Fundamental Analysis – Stocks

நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான டாட்டா குழுமத்தின் ஒரு அங்கம் தான் டாட்டா மெட்டாலிக்ஸ். டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாட்டா மெட்டாலிக்ஸ் கடந்த 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. இரும்பு குழாய்(Pig iron and Ductile Iron Pipes) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக டாட்டா மெட்டாலிக்ஸ் உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 5.50 லட்சம் கொள்ளளவு உலோக உற்பத்தி திறன் கொண்ட ஆலையை இந்நிறுவனம் கொண்டுள்ளது. நாட்டின் இரும்பு(Pig Iron) உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை டாட்டா மெட்டாலிக்ஸ் கொண்டிருக்கிறது. இதன் உற்பத்தி பெரும்பாலும் வாகனம், விவசாயம், மின்சாரம், ரயில்வே போன்ற துறைகளுக்கு பயன்படுகிறது. 

நிறுவனத்தின் இரும்பு குழாய் உற்பத்தி 14 வகையான முதன்மை தரங்களை கொண்டதாக உள்ளது. ‘TATA efee’ இந்நிறுவனத்தின் முக்கிய பிராண்டாக வலம் வருகிறது. நிறுவனத்தின் விற்பனை உள்நாட்டில் மட்டுமில்லாமல் ஐக்கிய அரபு, கத்தார், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் பரவலாகியுள்ளது. 

நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 60 சதவீதமாக உள்ளது. நிறுவனராக டாட்டா ஸ்டீல் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களிடம்(Mutual Funds) சுமார் 9 சதவீத பங்குகள் உள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.10 மடங்கு என்ற அளவில் உள்ளது. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 483 ரூபாயாகவும், முக மதிப்பு 10 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 8 மடங்குகளில் இருக்கிறது. 2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,746 கோடியாகவும், நிகர லாபம் 237 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

பொதுவாக உலோக துறையில் காணப்படும் உலகளாவிய தாக்கம், வருவாயில் காணப்படும் ஏற்ற-இறக்கம் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்திற்கும் பொருந்தும். நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மார்ச் 2022 முடிவில் ரூ.1,494 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) நன்றாக உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் 14 சதவீதமாகவும், நிகர லாபம் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 23 சதவீதமும், பத்து வருட காலத்தில் 27 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 

நிறுவனத்தின் விற்பனைக்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(Price to Sales) 0.82 மடங்காகவும், வருவாய்க்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(P/E) 19 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்தின் கடன் 148 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

        

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை 

India’s Balance of Trade – Trade Deficit July 2022

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூலை மாதத்தின் முடிவில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. நாட்டின் இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்தும், ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. ஏற்றுமதியின் அளவு 66.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி அளவு 36.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாவும் இருந்துள்ளது.

பொதுவாக, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியே வர்த்தக பற்றாக்குறையாக சொல்லப்படுகிறது. கனிம எரிபொருட்கள், எண்ணெய், இரும்பு மற்றும் எஃகு, முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், நகைகள் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் இறக்குமதியாக கொண்டிருக்கிறோம். ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள், ஆபரணங்கள், வாகனங்கள், தானியங்கள், இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்களை அதிகமாக கொண்டுள்ளோம்.

இறக்குமதியில் நாம் பெரும்பாலும் சீனாவிடமிருந்து தான் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுகிறோம். 2021ம் ஆண்டில் நாட்டின் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 16 சதவீதமாகவும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 7.6 சதவீதமும் மற்றும் அமெரிக்காவில் 7.3 சதவீதத்தையும் கொண்டுள்ளோம். சீனாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 87.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனாவிடமிருந்து மின் மற்றும் மின்னணு உபகரணங்கள், இயந்திரங்கள், கொதிகலன்கள், அணு உலை, ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் உரங்களை பெறுகிறோம்.

ஏற்றுமதியில் நாம் அமெரிக்காவிற்கு அதிகமாக அனுப்பி கொண்டிருக்கிறோம். நாட்டின் ஏற்றுமதி பங்களிப்பில் அமெரிக்கா 18 சதவீதம், ஐக்கிய அரபு நாடு 6.5 சதவீதம் மற்றும் சீனா 5.9 சதவீதமாக இருந்துள்ளது. முத்துக்கள் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், மருந்துகள் மற்றும் துணிமணிகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 121 பில்லியன் அமெரிக்க டாலர்களும், இறக்குமதி 190 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில், ஏற்றுமதி 26.82 சதவீதமும், இறக்குமதி 49.76 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதியின் அளவு உயர்ந்து வருவது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 –  அடுத்து என்ன ?

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 –  அடுத்து என்ன ?

US enters into Technical Recession – Things to know

ஜூன் மாதத்தில் வல்லரசான அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவாக கருதப்படுகிறது. எரிபொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்ததால் சொல்லப்பட்ட பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. 

எரிவாயு (Gasoline) விலை 60 சதவீதம் உயர்ந்தும், எரிபொருட்களின் எண்ணெய்(Fuel oil) 99 சதவீதமும், மின்சாரம் 14 சதவீதம் என்ற அளவிலும் ஜூன் மாதத்தில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் 10.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 

நடப்பாண்டின் முதலாம் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Q1 GDP 2022: -1.6 %) ஆக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் (-0.9) சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பது உறுதியாகியுள்ளது.

2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு மீண்டும் மந்தநிலைக்கு அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்க நாட்டின் வளர்ச்சி 0.5 சதவீதமாக இருக்கும் என பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது  பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பொருளாதார மந்தநிலைக்கு காரணமாக வீட்டுமனை முதலீடும் குறைந்திருப்பது ஒரு காரணியாக சொல்லப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், உக்ரைன்- ரசிய போர் இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், நாட்டின் ஏற்றுமதி கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவு  வளர்ச்சியை பெற்றுள்ளது.

நடப்பு ஜூலை மாதம் நடைபெற்ற அமெரிக்க மத்திய வங்கி(US Fed) அறிக்கையில் வட்டி விகிதம் 75 புள்ளிகளாக அதிகரிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ச்சியாக நான்காவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாத அறிக்கையின் படி, வட்டி விகிதம் 2.25 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை உள்ளது. 

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடப்பு நிதியாண்டில் மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். 2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் வட்டி விகிதம் 3.5% – 3.8% என்ற அளவில் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. 

எனவே அடுத்து வரும் மாதங்களில் மீண்டுமொரு வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம். பணவீக்க அதிகரிப்பு மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய வட்டி விகித உயர்வு ஆகியவை தொழில் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கலாம். மக்களிடையே ஏற்பட்டுள்ள நுகர்வு தன்மை தேக்கம் மேலும் சில மாதங்கள் தொடரலாம். 

விநியோக சங்கிலியில்(Supply Chain) ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், உக்ரைன் – ரசிய போர் நீடிக்கும் வரை, உலக பொருளாதார மந்தநிலையை தொடர செய்யும். கொரோனா காலத்தில் சந்தையை மீட்டெடுக்க செய்யப்பட்ட அதிகப்படியான பொருளாதார ஊக்குவிப்பு, இப்போது பணவீக்க அதிகரிப்பில் காணப்படுகிறது. எனினும், இது பொருளாதாரவியலில் அடிப்படையான ஒன்று தான். 

வரக்கூடிய வாரங்களில் டாலருக்கு நிகரான மற்ற நாணயங்களின் மதிப்பு அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். வட்டி விகித அதிகரிப்பின் தாக்கம் நிறுவனங்களின் வருவாயில் வெளிப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் அல்லது காலாண்டுகள் தேவைப்படலாம். நடப்பாண்டில் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் நல்ல வருவாயை அளித்த பங்குச்சந்தையாக இந்தோனேசிய சந்தையும், மோசமான இழப்பை ஏற்படுத்திய சந்தையாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் உள்ளன.

சொல்லப்பட்ட காலத்தில் இந்தோனேசிய ஜகார்த்தா குறியீடு 3 சதவீதமும், கடந்த ஒரு வருட காலத்தில் 13 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. இதுவே இந்திய நிப்டி 500 குறியீடு நடப்பு வருடத்தில் 5 சதவீத வீழ்ச்சியையும், கடந்த ஒரு வருடத்தில் 5 சதவீதம் ஏற்றமும் அடைந்துள்ளது.

2022ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் வளர்ந்த சந்தைகள் முறையே அமெரிக்க எஸ் & பி 500 (-18%), ஐரோப்பிய STXE (-14%), சீன CSI 500 (-14%) மற்றும் ஆஸ்திரேலிய ASX 200 (-9%) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தை தற்போது ஏற்றம் பெற்று வந்தாலும், இதற்கான பொருளாதார காரணிகள் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. எனவே, நீண்டகாலம் முதலீடு செய்பவர்கள் இது சார்ந்த கவலையை விட்டு விடலாம். கடனில்லா(Debt Free) நல்ல நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து சிறுகச்சிறுக முதலீடு செய்து வரலாம். குறுகிய காலத்தில் சந்தை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படும் நிலையில், பண இழப்பை தவிர்ப்பது நன்று.

தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்தாலும், அவை பொருளாதார வீழ்ச்சியாக எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்ற விவாதமும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு 

Income Tax Filing Returns – Deadline for AY 2022-23 (FY 2021-22)

2021-22ம் நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஈட்டிய வருமானத்திற்கு 2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் சொல்லப்பட்ட நிதியாண்டில் ஒட்டுமொத்த வருமானமாக ரூ.2.50 லட்சத்திற்கு மிகும் போது, வரி தாக்கல் செய்வது அவசியம். 

2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில், இதுவரை(16-07-2022) 1.45 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி தாக்கல் தளத்தில் தங்களது பான் எண்ணை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 10.30 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது.

நடப்பில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு அரசின் இணையதளம்(Income Tax Portal) மட்டுமின்றி, சில மூன்றாம் தரப்பு தளங்களும் இந்த சேவையை வழங்குகின்றன. எனினும் வரி தாக்கல் செய்த பின், மின்னணு சரிபார்ப்பை(E-Verification) நிறைவு செய்வது அவசியமாகும். 

E-Verification ஐ நிறைவு செய்யும் நிலையில் மட்டுமே அது வரி தாக்கல் செய்ததாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். மேலே சொல்லப்பட்ட 1.45 கோடி பேர் வரி தாக்கல் செய்திருந்தாலும், இதுவரை 1.21 கோடி நபர்கள் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்துள்ளனர்.

2022-23ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (2021-22ம் நிதியாண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 31, 2022 என சொல்லப்பட்டுள்ளது. காலங்கடந்த வரி தாக்கலுக்கு அபராத கட்டணம் செலுத்த நேரிடும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு மதிப்பீட்டு ஆண்டுகளில்(AY 2020-21, AY 2021-22) வரி தாக்கலுக்கான காலக்கெடு அந்த வருடத்தின் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil